கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சிங்களக்கவிதைகள் சில...

Friday, October 12, 2007

பாடசாலை நாட்கள்

இரட்டைச் சடைகள் பறக்க
நான் மலைகளின்மேல் ஷாரினா, நெலியா, லட்சுமியுடன் மிதந்தேன்
பள்ளியின் பின்னால் நீளும் இந்நெடும்பாதை
எப்போதும் விரைவில் முடிந்துவிடுகின்றது

ஷாரினா இவ்வுலகில் எதற்கும் கவலைப்பட்டதில்லை
அவளது தந்தைக்கொரு சொந்தக்கடையிருந்தது
திருமணஞ்செய்வதே அவளது ஒரேயொரு விருப்பாயிருந்தது
அதைவிட வேறொன்றுமில்லை

நெலியா அவளது ஐரிஷ் தந்தையை அறிந்தவளில்லை
அடர்த்தியான கறுப்புக்கற்றைகள், மாதுளம்பழமான கன்னங்கள்
எல்லாப் பெடியங்களும் விரும்பக்கூடிய அழகானவளாயிருந்தாள்

லட்சுமி நானிதுவரை பார்த்திராத தடித்த கண்ணாடிகளை அணிந்திருந்தாள்
அவளது வீடு, அடிப்படை வசதிகளற்றது
போத்தல் விளக்கிலிருந்து வரும் தெளிவற்ற கதிரே
அவளது ஒளியாகவிருந்தது

அவள் ஒரு வைத்தியராகவோ வழக்கறிஞராகவோ
என்றேனும் ஒருநாள் ஆவாளென
அவளது தந்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்
அல்லது ஆகக்குறைந்தது
பல்கலைக்கழகத்திற்குச் செல்வாளென

நான் ஒரு கணமும் இன்னொரு இனத்திற்குரியவளென
(இவர்களோடு) இருந்தபொழுதில் உணர்ந்ததில்லை
நாங்கள் இளமையாக இருந்தபோது வாழ்வு இனிமையாக இருந்தது
துவேஷம் தனது முகத்தைக்காட்டி பல்லிளித்ததும் இல்லை

இப்போது உரத்துக்கதைத்தபடி
எனது மகள் பாடசாலையிலிருந்து நடந்துவருகின்றாள்
ஐந்துபேராய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி
இன்றைய நாளின் விசயத்தை அலசுகின்றார்கள்

'ஒரு தமிழ் கடை இன்று எரிக்கப்பட்டது' ஒருத்தி சொன்னாள்.
'கொளுத்தியது சரிதான்' என்றாள் இன்னொருத்தி.
அவர்களுக்கு ஷாரினா, நெலியா லட்சுமியின் அருகாமை
ஒருபோதும் கிடைத்ததேயில்லை.

-பிரேமினி அமீரசிங்க (From the collection, Kaleiooscope)
--------------------

கிராமத்தவரின் கதை

'நாங்கள் இப்போது மீன்கள சாப்பிடுவதில்லை' என்றாள் அவள்
'அவற்றின் வெறுமையான வயிறுகள் நாற்றமுடைய மனித உடல்களால் தினமும் நிரப்பப்படுகின்றன,
முள்ளந்தண்டுகள் நொறுக்கப்பட்ட தலைகளில்லாத இளைஞர்களின் உடலங்கள் நதியில் மிதந்து வருவதைப் பார்க்கின்றோம்'

*'புத்தா இப்போது எங்களுடன் தங்குவதில்லை' என்றாள் அவள்
'இரவில் வரும் அந்நியர்களுக்காய் அவன் பயப்பிடுகின்றான்
நேற்றும், அவனின் நண்பரொருவன் வெளியே இழுத்துச்செல்லப்பட்டான்
நாங்கள் துப்பாக்கிச்சூட்டுச்சத்தங்களைக் கேட்டோம், பிறகு நிசப்தம்'.

'ஒரு நல்ல விடயம், இந்த நாட்களில் சாப்பாடு வாங்குவதற்காய் கொஞ்சம் பணமிருக்கிறது
இந்தப் பிள்ளைகளின் அப்பா
இப்போது பார்ப்பதற்கு பரவாயில்லையாய் இருக்கின்றார்
எனது மகளுக்காய் இனி சீதனம் சேகரிப்பது தேவையற்றது
அவள் விரைவில் மறந்துவிடுவாள் எப்படி ஒரு இளைஞன் இருப்பான் என்பதை.

-பிரேமினி அமீரசிங்க (From the collection, Kaleiooscope)

* மகன்
---------------

கடவுளின் தனிமைப் பெண்

நானொரு வேசிப்பெண்
சமூகத்தில் எனக்கொரு மதிப்புமுமில்லை
வாழ்க்கையினூடு வழுக்கியபடி, மறக்கப்பட்டவள்;
ஒரு சுதந்திரமான வாத்து

நூறு ரூபாயிற்கு மேல்
எனது பேர்ஸில் எதுவும் இல்லை.

நேற்றிரவு ஒரு மிருகத்தோடு படுத்திருந்தேன்
அவனது பேர்ஸில் நூறு ரூபாய்த்தாளிலிருந்தது
இப்போது எனது.

நான் இன்னும் கவிதை வாசிக்கின்றேனெனது கழிவறையில்.

அந்தத் தாசிகளைப் பார்!
ஒளிரும் கனவான்களோடும் பளபளக்கும் கார்களுடனும்
அவர்கள் என்னைவிடச் சிறந்தவர்களென நினைக்கின்றார்கள்;
சேக்ஸ்பியர் காலத்தவர்களென்ற எண்ணம் வேறு -
ஜின்ஸ்பேர்க்கை வாசிப்பதால் நானொரு தாழ்த்தப்பட்டவள்

அந்த விபச்சாரன்களைப் பார்!
தந்தையின் பணத்தைக்கொண்டு வந்த ஒரு முட்டாள் பிட்சோடு போவதற்கு
இம்முதிர்ச்சியற்ற ஆண்கள் தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்
அவள தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டிருப்பதை இவர்கள் விரும்புகின்றார்கள்
எனக்கு உண்மையிலேயே இதைப்பார்க்க வெறுப்பாயிருக்கிறது

இந்தக்காலையில் காலிமுகத்திடலில்
கடல் நிசப்தமாயிருந்தது
எனது கால்கள் நோகும்வரை நீளநடந்தேன்
தன்னைத் தொடும்படி அப்பொழுது முழுதும்
கடல் என்னை மென்மையாக அழைத்துக்கொண்டிருந்தது.
நான் ஒருபோதும் அழைப்பை ஏற்றதில்லை.

நானின்னும் கவிதை வாசித்துக்கொண்டிருக்கின்றேன் எனது கழிவறையில்.

-ருக்சன் பெரேரா (From the collection, Elysium & Other Poems)
--------------------------------

வன்மையான பிரார்த்தனை

சுருள்சுருளான இதமான ஊதுவர்த்திப்புகை
அமைதியான நினைவில் நீந்துகின்றது;.
கரங்கள் குவிந்தும் தலைகள் குனிந்தும்
பிரார்த்திக்கின்றன.

கண்ணியத்துடன் அல்லது மிகுந்த பயபக்தியுடன்
தாமரைப்பூக்களுடன் பாதச்சுவடுகள் மணலில்....
பாதச்சுவடுகள் *டகோடாவை சுற்றியென....
தோன்றுவதும் மறைவதுமாய்
தோன்றுவதும் மறைவதுமாய்

போரால் சிதைந்த நாட்டில்
அமைதி இன்னும் கொஞ்சமிருக்கிறது
பூக்களின் நறுமணம்
சாம்பிராணிக்குச்சிகள்
சாந்தக்குணங்களுடைய ஒரு பிக்கு -
அமைதி.

இங்கே கோபப்படுவது ஒருபோதும் புத்திசாலித்தனமல்ல
கோபத்துடன் பிரார்த்திப்பது நல்லதுமல்ல
இருந்தும் உறைந்துபோன நினைவுகள்
சடுதியான மழையாய் பொழிந்து அணையை உடைக்கின்றது

இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகள் - யாருக்கோ பிறந்த பிசாசுகள்
விசர்த்தனமான அளவுகோல்களுடன்
22 வருடங்களாய் நாட்டை முட்டாளாக்கினர் -
83லிலிருந்து, மலட்டுப்போரை நியாயப்படுத்துவன்மூலம்
நாங்கள் மூடர்களாக்கப்பட்டோம்.

எனக்கு ஞாபத்திலுண்டு
'களு ஜூலைய' -
கறுப்பு ஜூலை

கருமை கருமை கருமை.
நாங்கள் தடித்ததோல் இனவாதிகள்
கருமை, கருமை
நாங்கள் கொலைகாரர்கள்.
கறுப்பு
நான் கோயிலொன்றில் உள்ள மறு.

நான் கோபமடையமாட்டேன், நான் கோபமாயில்லை.
ஞாபகமுண்டு; இது ஒரு கோயில்
பாராளுமனறம் அல்ல.
எனினும்
இங்கேயிருப்பது இனியும் உவப்பானதல்ல,
அற்புதமான காட்சிகள் சுவையற்றதாயின; எனது
கோபம் அந்த அழகை நொடிகளில் கரைத்துச்சென்றது.

-ருக்சன் பெரேரா (From the collection,
Elysium & Other Poems)
*Dagoda
-----------------

5 comments:

SnackDragon said...

மொழிப்பெயர்ப்பு நன்றாகவுள்ளது.

10/12/2007 11:14:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி கார்த்திக்; நீண்ட நாட்களுக்குப் பிறகு :-).

10/12/2007 06:05:00 PM
Anonymous said...

கவிதைகள் மிக நன்றாக இருக்கின்றன டிசே, மொழிபெயர்ப்புக்கு நன்றி.
சக இனத்தவர்களைப் பற்றி இன்னும் நிறைய அறிந்துகொள்ளவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள். கவிதைத் தெரிவு அருமை.

10/13/2007 01:48:00 AM
Anonymous said...

நன்றி அநாமதேய நண்பர்.

10/14/2007 06:51:00 PM
தமிழன்-கறுப்பி... said...

nice... DJ i'll send commment in Tamil

11/01/2007 11:23:00 PM