கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இயற்கையின் உபாசகர்கள்

Wednesday, May 27, 2020


ல்லவில் இருக்கும் மலையில் (Ella Rock) ஏறுவது அவ்வளவு எளிதானதல்ல என்பது ஏறும்போதுதான் தெரிந்தது. அதற்கு முதல் எல்ல இரெயின் ஸ்ரேஷனின் தண்டவாளத்தால் நடந்து அடுத்த ஸ்ரேஷனான கிதல் எல்ல வரை 3 கிலோமீற்றர்கள் நடக்கவேண்டும். இடையில் ரெயின் வருகின்றதா என அவதானமாக நடக்கவேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை அள்ளிக்கொண்டு போய்விடும்.

இதன்பிறகும் ஒரு 5 கிலோமீற்றர்கள் தேயிலைத் தோட்டங்கள், சற்றுச் செங்குத்தான சிறு பாறைகளுக்கிடையில்தான் மேலே ஏறிப்போகவேண்டும். நாங்கள் ஏறியதுபோல வெயில்நாட்களாக இருந்தால் நிறையத்தண்ணீரும், இடையில் சாப்பிடுவதற்கு பழங்கள், சொக்கிலேட்டுக்கள் எடுத்துச் செல்லுதல் பயணத்தைக் களைப்படையாமல் வைத்திருக்கும். இது எல்லாவற்றையும்விட  எங்களைப்போல அல்லாது, வெயில் வரமுன்னர் அதிகாலையிலேயே  மலையில் ஏறினால் அற்புதமான சூரிய உதயத்தையும் பார்க்கமுடியும்.

நானும் நண்பரும் நடந்துபோகும்போது ரெயின் இடையில் வந்தபோது, அருகில் இளநீர் விற்றுக்கொண்டிருந்த பெண்மணி எச்சரிக்கை செய்ய நான் பயந்து போய் தண்டவாளத்தின் கரையில் பதுங்கிக்கொண்டேன். எங்களுக்குப் பின்னால் நடந்துகொண்டிருந்த ஒரு வெளிநாட்டுப்பெண்ணோ, காதலன் ரோஜாப்பூவுடன் எதிரில் வந்துகொண்டிருப்பதுபோல மிக நிதானமாக எதிரில் வரும் ரெயினை எதிர்கொண்டு செல்ஃபியை எடுத்துவிட்டு கரைக்குப் பாய்ந்தார்.

ப்படி தண்டவாளங்களுக்கிடையில் நடந்தபோது நண்பர் காலைமாறி கற்களுக்குள் வைக்க, அவரின் பாதம் பிரண்டது. அவ்வளவு வலி அவருக்கு. இனி தொடர்ந்து நடக்கமுடியுமா என்பதே சந்தேகமாய் இருக்க, எதிரில் வந்துகொண்டிருந்த ஒரு வழிகாட்டி சிங்கள இளைஞன், தன் வசம் வைத்திருந்த வலி கொல்லும் ஸ்பிரேயை அடித்துவிட்டுச் சென்றார்.
நண்பர் வலியோடு வர ஏறிச்சென்று பார்த்த பயணம் இது. திரும்பும் வழியில் வலிதாங்காது அவர் துடித்து, சப்பாத்தைக் கழற்றிப் பார்ப்போமா எனக் கேட்க, இல்லை இப்போது பார்த்தால் கீழே இறங்கவே முடியாது, கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்களெனச் சொல்லிக் கூட்டிக்கொண்டு வந்திருந்தேன். கீழே வந்து தொடர்ந்து நடக்காமல் ஓட்டோ ஒன்றைப் பிடித்து பார்மஸிக்குப் போனால் கால் அப்படி வீங்கிப்போயிருந்தது. இவ்வளவு வலியோடு எப்படி நடந்தார் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

மலையில் ஏறுவதற்கு, கிதல் எல்லவுக்கு அருகில் போகும்போது ஓர் அருவி பாய்ந்துகொண்டிருந்தது. நண்பரோ, அமைதியான இந்த அருவியில் நாளை காலை வந்து நீராடுவோம் என்றார். நாங்கள் திரும்பும்வழியில் ஓர் அழகான பெண் அந்த அருவியில் குறுக்குக்கட்டோடு குளித்துக்கொண்டிருந்தார். அர்ஜூனனுக்கு மாமரத்தில் இருந்த மண்கிளி மட்டுமே இலக்காகத் தெரிந்ததுபோல், எனக்கும் அவருக்கு அருகில் அவரது கணவர் இருப்பது கண்ணுக்குத் தெரியாது, அவர் மட்டுமே தெரிய ஏதோ ஒரு உற்சாகத்தில் கையை அசைத்து ஹாய் சொல்லிவிட்டேன். அவர் அதிர்ச்சியில் முதலில் உறைந்துபோனாலும், பிறகு மெல்லியதாய்ப் புன்னகைத்தார். அவரது கணவர் இருப்பது தெரிந்து நான் பயத்தில் உறைந்துபோய் அந்தப் பக்கமாய் மீண்டும் பார்க்காது தண்டவாளத்தில் ரெயின் வந்தாலும் பரவாயில்லை என்று அதற்குள் பாய்ந்துவிட்டேன்.

'அடுத்த நாள் அருவியில் குளிக்கும் எனது ஆசை உன்னாலே இப்போதே கருகிவிட்டது' என நண்பர் தொடர்ந்து திட்டியபடி வந்தார். இலக்கியத்தில் அழகியல், இரசனை என்றால் எல்லோரும் பாராட்டுகின்றார்கள், நிஜ வாழ்க்கையில் அப்படி இருந்தால், இளநீரைச் சீவுவது போல அனைவரும் கத்தியோடு வந்துவிடுகின்றார்கள் என்பதுதான் எவ்வளவு துயரமானது.

செங்குத்தான மலையேற்றத்தில் நாங்கள் கஷ்டப்பட்டபோது, எங்கிருந்தோ வந்த ஒரு நாய் எங்களுக்கு உதவி புரிந்தது. அதிலும் நண்பர் கால் வேதனையோடு தவிர்த்தபோது, இன்னும் கொஞ்சத்தூரந்தான் இருக்கின்றதென எங்களுக்கு வழிகாட்டி போல முன்னே சிறிதுதூரம் ஓடிவிட்டு வாலை ஆட்டிக்கொண்டு அவர் காத்துக்கொண்டிருப்பார். அப்படி அவரின் உற்சாகத்தைப் பார்த்துத்தான் நாம் கஷ்டத்தைக் குறைத்து எங்களால் ஏறவேண்டியிருந்தது. மேலே அழகிய இயற்கைக்காட்சி விரிந்திருந்தது. நிறைய அந்நியநாட்டுப் பயணிகள் இருந்து அடுத்து எங்கு போவதெனக் கலகலவென்று கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்குள் அமைதியாக இருந்து இயற்கையை இரசிக்க தனியிடத்தைத் தேடிப் போகவேண்டியிருந்தது. மேலே ஒன்றிரண்டு கடைகளில் உடனேயே பழங்களைக் கொண்டு சுவையான ஜூஸைகளையும், தண்ணீரையும் விற்றுக்கொண்டிருந்தார்கள். எல்லயின் மலைக்கு ஏறியவர்கள், நேரமிருப்பின் அதன் இடதுபக்கம் இருக்கும் நெடிதுயர்ந்த மரங்கள் இருக்கும் சிறுகாட்டினிடையே நடந்து பார்க்கலாம். எத்தனையோ தசாப்தங்களாக இருக்கக்கூடிய மரங்களினூடாக உலாவுவது என்பதும், அவற்றைத் தழுவிக்கொள்வது என்பதும் மிகுந்த ஆனந்தம் தரக்கூடியது.

இப்படி இந்த மலையேற்றத்தில் பல்வேறு சாகசங்களைச் செய்தாலும், நான் இதைவிட  9 Arches Bridgeற்குப் போவதே எல்ல வந்ததன் இலட்சியமெனச் சொல்லி அந்தரப்பட்டுக் கொண்டிருந்தேன். நண்பரோ, 'இப்படி கடினமான ஒரு  மலையேற்றம் செய்திருக்கின்றோம், அதைவிட 10 நிமிட நடையில் அந்த பாலத்திற்குப் போவதில் என்ன சாதனை இருக்கப்போகின்றது' என்றார். நானோ, 'எல்லவில் மலையேற்றம் செய்தேன் என்று, யாழ்ப்பாணத்தில் ஏதேனும் பற்றைப்பக்கமாய் நின்று படம் எடுத்துப்போட்டால் கூட சனம் நம்பிவிடும், ஆனால் எல்லவிற்கு வந்து 9 Arches Bridge இற்குப் போகவில்லை என்றால் நான் எல்லவிற்குப் போகவில்லை என்றே சனம் சொல்லி எள்ளல் செய்யும். அதுவும் இந்த Instagram எல்லாம், இலங்கை என்றால் எல்ல போகவேண்டும், அதிலும் இரெயின் வரும்போது 9 Arches Bridgeஇல் இருந்து ஒரு படம் 'க்ளிக்'க வேண்டும். இல்லாவிட்டால் மதிப்பே இல்லாதுபோய்விடும்' என்றேன்..

அடுத்தநாள் நண்பரின் கால்வலி மறையாத காரணத்தால், அதிகதூரம் நடத்தல் சாத்தியமில்லை என்பதால் ஒரு ஓட்டோவில்  பாலத்துக்குக் கிட்டவாகப் போய் இறங்கினோம். நாங்கள் அந்தப் பாலத்தை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தபோதுதான்  ரெயினொன்று பாலத்தினூடாகக் கடந்து கொண்டிருந்தது. அடுத்த ரெயின் வரும்வரை அங்கே காத்திருந்து படம் எடுக்க, ரெயினிற்கு முன் குதித்துத் தற்கொலை செய்ய வரும் ஒருவரால்தான் அவ்வளவு பொறுமையாகக் காத்திருக்கமுடியும்.  நாங்கள் அருகில் சுடச்சுட அவித்துக்கொண்டிருந்த சோளப்பொத்திகளை வாங்கிச் சுவைத்தபடி, ஒரு Instagram  உலகம் எப்படி புகைப்படங்களினால் இயங்குகின்றது என்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினோம்.

இறுதியில் நானும் அந்த அருட்பெருஞ்சோதியில் கலந்து  9 Arches Bridge இற்கு அருகில் நின்று படம் எடுத்து, இலங்கைக்குப் போயிருக்கின்றேன் என்று உலகுக்கு நிரூபிக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவுசெய்தேன்.
................................

(Feb, 2020)

2 comments:

J. P Josephine Baba said...

நல்ல சுவாரசியமான அனுபவப்பகிர்வு. எந்த மாவட்டம், அங்கு போக வாகன வசதி போன்றவயை பற்றியும் உதவும் நியாயமான பணம் பெறும் வழி காட்டிகள் , உணவகங்கள் பற்றி பகிர்ந்தால் புதிதாக அங்கு வர விரும்பும் அன்னிய நாட்டினருக்கும் உதவியாக இருக்கும். மலையின் அழகு எங்கள் ஊர் இடுக்கி மாவட்டம் போல் உள்ளது.

5/27/2020 09:38:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி. நீங்கள் குறிப்பிட்டமாதிரியான விடயங்களை இனிவரும் பயணக்குறிப்புகளில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கின்றேன்.

5/27/2020 11:29:00 PM