கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பயணக்குறிப்புகள் - 02 (India)

Friday, February 27, 2015


நேற்று மாலை புத்தகக்கண்காட்சி சிற்றரங்கில் சுகுமாரனின் உரையைத் தவறவிட்டாலும், அவருடனான வாசகர் கேள்வி-பதில் வேறெங்கும் போகவிடாது அங்கேயே அமர்த்தி வைத்திருந்தது. வாசல்வரை தமிழகத்து வாசகரிடையே வந்த அரசியல் கவிதைகளை ஈழத்துக் கவிஞர்களே தெருவிற்கு அழைத்து வந்தார்களென அதற்குரிய இடத்தையும் வழங்கியிருந்தார். பின்னர் ஷர்மிளாவின் ஈழத்துப் படைப்புக்கள் தமிழகத்து இலக்கியப் பரப்பில் நிகழ்த்திய செல்வாக்கு என்பது பற்றிய கேள்விக்கும் சுகுமாரன் விரிவாகப் பதிலளித்தார். தமிழ் படைப்புலகு என்பது எப்போதும் தமிழகத்தைத் தாண்டாதது போல பலர் உரையாடவும்/பேசுகின்ற காலத்தில் சுகுமாரன் போன்றவர்கள் எப்போதும் நம்பிக்கை தரக்கூடியவர்கள். மேலும் மனுஷ்யபுத்திரன் 2009 அழிவைப் பற்றிய சேரனின் 'எங்கள் காலத்தில்தான் ஊழி நடந்தது' கவிதையை நினைவுபடுத்தியிருந்தார். அந்தக் கவிதை எந்தக் காலத்திற்கும் பொருந்தக்கூடியதென்றாலும் சேரன் அந்தக் கவிதையை 2009 முன்பான காலத்திலேயே எழுதியிருந்தார் என்பது ஒரு திருத்தத்திற்காய்க் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

இடையில் 'விருபா' ஒரு ஸ்டாலில் நிற்கின்றேன் ஒருவர் உங்களைச் சந்திக்க விரும்புகின்றார் என அழைப்பும்\மெசேஜூம் செய்திருந்தார். போனபோது 'தமிழினி' வசந்தகுமாரை சந்திக்க முடிந்தது. என்னை எப்படித் தெரியும் எனக் கேட்டபோது ஜெயமோகன் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கின்றார் என்றார். அது உண்மை என்றால், இனி 'காலம்' செல்வம் 'டேய் உன்னைப் பற்றி ஜெயமோகன் இப்படிச் சொன்னார்' என்று சொல்வதையும் நம்பவேண்டி வரும் போலிருக்கிறது.

மாலை, பெசண்ட் நகர் 'ஸ்பேசில்' ஓவியர் ராமனுஜம் பற்றிய சி.மோகனின் சிறப்புப் பேச்சைக் கேட்பதற்காய் ஹஸீனும் நானும் போயிருந்தோம். சி.மோகனின் உரை மிகச் சிறப்பானது என்றால் (ராமனுஜத்தை முக்கிய பாத்திரமாய்க் கொண்டு சி.மோகன் நாவலும் எழுதியிருக்கின்றார்) அங்கே பல்வேறு ஓவியர்களை தட்சிணாமூர்த்தி, மருது, அப்ராஜிதன், டக்ளஸ், நடேஷ் போன்றவர்களை ஒரேசேர சந்திக்கவும் உரையாடவும் முடிந்தது சிறப்பு. எனக்காய் புத்தகக் கண்காட்சி வந்து சந்தித்த வாசுவின் அன்பு இரண்டாம் முறை சந்தித்தபோது இன்னும் அதிகரித்தது போன்ற உணர்வு. என்ன நிகழ்ச்சி தொடங்க முன்னர் 4.00 மணிக்கு வந்து அவருடன் 'தேநீர் விருந்தில் கலந்துகொள்ளவில்லை என்று மட்டும் சற்று கவலைப்பட்டேன்.

அப்படியே ஜெயபாலனின் வீட்டுக்குப் போய் குரக்கன்மா புட்டும், பெசண்ட் நகர் பீச்சில் வாங்கிய மீனில் செய்யப்பட்ட குழம்பும் பொரியலும் சாப்பிட்டு நுளம்புகளோடு போராடி படுத்து விடிகாலை சூரியனைப் பார்க்க பீச்சிற்குப் போய், அங்கே சூரியனோடு இளங்குமரிகளைப் பார்த்து இரசித்து முருகன் இட்லி கடையில் வெங்காய்த் தோசையும் தேநீரும் குடித்துவிட்டு வந்திருக்கின்றோம். ஜெயபாலன் அடிக்கடி ஒரு வசனத்தை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கின்றார். நானும் இனிவரும் காலங்களில் அதைப் பயன்படுத்தி என்னையொரு ஃபீனிக்ஸ் பறவையாக்கலாம் என நினைக்கின்றேன். பாரதியாரின் பாதிப்பிலிருந்து வெளியே வர சங்கக் கவிதைகளே நிறைய உதவியென உலாத்தலில்ஜெயபாலன் சொல்லிக்கொண்டுபோக இலக்கிய உரையாடலாய் அது கிளைத்தெழும்பியது.

முன்னோரு காலத்தில் அவர் என்னை வேறு யாரோ ஒருவராக நினைத்து முரண்பட்டு பதிவுகளில் எழுதியதை அவருக்கு நான் இன்னும் நினைவுபடுத்தவில்லை. அவரது கணனியிலிருந்தே இதை எழுதுகிறேன். அதற்கும் நன்றி.தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சோடா விளம்பரத்தில் அதை குடித்துவிட்டு எதையோ எழுதி அனுப்பினால் அஸினைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்கின்றது என்கின்றனர். அதற்கும் மும்முரமாக முயற்சிக்கவேண்டும்.
சில விடயங்களைச் செய்யவேண்டுமெனத் தொடங்கிய பயணத்தில் நினைத்தவற்றை இன்னும் செய்து முடிக்கவில்லை. ஆனால் எதிர்பாராத தருணங்கள் பலதை இந்தப்பயணம் எல்லா முரண்பாடுகளுடனும் தந்துகொண்டிருக்கின்றது. இதுவும் அழகானதுதானல்லவா?

(ஜனவரி 17)

0 comments: