ஃபிரைடா காலோ பற்றிய The Life and Times of Frida Kahlo என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். Frida என்ற Salma Hayek நடித்த திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு இவ் ஆவணப்படத்தில் சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லைத்தான். எனினும் ஃபிரைடாவின் உறவினர்கள், மாணவர்கள், ஃபிரைடாவின் ஓவியங்களால் ஆகர்சிக்கப்பட்டவர்கள், ஃபிரைடா உறவுகொண்டவர்கள் போன்ற மனிதர்களின் குரல்களினூடாகக் கேட்கும்போது ஃபிரைடா மீண்டும் உயிர்த்து வருவதான நினைப்பு வருகின்றது.
இந்த ஆவணப்படத்தைப் பார்த்த சில நாட்களில் The Diary of Frida Kahlo: An intimate self-portrait என்ற ஃபிரைடாவின் அற்புதமான டயரிக்குறிப்பினை வாசிக்க முடிந்திருந்தது. ஓவியங்கள்/கவிதைகள்/உரைநடைகள் என ஃபிரைடா ஸ்பானிஸ் மொழியில் எழுதிய பக்கங்கள் அப்படியே அதில் பிரதியெடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது பகுதியாக ஆங்கில மொழிபெயர்ப்பும், ஃபிரைடா தனது குறிப்புகளை எழுதிய சந்தர்ப்பங்களுக்கான தொகுப்பாளரின் குறிப்புகளும் இன்னும் ஃபிரைடாவை அதிகம் அறிந்துகொள்ள வைக்கின்றன. 18 வயதில் மிகப்பெரும் விபத்தைச் சந்தித்து, கிட்டத்தட்ட 30ற்கும் மேலான அறுவைச்சிகிச்சைகளை தனது வாழ்க்கைக் காலத்தில் செய்து, கலகக்காரியாய் விளங்கிய ஃபிரைடா பற்றி முடிவில்லாது நிறைய எழுதிக்கொண்டேயிருக்கலாம். அதிக கலைஞர்களைப் போல ஃபிரைடாவும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரின் திறமைகளுக்காய் அடையாளங் காணப்பட்டவரல்ல. ஆனால் தனது குறுகியகால வாழ்வை (45 வருடங்கள்) கொண்டாடியவர் மட்டுமில்லாது தனது நாடு/கலாசாரம் மீது அதீத பற்றுயுடையவராகவும், ஒரு கொம்யூனிஸ்டாகவும் காலம் முழுவதும் இருந்தவர்.

ஒன்றிரண்டு விடயங்களையேனும் ஃபிரைடாவின் ஆளுமை குறித்துச் சொல்லவேண்டியிருக்கின்றது. அநேக கலைஞர்களுக்கு பிரான்ஸ், அமெரிக்கா மீதிருக்கும் மோகத்தைப்போல ஃபிரைடாவிற்கு இந்த நாடுகளுக்குச் சென்று வாழும் விருப்பு என்றுமே இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் மிகவும் அலுப்பைத்தருமிடங்கள இவைகளென நிராகரிக்கச் செய்கின்றார் எனத்தான் சொல்லவேண்டியிருக்கின்றது. அதுவும், பிரான்ஸிலுள்ள அறிவுஜீவிகள் பற்றிக்குறிப்பிடும்போது, 'இவர்கள் இரவிரவாய் கலாசாரம், புரட்சி, தத்துவம் என்று உரையாடிக்கொண்டேயிருப்பார்கள். விடியப்பார்க்கும்போது சாப்பிடுவதற்கு உணவு எதுவுமேயிருக்காது, எனெனில் இவர்களில் எவருமே வேலைக்குப்போவதில்லை' என்றும், அங்கிருக்கும் கலைஞர்களில் அநேகர் அலுப்பைத் தரக்கூடியவர்கள் எனவும் குறிப்பிட்டிருகின்றார்.
பெண்ணியம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப காலங்களில், ஃபிரைடாவும் பெண்விடுதலைக்கு ஒரு குறியீடாய் முன்வைக்கப்பட்டார் என்று வாசித்திருக்கின்றேன். எந்த அடிப்படையில் பெண்ணியவாதிகள் ஃபிரைடாவை முன்வைத்தார்கள் என்று தெரியாதபோதும், ஆண்கள் வாழக்கூடிய வாழ்வை பெண்களும் கட்டற்ற சுதந்திரத்தோடு வாழமுடியும் என்பதற்கு ஃபிரைடா ஒரு யதார்த்த உதாரணம் என்ற புரிதலையே நான் எடுத்துக்கொள்கின்றேன் (சிமோன் தி பூவா இன்னொரு உதாரணம்). ஃபிரைடாவிற்கு -bi-sexualயாய்- பல ஆண்கள்/பெண்களோடு உறவுகளிலிருந்தாலும், அவர் அடிமனதில் ஒரு ஆணிற்காய்த்தான் (டியாகோ ரிவேரா) காலம் முழுக்க ஏங்கிக்கொண்டிருந்தார் என்பதைக் கவனிக்கவேண்டும். ...நீ எனது தோழன்/நீ எனது தந்தை/ நீ எனது துணை/ நீயே நான்/ நீயே பிரபஞ்சம்... என ரிவேராவிற்காய் உருகிக்கவிதைகளை ஃபிரைடா தனது டயரிக்குறிப்புகளில் எழுதியிருக்கின்றார்.
மற்றும் Salma Hayekன் ஃபிரைடா திரைப்படத்தில், ரொட்ஸ்கி (Trotsky), ஃபிரைடாவின் வீட்டை விட்டுப்போவதற்கு, ஃபிரைடாவோடான ரொட்ஸ்கியின் நெருக்கம் என்று காட்டப்பட்டபோதும், அது மட்டும் உண்மையாக இருக்கச் சாத்தியமில்லை. ஆரம்பத்தில் நான்காம் அகிலம்/ரொட்ஸ்கியோடு நெருக்கமாய் இருந்த ரிவேரா பின்னர் ரொட்ஸ்கியோடு முரண்படத்தொடங்கியதும் ரொட்ஸ்கி வேறிடம் நோக்கி நகர்வதற்கு முக்கிய காரணமாகும். ஆனால் முரணாய், ரொட்ஸ்கியோடு ஃபிரைடாவிற்கு (ஃபிரைடாவின் சில ஓவியங்களில் ரொட்ஸ்கியிற்கும் இடமுண்டு) நெருக்கமிருந்தபோதும், மார்க்ஸ், லெனின், ஸ்ராலின், மாவோ என்றுதான் குறிப்பிட்டு கம்யூனிசத்தை அடையாளப்படுத்துகின்றாரே தவிர, ரொட்ஸ்கியை அந்தப்பெயர்களுக்கிடையில் சேர்க்கவில்லை. இறுதிக்கால ஃபிரைடாவின் டயரிக்குறிப்புகளில் கூட ஸ்ராலினின் பெயரைக் குறிப்பிட்டு கம்யூனிசத்தைப் போற்றுகின்றாரே தவிர, ரொட்ஸ்கியைப் பற்றி எழுதிய எதையும் காணமுடியவில்லை..
ஃபிரைடாவின் ஓவியங்களே ஒரு சுயவரலாற்று நாவலுக்கு நிகரானதுதான். தன் சுயமழித்தல் மூலம் தன்னை அடையாளப்படுத்தும் ஃபிரைடாவின் ஓவியங்கள் மிகவும் உக்கிரம் வாய்ந்தவை. வரையப்பட்ட -150ற்கு மேற்பட்ட- ஓவியங்களில் மூன்றிலொரு பங்கு சுய ஓவியங்களே (self-portrait) என்பது கவனிக்கத்தக்கது. நிர்வாணமாய் வரையப்பட்ட ஓவியங்கள் கூட இச்சையைத் தூண்டுபவனவாயின்றி உடல் சார்ந்த வாதைகளை பார்ப்பவரிடையே படியவிடுபவை. நிர்வாண மொடல்களை வைத்து ஓவியங்கள் வரைந்த டியாகோ ரிவேராவிற்கு எதிர்ப்புள்ளியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஃபிரைடா முயன்றிருக்கின்றார் என்றும், தன் உடலை வெளிப்படையாக அதன் வலி/வாதைகளுடன் முன் வைக்கத் தயங்கவில்லை என்ற மாதிரியான வாசிப்புகளுக்கும் சாத்தியமுண்டு. அத்துடன் பிற கலைஞர்களால் நிர்வாணமாய் வரையப்படும் அதிகமான பெண்ணுடல்கள் அழகியல்தன்மையில் தான் வரையப்பட்டிருக்கின்றன/இரசிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் கவனத்திற்குரியது.
சில வருடங்களுக்கு முன் ஒரு நண்பர் மொன்ரியலில் வீடொன்று வாங்க முயற்சித்தபொழுதில், அவரோடு சேர்ந்து சில வீடுகளைப் பார்த்தபோது, சென்று பார்த்த ஒரு வீடு முழுவதும் ஃபிரைடாவின் ஓவியங்கள் மாட்டப்பட்டதைக் கண்டிருக்கின்றேன். இவ்வாறு உடல்சார்ந்த வாதையை அழுத்தமாய்ப் படிமமாக்கும் ஃபிரைடாவின் ஓவியங்களை எப்படித் தினமும் பார்த்துக்கொண்டு இயல்பான வாழ்வியலுக்குள் அலைந்து திரிய அந்த வீட்டிலிருப்பவர்களால் முடிகின்றது எனத்தான் வியந்திருக்கின்றேன்.
----------
அறிதல்: .../.../...
மனுசருக்கு சிரித்து சிரித்து ஆஸ்மா இழுக்கத் தொடங்குமா? மனம் விட்டுச் சிரித்தால் மட்டுமில்லை, நீண்ட நேரத்துக்கு தொலைபேசினால் கூட மூச்சிழுக்க அவஸ்த்தைப்பட்டு inhaler தேடவேண்டியதாகிப்போய்விடும் விசித்திரமான உடலமைப்பு எனக்குரித்தானது. சார்ளி சாப்பிளின், மொடர்ன் ரைமஸ் (modern times) பார்த்து வந்த சிரிப்பில் இரண்டு மூன்று முறை குறுகிய நேர இடைவெளியில் இன்கேலரை எடுக்கவேண்டியதாகிப்போய்விட்டது. இனியும் தொடர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டிருந்தால், மருந்து overdose ஆகிப்போய்விடும் என்ற பயத்தில் அரைகுறையில் நிறுத்திவிட்டு தூங்கப்போய்விட்டேன் (பிறகு இடைவெளி விட்டு விட்டு பார்த்துமுடித்தேன்). 1930களில் வந்த அந்தப்படத்தில் எவ்வளவு நவீனமாயும், நாசூக்காயும் விடயங்களைத் தட்டிக்கேட்டும் சாப்ளின் எடுத்திருக்கின்றார் என்று நினைக்கும்போது வியக்க முடியாமல் இருக்கமுடியவில்லை. மனிதர்களுக்குப் பதிலாய், இயந்திரங்கள் மாற்றீடு செய்வதை சமூக நோக்கோடு விமர்சிப்பதோடு, அதிகார அமைப்பை தொடர்ந்து கேலி செயதபடி (இங்கே பொலிஸ்) இந்தப்படத்தில் இருக்கின்றார். செம்மறியாட்டுக் கூட்டத்தைக் காட்டிவிட்டு அப்படியே சடுதியாக வேலைத்தளத்திலிருந்து வெளியேறும் மனிதக்கூட்டத்தையும் ஒப்பிட்டுக் காட்டும் ஆரம்பக்காட்சியே ஒரு அருமையான தொடக்கம். மந்தைக்கூட்டத்தில் இருக்கும் ஒரு கறுப்பாடு மாதிரித்தான், சாப்ளினும் சமூகத்தோடு ஒத்தியங்காத வெளியாளாக (outsider/other) இப்படம் முழுதும் -எல்லாவற்றையும் எள்ளல் செயதபடி- வருகின்றார்.

இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், படத்திற்கப்பால் இன்னொரு பிரதியாக விரியக்கூடியவை. அதுவும் மெளனக் காட்சிகளால் பார்ப்பவரை அப்படியே ஒன்றிக்க வைப்பது அவ்வளவு எளிதானதுமல்ல. இந்தப்படத்தில் பெண் பாத்திரமாய் நடிக்கும் Paulette Goddardயே நிஜவாழ்வில் சாப்ளினுக்கு துணையாக நீண்டகாலமாக இருந்தவர். இவர்களிருவரும் சேர்ந்து நடித்த இன்னொரு படம் The great dictator . Moderm Timesல் சில இடங்களில் உரையாடுவது மாதிரிக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததும் பின்னர் இறுதியில் அவையெல்லாம் வெட்டப்பட்டன என்பதும், வழமைபோல சாப்ளினின் படங்களில் அவர் தனியே போவது போலல்லாது அந்தப்பெண்ணோடு - வாழ்வு எவ்வளவு கடினமாயிருந்தாலும்- சேர்ந்து வாழ்வோமென நடந்துபோவதுடன் படம் முடிகின்றது. முதலில் எடுக்கப்பட்ட முடிவில், Paulette ஒரு கன்னியாஸ்திரியாவது மாதிரியும், சாப்ளின் தனியே பயணிப்பதாகவும் எடுக்கப்பட்டதாய் -படத்திற்குப்பின்பான காட்சிகள்- கூறுகின்றன. மொழிகளற்ற வெளியில் பலரது மனங்களை அசைத்துப்பார்த்த சாப்ளினின் படங்களைப் பார்க்கும்போது, இன்னமும் தமிழ்ச்சூழலில் சினிமா என்னும் ஊடகம் பொழுதுபோக்கிற்கு என்பதற்கு அப்பால நகராத நிலையை நினைக்கத்தான் பரிதாபமாய் இருக்கின்றது. திரைப்படங்களைப்போல, மொழிகளைத்தாண்டிச்சென்று எல்லோரோடும் உரையாடும் வலுவான ஊடகம் வேறு எதுவும் இருக்கின்றதா என்ன?
------
உரையாடல்: .../.../...
தான் சாப்பிடக்கூப்பிட்டாலின்றி உணவு மேசைக்கு ஒருபோதுமே வந்துசேராத எனது 'பெருமை' குறித்து அம்மா புலம்பிக்கொண்டிருந்தார். திரைப்படங்களை வெளியே பார்க்கப்போகும்போது மட்டுமே சாப்பிடப்போகின்றேன் என்று கேட்பவன் என்று உபரியாகவும் மெச்சிக்கொண்டிருந்தார். இப்படி 'திரைப்படம்' என்ற புள்ளியிலிருந்து அம்மாவின் கடந்த காலங்களுக்கு நனவிடை தோய்ந்து போக முடிந்திருந்தது. தானும், சித்தியுமாய் பல மணி நேரங்கள் பேருந்தில் பயணித்து யாழ் நகரத்திரையரங்குகளில் படம் பார்த்த காலங்கள் அவருக்குள் திரளத் தொடங்கியது; அப்படியே குடும்ப வரலாறுகளும்.
வெளியே ஸ்நோ பொழியத்தொடங்கியிருந்தது, சஞ்சிகையையொன்றைப் புரட்டிக்கொண்டு அம்மாவை பேசவிட்டிருந்தேன். கரையுடைத்த நதியாய் அம்மாவின் பால்ய காலங்கள நகரத் தொடங்கியிருந்தது. பல சுவாரசியங்கள் சம்பவங்கள் ஒவ்வொன்றாய் பனிக்குள்ளிலிருந்து இலைதுளிர்காலத்தில் துளிர்க்கும் செடிகளாய் அரும்பத்தொடங்கியிருந்தன. அம்மாவின் மாமா முறையான ஒருவர் குடியென்ற பெருங்கடலில் மூழ்கி முப்பத்தைந்து வயதிலேயே வாழ்வைத் தொலைத்திருக்கின்றார். கோர்ட்டில் வேலை செய்தபடியால் நன்கு குடித்துவிட்டு, தனது தோழர்களையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு சாப்பிட வந்துவிடுவாராம். எந்த நேரமும் அவரின் துணைவியார் (அவாவை எனக்கு நினைவிருக்கிறது, சோடா மாமியென்று நாங்கள் அழைப்போம்) இரவு பகலென்று பாராது அவித்துக் கொட்டிக்கொண்டேயிருப்பாராம். குசினியை விட்டு வெளியே சோடாமாமி வருவதே அரிது என்றார் அம்மா. ஆனால் இவை அனைத்தும் அவரது துணை இறக்கும்வரை. துணை இறந்தபின் சோடா மாமி வாழ்வைக் கொண்டாடியிருக்கின்றார். எங்கள் குடும்பத்தில் அவரைப்போலத் திரையரங்குகளில் நிறையப்படம் பார்த்த ஆட்கள் குறைவு என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தார் (அநேகமாய் யாழ் நகரிற்கு அவர் போனார் என்றால் என்று இரண்டு படங்களை ஒரேநாளில் பார்த்துவிட்டு வ்ருவாராம்)
அதேபோல், -ஈழத்தில்- எனக்குத் தெரிந்தவளவில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இன்னொரு செய்தி ஆசசரியமாயிருந்தது. (ஆகக்குறைந்தது தனது பெயரை எழுதத தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்றே நம்பியிருந்தேன்) எங்கள் மாமா முறையான ஒருவருக்கு கையொப்பம் இடவோ அல்லது துப்பரவாய் வாசிக்கவோ தெரியாது .... ஆனால் மனுசன் பயங்கர சுவாரசியமான மனிதராய் அவரது இளமைக்காலங்களில் இருந்திருக்கின்றார். நண்பர்களோடு சேர்ந்து இளநீர்க்குலை/ கள்ளுமுட்டி, களவாடுவது/வெட்டுவது (வீட்டில் பயங்கர அடிவிழுந்தாலும் அசட்டை செயவதில்லை) என்று பெரிய விளையாட்டு எல்லாம் செய்திருக்கின்றார். இது போதாது என்று வேள்விக்கு என்று யாரோ வளர்த்த கொழுகொழு கிடாயை ஒருமுறை இரவோடு இரவாய் களவெடுத்துக்கொண்டு போய் இவரும் இவரது நண்பர்களும் இறைச்சியடித்து விருந்துண்டிருக்கின்றார்கள். தமது கிடாயைக் காணாது, கிடாயை வளர்த்தவர்கள் மாமாவிலும் அவரது நண்பர்களிலும், ஐயம் வந்து இவர்களைத் தேடியபோது இவர்கள் நல்ல குடியோடும் விருந்துண்ட களைப்போடும் எங்கையோ படுத்துக்கிடந்திருக்கின்றார்களாம். கிடாய்க்காரன் மூளைசாலியாய் எல்லோரின் கைகளையும் பிடித்து முகர்ந்து முகர்ந்து பார்க்க -கறி வாசம் வருவதா என்று- இவர்கள் இன்னும் கண்ணை மூடிக்கிறக்கமாய் கிடந்திருக்கின்றார்கள். பிறகு நடந்தது... வழமைபோல நமக்குத் தெரிந்த கதைதான்.
அம்மா குடும்பத்தினர் முன்பு இருந்த வீடு மண்வீடானதால், வீட்டில் ஒரு அறையில் தன்னுடைய சேமிப்பையெல்லாம் ஒரு மாமா பேணிக்குள் போட்டு புதைத்துச் சேகரித்துக்கொண்டிருந்தாராம். (மண்ணில் புதைத்திருக்கும், ஆனால் தோண்டியெடுக்காமல் காசு போடலாம்/எடுக்கலாம்). காசு புதிது புதிதாய் போட்டாலும், தனது சேமிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டிருக்க, யாரோ தான் தங்கள் கைக்காரியத்தை காட்டுகின்றார்கள் என்று தெளிந்து வீட்டிலிருந்தவர்களிடம் மாமா விளக்கம் கேட்டிருக்கின்றார். எவருமே தாங்கள் எடுப்பதில்லையென 'உண்மை' பேசியிருக்கின்றார்கள். கள்ளனைப் பிடிக்கவேண்டும் என்பதற்காய் சேமிப்பு உண்டியலுக்குள் ஒரு தவளையைப் போட்டு விட்டிருக்கின்றார். இதையறியாது கைவிட்டு காரியத்தைச் செய்யப்போன இன்னொரு மாமா, அய்யோ பாம்பு என்னைக் கடித்துவிட்டதென கத்திய கத்தில் பல நாட் கள்ளன் ஒருநாள் பிடிபடுவானென -தவளையால்- பிடிபட்டாராம். இப்படி பல சுவாரசியமான கதைகளை அம்மா சொல்லிக்கொண்டே போனார். ஒரு கட்டத்தில், ஒரு நாவலாய் எழுதகூடிய அளவுக்கு உங்கள் குடும்பத்து வரலாறு சுவாரசியமாக இருக்கின்றதெனச் சொல்லிக்கொண்டேன். அம்மா புன்னகைத்துகொண்டார்; இப்போது மனதுக்குள் -அசுரக்காற்று அடிக்காது- தனித்து பூவைப்போல விழும் எனக்குப் பிடித்த பனி பொழியத் தொடங்கியிருந்தது.
-------------
பகிர்தல்: .../.../...
நாம் தொலைத்த வாழ்வு/சொந்த நாடு பற்றி எவரும் பேச/எழுதத்தொடங்கினால் நம்மைப்போல எந்த நாட்டையும் முழுதாய்ச் சொந்தங்கொண்டாட முடியாத நாடற்றவர்களுக்கு, மிகுந்த சுவாரசியமாய் இருக்குந்தானே. அப்படி இலயிப்புடன் வாசித்த ஒரு புதினம், இஸபெல் அலண்டேயின், My Invented Country: A Nostlagic Journey Through Chile. தொடர்ந்து வாசித்துக்கொண்டுபோகுபோது, சிலியில் இருக்கின்றானா அல்லது நான் பிறந்த நாட்டில்' இருக்கின்றேனா என்ற மாதிரியான உணர்வுகள் வருமளவுக்கு, கலாசாரம்/மனிதர்கள்/ நம்பிக்கைகள் பொதுவாய் இருந்தன. க்டவுள் நம்பிக்கை/சாத்திரம்/அமானுஷ்ய சக்திகள் போன்றவற்றில் மிகுந்த விருப்புடையதுபோல, பெண்களை ஒடுக்கிக்கொண்டும், உடலுறவு இன்னபிற பற்றி உரையாடுவதை tabooவாய் பார்ப்பதிலிருந்து அதிக ஒத்த தன்மைகள் தமிழர்களுக்கும், சிலி மக்களுக்கும் இருக்கின்றதெனத்தான் சொல்லவேண்டும். நனவிடைதோய்தலாய் இருந்தாலும், அளவுக்கதிகமாய் நாட்டுப்பாசத்தில் உருகிவிடாமல் விமர்சனங்கள் வைக்கவேண்டிய இடங்களில் இஸபெல் அலண்டே தனது நாடு பற்றி விமர்சிக்கவும் செய்கின்றார். ஸ்பானியர்கள் எவ்வாறு அங்கிருந்த பூர்வீகக்குடிகளை ஒழித்தார்கள், தங்களோடு வற்புறுத்திக் கலக்கச்செய்தார்கள் என்பது பற்றியும் விலாவரியாக இஸபெல எழுதுகின்றார்.
அவரின் மாமா முறையான சல்வடோர் அலெண்டே இடதுசாரி அரசை சிலியில் அமைத்தபோது, Paula என்ற பெண்களுக்கான க்லாசார இதழில் ஆசிரியப்பொறுப்பை இஸபெல அலண்டே ஏற்று, பெண்களுக்கான முக்கிய பிரச்சினைகளுக்கான உரையாடல்களை (domestic violence, abortion, diet, sex, etc) துணிச்சலாக -ஆண்களின் பலவிதமான விமர்சனங்களுக்கிடையில்- நிகழ்த்திக்காட்டியிருக்கின்றார் (பெண்ணியம் என்பது என்னவென்று அறியாமலே தானொரு கலகக்காரியாக -தனது தம்பிகளுக்கு கொடுக்கும் அனைத்தும் சலுகைகள் தனக்கும் கிடைக்கவேண்டுமென அடம்பிடித்த சம்பவங்களையும்/சிந்தனைகளையும் இஸபெல் நூலின் ஆரம்பக்கட்டங்களில் குறிப்பிடுகின்றார்). சல்வடோர் அலண்டேயைக் கவிழ்த்த சிஜஏயின் பெருமைகளை கிழிகிழியென்று இஸ்பெல் கிழிக்கின்றார். அதேபோல், சல்வடோர் அலண்டே முன்வைத்த சில சீர்திருத்தங்கள் அவர் நினைத்தற்கு எதிர்மாறான சில விளைவுகளை மக்களிடையே கொண்டுவந்தது என உண்மைகளைப் பேசவும் செய்கின்றார் (வாழ்க்கைச்செலவு ச்டுதியாகக்கூடியது). அலெண்டேயின் காலத்தில், ஒவ்வொரு நாளும் பாண் வாங்கப்போகும்போது பாணின் விலை அதிகரித்துக்கொண்டுபோவது இன்னபிற பிரச்சினைகளைப்பற்றியும் பேசுகின்றார். எனினும் உண்மையான அக்கறையோடு நாட்டுக்கு உழைக்க விரும்பிய சல்வடோர் அலண்டேயிற்கு உரிய இடம் கொடுக்கப்பட்டே இஸபெல எழுதுகின்றார் (இன்றைய பொழுதில் வெனிசுலாவில் சாவோஸிற்கு நிகழ்ந்துகொண்டிருப்பதை ஒப்பிட்டுப்பார்க்கும் சந்தர்ப்பம் நமக்கு உண்டு). பிறகு இராணுவக்கிளர்ச்சியில் General Pinochet, சிலி மக்களுக்கு சிஜஏயின் உதவியுடன் நல்லாட்சி கொடுத்தது கடந்தகாலத்தின் மறக்கமுடியாத வரலாறு. இராணுவக்கிளர்ச்சியில் தானும் கொல்லப்படக்கூடுமென்ற பயத்தில் வெனிசுலாவிற்கு இஸபெல் புலம்பெயர்கின்றார். கிட்டத்தட்ட பத்துவருடங்கள் அங்கே வாழ்ந்த அவருக்கு நாடு விட்டு வந்த கவலை, ஒழுங்காய் வேலை கிடைக்காத மன அழுத்தம் என்ற இன்னபிறவற்றை அகதியொருவரின் நிலையில் நின்று இஸ்பெல விபரிக்கின்றார் (இலத்தீன் அமெரிக்காவில் அநேக நாடுகளில் ஸ்பானிஷ் மொழியாக இருந்தாலும் அதன் வித்தியாசம்/கலாசாரம்/ இன்னபிற நுண்ணிய அவதானங்களை சிலி X வெனிசுலாவை வைத்து இஸபெல் எழுதுகின்றார். ஒரே மொழி/கலாசாரம் ஒன்றாகவேவிருக்கும் இஸ்பெலிற்கே இத்தனை பிரசிச்னைகள்/அழுத்தங்கள் வரும்போது மொழி/கலாசாரம் அவ்வாறு பழக்கப்டாத, புலம்பெயர்ந்த எம்மைப்போன்ற அகதிகளின் survival கதைகள் விரிவாக பதிவுசெய்யப்படக்கூடியவை.

தனது கடைசிப்பெயரில் அலெண்டே என்ற இடதுசாரியின் பெயரை வைத்துக்கொண்டும், தான் இப்போது ஏன் கலிபோர்ணியாவில் இருக்கின்றேனென வாசகர்கள் நீங்கள் கேள்விக்கேட்கக்கூடுமெனவும் கூறி இஸபெல -தனது காதலால் மட்டுமே- இடம்பெயர்ந்தேன் என்று காரணம் கூறி, தனது துணை பப்புவா நியூகினியாவில் இருந்தால் தான் அங்கேதான் வசித்துக்கொண்டிருப்பேன் எனக்கூறுகின்றார். அதைவிட அமெரிக்காவில் தான் முழுதாக ஒட்டமுடியாத காரண்ங்களை விரிவாக இந்நூலில் குறிப்பிடுகின்றார். அமெரிக்க்ர்கள் எல்லாவற்றிலும் விரைவுதான், அது உணவாயிருந்தால் என்ன, உடலுறவாயிருந்தால் என்ன? எல்லாமே வேகந்தானென எள்ளலுடன் எழுதுகின்றார். ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரம், பிரைவேசி காப்பற்றப்படுவதில் அமெரிக்கா தனக்குப்பிடித்திருக்கின்றது எனவும், எனினும் தன்னைப்போல ஒருவர் தெருவில் இறந்துகிடந்தால் கூட அதைக்கவனிக்காமல் போகக்கூடியவர்களாய் நிறைய அமெரிக்கர்கள் இருக்கின்றார்களெனவும் இஸபெல குறிப்பிடுகின்றார். அதேபோல் அமெரிக்காவில் இருக்குகின்ற இனத்துவேசத்தைப்பற்றியும் குறிப்பிடும் இஸபெல் அதேவேளை தங்கள் நாட்டைப்போல துவேசத்தை இயல்பென (சிலி மக்களுக்கு அரபியர்கள்/ஆசியர்கள் மீது வெறுப்பிருக்கிறதென்கிறார்) ஏற்றுக்கொள்ளாது, அமெரிக்க மக்கள் அதுகுறிதத விழிப்புணர்வுடன் உரையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அது தனக்கு நிறைவாயிருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றார்.
பலவிதமான் சுவாரசியமாய் சம்பவங்களை இப்புதினத்தில் இஸ்பெல் கூறியிருந்தாலும், சல்வடோர் அலெண்டேயைப் பற்றிக்கூறத்தொடங்கியபின் தான் நான் மிகுந்த சுவாரசியமாய் வாசிக்கத்தொடங்கினேன் இந்த நனவிடைதோயதலில் நேரடியாக வாசகரோடு உரையாடுவதான தொனியில் இஸபெல எழுதிக்கொண்டுபோவது புதினத்தோடு இன்னும் ஒன்றிணைந்துபோகின்றது. இஸபெல அலண்டேயைப் பற்றி எனக்குத் தெரிந்த சிலிப்பெண்மணி ஒருவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது, தற்சமயம் சிலியில் பெண் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், சிலியில் கலாசாரத்துக்குப்பொறுப்பான முக்கியமான பதவியில் இஸபெல் நியமிக்கபப்ட்டிருக்கின்றார் என்று கூறிக்கொண்டிருந்தார். இன்னும் எனக்கு வாசிப்பதற்கு இஸ்பெல அலண்டேயின் நாவல்கள் தன்னிடம் இருந்தாலும் -ஒரு நூலைத்தவிர- மிகுதி அனைத்தும் ஸ்பானிஸில் இருக்கின்றதென்றார் (இஸபெல் ஸ்பானிஸில்தான் எழுதுகின்றார், ஆங்கிலம் அவருக்கு அவ்வளவு பரீட்சயமில்லை). பிறகு இஸபெல அலெண்டே, Paula என்ற இளவயதில் (28 வயதில்) நோயால இறந்துபோன அவரது மகளைப் பற்றி எழுதிய நாவலான Paula பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். தான் அந்நூலை வாசித்த காலத்தில் அந்நாவலின் தாக்கத்தால் தான் அழுதுகூட இருக்கின்றேன் என்றும் இப்போதும் அந்நாவலை நினைத்தால் ஏதோ செய்கின்ற மாதிரியாய் இருக்கின்றதென்றார். இப்படி வேற்றுமொழி நண்பர்க்ளிடம் உரையாடுகின்ற சந்தர்ப்பத்தில்தான் எங்கள் மொழியிலும் நல்ல எழுத்துக்கள் இருக்கின்ற்ன எனக்கூறி உரையாட எமக்கு அவ்வளவாய் ஆங்கிலமொழிபெயர்ப்புகள் இல்லையென்ற உண்மை உறைக்கின்றது.
........
2 comments:
thanks for this post.
12/12/2007 08:01:00 AM- Suresh Kannan
நன்றி சுரேஷ் கண்ணன்.
12/13/2007 03:13:00 PMPost a Comment