கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பயணக்குறிப்புகள்- 10 (India)

Thursday, November 19, 2015

-முரண்களுக்குள் விரியும் அழகிய தருணங்கள்

நானும் ஹசீனும் குடநாட்டு உணவகமொன்றில் பொளிச்சமீனையும் புட்டையும் உருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, நண்பரொருவர் தொலைபேசியில் அழைத்தார், ஷோபா சக்தியோடு நிற்கின்றோம் வருகின்றீர்களாவென்று. ஷோபாவும், ஹசீனோடும் என்னோடும் பேசினார். அடுத்தநாள் காலையே இராமேஸ்வரம் பக்கமாய் அவர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் படப்படிப்பிற்குப் போகவேண்டியிருக்கிறது என்றார். சிலநாட்களில் ஹசீன் இலங்கையிற்கும், ஓரிரு வாரங்களில் நான் கனடாவிற்கும் திரும்பவேண்டியிருந்ததால் இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாதென்று புறப்பட்டோம். நாங்கள் நின்றது இன்னொரு முனையில். ஒருமாதிரியாக திசைகளைத் துழாவித் துழாவி எக்மோர் பக்கமாய்ப் போய்ச் சேர்ந்தோம்.

நீலகண்டன், அமுதா, சித்தார்த் தவிர்த்து அங்கே ஏஞ்சல் கிளாடி, லிவிங் ஸ்மைல் வித்யா, கவின்மலர், சுகுணா திவாகர் என நிறைய நண்பர்களை முதன்முதலாகச் சந்தித்தேன். வழமைபோல ஷோபாவோடு அரசியலே பேசினேன். 'ஆயுத எழுத்து' வாசித்துவிட்டீர்களா?' என்றேன். அதுகுறித்து சற்று விரிவாகப் பேசினோம். நாமிருந்த 'நிலை' அப்படியென்பதால் அவற்றை இங்கே இப்போது பகிர்வதும் அவ்வளவு நல்லதுமல்ல. அ.முத்துலிங்கம் ஒருகதையில் கிரனைட்டின் கிளிப்பைக் கழற்றிவிட்டு எறிந்துவிளையாடியதை எழுதியதில் ஒரு 'லொஜிக்' இருக்கிறது என்றார் ஷோபா. தனது முகநூலில் இதுகுறித்து ஒருவிவாதத்தில் -ராகவனைத் தவிர- வேறு யாரும் விளக்கம் சொல்லலாம் என தான் எழுதியதையும் ஷோபா நினைவுபடுத்தினார்.

நல்லவேளையாக நான் அப்பொழுது 'பதினொராவது பேயை' வாசித்திருக்கவில்லை. தனக்கும் அ.முத்துலிங்கத்திற்கும் 'கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்' நட்பு இருப்பதாகச் சொல்லும் ஷோபா இந்தக் கதையிற்கும் ஏதாவது விளக்கம் வைத்திருக்கலாம், யார் கண்டார்? அ.முத்துலிங்கத்தை ஒருகாலத்தில் ஏன் எங்களின் பிரச்சினைகள் பற்றி எழுதுவதில்லை என்று அவர்மீது நிறைய விமர்சனக்கல்லெறிந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால், அவரின் 'பதினொராவது பேயை' வாசித்தபின், எறிந்த கற்களையெல்லாம் பொறுக்கியெடுத்து எனக்கு நானே எறிந்துகொள்கிறேன், தயவு செய்து எங்களின் பிரச்சினைகள் பற்றி கொஞ்சக்காலம் எழுதாமல் இருங்களேனென இறைஞ்சலாம் போலிருக்கிறது.

ஷோபா, பழைய இயக்கக் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். சில இயக்க ஆட்களின் பெயரைச் சொல்லிக் கேட்டபோது எனக்குத் தெரியாமல் இருக்கிறதெனச் சொன்னேன். 'இவன் இப்படித்தான் அந்தக்காலத்தில் நாங்கள் சின்ன ஆட்களாய் இருந்தோம் எனச் சொல்லித் தப்பிவிடுவான்' எனச் சொன்னார். நான் ஒருபோதும் எந்த விவாதத்திலும் இப்படிச் சொன்னதேயில்லை. நீங்கள் யாரோ சொன்னதை நான் கூறியதாய் நினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள் என மறுத்தேன். இதையே ஒரு 'சாட்டாக' ச் சொன்னால், ஷோபாவிடமும் இந்திய இராணுவத்திற்குப் பிறகு ஈழத்தில் இல்லாத உங்களைவிட எங்களுக்கு நிறையத் தெரியுமென அவர் கூறுவதையே நாங்கள் மறுக்கமுடியும். நான் இதையும் செய்யப்போவதில்லை.

இடையில் ஷோபா தொடர்ந்து நிறையப் பேசிக்கொண்டிருக்கும்போது, அருகிலிருந்த ஒரு நண்பர் 'என்ன ஆகாசவாணி முடிந்து ரூபவாஹினி தொடங்கிவிட்டதா?' என நகைச்சுவையாகத்தான் சொன்னார் என்றாலும் நான் அவரை இடைமறித்து, 'நாம் தமிழர் போன்ற எங்கள் அரசியலைக் குத்தகையிற்கு எடுத்த தமிழகத்து ஆட்கள் எதைக் கதைத்தாலும் கேட்கின்றீர்கள், ஏன் எங்களின் சொந்தக்குரலிலேயே நமது கதைகளைக் கேட்கக் கஷ்டமாயிருக்கிறது? எனக் கேட்டதும் நினைவிலிருக்கிறது..

அரசியல் கதைத்தால் இறுதியில் போகுமிடம் வெறுமையானதே என்று தோன்றியதாலோ என்னவோ நான் ஏஞ்சல் கிளாடி பக்கம்போய் அவரின் நாடக/திரைப்பட அனுபவங்களைக் கேட்கத் தொடங்கினேன். என்னை யாரென்று தெரியாமலே, நான் அவர் கொரியாவிற்குப் போனது, வாடகையிற்கு வீடு கிடைத்துவிட்டதா என ஏற்கனவே அறிமுகமானவர் போல நிறையக் கேட்க அவருக்குச் சற்று வியப்பாயிருந்தது.

கிளாடி, மிஷ்கினின் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் நடித்த தன் அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினார். தான் சந்தித்தவர்களில் அற்புதமான இயக்குநர் மிஷ்கின் எனவும், தன்னைத் தொடர்ந்து நிறையப் புத்தகங்களை வாசிக்க உற்சாகப்படுத்தியவர் அவர் எனவும் சொன்னார். எனினும் தான் அப்படியொரு புத்தகப்பிரியை இல்லை என்று சற்று கவலைப்பட்டார். புத்தகங்களை பெருமளவு வாசிக்காதிருப்பது ஒரு பிரச்சினையேயல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிடயங்களில் விருப்பம் இருக்கும். நீங்களொரு performer,அது உங்களுக்கு மகிழ்ச்சி தருமெனில் அந்தத் திசையிலே நீங்கள் பயணிக்கலாம்தான் அல்லவா எனச் சொன்னேன்.

தொடர்ந்து மிஷ்கினின் படங்கள் பற்றி உரையாடியபோது, நீலகண்டன் மிஷ்கினின் படங்கள் என்கவுண்டருக்கு ஆதரவானது போன்ற நிலைப்பாட்டை உடையவை. 'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' என்பவற்றைப் பார்த்த மக்களிற்கு அது இததகைய நிலைப்பாட்டுக்கு இன்னும் ஊக்கமளித்திருக்கும் எனச் சொன்னார். அது, ஒரளவு சாத்தியம் உள்ளதென்றாலும் என்கவுண்டருக்கு ஆதரவான அவற்றைவிட மோசமான திரைப்படங்கள் தமிழ்ச்சூழலில் இருக்கினறதெனச் சொன்னேன். ஏதோ ஒருவகையில் கருணையை நம்மிடம் கோரும் மிஷ்கினின் கதாபாத்திரங்களினூடாக மிஷ்கின் என்கவுண்டருக்கு ஆதரவானவர் என்ற விம்பத்தை உருவாக்கிக்கொள்ள இப்போதும் என் மனது இடங்கொடுக்கவில்லை.

ஆனால், நேற்று 'என்னை அறிந்தால்' பார்த்தபோது,'பெரும் நடிகர்கள்' நடிக்கும் இதுபோன்ற படங்களே மிகவும் ஆபத்தானவை. இவை குறித்த எல்லாம் நாம் உடனே எதிர்ப்பைப் பதிவு செய்யவேண்டும் என்றே தோன்றியது. கெளதம் வாசுதேவன் எடுத்த படங்களில் தெரியும் பொலிஸ்/இராணுவம் மீதான பெருமிதங்கள் எல்லாம் சகித்துக்கொள்ளத்தக்கவையல்ல. கெளதம் வாசுதேவன் இன்னொரு மணி ரத்தினம் போன்றவர். இருவரும் நம்மை நெகிழ வைக்கக்கூடிய காதல் கதைகளை மிகுந்த அழகியலாக எடுக்கக்கூடியவர்கள். ஆனால் அவர்கள் இப்படி அரசு/இராணுவம்/தேசியப் பெருமிதங்களில் திளைத்து எடுக்கும் படங்கள் அருவருக்கச் செய்பவை மட்டுமல்ல, கோபத்தை வரச்செய்பவை.

அதிலும் நான் மிகவும் மதிக்கும் ஒரு நண்பர், 'என்னை அறிந்தால்' பார்த்துவிட்டு 'இது காக்க காக்கவிற்கும் வேட்டையாடு விளையாடுவிற்கும் நடுவில், அடித்துத் தூள் பரப்புகின்றார் கெளதம்' என்று எழுதியபோது இந்தப்படத்தைப் பார்க்காமலே யோசிததேன்; ஏற்கனவே வந்த இந்த இரண்டு படங்களுமே ஆபத்தானவை. இந்த இரண்டு படங்களுக்கு இடையில் வருகின்ற 'என்னை அறிந்தால்' இன்னும் மிக ஆபத்தாக அல்லவா இருக்கும் என்று. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு என்கவுண்டரை மிகமோசமாய் ஆதரித்த படம் என்பதோடு வேட்டையாடு விளையாடு, விளிம்புநிலையினரான தற்பாலினரையும் வில்லன்களாய் சித்தரித்தமையை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.

அழகியலை ஒரு காரணமாய்க் கொண்டு, நாம் அவை மூடிமறைக்கும் அரசியல் தவறுகளை மன்னிக்கவோ மறந்துவிடவோ முடியாது. அது நமக்கு நெருக்கமாய் இருக்கும் அ.முத்துலிங்கமாய் இருந்தாலென்ன, கெளதம் வாசுதேவனாய் இருந்தாலென்ன, நமது எதிர்ப்புக்களைப் பதிவு செய்தாகத்தான் வேண்டும்.

ஹொட்டலில் மதுபானவிடுதியை மூடும் நேரம் நெருங்கிவிட்டதென்றனர். இன்னும் சாப்பிடவில்லை என புகாரி ஹொட்டலுக்கு சாப்பிடச் சென்றோம். அங்கேயும் பொலிஸ் எப்போது உணவகத்தை மூடுவார்கள் என வெளியில் குழுமி நின்றார்கள். நான் பாஸ்போர்ட்டை எடுத்துவரவில்லை. கூட வந்த நண்பருக்கோ இந்தியாவில் நிற்பதற்கான ஒழுங்கான பத்திரங்களே இல்லை. தன் வாழ்நாளில் இப்படி நேரம் பிந்திச் செல்வது இதுதான் முதல் தடவை என்றார் பதற்றத்துடன். பொலிஸ் சைரன்களோடு நிற்கும் தெருக்களை விலத்தி விலத்தி சந்துகளுக்குள்ளால் போய்க்கொண்டிருந்தோம். அப்படி வழிமறித்தால் சூட்டிங் முடிந்து போகின்றோம். பாதை தவறிவிட்டதெனச் சொல்லச் சொன்னார். எனக்கு முன்பு இந்திய இராணுவ நேரம் இப்படித்தான் இயக்கக்காரர் மோட்டார்சைக்கிள்களில் குச்சொழுங்கைகளில் புகுந்து பாய்வது நினைவுக்கு வந்தது. ஆகக்குறைந்து அப்போது போலல்லாது , இப்போது சிறைக்குள் போட்டாலும், மண்டையில் போட்டுத் தள்ளமாட்டார்கள் என்கின்ற சிறு நிம்மதி இருந்தது.

ஷோபா என்னை தன் பிற நண்பர்களிடம் அறிமுகப்படுத்தியபோது, நானும் இவனும் (ஃபேஸ்புக்கில்) முரண்பட்டுக் கொண்டேயிருப்போம். ஆனால் இவனில் மதிப்பிருக்கிறது என்றே அறிமுகப்படுத்தினார். முரணியக்கமே நம்மை வாழ்வில் ஏதோ ஒருவகையில் முன்னகர்த்துகின்றது மட்டுமின்றி முரண் உரையாடல்களின் பின் ஒரு மெல்லிய நேசம் இருப்பதை நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுகொண்டிருக்கின்றேன்.

நான் ஏற்கனவே பொளிச்சமீனை புட்டோடு சாப்பிட்டிருந்தாலும் இன்னொருமுறை புகாரியிலும் சாப்பிட்டேன். நாங்கள் சாப்பிடச்சொல்லி வற்புறுத்தியபோதும் ஷோபா அப்போதும் சாப்பிடாமலே இருந்தார். பார்சல் கட்டிக்கொண்ட ஷோபா நிற்குமிடத்திற்குப் போயாவது சாப்பிட்டிருப்பாரா என்று சற்று கவலை வந்தபோது எந்த முரண் உரையாடலும் எனக்கு நினைவுக்கு வரவில்லை.

0 comments: