கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சென்னை புத்தகக் கண்காட்சி - 2020

Friday, May 29, 2020

சென்னை புத்தகக் கண்காட்சி என்பது தொலைவில் இருப்பவர்க்கு கிளர்ச்சியைத் தரக்கூடியது. ஆனால் அது இன்னொருவகையில் ஒரு அபத்தமான அரங்கில் நாங்கள் இருக்கின்றோம் என்ற உணர்வையும் நேரில் போகும்போது தரக்கூடியது. வாசிக்கவும், எழுதவும் விரும்பும் எனக்கும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு செல்வதென்பது பெருங்கனவாக ஒருகாலத்தில் இருந்தது. 5 வருடங்களுக்கு முன் அது முதன்முதலில் சாத்தியமாகியபோது கனவு நடந்தேறிய இதம் இருந்தாலும், அடிக்கடி கண்காட்சிக்கு செல்லவேண்டுமென்ற உணர்வை அது தரவில்லை. அபத்தம் எனக்கூறியது என்னவெனில் நாம் வாசித்து வியந்த பெரும் எழுத்தாளர்கள் எல்லாம், அவ்வளவு கவனிக்கப்படாத பாவப்பட்ட‌ ஜென்மங்களாக அங்கே அலைந்துகொண்டிருப்பார்கள்.

இம்முறை கண்காட்சிக்குப் போனபோது, எழுத்தாளர்களுடன் உரையாடுவதைவிட அவர்களைச் சுற்றி நடப்பதை அவதானிப்பது எனக்குச் சுவாரசியமாக இருந்தது. மனுஷ்யபுத்திரன், சாருவுக்கு எல்லாம் வாசகிகள் உண்மையிலே வருகின்றார்களா என நானும், இன்னொரு நண்பரும் வேவு பார்த்துக்கொண்டிருந்தோம். அதிக நேரம் நின்றால் மனுஷ்யபுத்திரன் எங்களைப் புகைப்படம் எடுத்து வலைத்தளத்தளத்தில் 'உளவுபார்க்க வந்தவர்கள்' என்று போட்டுவிடக்கூடுமென வந்த நண்பர் எச்சரித்தார். சாரு நின்ற 'ஜீரோ டிகிரி' பதிப்பகத்தில் நானும்,  இன்னொரு நண்பரும் அதிரடியாக‌ நுழைந்தபோது, சாரு எங்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்தார்.

'இலங்கையில் வாகன‌ங்கள் ஹோன் அடிப்பதில்லை' என அபத்தமாய் அவர் குமுதத்தில் எழுதியதைச் சுட்டிக்கட்டியது அவருக்குத் தெரிந்துவிட்டதோ என்று எனக்கும் சற்றுப் பயம் வந்தது. எனினும் சாருவின் அனைத்து நாவல்களையும் தவறவிடாது வாசித்தவன் என்றவகையில் அவரின் ஒரு நூலிலாவது கையெழுத்திட்டு வாங்கவேண்டும் என்று விரும்பினேன், ஆனால் அதை பிறகு அதை மறந்துவிட்டேன் என்பது கவலை தரக்கூடியது. மனுஷ்யபுத்திரனைச் சூழ அவ்வளவு வாசகிகள் இருக்காததுபோல, சாருவைச் சுற்றியும் அவரது குழுவினரைக் காணாதது, அவரும், அராத்தும் மட்டுமே நான் பார்க்கும்போதெல்லாம் 'அரட்டை' அடித்துக்கொண்டிருந்தது பெரும் ஏமாற்றமாய் இருந்தது. அடுத்தமுறை என் ஸ்பானிஷ் தோழியுடன் போயாவது சாருவைக் கொஞ்சம் எஸ்பஞோல் பேசிக் குளிரவைக்கவேண்டுமென நினைத்துக்கொண்டேன்.

தமிழகச் சூழல்தான் கண்காட்சியில் இப்படி ஈயோட்டிக் கொண்டிருக்கின்றதென நினைக்க, நமது ஈழத்து/புலம்பெயர் எழுத்தாளர்கள் இன்னும் தலைமறைவு இயக்கமாய் இருந்தார்கள். நிறையப் பேர் சென்னைக்கு வந்திறங்கியிருக்கின்றார்கள் என்று தமிழக நண்பர்கள் சொன்னார்கள்,  ஒருவரையும் காணக் கிடைக்கவில்லை. ஆனால் 'காலம்' செல்வத்தார் சென்னைக்குள் கால்வைத்தவுடன் எல்லாம் பரபரக்கத் தொடங்கிவிட்டது. படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் ரஜினியைப் பார்த்து,'வயதான பிறகும் உன் ஸ்டைலும், திமிரும் இன்னும் குறையவே இல்லை' என்ற கணக்காய் ஒரு 'டானாக' வந்து செல்வம் இறங்கினார்.

பல்வேறு அரசியல், இலக்கிய பிரிவுகள் அவரைத் தமக்கானவையாக‌ சுவீகரித்துக் கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தன. நான் அவரோடு 'டாக்ஸி'யில் திரிந்தபோது ஓர் அரசியல்வாதியைப் போல (அல்லது 'செக்கச் சிவந்த வானம்' பிரகாஷ்ராஜ் போல) இந்த விடயங்களை 'டீல்' பண்ணிக்கொண்டுவந்தார். அவர் படுகின்ற அவதியைப் பார்த்து அரசியல்வாதியின் கையாட்கள் போல, நானும் மற்றொரு நண்பரும் 'உங்களைக் கஷ்டப்படுத்தும் இவர்களைப் போட்டுத்தள்ளவா' என்று வன்முறையின் எல்லைக்கு வருமளவுக்கு அவரைச் சிலர் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தனர்.

இப்படி உணர்ச்சியின் கொந்தளிப்பில் இருந்த செல்வத்தார் என்னை ஒருநாள் விடிகாலை எழும்பி வரச்சொன்னார். சரி பெரிய தலைமாட்டிவிட்டது இன்று போட்டுத்தள்ளிவிட வேண்டியதுதாதென தாடியை வருடியபடி ஒரு அடியாளின் பாவனையுடன் அவர் நின்ற விடுதிக்குச் சென்றேன். அவரோ, 'நீ நிறையப் பாவங்களைச் செய்துவிட்டாய், உன்னை இன்று சென் தோமஸ் தேவாலயத்துக்கு அழைத்துச்சென்று பாவமன்னிப்பு கேட்கச் செய்யப்போகின்றேன்' என்று அழைத்துச் சென்றார். சாந்தோமில் மன்னிப்பு 5 நிமிடங்களில் முடிந்துவிடும் என்று நினைத்த எனக்கு பிரார்த்தனை 1 மணிவரை நீள எனது பாவங்கள் இவ்வளவு நீளமா எனக் கவலை வந்துவிட்டது.

அதிலும் எப்போது இருப்பது, எப்போது எழும்புவது, எப்படிப் பாடலைப் பாடுவது என்று என்னைத் தயார்ப்படுத்துவதில் நான்பட்ட கஷ்டம் இருக்கே! ஆனால் அழகிய தமிழில் பிரார்த்தனைகளும், பாடல்களும் நிகழ்ந்தது மனதுக்கு நெகிழ்வாக இருந்தது. இலங்கையில் நாம் பாவிக்கும், ஆனால் இந்தியாவில் அவ்வளவு பாவிக்கப்படாத உம், உமது போன்ற பழந்தமிழில் ஃபாதர் பேசியதும், போகிப்பண்டிகையில்  எரிப்பது எவ்வளவு சூழலை  மாசுபடுகின்றது என்று சூழலியல் பேசியதும் பிடித்திருந்தது.

அடியாளாக மாறும் என் கனவை தேவாலயத்திற்கு அழைத்துச் சென்று என்னை ஒரு பாவியாக்கிவிட்டார் என்ற கவலையோடு செல்வத்தார் நின்ற விடுதியில் நானும் போய் உறங்கச் சென்றுவிட்டேன். அப்போது அருகில் நித்திரைக் கலக்கத்தில் இருந்த செல்வம், 'கன்னி, கன்னி' என்று அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்தார். எனக்கே இந்த வயதிலே ஒன்றுமே ஒழுங்காக இயங்கவில்லை, இவருக்கு இந்த வயதிலும் பெண்கள் தேவைப்படுகின்றதோ என்ற  எரிச்சலே முதலில் வந்தது. கன்னி தேவையென்றால் சாந்தி தியேட்டர் பக்கமோ, பரங்கிமலை ஜோதித்தியேட்டர் பக்கமோ ஒதுங்கக்கூடும். அங்கே ஒளிந்திருந்து இவரைக் கையும் களவுமாய்ப் பிடிப்போம் என மனதினுள் திட்டம் போட்டேன்.

பிறகு தூங்கி எழுந்தபின்னும், நண்பர் தளவாய் சுந்தரத்துடனும் 'கன்னியில் அமர்ந்து போனால்தான் சொர்க்கம் போல இருக்கும் ' என்று குசுகுசுப்பதையும், நான் அருகில் போகும்போதெல்லாம் எதுவும் தெரியாதுபோல முகத்தை வைத்திருப்பதையும் கண்டேன். இவர் கன்னியைத் தேடிப்போகும்போது நான் இவரைப் பிடிக்கின்றேனோ இல்லையோ, நல்ல ஒரு துப்பறியும் கதைக்கான வித்து இதில் இருக்கின்றதென எனக்கு இன்னும் சுவாரசியம் கூடிவிட்டது.

 'எழுதித் தீராக் கதைகளில' தான் பிரான்ஸில் நிர்வாண விடுதிக்குப் போனார் என்று பார்த்தால், 'சொற்களில் சுழலும் உலகம்' என்று எழுதிவிட்டு இவருக்கு இந்த வயதில் இப்போது கன்னிகள் தேவைப்படுகிறதோ என்று எனக்குள் கறுவிக்கொண்டேன். பாவமன்னிப்பு வாங்க என்னை இழுத்துச் சென்றவர், தேவகன்னிகைகளைக் காண மட்டும் ஏன் என்னை அழைத்துச் செல்ல மறுக்கின்றார், இனி 'காலம்' இதழுக்கு எழுதுவதில்லை என்று அப்போதே தீர்மானித்துக்கொண்டேன்.

நான் அவரை இப்படி வேவுபார்க்கத் தொடங்கிவிட்டேன் என்று அவருக்குத் தெரிந்ததாலோ என்னவோ, பிறகு நான் சென்னையில் இருக்கும்வரை 'கன்னி' என்ற கோர்ட் வேர்ட்டை பாவிக்காமல் செல்வத்தார் இருந்தார். நானும் பிறகு நான்கைந்து நாட்களில் இலக்கியவாதிகளின் சகவாசம் போதுமென்று இலங்கைக்குப் புறப்பட்டுவிட்டேன்.

பிறகுதான் தெரிந்தது, அவர் 'கன்னி' என்று சொன்னது கன்னியாகுமாரி எக்ஸ்பிரஸ் என்றும், அதில் ஏறி ஜெயமோகனைப் பார்ப்பதைத்தான் நானறியாமல் செல்வத்தார் இரகசியமாகத் திட்டமிட்டார் என்பதும். அவரவர் அன்னை வேளாங்கண்ணிக்கோ, சபரிமலைக்கோ வருடந்தவறாது போவதுபோல செல்வத்தாரின் எந்த இந்திய யாத்திரையும், கன்னியாகுமரி பார்வதிபுரத்துக்குப் போகாமல் நிறைவேறுவதில்லை என்ற உண்மை எனக்கு உரைத்தது. ஜெயமோகனின் பேரால் (ஜெமோவே எழுதியிருக்கின்றார்) எத்தனையோ சிலுவைகளை செல்வத்தார் சுமந்திருக்கின்றார். ஆகவே அங்கேபோய்த்தான் செல்வத்தார் தன் 'பாடு'களை இறக்கிவைக்க வேண்டும்.

அது புரிகிறது.

ஆனால், என் பாவத்தை இறக்கிவைக்க தேவாலயத்தை விட‌, ஒரு தேவமங்கையின் ஆசிர்வதிக்கும் இதமான கரங்கள்தான் பொருத்தமானது என்று தெரியாத செல்வத்தார் இலக்கிய ஊழியம் செய்துதான் என்ன பயன்?

.................

(Feb 06, 2020)

0 comments: