கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

புலம்பெயர் திரைப்படங்கள்

Thursday, October 25, 2007

-சில குறிப்புகள்-


புலம்பெயர்ந்த தமிழர்கள் குறும்படங்களிலிருந்து முழுநீளத்திரைப்படங்கள் வரை பலவேறு வகைப்பட்ட திரைப்படங்களை எடுத்துவருகின்றனர். வேற்று மண்ணில் வேர்களைப் பரப்புவதிலிருந்து, புதுச்சூழலிற்கு இயைபாக்கம் அடைதல்வரையென்ற கதையாக்கப்படுவதற்கான மிகப்பெரும் வெளியிருப்பினும், நம்பிக்கை அளிக்கக்கூடிய, பிறநாட்டுச் சினிமாக்களுக்கு நிகராக வைத்து பேசப்படகூடிய பிரதிகளை இன்னமும் புலம்பெயர்ந்தவர்கள் தரவில்லையென்பது ஏன் என்பது உரையாடப்படவேண்டிய விடயமே. எனினும் தமக்கான களங்களுடனும், தமக்கான புரிதல்களுடனும் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளிலிருந்து படங்கள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உள்ளூர்க்கலைஞர்களை மதிப்பதில்லையென்றும், நமக்கான சந்தை வாய்ப்புக்குறைவு என்றும் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்களில் உண்மையிருப்பினும், ஒரு படைப்பாளி இவற்றை எப்படி எதிர்கொள்வது/தாண்டிச்செல்வது என்பதைப்பற்றியே சிந்திக்கவேண்டுமே தவிர, ஒரே குற்றச்சாட்டுக்களை கிளிப்பிள்ளைமாதிரி தொடர்ந்து சொல்லித் தப்பித்துக்கொள்ளமுடியாது (அவ்வாறு மீறி -இன்றும் பல வருடங்களாய் நிரம்பிய அரங்குகளாய்- நிகழ்ந்துகொண்டிருக்கும் 'இசைக்கு ஏது எல்லை' என்ற இசைநிகழ்ச்சியை கவனத்தில் கொண்டு உரையாடல்களை ஆரம்பிக்கமுடியும்). இனி அண்மையில் பார்த்த/வெளிவந்த சில குறும்/நெடுந்திரைப்படங்களைப் பார்ப்போம்.

'கனேடியன்' என்று கனடாவில் தயாரிக்கப்பட்ட படம், இங்கிருக்கும் இளைஞர்களின் குழு வன்முறையைப் (Gang Violence) பேசமுயல்கின்ற ஒரு படமாகும். ஒரு வீட்டில் தங்கியிருக்கும் இளைஞர்கள், குழு வன்முறையில் ஈடுபடுவதை அறிந்து அவ்விளைஞர்களின் உறவுமுறையான ஒருவர் இவர்களைத் திருத்த ஈழத்திலிருந்து வருகின்றார். முழுநீளத்திரைப்படமாகையால் முதல் அரைவாசிப்பகுதி நகைச்சுவைப் பகுதிகளால் நிரப்பபட்டிருக்கின்றது (ஒரளவு, பார்ப்பவர்களை சிரிக்கவைப்பதிலும் வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள்). எதிர்க்குழுவில் உள்ள ஒருவனால் -ஊரிலிருந்த வந்தவரின் மருமகன் முறையான- இளைஞன் கொல்லப்பட, அவ்விளைஞனின் மாமா முறையானவர் கொன்ற இளைஞனுக்கு அவனது தவறை உணரச்செய்கின்றார் என்பதே இத்திரைப்படத்தின் ஊடுபொருள். இறுதியில் எல்லோரும் நண்பர்களாக தமக்கான வன்மங்களை மறந்து மாறுகின்ற பொழுதில், கொலையாளி(?) இளைஞன் தன் விருப்பின்பேரில் பொலிசிடம் சரணடைகின்றான்.

தங்கள் நண்பனை/உறவை கொன்றவனை தங்களில் ஒருவராய் ஏற்றுக்கொள்ளும்ம் சந்தர்ப்பத்தில், 'ஏற்கனவே ஒருவனை இழந்துவிட்டோம் இனியும் இன்னொருவனை இழக்கவேண்டுமா? ஒருவன் எப்போது தன் தவறை உணர்ந்து வருந்துகின்றானோ அப்போதே ம்ன்னிக்கப்பட்டுவிடுகின்றான்' என்று இத்திரைப்படம் முன்வைக்கும் கருத்தாடலில், இவ்வாறான இளைஞர்களின் மீதான் அக்கறையையும், பரிவையும் ஏற்றுக்கொண்டு படத்தை முடியும்வரை பார்க்கமுடியுமெனினும் இத்திரைப்படம் சில பலவீனங்களையும் கொண்டுள்ளது என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். இவ்விளைஞர் குழுக்கள் ஏன் வன்முறையாளர்களாய் உருவெடுத்தார்கள் என்பதற்கான காரணம் படத்தில் காட்ட்ப்படாததை அதொரு படைப்பாளிக்கான சுதந்திரமாய் நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் குழுக்களின் சண்டைக்காட்சிகள் ஒருவித நகைச்சுவைக்காட்சியிற்கு அண்மையாகப் போய்விடுகின்றது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. இங்கே எடுக்கபபடும் பல முழுநீளத்திரைப்படங்களுக்கு ஏற்கனவே நிகழ்ந்ததே இத்திரைப்படத்திற்கும் நிகழ்ந்திருக்கின்றது. இவ்வாறானவர்கள் இன்னுமே 'தமிழ்நாட்டுச்சினிமா சட்டகம்' என்ற பெருங்கதையாடலை விட்டு வெளிவருவதற்கான நம்பிக்கைகளைத் தருவதாய்க்காணவில்லை. தென்னிந்தியத்திரைப்படங்கள் போல சினிமாப்பாடல்கள் வேண்டும் (ஆனால் தொட்டும் தொடாமலும் ஆடி நமது புலம்பெயர் தமிழ்க் கலாசாரத்தை (?) காப்பாற்றவும் வேண்டும். சண்டைக்காட்சிகளும் வேண்டும். ஆனால்.... ). இப்படத்தின் சண்டைக்காட்சிகளைப் பார்க்கும்போது இவர்கள் இங்கிருக்கும் குழு வன்முறை குறித்து எவ்வாறான ஆய்வுகளை -இப்படத்தை எடுக்கமுன்னர் செய்தார்கள்- என்பது பற்றிய கேள்விகள் எழுகின்றன. குழுக்களில் இருப்பவர்கள் தமக்கான பாதுகாப்பான பிரதேசங்கள் தவிர்த்து- பிற இடங்களில் தனித்துத்திரியமாட்டார்கள். ஆனால் இங்கே 'கெட்டவராக' சித்தரிக்கப்படுபவர் ஆரம்பக்கட்டம் தவிர்த்து படம் முழுதும் தனியாகவே திரிகின்றார். மற்றது குழுச்சண்டைகள் சும்மா சினிமாச் சண்டைகள் போல நடைபெறுவதில்லை ('சித்திரம் பேசுதடி' படத்தில் வெகு யதார்த்தமாய் இதைச் சித்தரிக்கும் காட்சியொன்று வரும்) . ஒருவன் ஒரு குழுவிடம் தனியே சிக்கினால் எப்படி அவர்கள் கூட்டமாய்ச் சேர்ந்து 'கிழிப்பார்கள்' என்பது வன்முறைக்குழுவில் இருப்பவர்களிடம் கேட்டால் விளங்கும். மேலும் வெறும் கையால் சுழற்றி சுழற்றி (பல சினிமாக்களில் சின்னவிரலால் மட்டும்கூட சுழற்றி சுழற்றி அடிப்பார்கள்) அடிக்கும் காலம் இங்கிருக்கும் வன்முறைக்குழுக்களில் எப்போதோ மலையேறிப் போய்விட்டது. இவை முக்கிய குறைபாடுகளாய் இல்லாதுவிட்டாலும், தமிழகச்சினிமாவின் பாதிப்பு அப்படியே 'அப்பட்டமாய்' தெரிகின்றன எனச்சுட்டவே இவற்றைக் குறிப்பிட விழைகின்றேன். இளைஞன் கொல்லப்பட்டவுடனேயே கொன்ற இளைஞனுக்கும் ஒரு பெண்ணுக்குமிடையே ஒரு காதல் 'டூயட்' வந்துவிடுகின்றது. ஒரு அவலமான சூழ்நிலையில் உடனேயே ரொமான்ரிக் சூழல் வருவது யதார்த்ததில் சாத்தியமேயில்லை. பாடலைத் திணிக்கவேண்டும் என்றிருந்தால் - ஆகக்குறைந்தது சில காட்சிகள் பிந்தியாவது- இணைத்திருக்கலாம்.

அதேபோன்று ஊரிலிருந்து மாமா வருகின்றபோது அவர் தனது பழைய காதலியொருவரைக் கனடாவில் சந்திப்பார். இருவரும் தமக்கான குடும்பம் பிள்ளைகள் என்றிருப்பவர்கள். எனினும் அவர்களுக்குள் இன்னும் இருக்கும் மெல்லிய உணர்வுகள் நகைச்சுவையுடன் நகர்த்தப்பட்டிருக்கும் (குடும்பம், பிள்ளைகள் என்று வந்துவிட்டால் பழையதெல்லாம் மறந்து/மறைந்து போகவேண்டும் என்ற கட்டாயமா என்ன?) . ஆனால் அதைக்கூட இறுதியில் ரஜினியின் ஏதோ சில பாடல்களுக்கு அவர்களிருவரையும் அபிநயம் பிடிக்கச்செய்யவைத்து ஆபாசப்படுத்தியிருப்பார்கள். இம் மென்னுணர்வுகள் இப்படியாய் குரூர நகைச்சுவைக்குள் போவதற்காய் உரியன அல்லவென உரத்துச்சொல்ல வேண்டியிருக்கின்றது. மேலும் அந்தப் பெண்மணியை மணிரத்தினத்தின் 'ப்மபாய்' பட ஸ்ரையிலில் 'எல்லாம் குலுஙக' ஓடிவரச்செய்வதெல்லாம்... மீண்டும் தமிழகச்சினிமா என்ற பெருங்கனவை இவர்களால் கலைக்கமுடியவில்லையென்பதைத் தவிர வேறென்னத்தைச் சொல்ல? எனினும் இவ்வாறான பலவீனங்களைத் தாண்டி, இங்கிருக்கும் இளைஞர்களின் ஒருபகுதியினரின் வாழ்வைப்பற்றி வெளிப்படையாக உரையாடமுயன்றிருக்கின்றது என்பதற்காய் இப்படத்தை - சில நெளிதல்களுடன் சகித்துக்கொண்டு - பார்க்கலாம்.

இதே கருத்தை, 'வினை' என்ற ஜந்து நிமிடக்குறும்படம் அழகாகக்காட்டுகின்றது. 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பதே இதன் கருப்பொருள். இளைஞர் வன்முறைக்குழுவில் இருக்கும் ஒருவனுக்குத் தான் சுட்டுக்கொல்லப்படுவதாய் கனவொன்று வருகின்றது (ஏற்கனவே யாரையோ இந்த இளைஞன் இருக்கும் குழு சுட்டிருக்கின்றது). அது கனவுதான், தான் கொல்லப்படவில்லை என்று பதட்டத்தோடு எழும்புகின்றவனுக்கு, அவனது நண்பரொருவன் சுடப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றான் என்ற தொலைபேசிச் செய்தி வருவதோடு படம் முடிந்துவிடுகின்றது. ஒரு வீட்டிற்குள்ளேயே படம் முழுதும் எடுக்கப்பட்டிருக்கின்றது. படத்தில் இருக்கும் கதாபாத்திரம் ஒன்றேயொன்றுதான். ஆனால் படம் சொல்ல்வருவது என்னவென்பது அப்படியே மனதில் பதிந்துவிடுகின்றது.



'தொடரும் நாடகம்' என்ற டென்மார்க்கில் தயாரிக்கப்பட்ட இருபது நிமிடக்குறும்படம், புலம்பெயர்ந்தவர் வாழ்வில் சின்னத்திரைகளின் ஆதிக்கம் பற்றிப்பேசுகின்றது. சின்னத்திரை நாடகங்களுக்கு அடிமையாகும் தாயாரால் வீணாய்ப்பலிகொள்ளப்படுகின்ற சிறுவனை இதுகதைப்பொருளாக்கின்றது. சற்று உயர்வுநவிற்சியாய் எடுக்கப்பட்டிருந்தாலும், சின்னத்திரை நாடகங்களின் ஆதிக்கமும் அவ்வளவு எளிதாய் புறககணிக்க முடியாது எனபதே யதார்த்தம் ஆகும்.


'கதவுகள்' என்ற ஐந்து நிமிடக்குறும்படம். வாழ்வில் ஒரு கதவு அடைக்கப்பட்டால் இன்னொரு கதவு திறக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் என்று கூறுகின்றது. தனது மனைவி வீட்டை விட்டு ஒடிப்போன அவமானத்தில்(?)/துயரத்தில், தற்கொலை செய்ய முயல்கின்றார் கணவர். அதிக மாத்திரைகளை எடுப்பது, கயிற்றைக் கட்டித்தொங்குவது, மாடியிலிருந்து குதிக்க ஆயத்தமாவது என்று பல முயற்சிகளுக்கு முயன்றாலும் அவரால் தனது தற்கொலையைக் கச்சிதமாய் நிறைவேற்றமுடியாது போகின்றது. அப்படிக்குலைந்துபோகின்ற நிலையில் அறையிலிருந்த அவரின் குழந்தையின் அழுகுரல் இவரை இன்னொருவிதமாய் சிந்திக்கவைக்கின்றது. ' உன்னை விட்டுவிட்டு எப்படி நான் சாக முடிவு செய்தேன்? 'என்று தனது குழந்தையை அரவணைப்பதுடன் படம் முடிந்துவிடுகின்றது. இப்படம் சிலவிதமான அதிர்வுகளை எமக்குத் தருகின்றது. தாய் என்பவர் புனிதமான பிம்பமாக்கப்படுவதை மறுக்குகின்றது. அதாவது 'புனிதமான தாய்' குழந்தையை விட்டு ஒருபோதும் ஓடமாட்டார் என்ற கதையாடலை நிராகரிக்கின்றது (இந்தபுனிதத்தன்மை புகுத்தப்படாது விட்டிருந்தால், பல தாய்மார்கள் தமது பிள்ளைகளையும் சேர்த்து தாங்களும் தற்கொலை செய்திருக்கமாட்டார்கள்; மற்றது 'பிள்ளைகளுக்காய்..' என்ற பல தமது விருப்புக்களை வாழ்க்கையில் விட்டுக்கொடுக்கவேண்டி வந்திருக்காது) . இப்படத்தில் இருந்து எழும்பும் இன்னொரு அதிர்வு, தற்கொலை செய்தல் மிக எளிதானதென்ற பொதுப்புத்தி சார்ந்து சிந்திக்க முயலாதது.


'மெளனச்சுமைகள்', புலம்பெயர்ந்த தேசத்தில் பெற்றோரின் (வயது முதிர்ந்தவர்களின்) இருப்புக் குறித்துப் பேசுகின்றது. ஊரில் தனித்திருக்கும் பெற்றோரை வெளிநாட்டுக்குக் கூப்பிடும் பிள்ளைகள் எப்படி அவர்களைத் தமது சொந்த இலாபங்களுக்குப் பயன்படுத்த முனைகின்றார்கள் என்பதை இக் குறும்படம் காட்சிப்படுத்துகின்றது. வயது முதிர்ந்த காலத்தில் ஒன்றாய் சேர்ந்திருககவேண்டிய பெற்றோர்.... தாய் ஒரு மகளோடும், தகப்பன் ஒரு மகனோடும் பிரிந்துவாழ்வதன் அவலம் குறித்துக் கேள்விகளை எழும்புகின்றது.


'அஃகம்' என்ற கனடாவில் எடுக்கப்பட்ட பதினைந்து நிமிடக் குறும்படம், பதின்மவய்துப்பெண்களின் பிரச்சினையொன்றைப்பற்றிப் பேசுகின்றது. பாடசாலைக்கும் போகும்/வரும் வழியில் பதின்மவயதுக்காரியொருத்தியை, (சற்று வயதுகூடிய?) ஒரு ஆண் இடைமறித்து தொடர்ந்து உரையாட விரும்புகின்றார். அவரின் நடத்தையிற்கும், வடிவிற்கும் என்னோடான காதல்தான் பெரிய முக்கியமென அப்பெண் அந்த ஆணின் காதலை நிராகரிக்கின்றார். காதலை ஏற்பதாய் இருந்தால் மரத்தில் வைக்கும் வண்ணத்துப்பூச்சி வ்டிவான் கிளிப்பை எடுத்துப்போடவேண்டும் இல்லாவிட்டால் காதலை நீ ஏற்றுக்கொள்ளவில்லையென தான் நினைத்து அமெரிக்கா போய்விடுகின்றேன் என சற்று சினிமாத்தனமான் டயலொக்கை அந்த ஆண் கதைக்கின்றார். ஆரம்ப நாட்களில் காதலை நிராகரிக்கும்/ கிளிப்பை எடுக்காத அந்தப்பெண்ணும் அவரின் நண்பிகளுக்கும் பின்னாளில் அந்த ஆணை (அவர் அமெரிக்கா போய்விட்டாரென நினைக்கின்றேன்) தாங்கள் மிஸ் பண்ணுவதாய் கதைக்கின்றார்கள். இறுதியில் அந்தப் பெண் தனது தலைக்கு அந்தக் கிளிப்பைப் போடுவதோடு படம் முடிகின்றது. கொஞ்சம் சினிமாத்தனமான உரையாடலகளைத் தவிர்த்துப்பார்த்தால், இப்படம் பிரதிகளுக்கு அப்பால சில கேள்விகளை எழுப்ப பார்ப்பவருக்கு வெளியைத் தருவது புரியும். இதைப்போன்ற பல சந்தர்ப்பங்களில் சிக்குப்பட்ட சில நண்பர்களை எனது பதின்மங்களில் கண்டிருந்ததால் இக்குறும்படம் இன்னும் நெருக்கமாயிற்றோ தெரியாது.


இந்தப்படங்களையெல்லாம் விட நம்பிக்கை அதிகம் தந்த படம் என்றால் 'நதி' என்ற பிரான்சில் எடுக்கப்பட்ட 15 நிமிடப்படத்தைத்தான் சொல்லவேண்டும். ஒரு அகதியின் துயரை மிகத்தத்ரூபமாய் எளிமையான காட்சிகளால் சித்தரிக்கின்றது. தனது உறவினரின் பணத்தில்(கடனில்) கள்ளமாய் பிரான்சிற்கு வந்து, எந்த வேலையும் செய்யமுடியாது -வேலைசெய்யும் அனுமதிப்பத்திரம் (work permit) இல்லாதிருக்கும்- இளைஞனே இங்கே முக்கிய பாத்திரமாகின்றான். இந்த நெருக்கடியோடு ஊரிலிருந்து அம்மாவின் நோயிற்கு இன்னபிறவிற்கென பணம் அனுப்பச் சொல்லும் உறவுகள்... தங்கியிருக்க்கும் வீட்டுக்காரரும் தனக்கான அல்லல்களோடு இவனை உளவியல்ரீதியில் திட்டிக்கொண்டிருக்கின்றார். ஒருமாதிரி இன்னொருவரின் வேலை அனுமதிப்பத்திரம் பெற்று கள்ளமாய் இவ்விளைஞன் வேலை செய்ய வெளிக்கிடும்போது, அந்த தொடர்மாடிக்கட்டடத்தில் இரு இளைஞர் குழுக்கள் கைகலப்பில் ஈடுபடுகின்றனர். இதையறிந்து பொலிஸ் அங்கே வர, அவ்விரு குழுக்களும் தப்பிவிட இந்த இளைஞன் இடைநடுவில் மாட்டிவிடுகின்றான். பொலிஸார், இவனைக் கைதுசெய்து அடையாள அட்டைகளைக் கேட்கும்போது, இவன் கள்ளமாய் வந்து பிரான்சில் நிற்பது தெரிகின்றது. மேலும் அவனிடமிருக்கும் வேலை செய்யும் பத்திரமும் இன்னொருவனுடையதாக இருப்பதும் ஆபத்தாக முடிந்துவிடுகின்றது. அவ்விளைஞன் தான் உடனேயே நாடுகடத்தப்படுவதன் அவலத்தை நினைத்து அரற்றத்தொடங்குவதோடு படம் முடிகின்றது. எத்தனையோ நாடுகளின் ஆபத்தான எல்லைகளைக் கடந்து, ஏஜென்சிகளுக்கு இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து வந்தவர்களுக்கே இத்துயரத்தின் ஆழம் புரியும். 'உன்னிடம் இருப்பதும் சிறிலங்கா பாஸ்போர்ட்'தானே என்று கேட்பவர்கள், இவ்விளைஞர்களைப் போல சொகுசாய் அமெரிக்கா போன்ற இடங்களுக்கு பறப்பவர்களாகவோ.... முக்கிய அரசியல் பிரமுகர்களோடு சொகுசாய் விமானத்தில் உட்கார்ந்துகொண்டு 'தாம் பேசும் அரசியலோடு' உலகம் சுற்றத்த்தொடங்கி தாம் பேசி முடிக்கும் அரசியலோடு உலகமும் சுற்றுவதை நிறுத்திச் சுருண்டு படுத்துவிடுகின்றது என்று நினைப்பவர்களாய் மட்டுமே இருக்கமுடியும். இக்குறும்படத்தில் நடித்திருந்த நடிகர்கள் மிக இயல்பாய் நடித்திருந்தார்கள். உரையாடல்கள், ஒளிப்பதிவு எல்லாம் கதையின் களத்தோடு நேர்த்தியாய் பொருந்திக்கொள்கின்றது.


இவ்வாறு புலம்பெயர் திரைப்பட முயற்சிகள் பலவேறு புலங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தாலும், இன்னும் கடக்கவேண்டிய பாதை நீண்டதாய் இருக்கின்றதென்பதே உண்மை. மேலே குறிப்பிட்ட பல படங்களில், ஒளிப்பதிவு/ஒலிப்பதிவு/உரையாடல்கள் என எல்லாம் ஒத்திசைந்து வந்த படங்கள் மிகக்குறைவே. திரையிசைப்பாடல்களும், சண்டைக்காட்சிகளும்... நமக்கு இந்திய வணிகச்சினிமா போல் அவசியமா என்ற கேள்வியை ஒவ்வொரு படைபாளியும் தமக்குள் எழுப்பிவிட்டு ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கத் தொடங்கவேண்டும். பாடல்கள் இல்லாது மனதை வருடிச்செல்லும் ஈரான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் தயாரிக்கப்படும் படங்களும், வன்முறையை அப்படியே வெளிப்படையாக பார்வைக்கு வைக்காது, ஆனால் அதன் பாதிப்புக்களை உருவாக்கிய Mr & Mrs அய்யர் போன்ற படங்களும் அங்கீகரிக்கப்பட்டு பரவலாய் பாராட்டுப்பெறுவதையும் நாம் நினைவில்கொள்ளலாம். ஒரு முழுநீளத்திரைப்படம் எடுப்பதற்கான அவசியம் ஏன் நமக்கு இப்போதிருக்கின்றது என்ற கேள்வியும் இருக்கின்றது. ஆங்கிலப்படங்கள் போல அவற்றின் கதை/களத்தைப் பொருத்து திரைப்படங்களை தயாரித்தலுக்கு, எடிங்கிறகான முக்கியத்துவம் புரிந்துகொள்ளப்படவும் வேண்டும். அதைவிட நாம் யாருக்காக படம் எடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்பதே முக்கியமானது. வர்த்தக தமிழ்ச்சினிமாவிற்கான காரணஙகளை மறுக்கவேண்டிய அவசிய்மில்லை. ஆனால் அவ்வாறான படங்களைப் பார்ப்பதற்கும், அது போல போலி செய்து தயாரிக்கப்படும் படங்களைப் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.


புலம்பெயர்வாழ்வில் இன்னும் சொல்லப்படாத பல கதைகள் புதையுண்டு கிடக்கின்றன. போலச் செய்யும்போதல்ல, நமக்கான கதையை நாமே காட்சிப்படுத்தும்போதுதான் நமது அசலான முகங்கள் வெளிப்படும். அந்த தனித்துவமான கதைகளே 'நமக்கான திரைப்படமொழியை' உருவாக்கப்போகின்றவை. அத்தோடு 'தமிழ்' என்ற சிறு எல்லைகளுக்குள் அடங்கிப்போகின்ற முயற்சிகளை -ஈரானிய/சிங்களப்படங்கள் போல- மொழிகளைத்தாண்டி பிறமொழி பேசுபவர்களிடையேயும் அதிர்வுகளை உண்டாக்கி நமக்கு பெருமை தரக்கூடியதாகவும் அவை அமையவும்கூடும்.


('கனேடியன்' என்ற திரைப்படத்தைத் தவிர மிகுதி அனைத்துக் குறும்படங்களையும் அண்மையில் நடந்த 'ஆறாவது சர்வதேச தமிழ்க் குறும்திரைப்பட விழா'விலேயேதான் பார்த்திருந்தேன். அதற்கும் நன்றி.)

16 comments:

Anonymous said...

அருமையான பதிவு. பல புதிய தகவல்கள்.

நீங்கள் குறிப்பிடும் குறும்படங்கள் எல்லாம் ஆன்லைனில் காணக் கிடைக்குமா? இப்படைப்பாளிகளுடன் உங்களுக்குத் தொடர்பு இருந்தால், படங்களை யூட்யூப் போன்ற வலைத்தளங்களில் ஏற்றச் சொல்லுங்க.

பிகு : புலம்பெயர் சினிமாக்கள் , மெய்ன்லாண்டு பெருங்கதையாடல்களை ( whatever that really means )ஒட்டியே அமைகின்றன என்று பல இடங்களில் ( குற்றம் சாட்டுகிற தொனியில் ) சொல்கிறீர்கள். அது இயல்பாக நடக்கிற விஷயம் தான் என்று நினைக்கிறேன்.

10/25/2007 01:25:00 PM
இளங்கோ-டிசே said...

பிரகாஷ், 'வினை'குறும்படத்தை இங்கே பார்க்கலாம்.

...
மிகுதி பின்.

10/25/2007 03:51:00 PM
Anonymous said...

நன்றி டிசே. பார்த்தேன். அருமை. ஒளி/ஒலித் துல்லியம் அசத்தல். நீளத்தை இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம் என்று தோன்றியது.

10/25/2007 04:16:00 PM
இளங்கோ-டிசே said...

/புலம்பெயர் சினிமாக்கள் , மெய்ன்லாண்டு பெருங்கதையாடல்களை ( whatever that really means )ஒட்டியே அமைகின்றன என்று பல இடங்களில் ( குற்றம் சாட்டுகிற தொனியில் ) சொல்கிறீர்கள். அது இயல்பாக நடக்கிற விஷயம் தான் என்று நினைக்கிறேன்./

பிரகாஷ், அது தவறென்று சொல்லவரவில்லை. உண்மையில் வணிகத்தன்மையில் தயாரிக்கப்படும் படங்களைக்கூட நானிங்கு நிராகரிக்கவில்லை. ஆனால், அதே 'போல' செய்யும் படங்களைத் தயாரித்துக்கொண்டு, ஒருவரும் பார்க்கவில்லை, எமது கலைஞர்களை எவரும் மதிக்கவில்லை என்ற சொல்லாடல்கள்தான் தவறென்று சொல்ல வருகின்றேன். தமிழகச்சினிமாவை அப்படியே பிரதிபண்ணி இங்கேயெடுக்கும் படங்களைவிட, எத்தனையோ விதங்களில் பலபடிகள் முன்னேறிய அசல் தமிழகச்சினிமாவைத்தான் எந்த இரசிகரும் பார்க்க விரும்புவார்கள்; அது நடைமுறை யதார்த்தம். எனவே தனித்துவமான திரைப்படமொழியை புலம்பெயர் சினிமா கண்டெடுக்கும்போதுதான், தானாகவே ஒரு மக்கள் திரள் உற்சாகத்துடன் பார்க்க ஆரம்பிக்கும் எனத்தான் சுட்டிக்காட்ட முயன்றேன். மற்றும்படி ஒரு பக்கத்தில் அற்புதமான சினிமாக்கள் ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வந்துகொண்டிருந்தாலும், இந்திச் சினிமாக்களின் பாதிப்பில் பாடல்கள், அரைவேக்காட்டுத்தனமான சண்டைக்காட்சிகளுடனும் அங்கிருந்தும் படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
....
இந்தப்பதிவில் இங்கு தயாரிக்கப்பட்ட, இன்னும் சில முழுநீளப்படங்கள் குறித்து எழுதிவிட்டு, பதிவின் நீளத்தைக் கவனத்தில் கொண்டு அவற்றைத் தவிர்த்திருந்தேன். 'மல்லிகை வாசம்' என்றொரு படத்தைப் பற்றி எழுதிய குறிப்பை இன்னும் சுருக்கி இப்பதிவோடு சேர்த்துக்கொள்ள முடியுமா என்று பார்க்கின்றேன். ஒரு படத்தை எப்படி எடுக்கக்கூடாதென்பதற்கு அது நல்லதொரு உதாரணமாய் அமையக்கூடும். நன்றி.

10/25/2007 11:11:00 PM
கொண்டோடி said...

//ஏஜென்சிகளுக்கு இலட்சக்கணக்கில் பணாம் கொடுத்து வந்தவர்களுக்கே இத்துயரத்தின் ஆழம் புரியும். 'உன்னிடம் இருப்பதும் சிறிலங்கா பாஸ்போர்ட்'தானே என்று கேட்பவர்கள், இவ்விளைஞர்களைப் போல சொகுசாய் அமெரிக்கா போன்ற இடங்களுக்கு பறப்பவர்களாகவோ.... முக்கிய அரசியல் பிரமுகர்களோடு சொகுசாய் விமானத்தில் உட்கார்ந்துகொண்டு 'தாம் பேசும் அரசியலோடு' உலகம் சுற்றத்த்தொடங்கி தாம் பேசி முடிக்கும் அரசியலோடு உலகமும் சுற்றுவதை நிறுத்திச் சுருண்டு படுத்துவிடுகின்றது என்று நினைப்பவர்களாய் மட்டுமே இருக்கமுடியும்.//

அது!!!!

படம்பற்றின விசயத்துக்குப் பிறகு வாறன்.

10/25/2007 11:42:00 PM
இளங்கோ-டிசே said...

கொண்டோடி, நீங்கள் பல புலம்பெயர் படங்கள் பார்த்திருப்பீர்களே. அது பற்றிக் கருத்துக்கூறினால் குறைந்தா போய்விடுவீர்கள் :-).

10/26/2007 09:43:00 AM
Anonymous said...

அறிமுகத்துக்கு நன்றி டிசே.
சில வருடங்களுக்கு முன் கனடாவில் தயாரிக்கப்பட்ட ' சகா ' படம் பார்க்கக் கிடைத்தது. அதில் தமிழ்ச்சினிமாவின் சாயல்கள் அவ்வளவு இருந்ததாக நினைவில்லை. மிகப் பிடித்திருந்தது.
அண்மையில் பார்த்த இன்னுமொரு புலம்பெயர் படம். பெயர் நினைவில்லை. எங்கே எடுக்கப்பட்டதென்றும் தெரியவில்லை. பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் குடும்பத்தில் பெண் குழந்தை அவளைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்ல, பார்த்துக்கொள்ளவென பெற்றோரால் ஏற்பாடு செய்யப்படும் நண்பரொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்படுவது பற்றியது . அம்மாவுக்கு வேலைக்குப் போக விருப்பம். குழந்தை ஓரளவு வளர்ந்ததும் (7 அல்லது 8 வயதில் ) பராமரிக்க ஒருவரை ஏற்பாடு செய்துவிட்டு வேலைக்குப் போகிறார். ஆனால், குழந்தை துஷ்பிரயோகத்துக்கு ஆளாவதை வெளியில் சொல்லத் தெரியாமல் அம்மாவை வேலைக்குப் போகவேண்டாமென்று கேட்டுக்கொண்டிருக்கும் . கடைசியாக, பாடசாலை ஆசிரியை மூலம் பெற்றோருக்கு விடயம் தெரியவரும். தனது விருப்பத்தின்படி நடப்பதா, குழந்தையைக் கவனிப்பதா என்ற வேலைக்குப் போகும் அம்மாமாரின் இயல்பான பிரச்சனையை படம் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கும்.
உங்கள் பதிவை வாசித்தபோது நினைவுக்கு வந்த படங்களிவை..:)
ஆனால், புலம்பெயர் படங்களுடன் ஒப்பிடுகையில் சமீபகாலமாக இலங்கையிலிருந்து வெளிவரும் சில படங்கள் (செருப்பு , அழுத்தம் - Scriptnetனரின் தயாரிப்பு ) எமக்கான தனித்துவமான திரைமொழியொன்றை உருவாக்குவது பற்றிய நம்பிக்கைக்கு அடித்தளமிடுவனவாக அமைந்துள்ளமையையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

10/26/2007 01:16:00 PM
கானா பிரபா said...

புலம்பெயர் திரைப்படங்களைக் கணிசமாகப் பார்த்த அளவில் என் கருத்தையும் பதியவிரும்புகின்றேன்.

எடுத்த எடுப்பில் முழு நீளப்படமாக எடுக்க விரும்பி மூன்று பாட்டு, நாலு உடான்ஸ் என்ற கோமாளித்தனங்களை கொஞ்சம் நிறுத்தி விட்டு, நல்ல குறும்பட அளவில் தமது திறமையை ஆரம்பிக்கலாம். பின் அடுத்த படி நிலையில் ஒரு மணி நேரப்படமாக ஆயிரம் சேதிகளை உள்ளடக்கும் விதத்தில் எடுக்கலாம். இந்திய சினிமா போல் இரண்டே கால் மணி நேரம் எடுக்க வேண்டும் என்பது தலைவிதியா என்ன?

அடுத்தது புலம்பெயர் வாழ்வியலில் நம்மிடமே ஏராளம் கதைக் களங்கள் இருக்கின்றன. அவற்றை இயல்பு கெடாமல் எடுக்கவேண்டும். சில மாதங்களுக்கு முன் பார்த்த ஒரு படம், அதுவும் குறும்படம் என்றார்கள். இருபது நிமிசத்துக்கு மேல் ஓடுகின்றது. அதில் நடிப்பவரோ சிவாஜி கணேசனின் வாரிசாகத் துடிக்கின்றார். இவ்வளவுக்கும் அவர் ஒரு தலை சிறந்த நடிகன். எதற்காக மற்றவரின் நடை நடந்து தன் நடையும் கெடவேண்டும்?

இன்னொரு படம், முழுக்க முழுக்க ஈழத்தவர்கள் நடிக்கும் படம், ஆனால் வசனமோ தமிழகப் பேச்சு வழக்கில். இவர்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டு சென்று ஏ.பி.சி செண்டரில் விநியோகிக்க முயற்சிக்கின்றார்களா?

10/26/2007 07:52:00 PM
இளங்கோ-டிசே said...

அநாமதேய நண்பர்: நீங்கள் குறிப்பிட்ட சகா படத்தைப் பார்த்த்தாய் நினைவிலுண்டு. ஈழத்திலும் நம்பிக்கை தரும் படைப்புக்கள் வெளிவருவதை அறிந்திருக்கின்றேன். அவையின்னும் விரிவான தளத்தை எட்டவேண்டும். நாலைந்து வருடங்களுக்கு முன் பார்த்த 'ஒளிவீச்சு' ஒளிச்சஞ்சைகைகளில் கூட இறுதியில் சிறு சிறு குறும்படங்களைப் பார்த்தாய் நினைவு. புலம்பெயர்ந்த எங்களுக்குப் பரீட்சயமற்றுப்போய்க்கொண்டிருந்த வாழ்வுமுறையை விளங்கிக்கொள்ள அவை உதவின என்பதும் உண்மை. ஈழத்திலிருந்து இராகவன் எடுத்த 'மூக்குப்பேணி' இந்தமுறையும் குறுந்திரைப்படவிழாவில் திரையிடப்பட்டிருந்தது.

/புலம்பெயர் படங்களுடன் ஒப்பிடுகையில் சமீபகாலமாக இலங்கையிலிருந்து வெளிவரும் சில படங்கள் (செருப்பு , அழுத்தம் - Scriptnetனரின் தயாரிப்பு ) எமக்கான தனித்துவமான திரைமொழியொன்றை உருவாக்குவது பற்றிய நம்பிக்கைக்கு அடித்தளமிடுவனவாக அமைந்துள்ளமையையும் குறிப்பிடத்தான் வேண்டும்./

நல்லதொரு விடயமே.

.....
/எடுத்த எடுப்பில் முழு நீளப்படமாக எடுக்க விரும்பி மூன்று பாட்டு, நாலு உடான்ஸ் என்ற கோமாளித்தனங்களை கொஞ்சம் நிறுத்தி விட்டு, நல்ல குறும்பட அளவில் தமது திறமையை ஆரம்பிக்கலாம். பின் அடுத்த படி நிலையில் ஒரு மணி நேரப்படமாக ஆயிரம் சேதிகளை உள்ளடக்கும் விதத்தில் எடுக்கலாம். இந்திய சினிமா போல் இரண்டே கால் மணி நேரம் எடுக்க வேண்டும் என்பது தலைவிதியா என்ன?/

பிரபா, இதுதான் எனது ஆதங்கமும்; ஒரே அலைவரிசையில் நிற்கின்றோம் போலும் :-).

10/27/2007 05:29:00 PM
இளங்கோ-டிசே said...

ஆறாவது சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா – 2007 விருதுகள் பற்றிய விபரங்கள் இங்கே...

10/29/2007 09:25:00 AM
-/பெயரிலி. said...

டிசே
விபரம் தரும் பதிவு; பின்னூட்டங்களும் பொருந்திய கருத்துகளைத் தருகிறன

10/29/2007 01:36:00 PM
சயந்தன் said...

கனடாலதான் என்ர நண்பர் ஒருவர் தமிழச்சி படத்தில நடித்தவராம்.

படத்தை தாய் பார்த்தால் பேச்சு விழும் என்ற பயத்தில இன்னும் காட்டாமல் இருக்கிறாராம். இத்தனைக்கும் அந்த படத்த இங்கையே ரண்டு மூண்டு தரம் போட்டு விட்டார்கள்.

10/29/2007 06:53:00 PM
கானா பிரபா said...

//டிசே தமிழன் said...
ஆறாவது சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா – 2007 விருதுகள் பற்றிய விபரங்கள் இங்கே...//


சில விருதுகளுக்கு, உரியவர்கள் தேர்வாகவில்லை என்பது இந்த விருதின் மேல் நம்பிக்கை கொள்ள வைக்கின்றது. ஒப்புக்கு கலந்து கொண்ட படங்களில் இருந்து அண்ணை, அக்கா, சித்தப்பாவுக்கு கொடுப்பதை விட

10/29/2007 09:46:00 PM
Ayyanar Viswanath said...

பல புதிய தகவல்கள் டிசே...நன்றி

10/30/2007 12:37:00 AM
இளங்கோ-டிசே said...

பெயரிலி, சயந்தன், பிரபா & அய்யனார் நன்றி.
....
/படத்தை தாய் பார்த்தால் பேச்சு விழும் என்ற பயத்தில இன்னும் காட்டாமல் இருக்கிறாராம்./
சயந்தன், இதேமாதிரித்தான் ஒருமுறை எனது தோழியொருவர் நடித்த படமொன்றைப் பார்க்கத் தியேட்டருக்கு நானும், அந்தத்தோழியை நேசித்துக்கொண்டிருந்த நண்பனுமாய்ப் போயிருந்தோம். அந்தப்படத்தின்பின் இனி தோழியை இங்கு எடுக்கும் படங்களில் நடிக்கவேண்டாம் என்று நண்பன் சொல்லுமளவிற்கு அப்படத்தின் 'தரம்' சிறப்பாயிருந்தது :-(.

10/30/2007 10:19:00 AM
Anonymous said...

Please post more reviews for tamil movies made in canada, Europe, etc. This is very useful for film makers to identify their mistakes. I too want to make good films :)

11/07/2007 06:38:00 AM