கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 104

Wednesday, July 23, 2025


னது அண்ணாக்களில் மகன்கள் தொலைக்காட்சிகளில் விளையாட்டுக்கள் நிகழும்போது பார்ப்பதைவிட, ஒளிபரப்பாளர்கள் அந்த ஆட்டங்களின் பின் அதை அலசிக்கொண்டிருப்பதை சுவாரசியமாகப் பார்ப்பார்கள். நானும், அண்ணாவும் அவர்களின் இந்த pre/post game ஆய்வுகளை' எள்ளல் செய்து கொண்டிருப்போம். அந்தப் பாவமோ என்னவோ எனக்கும் அப்படியான ஒரு 'வியாதி' இப்போது வந்துவிட்டது.

இப்போது ஏதாவது திரைப்படம் வருகின்றதெனில் அந்த இயக்குநர்களின் நேர்காணல்களை காணொளிகளாகப் பார்க்கத் தொடங்கிவிடுவேன். பெரும்பாலும் அவர்களின் பேச்சுக்களில் இருந்து ஏதேனும் சுவாரசியமாக அறிந்துகொள்ள இருப்பின் அவர்களைக் காணொளிகளில் பின் தொடர்ந்து பார்க்க/கேட்கத் தொடங்கிவிடுவேன்.

பெரும்பாலும் அந்த இயக்குநர்களின் புதிய திரைப்படங்களை விட அவர்களின் பேச்சில் வெளிப்படும் கருத்துக்கள் எனக்குப் பிடித்துவிடும். கடந்தமாதம் கூட ஒரு தமிழ்ப்படம் வெளிவந்தபோது அந்த நெறியாளரின் நேர்காணல்களை ஒன்றுவிடாமல் கேட்டிருக்கின்றேன். அவரின் திரைப்படம் வெகுசனரீதியாக வெற்றியடைந்தபோதும் என்னை அந்த திரைப்படம் அவ்வளவாக கவரவில்லை என்பது வேறுவிடயம்.

இப்போதும் அப்படித்தான் இயக்குநர் ராமின் நேர்காணல் காணொளிகள் மீது ஈர்ப்பு வந்து கடந்த சில நாட்களகத் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இவ்வாறான நேர்காணல்கள் என்பது அவர்களின் புதிய திரைபடங்களுக்கான விளம்பரப்படுத்தல்கள் என்கின்றபோதும், எனக்கு 'பறந்துபோ'வை உடனேயே பார்த்துவிடவேண்டும் என்ற எத்தனிப்பைத் தராதது வியப்பாக இருந்தது.

ஆனால் ராமின் நேர்காணல்களில் இருந்து நான் எடுத்துக் கொள்ள/நெருக்கம் கொள்ள நிறைய விடயங்கள் இருந்தன என்கின்றபோதும், இதில் வேறொரு சிக்கலும் இருந்தது.

 
படத்துக்கான விளம்பரப்படுத்தல்களுக்கான நேர்காணல் என்பதால், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்கப்பட்ட நேர்காணல் என்பதால் எல்லாவற்றிலும் பொதுவான தன்மைகள் இருந்தன. இதை நான் எழுத்தாளர் எஸ்.பொவும், ஜெயமோகனும் கனடாவுக்கு வந்தபொழுதும் கண்டிருந்தேன். அவர்கள் இங்கே தரித்து நின்ற நாட்களில் வெவ்வேறு இடங்களில் பேசியபோதும் அவர்கள் அன்றைய நிலைக்கேற்ற ஒரே விடயங்களைப் பேசியதைப் பார்த்து சற்று ஏமாற்றம் அடைந்திருக்கின்றேன். அதை அன்றைய காலங்களில் என் எழுத்தில் குறிப்பிட்டுமிருந்தேன். ஆக இது இயல்பாக எல்லோருக்கும் நிகழ்வதுதான போலிருக்கின்றது.

*
துவரை வந்த ராமின் திரைப்படங்களில் என்னைக் கவர்ந்தது அவரின் 'கற்றது தமிழே'. அதற்குப் பிறகு வந்த திரைப்படங்கள் என்னை கற்றது தமிழைத் தாண்டிக் கவரவில்லை. எல்லாப் படைப்பாளிகளுக்கும் அவர்களின் முக்கிய படைப்பைத் தாண்டி ஏதேனும் எழுதிவிட முடியும் என்ற எத்தனத்தில்தானே மற்றப் படைப்புக்களை எழுதிப் பார்க்க முயற்சிக்கின்றனர் அல்லவா?

ராமின் ஒரு நேர்காணலில் நான் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் சிலரின் 'கற்றது தமிழ்' விமர்சனத்தைக் கண்டு நொந்தேன் என்று சொல்லி, அதில் ஒன்றாக பெருமாள் முருகனின் 'கற்றது தமிழ்' விமர்சனத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். இருந்தாலும் ராம், மிஷ்கின், வெற்றிமாறன், ரஞ்சித் போன்ற அரிதானவர்கள்களே தொடர்ச்சியாக வாசிப்புப் பற்றியும், எழுத்தாளர்கள் பற்றியும், நூல்கள் பற்றியும் பொதுவெளியில் பேசிக் கொண்டிருப்பவர்கள். அந்தவகையில் அவர்க்ள் எனக்கு நெருக்கமானவர்கள்.

இந்த நேர்காணல்களில் ராம், கே.ஆர்.மீராவின் 'யூதாசின் நற்செய்தி'யை அப்படி அள்ளியணைத்து பாராட்டுவதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. அதை அவரது மதுரை அமெரிக்கன் காலேஜ் பேராசிரியர் பிரபாகர் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கின்றார். ராம் தனது திரைப்படப் பாத்திரங்களுக்கு தனக்கு நெருக்கமானவர்களின் பெயர்களைப் பெயரிடுகின்றதார் என்பதால் 'கற்றது தமிழில்' ஜீவாவின் பாத்திரமான பிரபாகர் பெயர் இந்தப் பேராசிரியரின் பெயரின் நிமித்தமே வந்திருக்கக் கூடும்.

 
பதினைந்து வருடங்களுக்கு முன் தமிழ்த் திரைப்படங்களுக்கென்று 'காட்சிப்பிழை' என்றொரு சஞ்சிகை வந்து கொண்டிருந்தது. அதில் ஒவ்வொரு மாதமும் ஒரு படைப்பாளியிடம் அவர்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் எழுதும் பகுதி இருந்தது. ஒருமுறை என்னிடம் அவர்களிடம் எனக்குப் பிடித்த திரைப்படத்தைப் பற்றி எழுதச் சொன்னபோது, எனக்கு உடனடியாக ஞாபகத்துக்கு வந்தது 'கற்றது தமிழ்'. அந்தக் கட்டுரை 12 வருடங்களுக்கு முன்னர் வந்தபோது, அதை வாசித்த ராம் தனக்கு அது பிடித்ததாகச் சொன்னதாக அப்போது 'காட்சிப்பிழை'யின் பொறுப்பாசிரியராக இருந்த தளவாய் சுந்தரம் சொல்லியிருந்ததும் நினைவில் இருக்கின்றது. பின்னர் நான் எழுதிய திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகளைத் தொகுத்து 'உதிரும் நினைவின் வர்ணங்கள்' என்ற நூலை வெளியிட்டபோது, அதில் ஒரெயொரு தமிழ்த்திரைப்படமாக 'கற்றது தமிழை' மட்டுமே சேர்த்திருக்கின்றேன் என்பதை இப்போது நினைக்க சற்று வியப்பாகத்தான் இருக்கிறது.


ராம் 2000களின் தொடக்கத்தில் இருந்தபோது ஒரு வலைப்பதிவொன்றைத் தொடங்கி (காட்சி?) அவரோடு அப்போது நெருக்கமானவர்களை எழுத வைத்திருந்தார்கள். அப்போது ஈழப்போர் இறுதிக்கட்டத்தில் இருந்தபோது தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தைப் பற்றியும், அது அரசியலாக்கப்பட்ட அவலம் பற்றியும் சிறந்ததொரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதில் எழுதி எழுதி படைப்பாளிகளாக பின்னாள் மாறியவர்கள் என்று மாரி செல்வராஜ், யமுனா ராகவன் (பிரியா விஜயராகவன்), கார்த்திக் நேத்தா, சாம்ராஜ் என்ற பலரின் எழுத்துக்கள் இன்னமும் எனக்கு ஞாபகத்திலிருக்கின்றது.

அந்தவகையில் ராம் தனக்குப் பின் இயக்குநர்களை மட்டுமின்றி, எழுத்தாளர்களையும் உருவாக்க முயன்றிருக்கின்றார்கள் என்பது முக்கியமான விடயம். இன்றைக்கு கற்றது தமிழ் வெளிவந்து 18 வருடங்களான பின், ஐந்து திரைப்படங்கள் மட்டுமே பொதுவெளிக்கு வந்தும், ஒரு இயக்குநராக ராம் தனக்கான ஓர் இடத்தை, உருவாக்கி வைத்திருப்பது அவ்வளவு எளிதல்ல. அதுவும் கொஞ்சக்காலம் திரைப்படங்கள் வராவிட்டாலே படுகுழிக்குள் இறக்கி மண்ணை மூடிவிட்டு போகும் அவசரமும் பொறாமையும் நிறைந்ததெனச் சொல்லப்படுகின்ற திரையுலகில் தன்னியல்பிலே ஒரு நெறியாளர் நிமிர்ந்து நிற்பது என்பது ஒருவகையில் சாதனைதான்.

காட்சிப்பிழையில் வந்த 'கற்றது தமிழ்' கட்டுரையை இவ்வாறாக முடித்திருப்பேன்:

"பிரபாகர் தனக்கான அறத்தோடு வாழும் ஒருவரே தவிர, பொது அறம் என நாம் விவாதிக்கும் எவற்றிலும் அவருக்கு அக்கறையே இருப்பதேயில்லை.எனவேதான் பிரபாகர் என்கின்ற பாத்திரம் ஒவ்வொருமுறையும் இதுதான் அவர் என நினைக்கின்றபோது இன்னொரு வடிவம் எடுத்துவிடுகின்றது. அது இத்திரைப்படத்தைப் பார்க்கும் நமக்குத் திகைப்பூட்டுவதாய் இருக்கிறது. மேலும் மேலும் இதுகுறித்து உரையாடும் வெளியைத் திறந்தபடி 'கற்றது தமிழ்' ஆகிவிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் பல்வேறு தன்னிலைகளால் ஆக்கப்பட்டவர்கள். வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வும், வாழ விரும்பும் வாழ்வும் கூட இருவேறு துவிதங்களாய்க் இருக்கலாம். அது இன்னும் நம் தன்னிலைகளை அடித்துத் துவசம் செய்கின்றன.

நாம் நம் தன்னிலைகளில் பிரபாகரைப் பார்க்கின்றோம். நம்மால் செய்யமுடியாததைப் பிரபாகர் செய்யும்போது நெருக்கத்தையும், ஆனால் அதேசமயம் பிரபாகர் நாம் விரும்பி ஆகும் பாத்திரம் அல்ல என்று உணர்கின்றபோது விலகலையும் அடைகின்றோம். எனவேதான் இந்தத் தருணத்தில் 'கற்றது தமிழ்' எனக்குப் பிடித்த திரைப்படமாய் அமைந்திருக்கிறது போலும்."


எனக்கென்னவோ ராமின் பிறகு வந்த திரைப்படங்களின் முக்கியபாத்திரங்களிலும் கூட, இவ்வாறான ஒத்ததன்மைகளே உள்ளோடிக் கொண்டிருப்பது போலத்தான் தோன்றுகின்றது.

*************

 

(Jul 10,2025) 

0 comments: