கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 108

Friday, August 29, 2025

 

ண்பரொருவரின்  bounded script ஐ வாசித்துக் கொண்டிருக்கின்றேன். திரைக்கதை நூறு பக்கங்களுக்கு மேலே நீண்டது. அடுத்த வருடம் இதைத் திரைப்படமாகுவதற்கான காலமும் குறித்தாயிற்று. நான் வாசிக்கும் பிரதி நான்கு முறைக்கு மேலாக திருத்தி எழுதப்பட்டிருக்கின்றது. அந்தளவு உழைப்பு இதில் செலுத்தப்பட்டிருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சியாக இருந்தது.


எனது சிறுகதைத் தொகுப்பையும் நண்பர் வாசித்திருந்தார். அவருக்கு அதில் இருந்த 'முள்ளிவாய்க்கால்' சிறுகதை மிகப் பிடித்திருந்தது. அதன் நீட்சியில் இலங்கையில் எடுக்கப்படும் திரைப்படங்கள் பற்றி உரையாடல் சென்றது.


இலங்கை சினிமா வரலாற்றில் இளங்கோ ராமின்  'நெலும் குளுண' (Tentigo), நூறு நாட்களுக்கு மேலாக ஓடிப் பெருஞ்சாதனையை செய்திருப்பதைப் பற்றிப் பேசினோம். ஒரு தமிழர், ஒரு சிங்களப் படத்தை எடுத்து இந்த ஆண்டின் மிகப்பெரும் வெற்றியாக ஆக்கியிருப்பதை எம்மைப் பொறுத்தவரை ஒரு பெரும் நிகழ்வு. அது தமிழில் பின்னர் 'பெருசு' என்ற பெயரில் எடுக்கப்பட்டிருந்தாலும், சிங்களத்தில் பார்த்தபோது இருந்த நெருக்கமும், நகைச்சுவையும் தமிழில் வராததைக் கண்டிருந்தேன். தமிழில் எடுக்கப்பட்ட 'பெருசு' என்னால் முழுதாகப் பார்க்க முடியாதளவுக்கு அவ்வளவு அறுவையாக இருந்தது. எனினும் இளங்கோ ராம் எடுத்து வைத்திருப்பது முக்கிய காலடி. இலங்கையில் மட்டுமில்லாது இந்தியாவிலும் அது தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது ஒரு முக்கிய நிகழ்வு. இப்போது இந்தி ஸ்பானிஷ் உள்ளிட்ட பலமொழிகளில் அது திரைப்படமாக்கப்படப் போகின்றது என அறிகின்றேன்.


இலங்கையில் இத்திரைப்படம் இலங்கை மதிப்பீட்டில் 400 மில்லியனுக்கு மேலாக பணத்தை ஈட்டியிருக்கின்றது. அப்போதுதான் இந்த நண்பர், அஷோக ஹந்தகமவின் 'ராணி' திரைப்படமும் 250 மில்லியனுக்கு ஓடியிருக்கின்றது என்ற தகவலைச் சொன்னார்.  'ராணி' திரைப்படம் 'நெலும் குளுண' போன்ற வெகுசன சினிமா அல்ல. பிரேமதாசா இலங்கை ஜனாதிபதியாக இருந்தபோது, இலங்கை அரசால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட ரிச்சர்ட் டீ சொய்ஸா என்ற பத்திரிகையாளரைப் பற்றிய படம். அதற்கும் மிகுந்த வரவேற்பை சிங்கள இரசிகர்கள் கொடுத்திருக்கின்றார்கள் என்றால் அது நிச்சயம் பாராட்ட வேண்டியதுதான்.


இவ்வாறாகப் பேசிக் கொண்டிருந்த எம் இருவருக்கும் வந்த கேள்வி என்னவென்றால், இவ்வாறு நாம் ஈழத்திலும்/புலம்பெயர்ந்த தேசங்களிலும் எமக்கான திரைப்படங்களுக்கான பார்வையாளர்களை உருவாக்கி வைத்திருக்கின்றோமா என்பது பற்றியது. நம்மிடையே குறிப்பிடத்தக்க நெறியாளர்கள் இருக்கின்றார்கள். நானறிந்து லெனின் சிவம் (கனடா), பிரதீபன் (பிரான்ஸ்), சதா பிரணவன் (பிரான்ஸ்), மதி சுதா (இலங்கை), சோமீதரன் (இந்தியா), ஹசின் (இந்தியா) போன்றவர்கள் தொடர்ந்து திரைத்துறையில் இயங்கியபடி இருக்கின்றார்கள். இவர்களுக்கு கைகொடுக்க நாம் எந்தளவுக்கு முன்னிற்கின்றோம் என்பது நமக்கு முன்னாலிருக்கும் முக்கிய வினாவாகும்.
 

த்தனைக்கும் 'லைக்கா', 'ஐங்கரன்' போன்ற பெருநிறுவனங்கள் ஈழத்தமிழர்களைப் பின்னணியாகக் கொண்டவை.  அவர்கள் பெரிய பட்ஜெட்களில் கூட எடுக்கத் தேவையில்லை. சிறிய ரகப் படங்களுக்கான பட்ஜெட்டில் கூட ஏன் ஈழத்தமிழர்களை நெறியாளர்களாகக் கொண்டு படங்களை எடுக்க அவர்கள் முன்வருவதில்லை. 'ராணி' என்கின்ற அஷோக ஹந்தகம்வின் திரைப்படத்தைத் தயாரித்தது லைக்காதான். அது நல்ல விடயம். அப்படி ஏன் ஈழ/புலம்பெயர் தமிழர்களின் திரைப்படங்களைத் தயாரிக்க இவை முன்வருவதில்லை. இப்படியான திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டுமென அவர்களோடு தொடர்புடையவர்கள் கூட ஒரு கோரிக்கையாக இதுவரைகாலமும் முன்வைக்கவில்லை என்பது எவ்வளவு அவலமானது.


மேலும், சதா பிரணவன் இயக்கிய 'வெள்ளிக்கிழமை & வெள்ளிக்கிழமை..' திரைப்படத்தைக் கூட இன்னும் ஜபிசி நிறுவனம் பொதுவெளியில் வெளிவிடாது தடுத்து வைத்திருக்கின்றது என நினைக்கின்றேன். இத்தனைக்கும் அவர்கள் நடத்திய ஒரு திரைப்படப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டுத்தான் சதா பிரணவன் இதை இயக்கியிருந்தார்.  நான் அத்திரைப்படத்தைப் பார்த்திருக்கின்றேன். நம் மத்தியில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் அது ஒரு முக்கியமான திரைப்படமே. அதுபோலவே, ஒரு திரைப்படமாக (ஐபோனில் எடுக்கப்பட்டதும் கூட) ஒரு முழுமையான அனுபவத்தைத் தராதபோதும், மதி சுதாவின் 'வெந்து தணிந்தது காடு' கவனிக்கத்தக்கதொரு முயற்சி. அதற்கும் புலம்பெயர் தேசத்தில் நம்மவர்கள் கொடுத்த தலையிடிகளை நாம் எளிதில் மறந்துவிட முடியாது.
ஆக தயாரிப்பாளர்களாகவும், இரசிகர்களாகவும் நம் திரைப்படங்கள் சார்ந்து நாம் நீண்டதூரம் போக வேண்டியிருக்கின்றது. ஒரளவு தமிழகத்தில் நம்மவர்களின் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றவராக கார்த்திக் சுப்புராஜ்ஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தைச் சொல்லலாம். அவர்களே இளங்கோ ராமின் 'பெருசு'வை தயாரித்து வெளியிட்டனர். அதுபோவே சோமீயின் இன்னமும் வெளிவராத 'நீளிரா'வையும் அதே நிறுவனமே தயாரித்திருக்கின்றது.


நாம் நமது தோழமைச் சக்திகளைப் புரிந்துகொள்வதைவிட,  எப்படி எதிரிகளை  எளிதாக உருவாக்குவது என்பதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றோம். அதனால்தான் அரசியலில் மட்டுமின்றி கலை இலக்கியம் திரைப்படம் போன்றவற்றிலும் மிகவும் பின்னோக்கிச் செல்கின்றவர்களாவும் இருக்கின்றோம். 


எல்லாவற்றிலும் அரசியல் இருக்கின்றது என்பது அடிப்படையான புரிதல். ஆனால் எல்லாவற்றையும் அரசியலாக மட்டும் பார்த்தால், நாம் எந்த ஒரு உருப்படியான விடயத்தையும் செய்ய முடியாது. மேலும் அரசியலை விட, இலக்கியமும், நாடகமும், சினிமாவும் நெடுந்தூரத்துக்குச் செல்லக் கூடியவை. எதிர்த்தரப்புக்களோடும் நிதானமாக உரையாடக் கூடிய வலு இவற்றுக்கு மட்டுமே உள்ளன. 


நான் சொல்லும் நேரடி அரசியலின் குறுந்தூரத்தை நீங்கள் நம்பாவிட்டால், கடந்த இருபது/முப்பது வருடங்களில் அரசியல் குறித்து எழுதப்பட்ட/பேசப்பட்ட விடயங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி நிதானமகாபப் பாருங்கள். நாம் மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வந்து நின்றுதான் இந்த அரசியலைப் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்ற வேதனையான புள்ளிக்கு எளிதாக வந்து சேர்வோம். அது சோர்வானது மட்டுமில்லை, ஒரு சமூகமாக எமக்கு அவலமானதும் கூட.


புதிய சிந்தனைச் செல்நெறிகளை உருவாக்க முடியாவிட்டால் கூட பரவாயில்லை, அவ்வாறு புதிய திசைகளை நோக்கி போக விரும்புகின்றவகளையாவது இழுத்துப் பிடித்து விழுத்தாது, அவர்களைப் பறக்கவாவது நாங்கள் விடவேண்டும். அதுவே ஒரு சமூகமாக நமக்கு நன்மை பயக்கும். அதற்கு முதலில் நிதானமாக நம்மை நாமே சுயவிமர்சனம் செய்யப் பழக வேண்டும்.


***

 

(Aug 2025)

கார்காலக் குறிப்புகள் - 107

Wednesday, August 27, 2025

 

கோடை என்றால் இங்கே தெருவிழாக்கள் அமோகமாக நிகழும். இப்போது ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் தமிழர்கள் விழாக்களை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். என்னை இந்தத் தெருவிழாக்கள் அவ்வளவாக கவர்வதில்லை. பெரிதாகக் காரணம் ஒன்றுமில்லை, அங்கே கூடும் சனங்களின் நெருக்கம் என்னை மூச்சுவிட திணற வைக்கும்.

நேற்று ஒரு தெருவிழாவுக்குப் போகவேண்டுமென நண்பர் விரும்பியிருந்தார். அதற்கு இந்நிகழ்வுக்கு பாடகர் பிரதீப் குமார் வருவதாக விளம்பரப்படுத்தியிருந்தனர் என்பதும் ஒரு காரணம். இன்னொரு நண்பரை நீண்டகாலமாக சந்திக்க விரும்பியும் இதுவரை சாத்தியமில்லாமல் இருந்தது. அவரையும் அவரின் வேலை முடித்து அங்கே சந்திக்க வரச் சொல்லியிருந்தேன்.

தமிழர்களின் தெருவிழாக்களில் இருக்கும் தன்முனைப்புக்கள்/அரசியல்/குழிபறிப்புகள் குறித்து விரிவாக எதுவும் பேசப்போவதில்லை. அது ஒரு பெருங்கடல்; அது குறித்து 24/7 சூடாய்ப் பேசுவதற்கு நிறையப் பேர் இருக்கின்றனர்.

பிரதீப்குமார் நண்பருடன் குழுவினராய் வந்து இறங்கியிருந்தனர். அவர்கள் Oorka என்கின்ற சுயாதீன இசைக்குழுவை நீண்டகாலம் நடத்தி வருகின்றனர். எனவே அவர்கள் தமது சுயாதீனப் பாடல்களைப் பாடினார்கள். எனக்கு இதில் இருந்த வியப்பு என்னவென்றால், பிரதீப்குமார் பிரசித்த பெற்ற பாடகர்/இசைக்கோர்ப்பாளர் என்று வளர்ந்தபின்னும், ஒரு சுயாதீன இசைக்குழுவின் ஒரு 'பேஸ் கிட்டாராக' அவர்களோடு சேர்ந்து வந்திருந்தார். இந்தக் குழுவின் இசைக்கோர்ப்பாளர்/பாடகராக முக்கியமாக இருப்பவர் பாரத் சங்கர்.

நேற்றைய நிகழ்வில் பிரதீப்குமார் எதுவும் பாடப்போவதில்லை என்றுதான் பாரத் சங்கர் கூறினார். அதுபோலவே பிரதீப் குமார் எதையும் பாடவில்லை. பொதுவாக சினிமா/இசைச்சூழலில் ஒருவர் அதில் பிரபல்யமானபின், தன்னை முதன்மை ஆளுமையாக முன்வைப்பார்கள்; அதில் துளி ஆணவமும் இல்லாது பிரதீப் குமார் நேற்று மற்றவர்கள் பாட, கூட ஒரு பக்கவாத்தியக் கலைஞராக மட்டும் இருந்தார். இது அவ்வளவாக எவருக்கு சாத்தியமாகாது. அந்தவகையில் பிரதீப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எப்போதும் சினிமாப் பாடல்களை பாடும் இவ்வாறான நிகழ்வுகளில், ஒரு சுயாதீன இசைக்குழுவை அழைத்து வந்து பாட வைத்த விழாக்குழுவினருக்கும் நன்றி சொல்லவேண்டும்.

இப்போது நான் இதை எழுத வந்ததற்கான காரணத்துக்கு வருகின்றேன். இதை நான் என் பள்ளி/பல்கலைக்கழகத்திலிருந்து பேசி வருகின்றோம். நம்மவர்களுக்கு இருக்கும் இந்த இந்தியச் சினிமா/சினிமா மோகம் பற்றியது. கோடம்பாக்கம் திரையுலகு எவ்வளவு பிரமாண்டம்/இராட்சத்தனம் என்பது பற்றி பேசவேண்டியதில்லை. சினிமா/ இசைக்கலைஞர்களை இங்கு அழைப்பது, மனம்குளிர 'கொடுத்து' திருப்பி அனுப்பிவைப்பது குறித்தும் கவலையில்லை. அவரவர் அவரவர்க்கான விருப்பம்.

ஆனால் பாருங்கள், இப்போது ஒரு சுயாதீன இசைக்குழுவை அழைக்க முடிந்தவர்களால், நம்மவர்களிடையே இருந்து முகிழ்ந்த சுயாதீன இசைக்குழு ஒன்றை அழைக்கவேண்டும் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடிந்திருக்காது. இத்தனைக்கும் கனடாவிலே நான்றிய சிறந்த சுயாதீனப் பாடர்களென தென்னிந்தியா சினிமா உலகே பாராட்டும் NavZ-47, Shan Vincent de Paul போன்ற பலர் இருக்கின்றனர்.

ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழிகளில் பாடமுடியும் என்றாலும், தமிழில் மட்டுமே பாடுவோம் என்று இங்கிருக்கும் நவனீ போன்று நோர்வேயில் 9 grader nord என்ற இசைக்குழுவை நடத்தும் மீரா/தீபா சகோதரிகள் தமிழிலேதான் பாடுகின்றனர். இப்படி எண்ணற்ற நம்மவரிடையே இருக்கும் 'சுயாதீன இசைக்குழு'வைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் இப்போது ஈழத்தில் இருந்து நன்றாகப் பாடும் வாகீசன் குழுவினரைக் கூடக் கூப்பிடலாம்.


மேலும் இங்கே தெருவிழாக்களை யார் நடத்துகின்றோம் என்று போட்டியிடும் குழுக்கள் கூட, எவரை அழைக்கவேண்டும்/எவருக்கு தளங்களை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பது குறித்து ஒருபோதும் பொதுவில் விவாதிப்பதில்லை. இங்கே இப்போது தெருவிழா சார்ந்து அடிவாங்கும் ஒரு நிறுவனம் கூட, நம்மவர்கள் ஒரளவு பிரபல்யம் அடைந்தபிறகுதான், எம்மிடம் வாருங்கள் என்று தங்கத்தம்பாளம் வைத்து வரவேற்று பாராட்டுவார்கள். தமது தனித்துவமான கலைத்திறமைகளால் வளர்ந்துவரும் கலைஞர்களை இவர்களைப் போன்றவர்கள் ஒருபோதும் அரவணைப்பதில்லை. அந்தக் கலைஞர்களுக்கு ஏதோ ஒருவகையில் அங்கீகாரம் கிடைத்தபின்னேதான் நம்மவர்கள் எனப் பாராட்ட முன்வருவார்கள்.

உங்களுக்குச் சந்தேகம் இருப்பின், அவர்கள் கடந்தகாலத்தில் கெளரவித்தவர்களின் பட்டியலைப் பாருங்கள். ஆனால் வெளியில் என்னவோ ஈழத்தமிழர் சமூகத்திற்காக உடல்/பொருள்/ஆவியைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக களமாடி கொண்டிருப்பார்கள். நாங்கள்தான் தமிழ்ச்சமூகத்தை அடையாளப்படுத்துபவர்கள் என்ற ஏகபோக உரிமையை தாமாகவே எடுத்துக் கொள்வார்கள்.

ஒரு சமூகமாக எல்லோரையும் உள்ளடக்கும்போது அந்த சமூகம் உங்களை அரவணைப்பார்கள். விடுகின்ற தவறுகளைக் கூட, செய்து முடித்த/செய்து கொண்டிருக்கும் நல்ல விடயங்களை முன்வைத்து சமூகமாக மக்கள் மன்னிக்கக் கூடத் தயாராக இருப்பார்கள்.

ஆனால் அது ஊர்ச்சங்கமாக இருந்தாலென்ன, பாடசாலைச் சங்கமாக இருந்தாலென்ன, ஏன் சமூகச் சங்கமாக இருந்தாலென்ன, தலைமைக்கான போட்டியில் அடிபடுவார்கள், ஒருவரையொருவர் இழுத்து விழுத்துவார்கள், பிறகு நாங்களே நல்லவர்கள்/வல்லவர்கள், எங்களுக்கு நீங்கள் இப்படிச் செய்யலாமா என்று அழுதபடி சமூகத்திடம் வந்து நீதி கேட்பார்கள்.

ஆகவே இங்கிருக்கும் ஒவ்வொரு சமூக நிறுவனங்கள் மட்டுமில்லை, தனிப்பட்ட ஒவ்வொருவரும் நீங்கள் உங்கள் தனிப்பட்ட விருப்பு/தன்முனைப்புகளைத் தவிர்த்து ஒரு சமூகமாக நாம் முன்னேற/உருப்பட ஒரு சிறு கல்லையாவது எடுத்துப் போட்டிருக்கின்றோமா என்று கேள்வி கேட்கவேண்டும். அந்த அடிப்படை அறத்தோடே சமூகக் களங்களுக்கு பணியாற்ற வாருங்கள். இல்லாவிட்டால் அமைதியாக இருங்கள். ஆகக்குறைந்தது பொதுவில் வந்து நீதி கேட்கும் முன், நீங்கள் இதுவரை காலம் எவ்வளவு ஜனநாயகத்தன்மையுடன் செயற்பட்டிருக்கின்றீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

***


(Aug 10, 2025)

கார்காலக் குறிப்புகள் - 106

Friday, August 22, 2025

 

ன்னுடைய 13/14 வயதுகளில் எனக்குத் தெரிந்த விஞ்ஞான ஆசிரியர்கள் காணாமற் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னுடைய ரீயூட்டரி ஆசிரியர்கள். அந்தக் காலத்தில் படித்த பாடசாலை யுத்தத்தால் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. புதிய ஊர்களில் பாடசாலையை மீண்டும் தொடங்க ஒரு குறிப்பிட்ட காலமளவுக்கு எடுக்கும்.  இப்படி என் பள்ளிப்படிப்பு நிறுத்தப்படுவதும், தொடங்குவதும் என சீரற்று இருக்க, பக்கத்தில் இருக்கும் ரீயுட்டரிகளுக்குப் போகத் தொடங்கினேன்.

அநேகமான ரீயூஷன் ஆசிரியர்களும் ஏதோ ஒரு பாடசாலையில் படிப்பித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு விஞ்ஞான ஆசிரியர்,  எங்களுக்கு உதைபந்தாட்டத்தில் கடும் போட்டி தந்துகொண்டிருந்ந்த பாடசாலையில் படிப்பித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை அந்தப் பாடசாலை எங்களை உதைபந்தாட்டத்தின் இறுதிப்போட்டியில் வெல்ல, அவர் வீட்டில் வைத்தே அந்த அணிவீரர்களுக்கு வெற்றி விருந்தும் கொடுத்திருந்தார். அவர் படிப்பிப்பதோ விஞ்ஞானம்,  ஆனால் விளையாட்டில் வென்றதற்கு வீட்டில் வைத்து ஒரு விருந்தா என்று எங்களைப் போன்றோருக்கு எரிச்சல் இருந்தது.

இப்படி அவர் மீது நிறையக் கடுப்பு இருந்தது. அப்போது அவரிடம் நான் ரியூசன் போகவில்லை. ஆனால் எங்கள் பாடசாலையைச் சேர்ந்த பலர் அவரிடம் போய்க் கொண்டிருந்தனர். நாங்கள் யுத்தத்தால் இடம்பெயர்ந்தபோது, அவரும் எங்கள் பாடசாலை ஆசிரியரும் சேர்ந்து ஒரு ரியூட்டரியைத் தொடங்கினார்கள். எங்கள் பாடசாலை ஆசிரியர் (விஞ்ஞானம் கற்பிப்பவர் அல்ல) மீதும் ஒரு மறைமுகக் குற்றச்சாட்டு பரவலாக இருந்தது.

அந்த ஆசிரியரின் மகன் எங்களை விட நான்கு வயது கூடியவராக இருந்தார். அவரோடு சேர்ந்து நான்கைந்து அதே வகுப்புப் பெடியங்கள் இயக்கத்துக்குப் போய்ச் சேர்ந்திருந்தனர். பதினாறு வயதில் இயக்கத்துக்குப் போய் இணைவதென்பது எங்கள் காலத்தில் சாதாரணமாக இருந்தது. அப்படிப் போன பெடியங்களில் எப்படியோ இந்த ஆசிரியர் தன் மகனை இயக்கத்திலிருந்து வெளியே இழுத்து எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். மற்றவர்கள் போனது போனதுதான். தன் பிள்ளையை மட்டும் காப்பாற்றிக் கொண்டுவந்த தந்தை என்று இவர் மீது மறைமுகமான குற்றச்சாட்டு அன்று பலரிடம் இருந்தது.

ஆகவே நான் இந்த ஆசிரியரும், நம்முடைய கால்பந்தாட்ட 'எதிரி' விஞ்ஞான ஆசிரியரும் இணைந்து நடத்திய ரீயூட்டரிக்குப் போக அவ்வளவாக விரும்பவில்லை. ஆனால் பாடசாலையில் எம்மோடு பேசாத பெண்களெல்லாம் அந்த ரீயூட்டரியில் நிறையப் பேசுகின்றார்கள் என்று மற்றப் பெடியங்கள் வந்து சொல்லும்போது மட்டும் பொறாமைத் தீ பற்றியெரியும்.

பிறகு நானும் வெட்கம்/மானத்தைக் கைவிட்டு அந்த விஞ்ஞான ஆசிரியரிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர் ஏதோ ஒரு பிரச்சினையின் காரணமாக எங்கள் பாடசாலை ஆசிரியரிடமிருந்து பிரிந்து வந்திருந்தார். ஆம், ஒரு பக்கத்தில் யுத்தம் நடந்துகொண்டிருந்தாலும், மனிதர் மனிதர்கள் இல்லையா. எல்லாவிதமான போட்டி பொறாமை கோபம், வன்மம் எல்லாம் எங்களுக்குள் அப்போதும் இருந்தது.

இந்த விஞ்ஞான ஆசிரியர் புது இடமொன்றை தற்காலிகமாகத் தேர்ந்தெடுத்து இருந்தார். அந்த வகுப்பில் எப்போதும் வயல்காற்று வீசியபடி இருக்கும். ரீயூசன் ஓலைக்கொட்டகை என்பதால் எல்லாப் பக்கத்தாலும் காற்று வந்து கொண்டிருக்கும். பக்கத்தில் ஒரு அழகான கோயில் வயல்களுக்கு நடுவில் இருந்தது. எனக்கு அந்தக் கோயிலுக்குப் போய்ப் பார்க்க விரும்பமிருந்தது. ஆனால் எம் இயக்கங்களின் போராட்ட வரலாற்றில் முக்கியமான இருவரை அங்கேதான் சுட்டுப்போட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து அந்தப் பக்கம் போகப் பயமாகவும் இருந்தது.

பிறகு வழமைபோல யுத்தம் நெருக்கித்தள்ள நாங்கள் வேறொரு ஊருக்கு இடம்பெயர்ந்தோம். எங்களைப் போல இந்த விஞ்ஞான ஆசிரியரின் ரியூசனும் இடம்பெயர்ந்தது. நம் தமிழ் அரசியல் கட்சிகள் போல, எம் ஆசிரியரும் இப்போது புதுக்கூட்டுச் சேர்ந்து, வந்த இடத்தில் ரியூசனைத் தொடங்கினார். அது ஒரு மரம் அரிகின்ற இடம். நிறைய மரத்துண்டுகளுக்கு இடையில்தான் வகுப்பு நடக்கும்.  சில வகுப்பறைகளின் நடுவில் மரம் அரிகின்ற  பெரிய அரம் இருக்கும்.
கவனமாக காலை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அதோடு இன்னொரு சிக்கல். இந்த மரச்சீவலுக்குள் நுளம்புகள் பெரும் இராட்சியமே அமைத்திருக்கும். அதன் கடிகள் தாங்கமுடியாது இருக்கும். பதினாறு வயது வரை நீள்காற்சட்டை போடமுடியாத யாழ் 'பராம்பரியம்' இருந்ததால், அரைக்காற்சட்டையோடு. தொடை தெரிய இருப்போம். நுளம்புகள் கால்பந்தாட்ட மைதானத்தில் பந்தை உருட்டுவது போல, கொடுக்குகளால் எங்களை அடித்துத் துவம்சம் செய்யும்.

இவ்வாறு எல்லா 'தாக்குதல்களையும்' சமாளித்து ரியூசனுக்குச் சென்ற காலத்தில்தான் எங்கள் அந்த விஞ்ஞான ஆசிரியர் காணாமற் போனார். இயக்கத்தால் எதற்கு அழைத்துச் செல்லப்பட்டார், இனி அவர் திரும்பி வருவரோ என்கின்ற பதற்றத்தோடு நாங்கள் ரீயூசனுக்கு போய்க் கொண்டிருந்தோம். நல்லவேளையாக ஓரிரு மாதங்களுக்குப் பின் அவர் திரும்பி வந்தார். ஆனால் முன்புபோல அவரிடம் கலகலப்பு இருக்கவில்லை. ஏதாவது விசாரணைக்குக் கூப்பிட்டு பங்கருக்குள் போட்டு அனுப்பினார்களா, இல்லை ஏதேனும் யுத்தத்திற்கான ஆயுதத் தயாரிப்புக்கான தொழில்நுட்ப அறிவைப் பெற அழைத்துச் சென்றார்களா என நாங்கள் அறியமுடியாத இரகசியமாக அந்த காணாமற்போதல் இருந்தது.

புலம்பெயர் தேசத்திற்கு வந்தபின், ஒருவரிடம் வயது, சம்பளம், திருமண உறவு உள்ளிட்ட எதையும் நாமாகக் கேட்கக்கூடாது, அது அநாகரீகம் என்பதைப் போல, எங்களுக்கு சின்ன வயதிலே இப்படி இயக்கத்தோடு சம்பந்தப்படும் எதையும் வாய்திறந்து கேட்கக்கூடாது என்பது எவரும் சொல்லாமலே தெரிந்திருந்தது. கடைசிவரை அவர் எதற்காய் அழைத்துச் செல்லப்பட்டார், பலருக்கு நிகழாததுபோல எப்படி அதிசயமாய்த் திரும்பி வந்தார் என்பது எங்களுக்கு புரியாத புதிராகவே இருந்தது.


*


ப்படி இன்னொரு விஞ்ஞான ஆசிரியரும் காணாமற் போயிருந்தார். அப்போது நான் அவரிடம் ரியூசனுக்குப் போகவில்லை. அவர் ஓரிரு மாதங்கள் அல்ல, கிட்டத்தட்ட ஒரு வருடம் காணாமற் போயிருந்தார். அவரை இயக்கம் பின்னர் திருப்பியனுப்பியபோதுதான் அவரிடம் நான் ரீயுசனுக்குப் போயிருந்தேன்.

அதை ரீயூசன் என்றல்ல. தனிப்பட்ட வகுப்பு எனத்தான் சொல்ல வேண்டும். நான் ஏதோ அந்தக்காலத்தில் கொஞ்சம் படிக்கின்றவன் என்பதால் அவர் என்னை வற்புறுத்தி தன்னிடம் படிக்க வரச்சொல்லி என் பெற்றோரிடம் சொல்லியிருக்கின்றார். ஒருவகையில் அவர் தூரத்து உறவினராகவும் எமக்கு இருந்திருக்க வேண்டும்.

நானும், என் உறவுக்காரனும், இன்னும் சிலரும் அவரிடம் விஞ்ஞான வகுப்புக்காய் ரீயூசனுக்காகச் செல்வோம். அவர் மரபான பாடசாலைக் கற்றலைச் செய்யமாட்டார். ஏன் எங்கள் பாடப்புத்தகத்தில் என்ன இருக்கின்றது என்று பார்த்துக்கூட எங்களுக்குப் போதிப்பதில்லை. ஏதேனும் ஒரு விஞ்ஞானப் புத்தகத்தைத் தந்து வாசியுங்கள், கலந்துரையாடுவோம் என்பார். தமிழில் என்றால் கூட, பரவாயில்லை ஆங்கிலத்தை எழுத்துக்கூட்டி வாசித்து கொஞ்சமாய் கிரகிக்கும் மனோநிலையில் இருந்த எங்களுக்கு ஆங்கில விஞ்ஞானப் புத்தகங்களை அள்ளியள்ளித் தருவார். அதில் ஒரு நல்ல விடயம் என்னவென்றால் அவற்றில் அழகான வர்ணப் படங்கள் இருக்கும். படம் பார் கதை சொல் என்கின்றமாதிரி கொஞ்சம் வாசித்தமாதிரி நடிக்கச் செய்வோம்.

உதாரணத்துக்கு ஒரு பெரு மரம், அதில் பல்வகை உயிர்மை வகை என்றால், இது சூழலியலைப் பற்றிப் பேசுகின்றது என்று ஊகிக்க முடியும் அல்லவா? அப்படி அவரிடம் முறைசாரா கற்றலைக் கற்றோம்.நியூட்டன் அப்பிள் மரத்தடியில் இருந்து புவியீர்ப்பு விசையை கண்டறிந்ததுபோல, பாடப்புத்தகங்களைத் தாண்டிய விஞ்ஞானிகளை  எங்களிடையே உருவாக்க வேண்டுமென இந்த ஆசிரியர் நம்பியிருக்கக் கூடும்.

இவரும் இயக்கத்தால் அழைத்துச் செல்லப்பட்டு பங்கருக்குள் போடப்பட்டிருப்பாரா என்ற சந்தேகம் எனக்கு நீண்டகாலமாகவே இருந்தது. அவர் சும்மாவே அமைதியானவர். அத்தோடு இதற்கு முன்னர் ஏதோ வெளிநாட்டில் கல்விகற்கவோ கற்பிக்கவோ சென்றவர். பிள்ளைகள் வெளிநாட்டில் குறிப்பிட்ட காலம் கல்வி கற்றதால் அவர்களின் தமிழ் கொஞ்சம் தமிழாக அழகாக இருக்கும்.

ஆசிரியர், இயக்கம் தன்னை அழைத்துச் சென்றபோது என்ன நடந்தது என்று எங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் ஆசிரியரின் மகன் கொஞ்சம் சொன்னான். அது உண்மையா, கற்பனையா என்று அப்போதும் தெரியவில்லை, இப்போதும் தெரியவில்லை. ஆசிரியரின் ஒரு மகனுக்கு ஒரு வயது என்னைவிடக் குறைவாக இருந்தது. ஆகவே அவனும் எங்களோடு இருந்துதான் படிப்பான். அதனால் நல்ல பழக்கமாகிவிட்டான்.

அவன் தான் சொன்னான்: எங்களின் அப்பாவை இயக்கம் அழைத்துச் சென்றது, இயக்கத்துக்கு ஹெலி செய்வதற்கு என்றான்(அப்போது எமக்கு எல்லாமே ஹெலிகொப்டர் தான், இயக்கத்தில் கடைசிக்காலத்தில் இருந்ததென்னவோ சிறிய ரக விமானங்கள்). எங்களால் அதை நம்ப முடியாதிருந்தது. இலங்கை இராணுவத்தின் ஹெலி, பொம்மர், இந்திய இராணுவத்தில் மிராஜ், சுப்பர்சொனிக் போன்ற எல்லாவற்றாலும் போதும் போதுமென்ற அடி வாங்கிய அனுபவத்தில் இயக்கத்தில் ஒரு விமானம் திருப்பியடிக்க இருக்கின்றது என்பதைக் கற்பனை செய்வதே வியப்பாக இருந்தது.

இப்படியெல்லாம் அவன் சொல்லிவிட்டு, நீங்கள் நம்பாவிட்டால் சொல்லுங்கள். நானே திருட்டுத்தனமாக ஓரிடத்துக்குப் போய்க் காட்டுகின்றேன். அங்கேதான் உருமறைப்புச் செய்து வைத்திருக்கின்றனர் என்று ஒரு இயக்க முகாமைப் பற்றியும் சொன்னான்.

எனக்கு அதைச் சென்று பார்க்க ஆசையாகவும் இருந்தது. ஆனால் இயக்கத்திற்கு இப்படி உளவு வேலையில் ஈடுபடுகின்றோம் என்று தெரிந்துவிட்டால்,  அவர்கள் என்னமாதிரியான ஒறுப்பு (தண்டனை) தருவார்கள் என்பதை நினைக்க அதைவிடப் பயமாகவும் இருந்தது.

தகப்பனும் மகனும் சேர்ந்து இயக்கத்துக்கு விமானம் செய்கின்றார்களோ இல்லையோ, என்னைப் போன்றவர்களை எப்படியேனும் சிக்கலில் மாட்டவைத்து இயக்கத்தின் பங்கருக்குள் அனுப்பவிடமாட்டார்கள் என்ற எச்சரிக்கையில் அந்த ஆசிரியரிடம் போவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளத் தொடங்கினேன்.

அம்மாதான், அந்த மனுஷன் உன்னை ரீயூசன் படிக்க, அவரது வீட்டுக்கு வரச் சொல்லி ஆசையாய்க் கேட்டவர், நீ ஏன் ஒழுங்காய்ப் போவதில்லை என்று அவ்வப்போது கவலையாய்க் கேட்பார். நான் மனதுக்குள், இயக்கம் ஒவ்வொரு அரசாங்கம் மாறி சமாதானப் பேச்சுக்கு போகும்போது, 'சமாதானம் என்பது தற்காலிகத் தீர்வு, எங்களின்  தனிப்பெரும் இலட்சியம்  தனித் தமிழீழம் அடைவதுதான்' என்று எங்களுக்குச் சொல்வதுபோல, இந்த ஆசிரியரின் தற்காலிக இலக்கு விஞ்ஞானம் படிப்பிப்பது, தொலைதூர இலட்சியம் எங்களை விஞ்ஞானிகளாக்கி இயக்கத்தில் சேர்த்துவிடுவதுதான்' என்று சொல்லிக் கொள்வேன்.

*****

 

 ஓவியம்: Melancholy by Edward Munch

( Aug 06, 2025)

சிறுகதைத் தொகுப்பு நிகழ்வு குறித்து..

Tuesday, August 19, 2025


ழுத்து என்பது ஒருவகையில் எனக்கு அந்தரங்கமானது. ஆகவே என் அகமனதோடான உரையாடல் என்றும் அதைச்ஃ சொல்லிக் கொள்ளலாம். எழுதுவது இதமானது என்றால் நூலைப் பதிப்பிப்பது, நூல் வெளியீட்டு நிகழ்வு நடத்துவது என்பது போன்றவை பதற்றத்தைத் தரக்கூடியது. ஒருவகையில் அப்போது மட்டுமே புறவுலகத்தோடு தொடர்பு கொள்வதால் அது என்னளவில் அவ்வளவு உவப்பானதாக ஒரு செயலாக இருப்பதில்லை.

 

இதனாலேயே 2 வருடங்களுக்கு முன்னர் வெளியான 'தாய்லாந்து' குறுநாவலுக்கு எந்த வெளியீட்டு நிகழ்வையும் செய்யாமல் இருந்தேன். இப்போது 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தபோதும் அதில் அவ்வளவு ஆர்வங்காட்டாதே இருந்தேன். என் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. அது என் நண்பரான தளவாய் சுந்தரத்தின் முயற்சியால், அவர் அப்போது பொறுப்பாக இருந்த 'கயல்கவின்' பதிப்பகத்தால் வெளிவந்தது. என் கெட்டகாலமோ இல்லை தமிழுலகின் நல்லகாலமோ என்னவோ, அந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தபோது 'கயல்கவின்' பதிப்பகமும் மூடும் நிலைக்கு வந்திருந்தது. எனவே அவ்வளவு வெளியில் தெரியாத தொகுதியாக அது போயிருந்தது.

 

எந்த நூலாயினும் அது தகுதியுள்ளதாயின் காலம் அதற்கென ஓரிடம் வழங்குமென்பதில் நம்பிக்கையுடையவன் நான். இந்த 12 வருடங்களில் 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' குறித்து புதியவர்கள் அதை வாசித்து மதிப்புரை எழுதினார்கள். நாஞ்சில் நாடன் போன்றவர்களின் கண்களில்/கரங்களில் தற்செயலாய்ப் போய்ச் சேர்ந்து, அன்று நம்பிக்கை தரும் படைப்பாளிகளில் ஒருவன் என்றவளவில் விகடன் நேர்காணலில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றேன். 'எங்கள் வாப்பாவுக்கு ஓர் ஆனையிருந்தது' என்று பழங்கதைகள் பேசுவதில் என்ன பயன்? சமகாலத்தில் எம் எழுத்து என்னவாகும் இருக்கும் என்பதை நேரடியாகச் சந்திப்பதுதானே ஒவ்வொரு எழுத்தாளருக்கும் முன்னால் இருக்கும் பெரும் சவால்.

 

ஒருவகையில் நம்மால் தொடர்ந்து இதே வகைமைக்குள் எழுதமுடியுமா என்று நம்மை நாமே கத்தி தீட்டிப் பார்ப்பதற்கான வழிதான் கதைகளைத் தொகுத்து நூலாக்குவது என்பது என்னுடைய வழியாகும். ஆகவேதான் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டபின், அதற்கான விருது/மதிப்பீடுகள் கிடைத்தபோதும், இன்னொரு தொகுப்பை நூலாக்கும் எண்ணம் வரவில்லை. அதற்காக அதன்பிறகு கவிதைகள் அதன்பிறகு எழுதவில்லை என்றல்ல அர்த்தம். ஏற்கனவே எழுத்து அந்தரங்கமானது என்று குறிப்பிட்டதுமாதிரி, எழுதியவை வெளியிடப்படாதவரை அவை என்னோடு அந்தரங்க உரையாடல்களைச் செய்து கொண்டிருக்கின்றன எனச் சொல்லிக் கொள்ளலாம்.

 

சிறுகதைகளைக் கூட இந்த பன்னிரண்டு ஆண்டுகளில் அவ்வளவாக எழுதவில்லை. இந்தத் தொகுப்புக்காக எழுதியவற்றிலிருந்து 10 கதைகளைத்தான் தேர்ந்தெடுத்தேன். ஆக ஒருவருடத்துக்கு ஒரு கதை கூட எழுதவில்லை என்று கூட சொல்லிக் கொள்ளலாம். அதில் குறையேதுமில்லை, ஆகக்குறைந்தது தேர்ந்தெடுத்து நூலாக ஆக்க 10 கதைகளாகவது இருக்கின்றனவே என்கின்ற நிறைவே இருக்கின்றது.

 

'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' நூல்கள் கைகளை அடைந்து மாதங்களாகிவிட்டபோதும், புத்தக வெளியீட்டு நிகழ்வு நடத்தும் எண்ணம் பெரிதாக இருக்கவில்லை. நெருக்கமான சிலர் உந்தித்தள்ளியதால் சரி ஒரு வெளியீட்டு நிகழ்வைச் செய்யலாம் என்று முடிவு செய்தாலும், வழமையான செய்யும் அரங்கிற்கான இடமும் கிடைக்கவில்லை. அரங்கு கிடைத்தபோது கிட்டத்தட்ட 10 நாட்களில் செய்யவேண்டிய நிலைமை. இந்தக் குறுகிய காலத்தில் நூலை வாசித்து கருத்துரைப்பவர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமானது. மேலும் இங்கு இப்போது இரண்டுமாத பாடசாலை விடுமுறை/கோடைகாலம் என்பதால் எல்லோரும் குடும்பம்/பிள்ளைகள் என்று ஓடிக்கொண்டிருப்பார்கள்.

 

ஒரளவு வாசிப்பதில் ஆர்வம் இருக்கும் நானே இப்படி யாரேனும் கேட்டால் முடியாது என்றுதான் உடனேயே மறுத்திருப்பேன்.ஆனால் நான் விரும்பிக் கேட்டேன் என்பதற்காக மைதிலி, ஜயகரன், அரசி, செல்வம், இலங்கதாஸ் என அனைத்து நண்பர்களும் குறுகிய காலம் என்கின்றபோது நூலை வாசித்து பேசச் சம்மதித்தார்கள். அவர்கள் இல்லாதுவிடின் இந்த நிகழ்வு நடந்திருக்கவே மாட்டாது.

 

வழமையான மரபான நிகழ்வில் இருந்து மாற்றவேண்டுமென நிரோஜினியிடம் கதையின் ஒரு பகுதியை வாசிக்கக் கேட்டேன். அவர் சம்மதித்தார். அதுபோலவே இம்முறை கனடிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஜூவனிட்டா நாதனை அழைத்திருந்தேன். அவர் அரசியல்/சமூக செயற்பாட்டாளாராக இருந்தாலும், தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர். அண்மையில் தமிழில் முதுமாணி பட்டத்தை இங்குள்ள மனோன்மணியம் பல்கலைக்கழகத்தினூடு பெற்றுமிருந்தார். கனடிய நீரோட்டத்தில் மட்டும் கால்பதிக்காது, தமிழ்த்துவத்திலும் அவர் கொண்டிருக்கும் ஆர்வத்தில் நேரமிருப்பின் நிகழ்வுக்கு வருகை தர அழைத்தேன். அவர் நூலை வெளியிட்டதோடு எனது புதிய இணையத்தளமான www.elankodse.com  அறிமுகம் செய்து வைத்தார்.

 

********

 

 (Jul 25, 2025)

கார்காலக் குறிப்புகள் - 105

Sunday, August 17, 2025

 

ண்பரொருவரின் தந்தையாருக்கு விருப்பம் என்பதால் லியோ டால்ஸ்டாயின் 'போரும் வாழ்வும்', பதினான்கு தொகுதிகளாக இருந்த புத்தகங்களை அனுப்பி வைத்திருந்தேன். இதை சீர் வாசகர் வட்டம் கடந்த வருடம் வெளியிட்டிருந்தது என நினைக்கின்றேன். இலங்கையிலிருந்த ஒரு புத்தக விற்பனை நண்பரிடம் நல்லவேளையாக ஒரு தொகுதி 'போரும் வாழ்வும்' புத்தகங்கள் கைவசம் இருந்தன.

புத்தகங்களைப் பெற்றுக் கொண்டவர் அவ்வளவு நன்றியுடன் பதிலை அனுப்பியிருந்தார். புத்தகங்களை நேசிப்பவராக ஒருவர் இல்லாதுவிடின் இப்படி நெகிழ்ந்து சொல்லியிருக்கமாட்டார் என்று தோன்றியது. அவருக்காக இரண்டு வருடங்களுக்கு முன் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நின்றபோது 'போரும் வாழ்வும்' வாங்கிக் கொண்டுபோய் இலங்கையில் கொடுக்க விரும்பிருந்தேன். ஆனால் அதன் பெருஞ்சுமை காரணமாக அது சாத்தியமில்லாது போயிற்று.

டால்ஸ்டாயின் 'அன்னா கரீனா' அவ்வளவு பெரும் நூலாக முதன்முதலாக கண்ட ஞாபகம் இப்போதும் ஞாபகத்திலிருக்கின்றது. நாங்கள் அப்போது போரின் நிமித்தம் யாழ்ப்பாணத்துக்குள் சங்கானைக்கு இடம்பெயர்ந்திருந்தோம். அப்போது அப்பாவின் நண்பரொருவர் (அவர் ஒரு கிராம சேவகர் என்று நினைவு) வீட்டுக்குச் சென்றிருந்தோம். அன்று எனக்கு 12/13 வயதுகள் இருக்கும். என் வயதொத்தவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தபோது தற்செயலாக ஒரு அலுமாரியின் லாச்சியைத் திறந்தபோது 'அன்னா கரீனா' முகப்பில் சிரித்துக் கொண்டிருந்தார்.

இத்தனைக்கும் நான் அந்த வயதுக்குள் எங்கள் வீட்டில் இருந்த கடல்புறா (1,2,3), யவனராணி (1,2) போன்ற பெரிய நூல்களை வாசித்து முடித்திருந்தேன். இருந்தபோது. அன்னா கரீனா அதன் பெயரில், முகப்பட்டையால் என்னை நீண்டகாலத்துக்கு விடாது துரத்தியபடி வந்தார். சிலவேளைகளில் அடையமுடியாத விடயங்களில் ஈர்ப்பு எப்போதும் இருந்து கொண்டேயிருப்பது போல, வாசித்துவிடாத புத்தங்களின் மீது மோகம் கூடிக்கொண்டே போகும் போலும்.

மற்றவர்களின் அலுமாரியைத் தார்செயலாகத் திறந்து பார்க்கும்போது புத்தகங்கள் தெரிந்தால் பரவாயில்லை. ஆனால் வேறேனும் இரகசியமான விடயங்கள் வந்துவிட்டால் கதி என்னவாவது? இப்படித்தான் நான் படிக்கும் காலத்தில் நான் காதலித்துக் கொண்டிருந்த ஒரு பெண் அவரின் தந்தையின் அறை லாச்சியைத் திறந்து பார்த்திருக்கின்றார். அங்கே condom பாக்கெட்டைக் கண்டுபிடித்து, தன் தந்தைக்கு யாரோ எவரோடு affair இருக்கிறது, அது யாரென்று கண்டுபிடித்துதர வேண்டும் என்று என்னை நெருக்கியபடி இருந்தார்.

அதெல்லாம் குடும்பத்துக்குள் ஒரு பாதுகாப்புக்குத்தான் என்று நான் எவ்வளவு சொன்னாலும் அவர் கேட்கவில்லை. எனக்கு அப்போது இருந்த துப்பறியும் அறிவு என்பது சுஜாதாவின் கணேஷ்-வசந்த் மற்றும் தேவிபாலாவின் பரத் -சுசீலாவை வாசித்த கைம்மண்ணளவுதான். அதை வைத்து எப்படி நான் துப்பறிய முடியும். அத்தோடு அந்தக் காதலியின் தந்தையார் வேலையின் நிமித்தம் ஒவ்வொரு நகர் நகராகச் சுற்றிக் கொண்டிருந்தவர்.

துப்பறியும் கதைகளை எழுதிய சுஜாதாவையோ, தேவிபாலாவையோ வாசிக்கும்போது நான் எங்கே மர்மம் துலக்கும் பகுதிகளை கருத்தூன்றி வாசித்தேன். நான் ஆழ வாசித்தது வசந்தும், பரத்தும் பிற பெண்கள் மீது செய்யும் காதல் சில்மிஷங்களை மட்டுமே என்று நான் எப்படி என் காதலிக்கு விளங்கப்படுத்த முடியும்.

இவற்றுக்குப் பிறகு அலுமாரிகளுக்குள் தங்கப்புதையல் இருந்தால் கூட எவருடைய லாச்சியையும் திறந்துபார்க்கக்கூடாது என்ற பேருண்மையை அறிந்துகொண்டேன்.

*

ன்று மாலை நண்பரொருவரைச் சந்தித்தபோது, ஏதோ கதையில் ரஷ்ய இலக்கியங்கள் தனக்கு pessimistic ஆக இருக்கின்றதென்றார். அவருடைய கருத்துக்குள் குறுக்கிடாமல் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் நான் ரஷ்ய பேரிலக்கியங்களை விட போரிலக்கியங்களையே விரும்பி வாசித்திருக்கின்றேன். 'வீரம் விளைந்தது', 'இவான் டொனிசோவ்வின் வாழ்வில் ஒருநாள்' என்று ரஷ்யப் புரட்சியைப் பின்னணியாக எழுதியவையே என்னைக் கவர்ந்தவை, எனக்குள் உரையாடல்களை உருவாக்குபவை. அதற்காய் ரஷ்யாவின் இலக்கிய 'மாஸ்டர்களை' மதிக்கவில்லை என்றோ, கீழிறக்கின்றேனோ என்று அர்த்தமல்ல. மாஸ்டர்கள் மீது பெருவிருப்பும், அதைவேளைஅவர்களைத் தாண்டிச் செல்லவேண்டும் என்கின்ற விழைவும் உந்தித்தள்ள, மார்க்வெஸ் போன்ற மாஸ்டர்களை எள்ளல் செய்து விலத்தியபடி ரொபர்தோ பொலானோ, அலெஜாண்டோ ஸாம்பிரா போன்ற சமகாலத்தைய இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் எழுந்தார்களில்லையா? அதுபோலத்தான் ரஷ்ய மாஸ்டர்களைக் காலத்தின் முன் நழுவவிட்டு, என்னை சமகாலத்தவர்களின் எழுத்துக்கள் அதிகம் வசீகரிக்கின்றனவோ தெரியவில்லை. சிலவேளைகளில் தமிழில் ரஷ்ய மாஸ்டர்களைப் போதும் போதுமென்ற அளவுக்கு பிழிந்து எடுத்துவிட்டதால் வந்த ஒருவகைச் சலிப்புத்தான் இதற்கு மறைமுகமான காரணமாக இருக்குமோ தெரியாது.

ஐரோப்பிய மூலமொழியில் இருந்து (ஆங்கிலம் அல்ல) நேரடியாக ஒரு படைப்பை தமிழாக்கிய நண்பரோடு பேசிக் கொண்டிருந்தபோது, அவர் ஒரு படைப்பின் மூலமொழியோடு பரிட்சயமாகும்போது அந்தப் படைப்பு எவ்வளவு வாசிப்புச் சாத்தியங்களைத் தருகின்றதென்று வியந்து சொல்லிக் கொண்டிருந்தார். அவர் மொழியாக்கும்போது பெற்ற சுவாரசியமான அனுபவங்கள், ஒரு சொல்லின் மூலத்தைத் தேடிச் செல்லும்போது மொழிக்குள் நடக்கும் முகையவிழ்ப்புகள் என பலதைப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்தப் படைப்பாளி மீது எவ்வளவு மதிப்பு வைத்திருந்தால் இத்தனை சிரத்தையாக இந்த தமிழாக்கத்துக்காய் உழைத்திருப்பார் என்று எனக்குள் எண்ணங்கள் தோன்றி மறைந்துகொண்டிருந்தன.

மொழியால்தான் சிந்திக்கின்றோம் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், இந்த நண்பர் எந்த மொழியால் சிந்திப்பார் என்று யோசித்தேன். ஏனெனில் அவர் தமிழை அவரது பதின்மங்களில்தான் முறையாகக் கற்றுக் கொண்டார். சிறுவயதில் கற்றுக்கொண்ட மூலமொழிதான் சிந்திப்பின் முதன்மை மொழியாக இருப்பின், அவர் சிந்திப்பில் எந்த மொழி முதல் மொழியாக வந்து நிற்குமென நினைத்துப் பார்ப்பது எனக்குச் சுவாரசியமாக இருந்தது.

 
*


டால்ஸ்டாயின் 'போரும் வாழ்வும்' பெற்றுக்கொண்டவர், நான் பிரார்த்தித்துவிட்டு வாசிக்கப் போகின்றேன் என தனது பிள்ளையிடம் சொல்லியிருக்கின்றார். கடவுள் நம்பிக்கையே இல்லாத அவரை, ஒரு புத்தகம் பிரார்த்தனைக்கு அழைத்துச் செல்வது என்பது எவ்வளவு அழகானது. மேலும் நண்பர் சொன்னார், எனது அம்மம்மா ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்குகின்றார் என்றால், கோயிலில் படையலிட்டு வழிபட்டு விட்டுத்தொடங்குவார் என்று. ஒரு புத்தகத்துக்கு/ புத்தக வாசிப்பிற்கு இவ்வளவு மரியாதை கொடுக்கும் காலம் ஒன்று இருந்திருக்கின்றது போலும்.

இப்போது நூல்கள் எளிதாகக் கிடைக்கின்றன. நாங்களே எழுதுகின்றவர்களாகவும் மாறிவிட்டோம். ஆனால் ஒருகாலத்தில் நூல்கள் சாதாரண மக்களுக்குக் கிடைப்பதென்பது அரிதாகவும், வாசிப்பதென்பது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமேயென இறுக்கமான விதிகளுடன் இருந்திருக்கும் அல்லவா?

புத்தகங்களை வாசிக்கும் பெண்களைப் போன்று இவ்வுலகில் அழகானவர்கள் எவருமில்லை என்பது எப்போதோ என்னைப் போன்றவர்களால் உறுதியாக எழுதப்பட்டுவிட்ட தீர்ப்பாகும். மேலும் வாசிப்பவர் யாராயிருப்பினும், அவர் எம் கேளிர் என அவர்களை அரவணைத்துக் கொண்டாடச் செய்வோம்.

***********

 

 நன்றி:புகைப்படம் - இணையம்

( Aug 03, 2025)