கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நயோமியின் 'What lies between us'

Sunday, September 24, 2017


வாழ்க்கையின் திசைகளை எவை தீர்மானிக்கின்றன என்பதை மனிதர்கள் எவரும் அறியார். வீசும் காற்றிற்கேற்ப வளையும் நாணல்களைப் போல மனிதர்களுந்தான்  விரும்பியோ விரும்பாமலோ தம்மை  மாற்றவேண்டியிருக்கின்றது என சொல்கின்றது நயோமியின் 'எங்களுக்கிடையில் என்ன இருக்கின்றது' என்கின்ற இந்நாவல். கங்கா என்கின்ற சிறுமி, வளரிளம் பருவப்பெண்ணாகி, ஒரு குழந்தையிற்குத் தாயாகும்வரையான தன் கதையைச் சொல்லத் தொடங்குகின்றார். இலங்கையில் கண்டியில் வசதி வாய்ந்த குடும்பத்தில் கங்கா பிறந்தாலும் பெற்றோருக்கிடையில் இருக்கும் சிக்கலான உறவால் கங்காவின் குழந்தைப் பருவம் சுமூகமாக இருப்பதுமில்லை. பெற்றோரிடம் கிடைக்காத அமைதியை கங்கா தன் வீட்டில் சமையல் செய்து வரும் சீதாவிடமும், தோட்டவேலை செய்யும் சாம்சனிடமும் தேடுகின்றார்.

மழைக்கால நாளொன்றில் ஆற்றில் தற்செயலாய் விழுந்து கங்காவின் தகப்பன் இறந்துபோகின்றார். அந்த மரணத்தோடு தோட்டவேலை செய்யும் சாம்சனும் காணாமற்போகின்றார்.  தன் கணவன் இல்லாது இலங்கையில் என்ன செய்வது எனக் கலங்கும் கங்காவின் தாயாரை, அமெரிக்காவிலில் குடும்பத்தோடு வாழும் அவரின் சகோதரி அமெரிக்காவிற்கு அழைக்கின்றார். கங்காவின் பதின்மம் அமெரிக்காவில் தொடங்குகின்றது என்கின்றபோதும் அவருக்கும் தாயாருக்குமான  'கதைக்கப்படாத விடயங்களின் நிமித்தம்' ஒரு இடைவெளி வருகின்றது.

கங்கா பாடசாலைப் படிப்பை முடித்து பல்கலைக்கழகத்தில் தாதிகளுக்கான படிப்பை முடித்து வேலை செய்யத் தொடங்குகின்றார்.  வயதேற ஏற திருமணம் என்பதைப் பற்றி யோசிக்காது கங்கா இருப்பது அவரின் தாயாருக்கு கவலையாக இருக்கின்றது. கங்காவிற்கு திருமணத்தில் மட்டுமில்லை, ஆண்களுடான உறவுகளுடனும் அவருக்கு நிறைந்த சிக்கல்கள் இருக்கின்றன. ஏன் தன்னை விரும்பும் ஒவ்வொரு ஆணையும் ஒரு எல்லையிற்குப் பிறகு அனுமதிப்பதில்லை என்பதற்கும் கங்காவிற்கும் தெளிவான காரணங்கள் தெரிவதேயில்லை. இது குறித்து நீட்சியாக யோசிக்கும்போதே, கங்கா தன் சிறுமிப்பராயத்தில் பாலியல் வன்முறைக்குட்பட்டதை நினைவு கூருகின்றார். அந்த நினைவுகள் ஒவ்வொருமுறையும் அவரைத் துன்புறுத்தும்போதும் அதன் ஆழத்திற்குள் போய் சிடுக்கை அவிழ்க்கமுடியாது இடையில் வெளியே வந்தும்விடுகின்றார்.

நீண்ட தனிமையின் பின் கங்கா, அவருக்குப் பிடித்த காதலை ஒரு ஓவியனிடம் கண்டுகொள்கின்றார். அவரொரு வெள்ளையினத்தவராக இருப்பதால் கங்காவின் தாயால் இந்த உறவை ஏற்றுக்கொள்வதில் தயக்கமாய் இருக்கின்றது. சில வருடங்கள் சேர்ந்து வாழும் கங்காவும் அவரது காதலனும், பின்னர் திருமணஞ்செய்தும் கொள்கின்றார்கள். திருமணவாழ்வில் கங்காவிற்கு தன் குழந்தைமையில் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுங்கனவுகள் வருகின்றபோதும், கணவன் உறுக்கிக்கேட்கும்போதும் அவரால் நடந்ததைப் பகிர்ந்துகொள்ளமுடியாது இருக்கின்றது.

திருமண உறவில் அவர்களுக்குக் குழந்தையும் பிறக்கின்றது. குழந்தையின் மீது அளப்பரிய காதல் இருந்தாலும் சிறுவயது நினைவுகளால் கங்காவினால் அவரது குழந்தையிற்கு ஒரு நல்லதொரு தாயாக இருக்கமுடியாதிருக்கின்றது. பல்வேறு சம்பவங்களின் நீட்சியில் கங்காவின் கணவர் குழந்தையையும் எடுத்துக்கொண்டு கங்காவைப் பிரிந்து குழந்தையுடன் தனித்து வாழத்தொடங்குகின்றார். சிறுவயது பாலியல் துஷ்பிரயோகத்தோடு, இப்போதும் குழந்தையும் பிரிக்கப்பட்ட துயரில், கங்கா இன்னும் ஆழமான உளவியல் சிக்கலுக்குள் போகின்றார்.

இந்தப் பிரச்சினைகளுக்கிடையில் கங்கா ஒருமுறை தாயுடன் பேசும்போது அவர் குழந்தையாக இருக்கும்போது பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர், அவர் மிகவும் நேசித்துக்கொண்டிருந்த  ஒருவர் என்பதை அறிந்து இன்னும் அதிர்ச்சியாகின்றார். அன்றையகாலத்தில் தனக்கொரு வழியும் இருக்கவில்லை எனத் தாயார் இதுவரை மறைத்து வைத்ததன் துயரத்தைச் சொல்லி அழுகின்றார்.

தன்னை பாலியல் வன்முறை செய்தவர் யாரென்ற அதிர்ச்சியில், இதுவே தாயில்லாது தந்தையோடு மட்டும் வாழும் தன் மகளுக்கும் நிகழப்போகின்றது என்ற அச்சத்தோடு கங்கா ஒரு விபரீதமான முடிவை எடுக்கின்றார். அது தன்னோடு, தன் குழந்தையும் தற்கொலைக்கு எடுத்துச் செல்வது. பிறகு என்ன நடந்தது, கங்காவி ஏன் அவ்வாறான பாரதூரமான முடிவை எடுக்க முன்வந்தார் என்பதை நாவலை வாசிக்க விரும்புவர்க்காய் இப்போதையிற்கு விட்டுவிடலாம்.

குழந்தைப் பருவம் என்பது எல்லோருக்கும் மிக முக்கியமானது. போர்க்காலத்தில் வாழ்கின்ற ஒரு குழந்தையினதோ அல்லது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் குழந்தையினதோ, பிறகான வளர்ந்த காலங்கள் என்பது ஒருபோதும் இயல்பாய் இருப்பதில்லை. அதிலும் முக்கியமான சிறுவயதில் நடந்த கொடும் விடயங்களைப் பகிரமுடியாது தவிர்ப்பவர்களின் வாழ்க்கை என்பது இன்னும் சிக்கலாய் கங்காவினதைப் போலவும் ஆகிவிடுகின்றது.  அது இலங்கையில் வாழ்ந்தாலென்ன, அமெரிக்காவில் வாழ்ந்தாலென்ன, நடக்கும் பின் விளைவுகள் என்பது நாம் நினைத்துப் பார்க்கமுடியாதவையாய் இருக்கின்றன.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தமது உளக்கிடக்கைகளைப் பேசுகின்ற வெளிகள் உருவாக்கப்படவேண்டும். அதுமட்டுமின்றி அவர்கள் தாம் பாதித்த கதைகளைக் கூறும்போது அவர்களை எதன்பொருட்டும் விலத்தவோ, தவறாக நினைக்கமாட்டோம் என்கின்ற நம்பிக்கைகளையும் கேட்பவர்கள் வழங்கவேண்டும். அவ்வாறு இல்லாதுவிடின் இவ்வாறான கங்காக்கள் நம்முன்னே உருக்குலைந்துபோவதற்கு நாமும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஒரு காரணமாய் ஆகிவிடவும் கூடும்.

(நன்றி: 'அம்ருதா', புரட்டாதி, 2017)

0 comments: