'இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்' என்ற சி.அ.யோதிலிங்கம் எழுதியுள்ள நூல், இலங்கையில் ஆங்கிலேயர் காலத்திலிருந்தே முகிழத்தொடங்கிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைப்பற்றி உரையாடுகின்றது. சோல்பரி, டொனமூர் போன்ற அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களோடு, சென்ற மாதமளவில் கைவிடப்பட்ட புலிகள் X இலங்கை குடியரசு ஒப்பந்தம் வரை இந்நூல் விரிவாக அலசுகினறது. ஒவ்வொரு யாப்பின் அலகுகள் குறித்தும் பேசும் அதேநேரம் ஒவ்வொரு யாப்புச் சீர்திருத்தமும் ஏன் இறுதியில் தோல்வியடைந்தது என்ற புள்ளிகள் குறித்தும் இந்நூலில் விவாதிக்கப்பட்டிருப்பது கவனத்திற்குரியது. மேலும், இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு, இனித் தீர்வுகள் வரையப்படுகின்றபோது சிறுபான்மை இனங்களாக உள்ள முஸ்லிம் மக்களினதும், மலையக மக்களினதும் அபிலாசைகளும் உள்வாங்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் இதில் பேசப்படுவது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. தனியே யாப்புகள், அவற்றின் குறைபாடுகள் என்ற எல்லைக்குள் சுருங்காது, 'இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு, அதிகாரப் பங்கீடு விடயங்களில் சர்வதேச அனுபவங்கள்' என்று குறிப்பிட்டு அமெரிக்கா, இந்தியா, சுவிஸலாந்து, சோவியத் யூனியனின் அரசியல் யாப்புகள் குறித்தும் கவனம் குவிக்கப்பட்டிருப்பது நல்லதொரு விடயமாகும்.

சி.அ.யோதிலிங்கத்தின், 'அரசறிவியல்: ஓர் அறிமுகம்', 'ஒப்பியல் அரசாங்கம்' போன்ற பிற நூல்களை வாசித்திருந்தாலும், அவை உயர்தர வகுப்பு மாணவர்களைக் கவனத்திற்கொண்டு எழுதப்பட்டதால் என்னை அவ்வளவாய் ஈர்த்ததில்லை. இந்நூலும் மாணவர்களை முக்கிய வாசகர்களாய்க்கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் பிறரும் அலுப்பில்லாது வாசிக்க முடிகின்ற பிரதியாய் இருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இன்று கிழக்கு மாகாணங்களில் சிங்களக்குடியேற்றங்களால், தமிழர்களின் எத்தனையோ பூர்வீகநிலங்கள சூறையாடப்பட்டு சிங்களமயமாக்கப்பட்டு வரலாற்றின் பக்கங்களிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இழக்கப்பட்ட பிரதேசங்களைக் கண்டுபிடிக்கவும் எமக்கான நியாயங்களை சர்வதேசத்தின் முன் எதிர்காலத்தில் கேட்கவும் இவ்வாறான விடயங்கள் ஆய்வுத்தரவுகளின் அடிப்படையில் ஆவணமாக்கப்படவேண்டும். மேலும் இந்நூல், தமிழில் அரசியல் குறித்து எழுதப்படும் பல பிரதிகள் போலவன்றி -ஏதோ ஒரு பக்கத்தை மட்டும் நியாயப்படுத்துவதில் நிற்காது- முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் குறித்தும் அக்கறையான பார்வைகளை முன்வைப்பதால் முக்கியமானது ஆகின்றது.
(2)
'அமைதி குலைந்த நாட்கள்' என்ற கவிதைகளின் தொகுப்பு, எண்பதுகளில் வெளிவந்த புதுசு இதழ்களிலிருந்து வந்த கவிதைகளைக் கொண்டு நா.சபேசனால் தொகுக்கப்பட்டிருக்கின்றது. தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரியில் உயர்தரவகுப்பு படித்த மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட புதுசு சஞ்சிகையில் ஈழத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எழுத்தாளர்கள் எழுதியிருக்கின்றார்கள். ஒவ்வொரு சஞ்சிகையும் புதிதாய் மலரும்போது அதனோடு புதிய படைப்பாளிகள் முகிழ்கின்றார்கள். அதேபோன்று ஊர்வசி, ஒளவை போன்ற கவிஞர்கள் புதுசு சஞ்சிகையினூடாக வெளியுலகத்திற்கு வந்தவர்கள். இன்னும் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதி சிறுகதையாளர்கள் என்று அடையாளப்படுத்தபட்ட ரஞ்சகுமார், உமா வரதராஜன் போன்றவர்களின் கவிதைகளை இதில் காணக்கிடைப்பது கூட சுவாரசியமானதுதான்.

(3)
'விமரிசன முறையியல்' என்ற நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறை தலைவராக இருந்த (இருக்கும்?) சோ.கிருஷ்ணராஜாவால் எழுதப்பட்டிருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் இருக்கும் விமர்சன அலகுகள் குறித்து இச்சிறு நூல் உரையாடமுயல்கின்றது. இன்னும் விரிவாக எழுதப்பட்டிருக்கக்கூடிய நூல் இது என்றாலும், கலை கலைக்காகவா அல்லது மக்களுக்காகவா என்ற இந்நூலிலிருக்கும் ஒரு பகுதி முக்கியமானது. உழைக்கும் மக்களோடு பிறந்த பல கலைகள், பிறகு 'மனிதனின் உழைப்பு கலையுடனான நேரடித்தொடர்புகளை படிப்படியாக அறுத்துக்கொள்ள, கலையும் தன் கருத்தில் மாற்றத்தைப் பெறலாயிற்று. 'உயர்ந்தோர் மாட்டே உயர்கலைகள்' என்ற கருத்து உருவாகி வலுப்பெற்றது. பரத நாட்டியமும், சாஸ்திரிய சங்கீதமும் 'உண்மையான கலைகளாக' மாற, கிராமியக் கலைகள் தம்மூலச் சிறப்பை இழந்தன' என்று சோ.கிருஸ்ணராஜா குறிப்பிடும் புள்ளிகள் கவனத்திற்குரியது.

(வைகறைக்காய் எழுதப்பட்டது)
4 comments:
//யாழ்ப்பாணத்தவர்களின் பூர்வீகம் குறித்து பல்வேறு கருதுகோள்கள் ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளினடிப்படையில் முன்வைக்கப்பட்டாலும், கேரள மாநிலமென இப்போது அழைக்கப்படும் பிரதேசங்களிலிருந்து குடிபெயர்ந்தவர்களே யாழ்ப்பாணத்தவர்களாய் இருக்கக்கூடுமென்பது கவனிக்கத்தக்க ஒரு புள்ளியாகும். ஆரம்பத்தில் தமிழ் (சேரன் ஆண்ட) நிலப்பரப்பாக இருந்த பிரதேசம், பின்னாளில் தமிழ், சமஸ்கிருதக் கலப்பில் மலையாள மொழியை உருவாக்கி கேரளாவாக மாறியதாய் ஆய்வுகள் கூறுகின்றன//
2/24/2008 11:17:00 AMஎனக்கும் கூட யூக அளவில் இந்த ஒப்புமைக் குறித்த கருத்து உண்டு. நான் சமூக வாழ்வியல் பின்புல அடிப்படையில் அதாவது உற்பத்தி முறையில் உருவான ஒரு பொருளாயுத பண்பாடாக (material culture) இருக்கலாம் என்று எண்ணியதுண்டு. காரணம் மீன்பிடித் தொழில் மற்றும் தென்னை வளம் இயற்கை சார்ந்த அமைப்புகள் அடிப்படையில். உண்மையில் நீங்கள் கூறியிருப்பதுபோல இரண்டு சமூகங்களையும் ஒப்பியல் நோக்கில் அய்வு செய்தால் இதில் மேலதிக தகவல்களைப்பெற முடியும்.
நன்றி ஜமாலன்.
2/27/2008 11:51:00 AM.....
இன்று 'நூலகம்' தளத்தைக் குடைந்துகொண்டிருந்தபோது, 'பெருங்கற்கால யாழ்ப்பாணம்' என்று பொ.ரகுபதி எழுதிய கட்டுரையொன்று கண்ணில்பட்டது. அதில்...
...கந்தரோடைக் குடியிருப்பு பெருங்கற் பண்பாட்டுடன் ஆரம்பமானதாகவும் இதன் காலம் கி. மு. 4ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் அகழ்வாய்வினை நடாத்திய விமலா பேக்லி (Vimala Begley) குறிப்பிட்டுள்ளார். காபன் காலக் கணிப்புகள் (C14) பெறப்படாத நிலையில் தற்காலிகமாகவே இக்கணிப்பினை அவர் அன்று வெளியிட்டார். கந்தரோடை அகழ்விற்கான காபன் காலக் கணிப்புகள் (C14) பென்சில்வேனிய ஆய்வுக் குழுவின் மற்றொரு உறுப்பினரான பென்னெற் புறொன்சனிடம் (Bennet Bronson) இருந்து தொல்லியற் திணைக்களத்தினரால் அண்மையில் பெறப்பட்டன. இவற்றுள் இரு சான்றுப் பொருட்களுக்கான காலம் கி. மு. 1000 ஆண்டையொட்டிக் கிடைத்திருப்பது வியப்பிற்குரியது. ஏனையவை பெரும்பாலும் கி. மு. 500 - 100 இற்குரியனவாகக் காணப்படுகின்றன.(15)
கந்தரோடை அகழ்வாராய்வு பற்றிய அறிக்கை இன்னும் வெளியிடப்படாமலே இருந்து வருவது வருத்தத்திற்குரியது.
1980ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் மேற்கொண்ட மேலாய்வொன்றில், ஆனைக்கோட்டையில் பெருங்கற் பண்பாட்டுத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து இங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட அகழ்வாய்வில் பெருங்கற் பண்பாட்டு ஈம அடக்கங்கள் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக வெளிக் கொணரப்பட்டன.
ஆய்வுக்குழியில் இரு எலும்புக்கூட்டு அடக்கங்கள் மேற்குக் கிழக்காக நீட்டிப்படுத்த வாக்கில் காணப்பட்டன. இவற்றைச் சுற்றி ஈமப்படையல்கள் பெருங்கற் காலத்திற்குரிய மட்பாண்டங்களில் இடப்பட்டிருந்தன. இரும்புக் கருவிகள், இரும்பு அகல் விளக்கு, சங்குகள், மணிவகைகள், கடல் உணவு எச்சங்கள், மாமிச உணவு எச்சங்கள், சுடுமண்ணாலான வட்டமான தாயம் போன்றதொரு விளையாட்டுக் கருவி ஆகிய பல்வேறுவகைப் பொருட்கள் ஈமப் படையல்களில் இடம் பெற்றிருந்தன.
எலும்புக் கூடொன்றின் தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த கறுப்புச் - சிவப்பு வட்டில் ஒன்றில் பித்தளையாலான முத்திரையொன்று கிடைத்தது. இது முத்திரை மோதிரமொன்றின் பாகமாகலாம். இதில் இருவகையான எழுத்துக்கள் இருக்கின்றன. முதலாவது வரியில் பெருங்கற்கால மட்பாண்டங்களில் வழமையாகக் காணப்படும் குறியீட்டெழுத்துக்களும் இரண்டாவது வரியில் கி. மு. 3 - 2 ஆம் நூற்றாண்டுக்குரிய பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. இவ்விருவகை எழுத்துக்களாலும் குறிக்கப்பட்டுள்ளது ஒரு பொருளேயென்று கொண்டால் பிராமி எழுத்துக்களைப் படிப்பதன் மூலம் படிக்க முடியாததாகிய பெருங்கற்காலக் குறியீட்டு எழுத்துக்களுக்கு விளக்கம் கொடுக்கலாம். இந்த அடிப்படையில் பேராசிரியர் கா. இந்திரபாலா இதன் பிராமிப் பகுதியை 'கோவேதன்' அல்லது 'கோவேந்த' எனப் படித்து இதன் மூலம் குறியீட்டு எழுத்துப் பகுதிக்கு விளக்கங் கொடுத்துள்ளார். இவ்வாசகங்களின் மொழி ஆதித் தமிழ் அல்லது ஆதி மலையாளம் என்பது இவர் கருத்தாகும்.(16). இக் கட்டுரையாளர் பிராமிப்பகுதியை 'கோவேத்' அல்லது 'கோவேத' அல்லது 'கோவேதம்' எனப் படித்துக் குறியீடுகளுக்கு விளக்கங் கொடுத்துள்ளதுடன் இவ்வாசகங்களின் மொழி 'ஆதித்திராவிடம்' எனக் கருதுகின்றார்.(17) இவ் வாசகங்கள் 'கோவேந்தன்' என்பதன் மூல வடிவம் என்பது இருவரதும் பொதுவான கருத்தாகும்.
இம் முத்திரைகளின் தொல்லெழுத்தியலை அடிப்படையாகக் கொண்டே ஆனைக்கோட்டைப் பெருங்கற் பண்பாட்டின் காலம் கி. மு. 3-2 ஆம் நூற்றாண்டென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விரிவாக இக்கட்டுரையை வாசிக்க: http://www.noolaham.net/project/01/33/33.htm
டிசே, உங்கள் கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கு முன்னமே அவசரமாக 'கொமென்ற்' பகுதிக்கு வந்து விட்டேன் - அதிக சுவாரசியமாக ஏதும் இருக்கும் என்ற அனுமானத்தில்... எதிர்பார்த்த மாதிரியான 'கொமென்ற்ஸ்' இல்லை என்றாலும் அனுமானம் சரிதான் :) இரண்டு மாதங்களுக்கு முன்னம் தமிழ்நாடு, திருச்சி சென்றிருந்தபோது, அங்கு யாழ்ப்பாணத்தவர்களை கேரளத்தவர்களாகத் தவறாகக் கணிப்பிடும் சம்பவங்கள் பற்றிய கதைகள் பலவற்றைக் கேட்க முடிந்தது. நுஹ்மான் கூட இதுபற்றி எழுதியிருந்ததை எப்போதோ வாசித்ததாக ஞாபகம்... 'லகர' 'ரகர'ங்களை அழுத்தி உச்சரிக்கிற வழக்கத்தை யாழ்ப்பாணத் தமிழரிடையேயும் மலையாளப்படங்களிலும் அவதானித்திருக்கிறேன். தவிரவும், தமிழில் வினா எழுத்துக்களாக ஆ, ஓ, ஏ என்பவை அறியப்பட்டாலும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் சரி(தமிழ்நாட்டுத் திரைப்படங்கள் வழியாக நான் புரிந்து கொண்டவரையில்), இலங்கையின் மலையகத் தமிழர்களும் சரி அதிகமும் 'ஆ' ஐ மாத்திரமே பேச்சுத் தமிழில் பயன்படுத்துவதுண்டு. 'அவனா?' 'வந்தாளா?' - இந்த மாதிரி. (இப்படி ஒரேயடியாகப் பொதுமைப்படுத்திவிட முடியாதுதான். விதிவிலக்காக வட்டார வழக்குகள் இருக்கக்கூடும்!). யாழ்ப்பாணத்தவர்கள் ஓ, ஏ என்பவற்றையும் சரளமாக உபயோகிப்பதுண்டு. 'வந்தவனே?', 'சொல்லட்டே?', 'ஓமாமோ?' - இப்படியாக. அண்மையில், 'நான் அவன் இல்லை' படம் பார்த்தேன். அதில் கேரளாக்காரராக நடிக்கும் நாயகன் 'வரட்டே' (போய்வரவா?) என்றொரு வசனம் பேசியபோது அசலாக யாழ்ப்பாணத்தவர் சொல்வது போலவே இருந்தது... - சுவாரசியமாக நினைத்த சில தகவல்கள்
2/29/2008 12:44:00 AMநன்றி வியாபகன்.
3/03/2008 12:20:00 PM...
நிறைய விடயங்களைக்
கூர்ந்து அவதானித்திருக்கின்றீர்கள். திருச்சிப் பக்கத்திற்குப் பயணித்த நீங்கள், கேரளாவிற்கும் எட்டிப் பார்த்திருக்கலாம் :-). கேரளாவில்தானே எங்களை மாதிரி நிறைய உணவுப் பதார்த்தங்களில் தேங்காப்ப்பூ சேர்ப்பார்கள் அல்லவா? இப்போது வ்.அ.இராசரத்தினத்தின் ஒரு நூலை வாசித்துக்கொண்டிருக்கும்போது, அவர் அதில் திருகோணமலை மக்களின் பூர்வீகம் பற்றி (கேரளா அல்ல) சிலது எழுதியிருந்ததை வாசிக்க முடிந்திருந்தது. எல்லாம் சுவாரசியமானதுதான்.
Post a Comment