கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அசோகமித்திரனின் 'தண்ணீர்'

Tuesday, May 12, 2020

ழுதும் மொழியைச் சிரமமுமில்லாமலும், கிளிஷே இல்லாமலும் பயன்படுத்த எல்லோராலும் முடிவதில்லை. மொழியைக் கஷ்டப்படுத்தாது பாவிப்பதென்பது, நீண்ட வாக்கியங்களைப் பாவிக்கக்கூடாது என்ற அர்த்தத்தில் அல்ல. அது நீண்டதோ, சுருங்கியதோ சொல்லும் மொழியில் குழப்பங்கள் இல்லாது சொல்லிச் செல்வதைக் குறிப்பிடுகிறேன். அதேபோல கிளிஷே என்பது தேய்வழக்குகள் பற்றியது. சொல்வளம் எமக்குச் சுருங்கியதாக இருக்கும்போது நாம் ஒரே சொற்களையே பாவிக்கவேண்டிய அபத்தம் ஏற்படும். இந்த விடயத்தில் உரைநடைக்காரர்களை விட, கவிதைகள் எழுதுபவர்கள் இன்னும் திணறுவதை நாம் அவதானிக்கமுடியும்.

தமிழில் இவ்வாறு எழுதும் மொழியைக் கஷ்டப்படுத்தாதும், அதேவேளை தேய்வழக்குக்களை அதிகம் பாவிக்காது நீண்டகாலம் எழுதிய ஒருவராக அசோகமித்திரனைக் கொள்ளலாம். நேற்று மீண்டும் ஒருமுறை அவரின் 'தண்ணீர்' நாவலை வாசித்தபோது, அது இன்னும் நிரூபணமாகியது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நாவல், மொழியில் எந்த இடறலையும் தராது வாசிப்பில் சுகானுபவத்தைத் தந்திருந்தது. இத்தனைக்கும் அசோகமித்திரன் கடினமான சொற்களையோ, நீண்ட வாக்கியங்களையோ பாவிப்பவருமில்ல. எளிய சொற்கள் ஆயினும் அவை தேய்வழக்குகளாக எம்மை சோர்வடையச் செய்யாது, அவர் எழுதிச் செல்வதில்தான் அவரின் எழுத்தின் திறமை தெரிகிறது. 50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டு விட்ட இந்த நாவலை, ஏற்கனவே சிலமுறை வாசித்தும் விட்ட நாவலை, மீண்டும் புதிதாக வாசிப்பது போன்ற பிரமையை அசோகமித்திரன் தருவது எவ்வாறு என்றே யோசித்திருக்கின்றேன்.

ஜமுனா, சாயா என்கின்ற வீட்டை விட்டுப் புறப்பட்டு, தனித்து வாழும் பெண்கள் இருவரின் சிக்கலான வாழ்க்கையை, சாதாரண வாசகரும் புரிந்து அனுதாபம் கொள்ளமட்டுமின்றி, இவ்வாறும் மனிதர்களின் வாழ்க்கை இருக்கிறது என்பதையும் விளங்கிக்கொள்ள வைப்பதில்தான் அசோகமித்திரன் தனித்து மிளிர்கிறார். எழுபதுகளில் ஒரு பெண் கர்ப்பமாகி, அந்தக் குழந்தைக்கு யார் தந்தை என்ற கேள்விக்கு அவ்வளவு அச்சப்படாது தன் பிள்ளையோடு வாழப்போகின்றார் என்பதை அசோகமித்திரன் எவ்வித அதிர்ச்சியோ, பெரும் பிரகடனமோ இல்லாது வாழ்வின் இயல்புகளில் இதுவும் ஒன்றெனச் சொல்லிச் செய்வதோடு, வாசகர்களையும் ஜமுனாவைப் புரிந்துகொள்ள வைப்பதுதான் தண்ணீரை இன்றும் வாசிக்க புத்துணர்ச்சி தருவதாக இருக்கிறாதென நினைக்கின்றேன். ஆனால் தண்ணீர் நாவலின் உச்சக்கட்டம் என்பது என்னைப் பொறுத்தவரை இறுதி அத்தியாயங்களில் நிகழ்வதல்ல, அது நாவலின் முக்கால்வாசியிலே நிகழ்ந்துவிடுகின்றது.

து எப்போது நிகழ்கிறது என்றால், ஜமுனா அவரின் சகோதரியான சாயா வீட்டை விட்டு வெளியேறியபின், தற்கொலைக்கு கயிறை மாட்டைத் தூக்குப் போடுவதற்குத் தயாராக இருக்கும்போது, அவர் வாடகைக்கு இருக்கும் வீட்டுப் பெண்மணி அதைக் கண்டுபிடிக்கும்போதாகும். அந்தத் தருணத்தில் வீட்டுப்பெண்மணி, ஜமுனா எந்நேரமானாலும் தற்கொலை செய்துவிடுவார் என்ற அச்சத்தில் ஜமுனாவை வீட்டை விட்டுப் போகச் சொல்லும்போது, ஜமுனா, அயல்வீட்டு ஆசிரியரிடம் இதைப் பகிரும்போது, அந்த ஆசிரியர் தன் அனுபவங்களைப் பேசும் இடத்தையே இந்நாவலின் மிக உச்சமானதாக நான் கொள்வேன்.

அந்த ஆசிரியர் தனது பதினைந்தாவது வயதில், நாற்பத்தைந்து வயது இருக்கும் ஒருவருக்குக் கட்டிக்கொடுக்கப்படுகிறார். அவரின் துணைவரோ எப்போதும் இருமிக்கொண்டு இருக்கும் கடும் நோயாளி. அந்த ஆசிரியர் முதன்முதலில் அவரின் கணவரோடு தனித்து விடப்படும்போது, நிகழும் சம்பவங்களை அந்த ஆசிரியர் வர்ணிக்கும்போது, யமுனா தான் தொடர்ந்து வாழ்வதற்கான நம்பிக்கையைப் பெற்றுக்கொள்கிறார். ஏனெனில் வெளியே அவ்வளவு தெரியாது ஆசிரியரின் வாழ்க்கை ஒரு நரக வாழ்வு. ஆனால் இந்த வாழ்வை வாழ்ந்துதானே ஆகவேண்டும் என்பதில் பிடிவாதமுள்ளவர் அந்த ஆசிரியர்.

இந்த இடத்தில் அசோகமித்திரன் எதையும் அதிகம் பேசிவிடுவதில்லை. வாசிக்கும் நமக்கு ஜமுனாவின் தற்கொலைக்கு சாயாவின் வெளியேற்றம் என்பதே ஒரு காரணமாகச் சொன்னாலும், ஜமுனாவின் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை நாம் கடைசி அத்தியாயத்தில் தெளிவாக விளங்கிக்கொள்கின்றோம். ஆனால் நாவல் முடியும்போது ஜமுனா தெளிவாக இருக்கின்றார். நீளும் வாழ்வு எவ்வளவு கடினமான பாதையாக இருந்தாலும் அதை அதன் எல்லா முகங்களோடும் எதிர்கொள்ளத் தயாராவதை அவர் அவதானிக்கமுடியும். ஆக, ஜமுனா தற்கொலை முயற்சிக்கான முக்கிய காரணம் தங்கையின் வெளியேற்றம் அல்ல. அவர் கர்ப்பமாகி விட்டதை அறிந்துகொண்டதுதான் என்பதை அசோகமித்திரன் இறுதியில் எமக்குச் சொல்லாமல் சொல்கின்றார்.

அதேவேளை ஜமுனாவால் அவர் கர்ப்பத்திற்குக் காரணமான ஆணோடு எந்தப் பொழுதிலும் சேர்ந்து வாழமுடியாது என்பதையும் அசோகமித்திரன் நமக்கு எளிதாக உணர்த்தியும் விடுகிறார். இப்போது நமக்கு இந்த நாவல் நகரத்தில் 'தண்ணீர்' ஒழுங்காய்க் கிடைக்காததன் அவதியைச் சொன்னாலும், இந்த நாவலுக்குள் மறைமுகமாகச் சொல்லப்படுவது வேறொரு பெருந்துயரத்தைதான் என்பது விளங்கிவிடுகின்றது. மனிதர்கள் தண்ணீருக்காய் அலைவதைப் போல, நேசத்துக்காகவும், பிற மனிதர்களின் அரவணைப்புக்காகவும் இன்னும் தாகத்துடன் அலைகின்றார்கள் என்பதும் இந்தநாவலினூடு மறைந்து கிடப்பதைக் காண்கின்றோம்.
.................

(Apr 15, 2020)

0 comments: