கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Federico García Lorca

Thursday, May 31, 2007

-மொழிபெயர்ப்பு கவிதை முயற்சிகள்-

கார்சியா லோர்கா தமிழ்ச்சூழலில் நன்கு அறியப்பட்ட ஒரு ஸ்பானிய படைப்பாளி. அவரது கவிதைகளை வாசிக்க வாசிக்க ஒரு புதுவிதமான உலகு எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எளிமையான வார்த்தைகளால்... ஆனால் நிறைய படிமங்களால் ஆனவை அவரது கவிதைகள். சடப்பொருடகளுடனான அவரது உரையாடல்கள் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியவை. (அப்படி நினைக்கும்போது தமிழ்ச் சூழலில் நினைவுக்கு வருபவர், சோலைக்கிளி). லோர்காவின் நாடகங்களை விதந்து பேசியளவுக்கு அவரது கவிதைகள் குறித்து எழுதிய கட்டுரைகளைத் தமிழில் வாசித்தது குறைவு. இடதுசாரித்துவம் மீது ஈர்ப்பிருந்த லோர்கா ஸ்பானிய உள்நாட்டுப்போரால அவரது 38 வயதில் சுட்டுக்கொல்லப்பட்டவர். (லோர்காவின் கவிதைத் தொகுப்புகளை வாசித்ததை முன்வைத்து ஒரு கட்டுரை எழுத விருப்புண்டு; ஆசை கோடி, பட்டியலோ நீளும்.)


lorca
(1898-1936)
Saturday Paseo: Adelina

தோடை
கடலில் வளர்வதோ
காதல் *செவில்லாவில் முகிழ்வதோ அன்று.
நீ நிழலில் நான் தகிக்கின்ற சூரியன்
உனது குடையை இரவல்தா

நானெனது பொறாமையின் விம்பங்களை அணிவேன்
எலுமிச்சையும் நாரத்தையுமான சாறு
உனது வார்த்தைகள்
உனது குற்றமுள்ள சிறு வார்த்தைகள்
சிறிது நேரத்திற்கு நீந்தத் தொடங்கும்.

தோடை
கடலில் வளர்வதில்லை.
ஆ.., அன்பே!
செவில்லாவில் காதலும் இல்லை.

*A city
----------------------

கிற்றார்
(The Guitar)

கிற்றாரின் விசும்பல்
ஆரம்பிக்கிறது
விடியலின் கோளங்கள்
துவசமாக்கப்பட்டன.
கிற்றாரின் விசுமப்ல
ஆரம்பிக்கிறது.
அதை அமைதியாக்குவது
பயனற்றது.
அதை நிசப்தமாக்குவது
சாத்தியமற்றது.
அது அலுப்புடன் விசும்புகிறது,
பனிப்புலத்தின் மேலாய்
நீரைப் போல
காற்றைப் போல
விசும்புகிறது
அதை அமைதியாக்குவது
சாத்தியமற்றது
தொலை தூரத்திலுள்ளவைக்காய்
அது விசும்புகிறது
சூடான தென்னக பாலைவனங்கள்
வெள்ளை கமீலியாஸுக்காய் காத்திருக்கின்றன.

விசும்பும்;
இலக்கில்லாத அம்புக்காய்
காலை இல்லாத அந்திக்காய்
கிளையின் மேல் இறந்த முதலாவது பறவைக்காய்.
ஓ கிற்றார்!
ஜந்து வாட்களால்
இதயம் பயங்கரமாய்க் காயப்படுத்தப்பட்டது.
------------------------

பேச்சற்ற சிறுவன்
(The Little Mute Boy)

சின்னப்பையன் தேடிக்கொண்டிருந்தான்
தனது குரலை
(சில்வண்டுகளின் அரசனிடம் அது இருந்தது)
தண்ணீரின் துளியொன்றில்
சின்னப்பையன் தனது குரலைத் தேடிக்கொண்டிருந்தான்.

அதனுடன் பேசுவதற்காய் அதெனக்கு(குரல்) வேண்டாம்
நானொரு மோதிரத்தை அதிலிருந்து உருவாக்குவேன்
அவ்வண்ணம் அவன் தனது சின்னவிரலில அணியக்கூடும்
எனது மெளனத்தை.

தண்ணீரின் துளியொன்றில்
சின்னப்பையன் தனது குரலைத் தேடிக்கொண்டிருந்தான்.

(கைப்பற்றப்பட்ட குரல், வெகு தொலைவில்
சில்வண்டுகளின் ஆடையை அணிகிறது)
------------

பிரியாவிடை
(Farewell)


நான் இறந்தால்,
பலகணியைத் திறந்தபடியே விடுக.

சிறுவன் தோடம்பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்
(எனது பலகணியிலிருந்து, அவனைப் பார்க்க முடியும்)

அறுவடை செய்பவன் கோதுமையை அறுவடை செய்துகொண்டிருக்கிறான்
(எனது பலகணியிலிருந்து, நான் அவனைக் கேட்கமுடியும்)

நான் இறந்தால்,
பலகணியை திறந்தபடி விடுக.
--------------


மலட்டுத் தோடையின் பாடல்
(The song of the Barren Orange Tree)

மரம்வெட்டி.
என்னிலிருந்து எனது நிழலை வெட்டு
கனியாக ஆகமுடியாத அவஸ்தையை
என்னிலிருந்து விடுவி

கண்ணாடிகளுக்கு மத்தியில் நானேன் பிறப்பிக்கப்பட்டேன்?
நாள்
என்னைச் சுற்றி சுற்றி படர்கின்றது
இரவு
தனது அனைத்து நட்சத்திரங்களிலும்
என்னை நகலெடுக்கிறது.

நானெனது விம்பமில்லாது வாழ விரும்புகிறேன்.
பிறகு என்னைக் கனவு காண அனுமதி,
எறும்புகளும் *Thistledownம்
எனது இலைகளும் கிளிகளுமாக.

*தமிழில் எப்படிக் கூறுவது?
--------------------------

பிரியமுள்ள நண்பர் ஒருவருக்கு அனுப்புவதற்காய் கார்சியா லோகாவின் கவிதைகள் சிலதை மொழிபெயர்த்தேன். எனது மொழியின் போதாமையால் இதை மொழிபெயர்ப்பு என்று சொல்லமுடியாது. நான் இக்கவிதைகளை விளங்கிக்கொண்டளவில் தழுவி எழுதியிருக்கின்றேன் என்றுதான் -நேர்மையாக- ஒப்புக்கொள்ளவேண்டும்.

10 comments:

Anonymous said...

நல்ல முயற்சி டிசே.


(பலகணி.. பல்லைக்கணிக்கவேண்டாமே :-)

'The Disappearance of Garcia Lorca' பார்த்திராவிட்டால், பார்க்கவும். படமெதுவும் பெரிதாகச் சொல்லவில்லை. ஆனால், படம் பிடிக்கப்பட்ட விதம் பிடித்திருந்தது.

5/31/2007 12:57:00 PM
இளங்கோ-டிசே said...

பாருங்கள்...நீங்கள் குறிப்பிட்ட படம் பற்றிய எனது சோகக்கதையைக்கூட பதிவில் முதலில் எழுதி பிறகு அழித்திருந்தேன். இப்படத்தைப் பார்த்தால் லோர்காவை இன்னும் அதிகமாக அறியமுடியும் என்று நானும் தேடியிருக்கிறேன். படத்தின் ஒளிப்பதிவும் மிகச்சிறப்பானது என்று எங்கையோ வாசித்த்து நினைவு. கார்சியாவின் இந்தப்படத்தைத் தேடி நானெடுக்கும் வீடியோ கடை, நூலகம் எல்லாம் அலைந்தபின், இறுதி நம்பிக்கையாக Blockbusterலாவது இருக்ககூடும் என்று போயிருந்தால் VHS வடிவில் தான் இப்படம் இருந்தது, இப்போது VHS கடையில் பாவனையில்லை, DVDகள் மட்டும்தான் என்று கையை விரித்திருந்தார்கள் -(. தெரிந்த ஒரு பொலிவிய நண்பனிடம் தான் ஸ்பானிஸாவது இதன் பிரதியைப் பெறமுடியுமா எனக் கேட்கவேண்டும் :.
....
திருத்தத்திற்கு நன்றி; மாற்றிவிடுகின்றேன். ஏற்கனவே இந்தச்சொல்லை பிழை திருந்தியதும் நினைவிலுண்டு :-).

5/31/2007 02:15:00 PM
Anonymous said...

what is "thoodai"?

--fd

5/31/2007 02:23:00 PM
Anonymous said...

ட்ராகனே ஆராஞ்சு பாரு

5/31/2007 02:36:00 PM
இளங்கோ-டிசே said...

தோடை ---> Oranges

ஈழத்தில் தோடை மரம் என்று பாவிப்பதுண்டு. தமிழகத்தில் ஆரஞ்சர்ஸ்தானே?

5/31/2007 02:39:00 PM
இளங்கோ-டிசே said...

ஆகா பூச்சிமருந்து முந்திவிட்டார். பூச்சி மருந்தாய் இருப்பதால் இதுதான் லாபம்; எல்லாச் செடி கொடியும் பழக்கமாய் இருக்கும் :-).

5/31/2007 02:44:00 PM
Anonymous said...

டிஜே,
Garcia Lorcaவின் கவிதைகளை இதுவரை நான் வாசித்ததில்லை. அறிமுகத்துக்கு நன்றி. படத்தையும் தேடிப் பார்க்கிறேன்.

ஆழியாள்

6/03/2007 09:36:00 PM
Ayyanar Viswanath said...

நல்ல முயற்சி டிசே நல்லாவும் வந்திருக்கு..படம் கண்டிப்பா தேடுறேன் ..டிசே யாருங்க அது பூச்சிமருந்து? உங்க அபிமானியா அட்டகாசமான பேருங்க:) என்னமா சிந்திக்கிறாங்க!!

6/03/2007 11:47:00 PM
இளங்கோ-டிசே said...

ஆழியாள் & அய்யனார் நன்றி.
.....
பூச்சிமருந்து நண்பரைப் பற்றி நிறையச்சொல்லலாம். திருவாசகத்தில் 'புல்லாகிப் பூடாகி...' பாடல் போல, இணையத்தில் நிறைய அவதாரங்கள் எடுப்பவர் :-).

6/04/2007 08:55:00 AM
இளங்கோ-டிசே said...

தமிழ்மணத்து பரணால் விளைந்த நன்மை. மரவண்டு கணேஷின் கார்சியா லோர்கா பற்றிய பதிவின் இணைப்பு இன்று கிடைத்திருக்கிறது.

http://maravantu.blogspot.com/2005/07/blog-post_12.html

7/12/2007 11:51:00 AM