காலனியாதிக்கத்தின் காலம் முடிந்துவிட்டதென கூறப்பட்டுக்கொண்டிருந்தாலும், காலனியாதிக்கத்தின் அடையாளங்கள் தொடர்ந்து பலவேறு வடிவங்களில் ஈழம், இந்தியா போன்ற நாடுகளின் கலாசாரங்களில் பிரிக்கமுடியாதவளவுக்கு பின்னிப்பிணைந்துள்ளன. இன்றும், விரிவான அறிவும் தெளிவும் 'சுதேச' மொழிகளில் ஒருவருக்கு இருந்தாலும், அவர் ஆங்கிலத்தையும், அதனூடாக ஆங்கில இலக்கியங்களையும்/தத்துவங்களையும் அறிந்துவைத்திருந்தால் மட்டுமே, அவரது கருத்துக்கள் 'அறிஞர் குழாத்தில்' கவனத்தில் எடுக்கப்பட்டு விவாதிக்கப்படக்கூடிய சூழல் தமிழ்ச்சமூகத்தில் இருக்கின்றது எனபதை நாமனைவரும் அறிவோம். நமது கல்வித்திட்டம் கூட இன்னும் முறைமையாக மாற்றியமைக்கப்படாமல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் (காலனித்துவ) பாடத்திட்டத்தின்படி அண்மைக்காலம் வரை நீட்டிக்கபட்டுக்கொண்டிருப்பது கவனத்தில் கொள்ளக்கூடியது.

வூல்ப்வ் பணியாற்றிய யாழ்ப்பாணம், மன்னார், கண்டி, ஹம்பாந்தோட்ட (தமிழில் அம்பாந்த்தோட்டை?) போன்ற அனைத்து இடங்களுக்கும் கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி பயணிக்கின்றார். இலங்கைக்கு வரும்போது ஒரு ஏகாதிபத்தியவாதியாக இருக்கின்ற வூல்ப்வ் பின்னாட்களில் எப்படி தன்னைச் சுயவிமர்சனம் செய்துகொண்டு ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளாராக மாறுகின்றார் என்பதை இந்நூல் நமக்குக் காட்டுகின்றது. கொழும்பில் இரண்டுவாரம் கச்சேரியில் வேலை செய்து விட்டு முதன்முதலாக யாழ்ப்பாணத்துக்கு வூல்ப்வ் 1904 ஆண்டளவில் போகின்றார். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் வூல்ப் -அப்போதிருந்த தொடர்ச்சியில்லாத புகைவண்டிப்பாதையால்- அனுராதபுரத்திலிருந்து ஆனையிறவு வரை மாட்டுவண்டியில் பயணிக்கின்றார் (ஏறத்தாள முப்பத்தாறு மணித்தியாலங்கள் எடுத்த பயணம் அது). யாழ்ப்பாணக் கச்சேரியில் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகளில் வூல்பவ் மிகத்துல்லியமாய் இறுக்கமான யாழ்ப்பாணச்சமூகத்தை கணித்துமிருக்கின்றார். யாழ்ப்பாணத்தவர்களின் சாதித்திமிர், வேலிச்சண்டை உட்பட கல்வித்திமிர்வரை அனைத்தையும் தனது குறிப்புகளில் வூல்ப்வ் பதிவு செய்திருக்கின்றார். அதேபோன்று யாழ்ப்பாணம், இலங்கையில் ஏனைய பகுதிகள் விரைவில் சுவீகரித்துக்கொண்ட அய்ரோப்பிய கலாசாரத்தை போன்று இருக்காது, தனித்து நின்ற ஒரு பிரதேசமெனவும் குறிப்பிடுகின்றார். முக்கியமாய் அய்ரோப்பியப் பெருநகரங்களுக்கு இருக்கும், ஒரு பெருநகரும் அதைச் சுற்றியிருக்கும் புறநகர்ப்பகுதிகள் போன்ற அமைப்பை அமையவிடாது, யாழ்ப்பாணத்தின் எண்ணற்ற பின்னலான தெருக்களும், ஒழுங்கைகளும் தடுத்துவிடுகின்றன என்று தனது அவதானங்களை வூல்ப்வ் முன்வைக்கின்றார். அதேபோன்று கிடுகுவேலிகளுக்குள் அடங்கிவிடுகின்ற ஒரு கொண்டாட்டமற்ற சமூகம் யாழ்ச்சமூகமெனவும் எழுதிச் செல்கின்றார். மேலும் பக்கத்து வீட்டுக்காரன் எப்போது வெளியே போவான் என்று காத்துக்கொண்டிருந்துவிட்டு, தங்களது கிடுகு வேலியை மற்றவனுக்குச் சொந்தமான நிலத்தில் சில அங்குலங்களாவது நகர்த்திப்பார்க்கின்ற சமூகம் என்றும் உண்மையை உள்ளபடியும் எழுதவும் செய்கின்றார் (...these cadjan fences are famous. It is said that the people of Jaffna spend much time of their time waiting for their neighbour to go out, so that they may shift the dividing fence a few inches on to his land). யாழ்ப்பாணத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போதுதான் வூல்ப்வ் 'அரியதான' தனது கண்ணன் தன்மையை (கன்னித்தன்மைக்கு ஆண்பால்..? நான் கண்டுபிடித்ததுதான்) முதன்முதலாக அங்கிருந்த ஒரு பேர்கர் (Burghar) பெண்ணிடம் இழக்கின்றார்.

யாழில் பணிபுரிகின்ற காலங்களில் தற்காலிகமாய் சில மாதங்கள் மன்னாருக்கும் சென்று வூல்ப்வ் வேலைபார்க்கின்றார். சனநெருக்கடியற்ற மன்னார் வூல்ப்பிற்கு யாழ்ப்பாணத்தைவிட அதிகம் பிடிக்கின்றது. அங்கே முத்துக்குளிக்கின்ற மீனவர் சமூகங்களும், அரேபியர்களும் அவ்வளவு இறுக்கமான சாதிய அடுக்குநிலையில் இயங்கிக்கொண்டிருக்காததையும் வூல்ப்வ் குறிப்பிடுகின்றார். பிறகு வேலை இடமாற்றங்காரணமாய் கண்டியிலும், இறுதியாய் ஹம்பாந்தோட்டவிலும் வூல்ப்வ் பணிபுரிகின்றார். ஹம்பாந்தோட்டாவில் உதவி அரசாங்க அதிபராக (Assistant Government Agent) பணிபுரிவதால் அவர் விரும்பிய சில விடயங்களை -முக்கியமாய் புதிய பாடசாலைகள் ஆரம்பிப்பது- அவ்வூர் மக்களுக்காய்ச் செய்யமுடிகின்றது. ஒரு தமிழ்ப்பாடசாலையும் ஹம்பாந்தோட்டாவில் வூல்ப்வ் ஆரம்பித்துவைத்தார் என்ற குறிப்பும் வருகின்றது. கண்டியில் பணிபுரிகின்ற காலத்தில் - தூக்குத்தண்டைக்கு எதிரான கருத்துடையவராக வூல்ப்வ் பின்னாட்களில் இருந்தாலும்- வூல்ப்பின் அனுமதியுடன் கண்டி போகம்பர சிறைச்சாலையில் ஏழெட்டுப்பேர் தூக்கிலிடப்படுகின்றார்கள். அதேபோன்று பிரிட்டிஷகாரர்கள் ஒபியம் (போதை) பயிர்களை ஹம்பந்தோட்டாவில் பயிரிடும்போது எவ்வித எதிர்ப்பும் காட்டாது அதன் மூலம் வரும் வரியைச் சேகரித்து அரசாங்க வேலைகளுக்காய் வூல்பவ் செலவிடுகின்றார். இறுதியில் ஒரு சிங்கள விவசாயின் வீட்டை -ஒரு பிரச்சினையின் நிமித்தம்- தீ மூட்டச்சொல்லும் மேலிடத்தின் பணிப்புக்கு அடிபணியாததால் அவர் -ஒருவருட கட்டாய விடுமுறையில்- திருப்பி இங்கிலாந்துக்கு அனுப்பப்படுகின்றார். அதற்கடுத்த வருடத்தில் (1912) வேர்ஜினியாவை வூல்ப்வ் இங்கிலாந்தில் திருமணம் செய்கின்றார். முதலிரண்டு முறைகள் வூல்ப்வ் propose செய்தும் மறுக்கின்ற வேர்ஜினியா, மூன்றாவது முறையாக இந்தச் 'சதமில்லாத யூதரை' (penniless Jew) திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கின்றார். ஒரு வித மனப்பிறழ்வு நோயிற்கு அடிக்கடி ஆளாகும் வேர்ஜினியாவுக்கு -அவர் ஆற்றில் தற்கொலை செய்யும்வரை- தான் உண்மையாக இருந்தேன் என வூல்ப்வ் கூறிக்கொண்டாலும், வேர்ஜினியா உயிரோடு இருந்த காலங்களிலேயே வூல்ப்விற்கு, ரெக்கி (Trekkie) என்ற திருமணமான பெண்ணோடு உறவு இருந்திருக்கின்றது. அதேசமயம், சிறுபிராயத்தில் தனது உடன்பிறவாச்சகோதரர்களால் (half brothers) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான வேர்ஜினியாவுக்கும் ஆணுடான உறவு அவ்வளவு உவப்பானதாய் இருக்காததால், இடைப்பட்ட சில காலங்களில் அவரொரு லெஸ்பியனாகவும் இருந்திருக்கின்றார்.
1960களில், வூல்ப்வ் மீண்டும் இலங்கைக்கு, தனது 'தோழி' ரெக்கியோடு பயணிக்கின்றார். முன்பு தான் பணிபுரிந்த யாழ்ப்பாணம் உட்பட அனைத்து இடங்களையும் மீண்டும் பார்க்கின்றார். 1900களில் தான் பார்த்த யாழ்ப்பாணம் இப்போதும் அப்படியே மாறாதுதான் இருக்கின்றது என்று வூல்ப்வ் குறிப்பிடுகின்றார் (In Jaffna he felt the place had not changed much since his time and was told that the people there were very conservative. Even in 1960, Jaffna had a character distrinct from other towns). அதேபோன்று 1900 களிலேயே சிங்கள/தமிழ்/முஸ்லிம்/பேர்கர் மக்களுக்கு சுவிஸிலிருக்கும் ஒரு அரசாங்க அதிகார அமைப்பே சரிவரும் என்று ஒர் தெளிவான பார்வையோடு வூல்ப்வ் தான் எழுதிய நூலில் குறிப்பிட்டிருக்கின்றார் (அந்தக்காலகட்டத்தில் -1900-களில் எவ்வித தமிழ்- சிங்கள இனக்கலவரமும் தோன்றாததையும் நினைவில் கொள்ளவேண்டும்; ஆனால் கண்டியில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரங்கள நடந்ததை வூல்பவ் குறிப்பிடுகின்றார்). அதேயேதான் 1960 பயணித்தபோது, சிங்கள அரசியல்வாதியொருவரின் மேடைப்பேச்சை கேட்டபோது தனக்கு இப்படித்தோன்றியதாக வூல்ப்வ் குறிப்பிடுகின்றார்: Woolf mentioned listening to one Sinhalese politician "screaming in a monotonous freenzy which carried me straight back to the days before the war when turned on the wireless and heard Hitler screaming through the microphone at the frenzied Nazis".
வூல்ப்வ் எழுதிய இன்னொரு சிறுகதையான, 'நிலவால் சொல்லப்பட்ட கதை' (A Tale Told by Moonlight) ஐந்து உயர்தர வர்க்க ஆங்கிலேய ஆண்கள் ஒரு மாலைபொழுதில் இங்கிலாந்தில் ஒரு சொகுசான இடத்தில் இருந்துகொண்டு தாம் கீழைத்தேய நாடுகளில் பெற்ற அனுபவங்கள் குறித்து உரையாடுவதாய் அந்தக்கதை இருக்கின்றது. அதில் ஒரே ஒருவர் மட்டுமே இலங்கையில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருப்பவர். அவர் அடிக்கடி தமது பேச்சில் தமிழ்-சிங்களச் சொற்றொடர்களைச் சாதாரணமாய் உபயோகித்துவிடுவார். பிறகு மற்ற நண்பர்கள் நீ என்ன சொல்கின்றாய் என்று விளக்கந்தெரியாது வினாவுகின்றபோது அந்தநபர் விரித்துச் சொல்லத்தொடங்கிவிடுவார். அதில் 'இராமேஸ்வரத்திலிந்து காசி வரை' என்ற தமிழ்ச்சொற்றொடர் கூட வரும் (இந்தியாவை முழுதும் அறிந்தவர் என்பதுதான் இதற்கு அர்த்தம் என்ற பொழிப்புரையும் அந்தக்கதையில் கொடுக்கப்படும்). அதில் 'வேசி', 'ஐயோ' போன்ற சொற்கள பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கதையின் ஒரு பகுதியாய், கொழும்பில் சிவப்பு விளக்கு ஏரியாவிலிருக்கும் ஒரு பெண்ணில் மையல் கொள்ளும் ஒரு வெள்ளையர், அந்தப்பெண்ணை அந்தப் பகுதியிலிருந்து விடுவித்து ஆங்கிலமும், மேலைக்கலாச்சாரமும் சொல்லிக்கொடுத்து தன்னோடு வைத்துக்கொள்வார். என்ன தான் சொல்லிக்கொடுத்தாலும், தன்னைப்போல ஒரு அறிவுஜீவியாக இருந்து உரையாடும் 'வரம்' அந்தப்பெண்ணுக்கு கைவரவில்லை என்ற அலுப்பில் பின்னர் அந்தப்பெண்ணைக் கைவிட்டு இங்கிலாந்திற்கு அந்த வெள்ளையர் போய்விடுகின்றார். அவர் இங்கிலாந்து போன இரண்டாவது நாளில் Celestiinahami ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்கின்றார். ஆனால் இறக்கும்போதுகூட அந்தப் பரிதாபமான பெண், 'பிங்க் கலர் ஸ்கேர்ட்டும், வெள்ளை நிற ஸ்ரொக்கிங்ஸும், சப்பாத்தும்' அணிந்தபடிதான் (மேற்கத்தைய கலாசார அடையாளங்களுடன்) தற்கொலை செய்திருப்பார். இங்கே, இப்படி வெள்ளையர்கள் தங்கள் (உடல்?)விருப்புக்கு துணைகளாக்கும் பெண்களை, பின்னாட்களில் வெள்ளையர்கள் வாழும் மேற்குச்சமூகம் இப்பெண்களை தங்களில் ஒருவராய் ஏற்றுக்கொள்ள மறுப்பதையும், அதேசமயம் இப்படி வெள்ளையர்களை மணப்பதால் அல்லது அவர்களோடு திரிவதால், மீண்டும் இந்தப்பெண்களை இவர்கள் சார்ந்திருந்த சமூகம் இவர்களை உள்வாங்க மறுக்குகின்ற அவலத்தையும் நாம் நினைவில் இருத்திக்கொள்ளலாம். லியனார்ட் வூல்ப்வ், பாப்லோ நெருடா போன்றவர்களாவது ஒருவித பாவமன்னிப்புப்போல தாங்கள் கீழைத்தேயங்களில் --தமது அதிகாரத்தைப்பாவித்து-- சிதைத்த பெண்களைப்பற்றியாவது வெளிப்படையாகக் குறிப்பிடும்போது 'அட அறுவாங்கள் இதையாவது சொன்னார்களே' என்று கேட்டுக்கொள்ளமுடிகின்ற அதேசமயம், சத்தமில்லாது எல்லா அட்டூழியங்களும் செய்துவிட்டு ஆனந்தசயனம் கொள்ளும் மற்றக்கனவான்களின் கல்லறைகளைத் தட்டி எழுப்பியா நாம் அவர்களை மறுவிசாரணை செய்யமுடியும்?
இந்நூலில், வூல்ப்வ் இருந்த இடங்கள் பயணித்த பாதைகள் ஊடாக கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி பயணிப்பதுடன், இன்றைய ஈழச்சூழ்நிலை குறித்து தனது குறிப்புக்களை எழுதிச்செல்வது ஒரு நூற்றாண்டுக்கு முன்பான பழைய இலங்கையை இன்றைய ஈழத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும் வாய்ப்பை வாசகருக்கு ஒண்டாஜ்ஜி வழங்குகின்றார். யாழ்ப்பாணத்தில் வூல்ப்வ் பணி புரிந்த, தங்கியிருந்த அனேக இடங்கள் போரின் நிமித்தம் இன்று சிதைவுற்ற இட்ங்களாய், அடையாளங்காணமுடியாத பகுதிகளாய், கண்ணிவெடி புதைக்கப்பட்டிருக்கும் அபாயகரமான பிரதேசங்களாய் இருப்பதை கிறிஸ்ரோபர் படங்களாலும் குறிப்புகளாலும் இந்நூலில் நமக்கு ஆவணப்படுத்துகின்றார். யாழ், மன்னர் உட்பட நயினாதீவு, நெடுந்தீவு போன்ற தீவுகளுக்கும் தான் போனது பற்றி ஒண்டாஜ்ஜி விரிவாக எழுதியதோடு ஏ9 (A9) பாதையினூடாக பயணித்தபோது கண்ட போரின் வடுக்களையும் பதிவு செய்திருக்கின்றார் (ஆனையிறவில் சிதைவுற்றிருக்கும் ராங் பற்றிய (tank) குறிப்புக்கூட வருகின்றது). ஒரளவு அரசாங்கச்சார்புச் செய்திகளைத்தான் அதிக இடங்களில் ஒண்டாஜ்ஜி குறிப்பிடுகின்றார் என்றபோதும், தான் பார்த்த சிங்கள, தமிழ் மக்களிடையே அவ்வளவு வித்தியாசமோ, வெறுப்போ தெரியவில்லையெனவும். ஆனால் இலங்கை அரசாங்கமும், சிறிலங்காப் படைகளும், விடுதலைப்புலிகளுந்தான் இவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடையூறாக இருக்கின்றார்கள் என்று தான் விளங்கிக்கொண்டதை நூலின் இறுதியில் கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி குறிப்பிடுகின்றார்.

ஆரம்பத்தில் தான் ஒரு ஏகாதிபத்தியவாதியாக -தன்னையறிமால் இருந்திருந்தாலும்- பின்னாட்களில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இருந்ததாக வூல்ப்வ் குறிப்பிடுகின்றார். இங்கிலாந்தில் தான் அமைத்த Bloomsbury group ஊடாக பிரிட்டிஷ் அரசின் காலனியாதிக்கத்துக்கு எதிராக வூல்ப்வைப் போன்றவர்கள் குரல் கொடுத்திருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளலாம். வூல்ப்வ் எழுதிய குறிப்புகளை அவரெழுதிய காலத்தில் வைத்தே பார்க்கவேண்டும் என்றாலும், பல இடங்களில் வூல்பவ் ஒரு ஆணாதிக்கவாதியாகவும், ஏகாதிபத்தியவாதியாகவும் இருப்பதை நாம் மறைத்துக்கொண்டு உரையாடியவேண்டிய அவசியமும் இல்லை. ஒரு அழிக்கப்பட்ட சிங்களக்கிராமத்தைப் பின்னணியாக வைத்து எழுதிய வூல்ப்பின் நாவலான, The Village in the Jungle காலனியாதிக்கெதிரான ஒரு புதினமாய் இன்று பல விமர்சகர்களால் பார்க்கப்படுகின்றது. அநேக காலனியாதிக்கவாதிகள் போல சாதி, தாழ்த்தப்பட்டவர்களின் அவலம் போன்ற விடயங்களை, தங்களுக்கு அவசியமான விடயங்களல்ல எனப்புறந்தள்ளாது இவ்வாறான விடயங்களை கவனத்துடன் எடுத்துக்கொண்ட வூல்ப்வ் ஒதுக்கப்படவேண்டிய ஒரு காலனியாதிக்கவாதியும் அல்ல. முக்கியமாய், ஹம்பாந்தோட்டாவில் இருக்கும்போது தாழ்த்தப்பட்ட பெண்ணொருவர் ஒரு வழக்கை வூல்ப்வ் முன்னிலையில் கொண்டுவருகின்றார். தாழ்த்தப்பட்ட பெண்கள், மார்பைத் தொடும் ஒரு சின்னத்துணி மட்டுமே அணிந்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், இரவிக்கை (blouse) போட தனக்கு அனுமதி தருமாறு அப்பெண் கேட்கின்றார். எனென்றால் அரிசி போன்றவை இடிக்கும்போது இரவிக்கை போடாதிருப்பதன் அசெளகரியங்களை அப்பெண் முன்வைக்கின்றார். வூல்ப்வ் அவ்வ்வூர்களின் 'கலாசாரம்/மரபுகள்' மீது தான் இடையீடு செய்வதை விரும்பவில்லை என்று கூறுகின்றபோதும், இப்பெண் விரும்பினால் அவர் அவ்வாறு இரவிக்கை போட அனுமதிக்கவேண்டும் என அவ்வூரின் தலைவரொருவருக்கு கட்டளையிடுகின்றார்.
இப்போது மீண்டும் நாம் காலனியாதிக்கம் என்ற புள்ளிக்கு வருவோம். காலனியாதிக்கம் நமக்கு நல்லதல்லாதவற்றை மட்டுமின்றி சில சந்தர்ப்பங்களில் நல்லதையும் நமக்குத் தந்திருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ளமுடிகின்றது. ஆங்கிலம் ஆரம்பத்தில் உயர்சாதி மேல்வர்க்கங்களால் கற்கப்பட்டாலும், பின்னாட்களில் காலனியாதிக்கவாதிகளால் பரப்பப்பட்ட கிறிஸ்தவ மதம், மிஸனரிகள் மூலம் அது ஒரளவேனும் தாழ்த்தப்பட்ட மக்களையும் போய்ச்சேர்ந்து பரவலான கல்வியறிவை அவர்கள் பெற உதவிசெய்திருக்கின்றது. இதன்மூலம் தங்களுக்கு மட்டுமே சொந்தமென உயர்சாதிகள் (முக்கியமாய் யாழ்ச்சமூகத்தில்) கொண்டாடிய அறிவு/கல்வி அனைத்துச் சமூகங்களுக்கும் பகிரப்பட்டிருப்பது நல்லதொரு விடயமே. ஆனால் அதேசமயம் ஆங்கிலத்தைக் கற்பதாலும், ஆங்கில இலக்கிய/தத்துவ உரையாடல்களை அப்படி இறக்குமதி செய்வதாலும் மட்டுமே அறிவிஜீவிகள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நமது தமிழ்ச்சமூகம் குறித்தும் நாம் யோசித்துப்பார்க்க வேண்டியிருக்கின்றது. காலனியாதிக்கத்தின் அரசியலை எப்படிப் புரிந்துகொள்வது என்ற உரையாடல்களை வளர்த்தெடுக்கும்போது, நாம் காலனியாதிக்கத்தின் தேவையற்ற எச்சங்களை உதிர்த்துவிட்டு தேவையான மிச்சங்களோடு நகரக்கூடிய ஒரு சுமுகமான சூழல் சிலவேளைகளில் அமையவும்கூடும்.
Photos: From the book 'Woolf in Ceylon'.
(Thami: 4 ur dream fulfilled...)
6 comments:
டிஜே,
8/24/2007 11:20:00 PMகுறிப்பு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டேன் ஆனால் வாசிக்கவில்லை. குறிப்பைப் படிக்க வாசிக்கும் ஆவல் வருகிறது. என் 'வாசிக்க வேண்டிய' பட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன். கெதியில் (ஒரு வருஷம்) வாசிக்க வேணும்.
இந்த Leonard Woolf அம்பாந்தோட்டையில் அவர் வாழ்ந்த கால அனுபவங்களை வைத்து 'Village in the Jungle' என்ற நாவல் எழுதியிருக்கிறார். அதை 'பெத்தாகம' என்று சிங்களத்தில் படமும் எடுத்திருந்தார்கள்.(விஜய குமாரணதுங்க பிரதான வேடத்தில் நடித்திருந்தார்). பத்து, பதினொரு வருடங்களுக்கு முன் நாவலை வாசிக்க, படத்தைப் பார்க்க - தேவையும் ஏற்பட்டு அதற்கான சந்தர்ப்பமும் கிடைத்தது.
ஆழியாள்
டீசே நல்லதொரு குறிப்பு. போர் சூழலால் ஈழத்தில் ஜாதிப்பிரச்சினை அவ்வளவாக் இல்லை என்றொரு குறிப்பு வாசித்தது ஞாபகத்துக்கு வந்து போனது :0)
8/24/2007 11:39:00 PM//இன்றும், விரிவான அறிவும் தெளிவும் 'சுதேச' மொழிகளில் ஒருவருக்கு இருந்தாலும், அவர் ஆங்கிலத்தையும், அதனூடாக ஆங்கில இலக்கியங்களையும்/தத்துவங்களையும் அறிந்துவைத்திருந்தால் மட்டுமே, அவரது கருத்துக்கள் 'அறிஞர் குழாத்தில்' கவனத்தில் எடுக்கப்பட்டு விவாதிக்கப்படக்கூடிய சூழல் தமிழ்ச்சமூகத்தில் இருக்கின்றது எனபதை நாமனைவரும் அறிவோம்.//
இது வெறு சுதேச அறிவுஜீவிகள் மட்டும் அப்படி வைத்துள்ளதால் என்று முழுமையாக சொல்லிவிடமுடியாதென்று நினைக்கிறேன். ஆங்கிலம் பொருளாதார உலகில் பெர்றுள்ள முன்ணேற்றமும் ஒரு காரணமஅக இருக்கலாம். பிற சமூகத்தினரும் பிற வெளிநாட்டவரும் ஆங்கில பேசுவதை பேசத்தெரிந்திருப்பதை ஒரு உயர்வான பார்வையோடு அணுகுவதை கண்டிருக்கிறேன். ஆங்கிலம் எப்படி உயர்மட்டங்களை பொறுத்தமட்டில் உலகளாவிய மொழியானது என்பதும் விவாதிக்கப்படவேண்டியது.
ஆங்கிலம் தெரியாதென்று பாரளுமண்ரித்திலே இவனெல்லாம் என்ன பேசப்போகிறான் என்று சில மந்திரிகளை கிண்டல்செய்வதையும் காணலம் ;)
--FD
மூன்று குறிப்புகக்கள்:
8/25/2007 03:45:00 AM1.நல்லதொரு அறிமுகம்.
2.ஆழியாள், அந்தப்படத்தின் பெயர் பெத்தாகம' அல்ல, பத்தேகம.
3. 'ஆங்கிலம் எப்படி உயர்மட்டங்களை பொறுத்தமட்டில் உலகளாவிய மொழியானது என்பதும் விவாதிக்கப்படவேண்டியது.'- 'ஆங்கிலம் வெற்றி வாகை சூடிய வரலாறு'என்று இது பற்றி ஏ.ஜே.கனகரட்ண மொழிபெயர்த்த சிறுபிரசுரம் ஒன்றுள்ளது. பார்க்கவும்
ஆழியாள், உங்களின் குறிப்புகளுக்கு நன்றி. Leonard Woolfன் படைப்புக்கள் குறித்து மிக ஆழமாய் சிங்கள இலக்கியச்சூழலில் விவாதிக்கப்பட்டதாய் அறிந்திருக்கின்றேன். இந்த நூல் குறித்த அறிமுகங்கூட, இங்கு வெளிவரும் சிங்கள (ஆங்கிலப்பதிப்பு) பத்திரிகையில்தான் வாசித்திருந்தேன்.
8/25/2007 02:11:00 PM.....
/போர் சூழலால் ஈழத்தில் ஜாதிப்பிரச்சினை அவ்வளவாக இல்லை என்றொரு குறிப்பு வாசித்தது ஞாபகத்துக்கு வந்து போனது :0)/
FD: இதை நான் எழுதவில்லைத்தானே :-).
/இது வெறு சுதேச அறிவுஜீவிகள் மட்டும் அப்படி வைத்துள்ளதால் என்று முழுமையாக சொல்லிவிடமுடியாதென்று நினைக்கிறேன். ஆங்கிலம் பொருளாதார உலகில் பெர்றுள்ள முன்ணேற்றமும் ஒரு காரணமஅக இருக்கலாம். பிற சமூகத்தினரும் பிற வெளிநாட்டவரும் ஆங்கில பேசுவதை பேசத்தெரிந்திருப்பதை ஒரு உயர்வான பார்வையோடு அணுகுவதை கண்டிருக்கிறேன். ஆங்கிலம் எப்படி உயர்மட்டங்களை பொறுத்தமட்டில் உலகளாவிய மொழியானது என்பதும் விவாதிக்கப்படவேண்டியது./
உண்மைதான். விவாதிக்க வேண்டிய புள்ளிதான். இது தொடர்பாய், அநாமதேய நண்பரும் ஏஜேயினது மொழிபெயர்ப்பொன்று குறித்துக் குறிப்பிட்டிருக்கின்றார்.
......
/'ஆங்கிலம் வெற்றி வாகை சூடிய வரலாறு'என்று இது பற்றி ஏ.ஜே.கனகரட்ண மொழிபெயர்த்த சிறுபிரசுரம் ஒன்றுள்ளது. /
அநாமதேய நண்பர் இக்குறிப்புக்கு நன்றி. தேடிப்பார்க்கின்றேன்.
"அந்தப்படத்தின் பெயர் பெத்தாகம' அல்ல, பத்தேகம."
8/25/2007 11:43:00 PMசிங்கள phonetics இல் எனக்கு அந்தளவு பரிச்சயம் இல்லை. ஆங்கில sub titles உடன் தான் அதைப் பார்த்த ஞாபகம். Beddagama என்பதைத்தான் நான் 'பெத்தாகம' எனச் சொன்னேன். சரியான சிங்கள pronunciationஐ தந்ததுக்கு --FDக்கு என் நன்றிகள்.
ஆழியாள்
டிசே வை காணல :)
9/12/2007 05:33:00 AMPost a Comment