கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

புதிய அனுபவங்களுக்கான சில வரைபடங்கள்

Monday, September 21, 2015

(ஊர்வசியின் 'இன்னும் வராத சேதி', ஒளவையின் 'எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை', கீதா சுகுமாரனின் 'ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை'  ஆகிய தொகுப்புக்களை முன்வைத்து...)


ன்றைய காலத்தில் கவிதைகளின் வகிபாகம் என்னவாக இருக்கின்றது? கவிதைகளை யார் வாசிக்கின்றார்கள் அல்லது யாருக்காக எழுதப்படுகின்றன. கவிதைகள் என்றில்லாது ஏனைய எல்லாக் கலைப்படைப்புக்களுக்குமாய் இந்தக் கேள்விகளை நாம் எழுப்பிப் பார்க்கலாம்.  எண்ணற்ற இலத்திரனியல் உபகரணங்கள் சூழ்ந்திருக்க, இன்னொரு பக்கத்தில் நமது ஆசைகள் தினமும் பெருக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், கலைக்கான இடம் என்னவென்று யோசிக்க வேண்டியிருக்கின்றது. இந்த இயற்கையைப் போல கலைப்படைப்புக்களுக்கும் நமதான வாழ்க்கைவெளியில் மிதந்தபடியிருக்கின்றன. எந்த ஒருவரால் நின்று நிதானித்து இயற்கையை இரசிக்கமுடிகிறதோ, அவர்களால் கலைகளை உள்வாங்குவதும் எளிதாக அமைந்துவிடுகிறது.

கவிதைகளை வாசிக்க பொறுமையான  ஒரு சூழலே வேண்டியிருக்கின்றது. நல்லதொரு கவிதையை பறந்துகொண்டிருக்கும் ஒரு பறவைக்கு உவமித்துப் பார்க்கின்றேன். அதன் பறத்தல் என்பது கணந்தோறும் வெவ்வேறு நிலைகளில் இருப்பதைப் போல, சிறப்பான ஒரு கவிதை வாசிக்கும் ஒவ்வொருபொழுதும் புதுப்புது வாசிப்புக்களை நமக்குத் தரக்கூடும். நீங்கள் சரியான கணத்தில் ஒரு கவிதையின் ஆன்மாவை பிடித்துவிட்டீர்களென்றால், கவிதையென்று பறக்கும் பறவை, உங்களுக்கு தன் ஞாபகமாய் ஒரு சிறகைக் கூட தந்துவிடக்கூடும்.

ஒரு கவிதை, வாசிக்கும் எல்லோருக்கும் ஒரேவிதமான வாசிப்பைத் தரவேண்டும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. பறவையின் பறத்தலுக்கு அதன் இறக்கைகள் மட்டும் காரணமாய் அமைவதில்லை.  அது பறந்துகொண்டிருக்கும் வெளியில் வீசும் காற்றோ, பொழியோ மழையோ கூட பறத்தலைத் தீர்மானிக்கக் கூடும். அதுபோலவே, ஒரு கவிதையை வாசிக்கும்போது நாம் இருக்கும் சூழல்,  நமக்கு அந்தப்பொழுதில் வாய்க்கின்ற மனோநிலை என்பவை நம் வாசிப்பைப் பாதிக்கக்கூடும். எனவேதான் ஒரு சமயம் எமக்குப் பிடிக்காத அல்லது தவறவிட்ட கவிதை பின்னொருமுறை வாசிக்கும்போது மிகப்பிடித்தமாகிப் போய்விடுகின்றது. இதை எப்படி இவ்வளவு காலமும் தவறவிட்டிருந்தோம் என மனது வியந்து பார்க்கிறது.

இங்கே ஊர்வசியின் 'இன்னும் வராத சேதி', ஒளவையின் 'எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை', கீதா சுகுமாரனின் 'ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை' ஆகிய தொகுப்புக்களை எடுத்துக்கொள்கின்றேன்.  அவை குறித்து தொகுத்து சில கருத்துக்களைச் சொல்லவேண்டியிருப்பதால் அவற்றுக்கிடையிலான பொதுவான தன்மைகளைப் பேசுவதாக இது அமையக்கூடும்.  என்றாலும், ஒவ்வொரு தொகுப்பும் அதன் அதனளவில் தனித்துவமானவையே என்பதை முதலிலேயே குறிப்பிட விரும்புகின்றேன்.


ர்வசி 35 வருடங்களுக்கு மேலான காலத்தில் 25ற்கும் குறைவான கவிதைகளே எழுதியிருக்கின்றார் .  குறைவாக எழுதுதலில் நிறைவைக் காண்பவராகவோ அல்லது எழுதும் மனோநிலை வாய்க்கும்போது மட்டும் எழுதுகின்ற ஒருவராகவோ ஊர்வசி இருக்கக்கூடும்.

ஊர்வசியின் கவிதைகளில் அநேகமானவை பிரிவையும், காத்திருப்பையும், தனிமையையும் முன்னிறுத்துகின்றன. காத்திருப்பு என்பது வருடங்களில் மட்டுமில்லை தசாப்தங்கள் தாண்டியும் நீள்வதை அவரின் கவிதைகளில் நாம் காணலாம். 80களில் ஈழப்போராட்டம் பல்வேறுதிசைகளில் முளைவிட்டெழும்ப காதலனிற்காய் காத்திருப்பதிலிருந்து அவரது தனிமை தொடங்குகின்றது.  காதலன் அல்லது நண்பன் தன் தலைமறைவு வாழ்க்கையில் அவ்வப்போது வந்து சேருவதற்காய் தன் வீட்டில் தனித்திருப்பதிலிருந்து தொடங்கி, 2000ம் ஆண்டளவில் வேறொருவனுடன் நடந்து திரிகையிலும்  பழைய காதலனை இன்னும் நினைப்பதாய்க் கூறுகையில், முடிவுறாத காத்திருப்புக்களின் துயரமும், வெறுமையும் நமக்குள்ளும் படிகின்றன.

ஊர்வசியில் தொடக்க காலக்கவிதைகளில் உள்ள இந்தப் பிரிவும் காத்திருப்பும் நமக்கு சங்ககாலக் கவிதைகளை நினைவுபடுத்துகின்றன. போருக்காகவோ பொருள் ஈட்டுவதற்காகவோ தூரதேசம் போகும் துணைகளின் வருகையிற்காய் காத்திருக்கும் சங்ககாலப் பெண்களின் சாயல்கள் ஊர்வசியின் கவிதைகளில் தெரிகின்றனர். ஆனால் அதேபெண்கள் இங்கே போராட்டப் போகின்ற ஆண்களுக்குக் காத்திருந்த நிலையிலிருந்து மாறி,  பின்னர் போராட்ட இயக்கங்களில் இணைய விரும்பும் மனக்கிடக்கைகளையும் வெளிப்படுத்துகின்றனர்.  'ஏன் இன்னமும் நான் வீட்டுக்குள்/ இருக்க வேண்டும்? / என்ன/ நான் எழுதுவது புரிகிறதா உங்களுக்கு?' என ஊர்வசி ஒரு கவிதையில் முன்வைப்பது வீடுகளிலிருந்து வெளியேறி போராட்டக்களங்களங்களுக்கு  வந்துவிட்ட, இன்றைய பெண்களின் முதல் பறத்தலை.

காத்திருப்புக்களே ஊர்வசியின் முக்கிய பேசுபொருளாக கவிதைகளில் இருப்பினும் அதனூடு அன்றைய அரசியல் நிலவரங்களையும் அவர் சொல்லிப் போகின்றார். நமது இயல்பான வாழ்வு முறை மெல்ல மெல்ல ஒடுக்குமுறையும் கண்காணிப்பும்  சேர்ந்து பதற்றமாகிக் கொண்டுபோவதைப் பதிவுசெய்கின்றார்.

நேரடியாகவே அரசியலைப் பேசும் கவிதையான 'சிறையதிகாரிக்கு ஒரு விண்ணப்பம்' கவிதை:
'ஐயா, என்னை அடைத்து வைத்திருக்கின்றீர்கள் /நான் ஆட்சேபிக்கவும் முடியாது/ சித்திரவதைகளையும்/ என்னால தடுக்க முடியாது/ எனெனில்/நான் கைதி / நான் கோருவது விடுதலை எனினும் /உங்கள் வார்த்தைகளில் /'பயங்கரவாதி'
எனத் தொடங்குகின்ற கவிதையை 84ல் எழுதினாலும் இன்றும் பொருந்தக்கூடிய ஒன்று. பல்லாண்டுகளாய் பல்வேறு காரணங்களுக்காய் சிறைகளுக்குள் அடைபட்டிருக்கும் பலருடைய குரல் இதுவாகும். அதேபோல் 'இடையில் ஒருநாள்'  ஒரு தலைமறைவுப் போராளி வீடு வந்துசென்றபின், இராணுவம் வந்துசெய்கின்ற சித்திரவதைகளை சித்தரிக்கின்றது. 'நீ போய்விட்டாய் நாள் தொடர்கிறது' எனக் கவிதை முடியும்போது அந்த தலைமறைவுப் போராளிக்குத் தெரியாத, தாங்கள் படும் கஷ்டங்களைச்  சொல்ல விழைகிறது.  ஆயுதமேந்திப் போராடப் போனவர்கள் மட்டுமில்லை, பொதுசனங்களாய் இருந்தவர்களும் கண்காணிப்புக்களையும், விசாரணைகளையும் எதிர்கொள்ளவேண்டிய அவலச்சூழலின் ஒரு தெறிப்பாக இக்கவிதை இருக்கிறது.

இன்னொரு நேரடி அரசியல் கவிதை, 2014ல் எழுதப்பட்ட 'நேற்று நடந்தது' என்கிற கவிதை. இது ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிவுற்ற பின்னர் வந்த பெரும் வெற்றிடம் குறித்துப் பேச விழைகிறது. போராட்டப்போன தம்பி இறந்துவிட்டானா இல்லை காணாமற்போய்விட்டானா அல்லது சிறையில் இருக்கின்றானா என்ற பல்வேறு வினாக்கள் தொக்கு நிற்க இக்கவிதை எழுதப்பட்டிருக்கின்றது. பல்லாயிரக்கணக்கான மக்களும் போராளிகளும் வரலாற்றில் எந்த சுவடுகளுமின்றி அழிக்கப்பட்ட காலத்தில் ஒரு  சிறு சாட்சியம் இது.

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, ஊர்வசியின் கவிதைகளில் அநேகம் ஏதோ ஒன்றிற்கான காத்திருப்பாகவோ அல்லது எவருடைய வருகையிற்கான எதிர்பார்ப்பாகவோ இருக்கின்றன. அதுவே இன்னொருவகையில் 'இன்னும் வராத சேதி' என இத்தொகுப்பிற்கான தலைப்பாகவும் ஆகியிருக்கின்றது. 80களில் யன்னல் ஓரங்களில் எவரினதோ வருகையிற்காய் அமைதியில் உறைந்து காத்திருப்பதாய்க் கவிதைகளில் சித்தரிக்கப்பட்டாலும் இரண்டாயிரத்திற்குப் பின்பான கவிதைகளில், இனி நிகழவே முடியாத சந்திப்புக்களின் சலிப்பை மீறி, உயரப் பறப்பதற்கான அவாவே ஊர்வசியில் மேவி நிற்கின்றன. ஆகவேதான், காத்திருப்பை விலத்தி "இனி நான் பறப்பேன்/  ஒரு மரக்கிளை போதும்/இடையிடையே ஓய்வெடுக்க" என ஒரு சுய பிரகடனத்தைச் செய்கின்றார்.


கீதா சுகுமாரனின் 'ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை'  தொகுப்பு  அகவெளிகள், மூத்தோள், கடத்தல் என மூன்று பகுதிகளாய் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

அகவெளியிலுள்ள கவிதைகள் சிலதில் ஏதோ ஒன்றிற்காய் அச்சப்படுகின்ற மனதாய் 'அங்குமிங்கும்', 'குற்றவுணர்வு' மற்றும் 'சுமை' போன்ற கவிதைகள் இருக்கின்றன. கீதாவின் கவிதையில் நிறையப் பாம்புகள் வருகின்றன. ஆனால் அது ஆண்களின் கவிதைகளில் சித்தரிக்கப்படுகின்ற காமத்திற்கு நிகர்த்த ஒன்றாக இல்லை.  அச்சத்தையும் குற்றவுணர்வையும் பெருக்கியபடி கீதாவின் கவிதைகளில் அரவங்கள் நெளிந்தபடியிருக்கின்றன.

அதேபோன்று அகவெளிகளிலுள்ள கவிதைகள் பல, இயல்பான நேசத்தை வேண்டி நிற்பதோடு  அல்லாது அது கிடைக்காத தருணங்களில் எழும் வெப்பியாரங்களையும் சித்தரிக்கின்றது. ஊர்வசியின் கவிதையான 'பேசப்படாத மெளனங்களில்'தன் துணையை கிணற்றடிக்கு அழைத்துச் சென்று, நிலவு மறையும்வரை நள்ளிரவுக்கப்பாலும் பேசிக்களிக்கும் தருணம் அமையாது, வீட்டுக்கதவு இறுக்கி அறைந்து மூடப்படுவதைப்போல், கீதாவின் 'உறவு' கவிதை... 'அவனுக்கு/ எரியும் அடுப்பும் நீல விளக்கும் சூழும்/ நான்கு சுவர்கள் மட்டுமே விருப்பு' என வீட்டுக்கு வெளியே உலாத்த விரும்பும் ஒரு பெண்ணின் மனது காட்டப்படுகின்றது.

தொழில்நுட்பம் மிக உச்சத்திலிருக்கும் இந்தக்காலம் மனிதர்களுக்கு எல்லாவற்றையும் வீட்டுக்குள் கொண்டுவந்துவிடுகின்றது. ஆனால் அதுவே  மனிதர்களை இன்னும் தனிமைப்படுத்தவும் செய்கின்றது.  அநேக பெண்களுக்கு வீடு ஒரு சிறையாக இருக்கின்றது அல்லது அங்கே தாம் இயல்பின்றி இருப்பதாய் எண்ணச் செய்கின்றார்கள். வெளியே விரிந்துகிடக்கும் உலகில் தமது காலடிகளைப் பதிக்க விரும்புகின்றனர். அது நிகழாத சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்களுக்குள்  மருகவும் குறுகவும் செய்கின்றனர் என்பதேயே  கீதாவினதும் ஊர்வசியினதும் கவிதைகள் ஏதோ ஒருவகையில் சொல்ல முயல்கின்றன.

கீதாவினது கவிதைப்பிரிப்புக்களில் என்னை அதிகம் வசீகரித்தது, மூத்தோள் பகுதியிற்குள் இருக்கும் கவிதைகள். இதில் புராண/இதிகாசங்களில் வருகின்ற பெண் பாத்திரங்கள் மீள்வாசிக்கப்படுகின்றார்கள்.  இதுவரை காலமும்  முக்கிய மையங்களாய் இருந்த ஆண் பாத்திரங்களைத் தவிர்த்து,  விளிம்புநிலையிலிருந்த பெண் பாத்திரங்கள் இதில் முன்னிநிலைப்படுத்தப்படுகின்றனர். இது ஒருவகையான பின்நவீனத்துவ சிறுகதையாடல்களின் வாசிப்பெனவும் எடுத்துக்கொள்ளலாம். சீதையும் நல்லதங்காளும் 'இருவர்' கவிதையில் அவர்களுக்கு நிகழ்ந்த வாழ்க்கைச் சம்பவங்களினால் தொடர்படுத்தப்படுகின்றனர். இன்னொரு கவிதையான 'தரமதி அரிச்சந்திரனில்' சந்திரமதி எனப்படுகின்ற தரமதியும் கஸ்தூரிபாயும் ஒப்பிடப்படுகின்றனர். அதிலும் 'ஒரேயொரு பொய்யாவது சொல்லியிருக்கலாம்/ ஒரேயொருமுறை வாக்கு தவறியிருக்கலாம்/ குடிதான் மூழ்கிவிட்டதே/........ கஸ்தூரிபாயாவது தப்பியிருப்பாள்' என்று முடிகின்ற இடம் வலிமையானது.  ஆண்களின் கெளரவங்களுக்காய் அவர்களின் கொள்கை வீம்புகளுக்காய்  சிலவேளை  இறுதியில் பலியாக்கப்படுவதும் பெண்களே என்பதையும் இந்தக் கவிதை சுட்டிநிற்கின்றது.

இந்தச் சிறுகதையாடல் இன்னும் உச்சம் பெறுவது  'நீதியின் மனைவி' கவிதையில்,
'என் அனுமதியின்றி /புத்தனைத் தேர்க்காலிட்டவனே /ஈடுசெய்ய /தேர்களுமில்லை /புதல்வர்களுமில்லை/கொலையென்றானபின் /மகனும் /கன்றும் ஒன்றுதான்
தாயென்றானபின்/நானும் பசுவும் ஒரே நிறம்/எனது மணிதான் எங்கே?'
என்கின்ற கவிதையில் ஒலிக்கின்ற நியாயத்திற்கு யாரால் பதில் சொல்லமுடியும்? கன்றின் கொலைக்கு தன் மகனைப் பலிகொடுக்கின்ற மன்னன், தன் மகனை இழந்து தவிக்கின்ற அன்னைக்கு எந்த நீதியைக் கொடுப்பான்? ஆக நாம் அறம், நீதி என்று நினைத்த அல்லது கற்பிக்கப்பட்ட விடயங்களில் கூட இன்னமும் கேட்கப்படாத கேள்விகள் இருக்கின்றன அல்லவா?

தலைவிகள் மற்றும் தலைவிகள் -02 கவிதைகளில், ஆண்களின் உலகில் பெண்களுக்கான இடம் எதுவெனக் கேட்கின்றன. தலைவிகள் கவிதையில் மன்னர்கள் வெல்லும்போது, பொருள் கொடுக்கும்போது அவர்களை மறந்துவிடாது விதந்து  பாடப்பட்ட பாடல்கள் இன்றும் இருக்கும்போது, அம்மன்னர்களின் மனைவிகளுக்கு பெயரற்ற முகங்கள் மட்டுந்தானே  எஞ்சி இருக்கின்றன எனக் கேட்கப்படுகின்றது.

அதுபோலவே 'ஆதிமந்தி', 'ஆட்டனத்தி', 'மருதி' எனப் பெயரிடப்பட்ட இம்மூன்று கவிதைகளில் ஒரு முக்கோணக்காதல் கூறப்பட்டு, மருதி என்னும் பெண் தற்கொலை செய்வது குறித்துப் பேசப்படுகின்றது.
இவ்வாறு மூத்தோள் என்ற பகுப்பில் நிறையப் பெண்கள் வருகின்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே அவர்களுக்கென சொல்லப்பட்டிருக்கும் கதைகளிலிருந்து விலத்தி,  வேறு கதைகளைக் சொல்பவர்களாய், நம் மனச்சாட்சியை அசைக்கும் கேள்விகளை எழுப்புவர்களாய் கீதாவின் கவிதைகளில் புதிதாய் முளைத்து வருகின்றனர்.


ஒளவையின் கவிதை என்றவுடன் எனக்கு உடனே எப்போதும் நினைவுக்கு வருவது
'எனது இருப்பை/ உறுதிப் படுத்த/ பிறந்த மண்ணின் எல்லையைக் கடந்தேன்/இறுதியாக/ பாதங்களில் ஒட்டியிருந்த செம்மண்ணையும்/தட்டியாயிற்று/
செம்மண்ணும் போயிற்று/ எம் மண்ணும் போயிற்று/ போ' என்கின்ற எல்லை கடத்தல் கவிதை.

தமது வீடுகளை, பூர்வீகக் கிராமங்களை, ஏன் நாடுகளின் எல்லைக் கோடுகளைத் தாண்டிய துயரில் இருக்கும் எவருக்கும் எளிதில் நெருக்கமாகிவிடக்கூடிய ஒரு கவிதை இது.

எந்த வயதென்று இல்லாது எல்லாப்பெண்கள் மீதும் பாலியல் வன்முறைகள் நடக்கும் நமது காலத்தில், ஓளவை  'என்னுடைய சிறிய மலர்' கவிதையில் பெண் குழந்தைகளை வெளியாட்களிடம் மட்டுமல்ல, அவரவர் தந்தைகளிடமும் மாமாக்களிடமும் கூட கவனமாயிருக்கும்படி எச்சரிக்கை செய்கின்றார்.


ஈழத்தில் இறுதி ஆயுத போராட்டத்தில் நிகழ்ந்த பேரழிவுகளை 'மீதமாக உள்ள வாழ்வு' மற்றும் 'அஞ்சலி' கவிதைகள் பாடுகின்றன. இதே ஒளவைதான் ராஜினி திரணகமவினதும், விஜிதரனினதும் படுகொலைகள் பற்றித் துயரத்துடனும் எழுதியிருக்கின்றனர். இழப்பென்பது, உயிரிழத்தல் என்பது அது யாரென்றாலும் எந்த அரசியல் நம்பிக்கையுடன் இருக்கின்றார்களோ அதைத்தாண்டி நம் மனங்களை வேதனைப்படுத்துபவை. மரணங்களை எந்தக் கவிஞராலும் கொண்டாட முடியாது. ஆகவேதான் ராஜினி திரணமகா, விஜிதரன் போன்ற பொதுமக்களில் ஒருவராக பொதுமக்களளோடு நின்றவர்களின்  மரணங்களை நினைவுகூர்ந்து ஓளவையால் எழுதமுடிகிறது. இறுதிப்போர்க்காலங்களில் போராளியாக நின்ற இசைப்பிரியா போன்ற பல நூற்றுக்கணக்கான பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரமான மரணங்களைப் பற்றியும் அதே துயரத்துடனும், வலியுடனும் பதிவு செய்யமுடிகின்றது. அறம் பிறழாத படைப்பாளி என்பவர்கள், இப்படித்தான் எல்லா அரசியல் நம்பிக்கைகளையும் தாண்டி ஒடுக்கப்படுபவர்களின் பக்கம் நின்று பேசமுடியும். குரலற்றவர்களுக்கான குரல்களாய் இருக்க முடியும்.

ஓளைவையின் கவிதைகள் முக்கிய கவிதைகளாக 'சொல்லாமல் போகும் புதல்வர்கள்' மற்றும் 'வீடு திரும்பிய என் மகன்' என்பவற்றைப் பார்க்கின்றேன். போராடப் போவதற்காய் சொல்லாமல் போகும் புதல்வர்கள், இயக்கங்களில் இணைந்துவிட்டு திரும்பும்போது எப்படி எல்லா மென் உணர்வுகளையும் தொலைத்த மகன்களாய் மாறுகின்றார்கள் என்பதை மிக அற்புதமாய்க் காட்டுகின்றார். இரண்டு வெவ்வேறு கவிதைகளுக்கு இடையில் எப்படி காலமும் மனிதர்களும் முகங்களைத் தொலைத்துவிட்டன/ர் என்பதை நாம் கண்டுணரமுடியும்.

சொல்லாமல் போகும் புதல்வர்களைப் பற்றி தாயிற்கு சோகம் நெஞ்சை அரித்தாலும் ' மகனே/சிட்டுக்குருவியைப் போலத்தான் பறந்தாய்!/ ஆயினும் காலம் உன்னை வளர்த்திருக்கும்/ மனிதநேயத்தை இழந்துவிடாதே/ மக்களை இன்னும் நேசிக்கப் பழகு' எனத்தான் சொல்கின்றார்.

பின்னர் 'வீடு திரும்பிய மகனில்'  எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப்போவதைத் தாய் பார்க்கின்றார்
'நண்பனைச் சுட்டுவிட்டு வந்து/ வீரம் பேசினான்/ விடுதலை பற்றி/ ஆயுதம் பற்றி/ எல்லைப் புற மக்களைக் கொல்வதைப் பற்றி/ நிறையவே பேசினான்' எனச் சொல்லிவிட்டு 'இப்போது நான்/ தாயாக இருத்தல் முடியாது/ என்று தோன்றுகின்றது/ ...துரோகி என்று/என்னையும் புதைப்பானோ/ஒரு நாள்?' எனத் தாயே தன் மகனைப் பார்த்து அஞ்சுமளவிற்கு சூழல் கொடூரமாய் மாறுகிறது.

எங்கள் எல்லோரினதும் விடுதலைக்காய்த்தான் பிள்ளைகள் துப்பாக்கி தூக்கினார்கள் என்று போராளிகளை அரவணைத்த தாய்களை, தலைமேல் தூக்கிக் கொண்டாடிய மக்களை பிறகொருகாலத்தில் எதற்காகத்தான் இவர்கள் துப்பாக்கி தூக்கினார்கள் என்று வருத்தபடவைக்கும் அளவிற்கு அல்லவா, நமது இயக்கங்கள்  அனைத்தும் பிற்காலத்தில் மாறியிருந்தன.

ஊர்வசியும், ஒளவையும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் எழுத வந்தவர்கள் என்பதற்கப்பால்,இவர்கள் இருவரினதும் தொடக்க கால அநேக கவிதைகளில் ஊடுபாவுகின்ற 'காத்திருப்பு' என்ற புள்ளி கவனிக்கத்தக்கது. ஒளவையும் அரசியல் நிமித்தம் தலைமறைவுக்குப் போகின்ற நண்பனுக்காய்/காதலுக்காய் காத்திருப்பதையும், தான் நினைத்த காதல் சிலவேளைகளில் தடம்மாறிப்போவதையும் பதிவு செய்கின்றார். ஆயுதப்போராட்டமும், தீவிர கண்காணிப்பும் தொடங்குகின்ற 80களில் பெண்களின் இருப்பு அல்லது வகிபாகம் குறித்த சில முக்கிய புள்ளிகளையாவது ஒளவையினதும் ஊர்வசியினதும் கவிதைகளில் நாம் கண்டுகொள்ளலாம். அதேவேளை போராட்டப்போகின்ற ஆண்களுக்கு துணைநிற்கின்ற இவர்களின் கவிதைகள், அதே ஆண்களுடனான நேசத்தில் அசமத்துவம் வருகின்றபோதும், அவற்றையும் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. முக்கியமாய் ஒளவை தன் கவிதைகளில் போராட்டத்திற்கான ஆதரவு நிலையை மட்டுமில்லாது அது திசைமாறிப் போய்க்கொண்டிருந்தபோதும் நேர்மையாகப் பதிவு செய்திருக்கின்றார். அதேபோன்று போராட்டங்களைத் திசை திருப்பியவர்கள் மீது விமர்சனம் வைத்தபோதும், போராட்டத்திற்கான காரணங்கள் இன்னமும் இருப்பதை மறைக்கவோ அல்லது போராட அர்ப்பணிப்புடன் போய் மரணித்தவர்களையோ நினைவுகூரவோ அவர் தயங்கவில்லை என்பதையும் அண்மையில் எழுதப்பட்ட  கவிதைகள் சொல்கின்றன.

'சரணடைந்த உங்களிடம்/ஆயுதம் இல்லை/விழிகள் ஒளி இழந்திருந்தன/இதழ்கள் உலர்ந்து காய்ந்திருந்தன./ எல்லாவற்றையும் இழந்தபின்/ சிறு வெள்ளைத் துகில்/உடல் மறைக்க/கொலைக்களத்தில்/யுத்த வெ(ற்)றிக்குப் பலியிடப்பட்டீர்கள்
பாழும் வெளி அது/பசித்திருந்ததோ உடல் புசிக்க'
என்றேதான் ஒளவை எழுதுகின்றார்.


ர்வசியினதும் ஓளவையினதும் கீதாவினதும் கவிதைகளை வாசிக்கும்போது உறவுகள் என்பது ஒருபோதுமே மகிழ்ச்சியையோ இதத்தையோ தரமாட்டாதோ என யோசிக்க வைத்தது. இது அவர்களின் கவிதைகள் என்றில்லாது பொதுவான ஆண்/பெண் கவிஞர்கள் எழுதும் அநேக கவிதைகளை முன்வைத்தும் இதைக் கேட்கலாம். மிகுந்த உற்சாகந்தரும் நேசம் பிறகேன் சலித்துப் போகின்றது?அல்லது நாங்கள் நிறையக் கனவுகளை யதார்த்ததிற்கு பொருந்தாது கண்டுகொண்டிருகின்றோமா? அல்லது பிரிவையும் துயரத்தையும் எழுதினால்தான் அவை கவிதைகளாகும் என்று ஒருவகையான கற்பிதங்களுக்குள் சிக்கியிருக்கின்றோமா? என எல்லோரும் சேர்ந்து யோசித்துப் பார்த்தால் நல்லது.

காதலை எழுதுவதென்றால் கூட நம்மோடு இருந்து பிரிந்துவிட்டுப் போன காதலையோ அல்லது நமக்கு நிகழச் சாத்தியமற்ற  நேசத்தைத்தானே ஏதோ ஒரு துயர் தொக்குநிற்க எழுத விழைகிறோம். நம்மை சிலிர்க்க வைக்கும் அல்லது நமக்கான பொழுதுகளுக்கு வர்ணங்களை வாரியிறைத்துக்கொண்டிருக்கும் இதமான காதலை ஏன் நாம் அவ்வளவு எழுதுவதில்லை அல்லது ஏன் எழுதத் தயங்குகின்றோம் என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பிப் பார்க்கலாம்.

படைப்புக்களைத் தொகுப்பாக்கும்போது அவற்றில் எல்லாமே சிறந்த படைப்புக்களாய் இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கமுடியாது. நாம் எளிதாய்க் கடந்துவிடமுடியாத சில படைப்புக்கள் இருந்தாலே அது ஒரு கவனிக்கத்தொரு தொகுப்பாக என்பதாகவே என் வாசிப்பை வைத்திருக்கின்றேன். இந்தத் தொகுப்புக்களில் சில கவிதைகளாக முழுமைபெறாத மற்றும் வடிவங்களில் சட்டென்று முறிந்துபோகின்ற கவிதைகளும் இருக்கின்றன. ஆனால் இவற்றை மீறி எனக்கு இந்தத் தொகுப்புக்கள் அனைத்தும் பிடித்திருக்கின்றன. ஒவ்வொன்றயும் பலதடவைகளுக்கு மேலாய் வாசித்தபோதும் அலுத்துப்போகாத  வாசிப்பு அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.

ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கையில் வாழ்வதற்கான உயிர்ப்பை உலர விடாதிருக்கின்றனர். இன்னமும் சேதி வராவிட்டால் பரவாயில்லை இனி பறக்கப்போகின்றேன் -அவ்வப்போது ஓய்வெடுக்க ஒரு கிளை மட்டும் போதும்- என்கின்றனர். எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை என்றாலும் எல்லா வலிகளையும் தமது துயரங்களாகப் பார்க்கும்  கனிந்த மனதுடையவர்களாகவும் இருக்கின்றனர்.

பெண்களுக்கான சுதந்திரமே ஆண்களாகிய நம்மையும் பலவற்றில் இருந்து விடுதலை செய்யக்கூடும் என்ற திசையில் நின்று யோசித்துப் பார்க்கின்றேன். அந்தவகையில் இந்தத் தொகுப்புக்களில் பெண்கள் தமது விருப்புக்களின் பறத்தல்களை நிகழ்த்திக்காட்டுகின்றனர். நாமும் அவர்களின் கவிதைகளினூடு சிறகை விரிக்கும்போது புதிய அனுபவங்களுக்கான சில வரைபடங்களை கண்டடையவும் கூடும்.


(நன்றி: 'அம்ருதா' - ஐப்பசி, 2015 இதழ்)

0 comments: