கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஸ்பெயின் - 03

Monday, October 01, 2018

Catalonia: தனிநாடு சாத்தியமா?

ஸ்பெயினுள்ள கட்டலோனியா ஒரு நீண்டகால வரலாற்றை உடைய நிலப்பரப்பாகும். ஃபிராங்கோவின் காலத்தில் தனது சுயநிர்ணய உரிமைக்காகக் கடுமையாகப் போராடித் தோற்றுமிருக்கின்றது. எனினும் ஃபிராங்கோவின் சர்வாதிகார ஆட்சியின் பின், தனக்கான பல உரிமைகளை மீளப்பெற்றதோடல்லாது, 2006ல் கட்டலோனியா ஒரு 'தேசமாக'வாவும் (nation) பிரகடனப்படுத்த ஸ்பெனிய அரசால் அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. எனினும் 2010ல் 'தேசமாக' இருக்கும் உரிமை உட்பட பல பறிக்கப்பட்டுமிருந்தது.

இதன் நீட்சியோடும், ஸ்பெயினில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினாலும், கட்டலோனியாவின் தன்னொரு தேசமாகப் பிரகடனப்படுத்தும் குரல் அண்மையில் வெளிக்கிளம்பத் தொடங்கியது. கட்டலோனியா பிரதேசத்தினூட நிறையப் பொருளாதாரத்தை (கிட்டத்தட்ட மொத்த ஸ்பெயினில் 20%) பெறுகின்ற மத்திய அரசு, கட்டலோனியா மக்களுக்கு அதை உரியமுறையில் திரும்பித்தராது, அதிக வரிகளையும் மக்களுக்கு விதித்தமையும், கட்டலோனியா தனிநாட்டுக்கோசத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

இதன் நீட்சியில் ‘கட்டலோனியா எமக்கே’ என்ற குரல் வலுத்து, தம்மையொரு தேசமாக்கவேண்டுமென்று ஒன்றிணைந்த கட்சிகள்  தேர்தலில் வெற்றி பெற்றுமிருந்தன. அதன் தொடர்ச்சியில், சென்ற ஒக்ரோபரில் தனிநாட்டுக்கு கட்டலோனியாவின் மக்கள் (90%) ஆதரவளித்திருந்தனர். எனினும் நாம் கவனிக்கவேண்டிய விடயம் என்ன என்றால் இப்படி பெரும்பான்மையாக (90%) தனிநாட்டுக்கு வாக்களித்திருந்தாலும், இங்கே வாக்களித்தவர்கள் மொத்த கட்டலோனியா பிரதேசத்தின் 40% வீதம் மட்டுமே ஆகும். ஆக தனிநாடு வேண்டுமா அல்லது வேண்டாமா என்று வாக்களிக்காதவர்கள் கிட்டத்தட்ட 60% ஆனோர் என்பதாகும்.

மேலும் 2017 ஒக்ரோபர் 27ல் கட்டலோனியா தனிநாடாகப் பிரகடனப்படுத்த, மத்தியில் இருந்த வலதுசாரி அரசு அதைக் கொடுமையாக அடக்குகின்றது. இந்தத் தேர்தல் செல்லுபடியாகது என்று சட்டத்தினூடாக கட்டலோனிய அரசைக் கலைக்கின்றது. இதற்காய்ப் போராடிய பல்வேறு கட்சித்தலைவர்களைக் கைதுசெய்ய, சிலர் தப்பி பிற ஐரோப்பிய நாடுகளுக்குள் அடைக்கலந்தேடுகின்றனர்.

நான் பார்சிலோனாவிற்குப் போனபோது ஒருபக்கத்தில் நாளாந்த வாழ்க்கையும், மறுபுறத்தில் கட்டலோனியா தனிநாட்டுக்கோரிக்கையினால் சிறைவைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்ய நடந்த கூட்டங்களையும் பார்த்திருந்தேன். கட்டலோனிய தனிநாட்டுக் கோரிக்கை வந்தபோது, அவர்கள் ஏற்கனவே கட்டலோனியாவிற்கு இருக்கும் கொடியின் ஒருபகுதியை நீல வர்ண முக்கோணத்தையும் சேர்த்திருந்தனர். இது கியூபாவின் கொடியின் வடிவத்திற்கு அண்மையாகவும், ஒருவகையில் தனிநாட்டுக்கோரிக்கை அதைக் குறிப்பதாகவும் சொன்னார்கள்.

அடுத்தடுத்த வீடுகளில் தனிநாட்டுக்கோரிக்கைக்கும், அதேவேளை ஸ்பெயினோடு சேர்ந்திருக்க ஆதரவளிக்கும் கொடிகளையும் பார்த்தேன். எதை ஆதரிக்கின்றார்களோ அதை வெளிப்படையாக உணர்த்தும் ஒரு சுதந்திர நிலைமை இன்னமும் கட்டலோனியாவில் இருப்பதை அவதானிக்கமுடிந்தது. இலங்கை போன்ற நாடுகளில் 'தேசம்', 'சுயநிர்ணய உரிமை' என்பவற்றை இப்படிப் பொதுப்படையாக முன்வைத்துவிட்டு வீடுகளில் நிம்மதியாக வாழமுடியுமா என்ற யோசனைதான் அப்போதுதான் வந்தது.

கட்டலோனியா தன்னை தனிநாடாகப் பிரகடனப்படுத்தினாலும் உலகில் எந்த நாடுமே அதை அங்கீகரிக்கும் சமிக்ஞைகள் எதுவும் அண்மையில்லை. படுகொலைகள் நடந்த கொஸாவைக்கூட இன்னும் பல நாடுகள் தனித்த நாடாக அங்கீகரிக்கத் தயாரில்லை என்பதும் அண்மைக்கால உதாரணம்.

எனினும் கட்டலோனியா நிச்சயம் இந்தப் போராட்டங்களினூடாக மிக வெளிப்படையாக தன்னையொரு 'தேசமாக' காட்டப்போகின்றது. அதை நோக்கி எப்படி அவர்கள் நகர்கின்றார்கள் என்பதே நாம் கற்றுக்கொள்ளவேண்டியது. அதுமட்டுமில்லாது ஸ்பெயினின் மற்றப் பிரதேசமான பாஸ்கில் தனிநாடு கோரிப்போராடிய இயக்கம் தனது தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடுகின்றோம் என்று கடந்தமாதத்தில் அறிவித்தபின்னும், சில நாட்களுக்கு முன் பல்லாயிரக்கணக்கான மக்கள்  200கிலோமீற்றர்களுக்கு நீளத்திற்குக் கரங்களை கோர்த்து,  ஒரு ஆர்ப்பாட்டத்தின் மூலம், தமது 'தனித்தேச' விருப்பைப் பொதுவெளியில் காட்டியிருக்கின்றார்கள் என்பதையும் நாம் அவதானிக்கவேண்டும்.


Hospital de Sant Pau 

நீண்டகாலத்திற்கு வைத்தியசாலையாக இயங்கிய இந்த இடம், அண்மையில் கலாசார மையமாகவும், நூதனசாலையாகவும் மாற்றப்பட்டிருக்கின்றது. யுனெஸ்கோவின் World Heritage Siteகளில் ஒன்றாகவும் இது இருக்கின்றது. அந்தோனியோ கெளடியின் பிரபல்யம் வாய்ந்த Sagarida Familla விற்கு அருகில் -10 நிமிட நடையில்- அமைந்திருக்கின்றது. இன்னமும் கட்டிமுடிக்கப்படாது வளர்ந்துகொண்டேயிருக்கும் பிரமாண்டமான Sagarida Familla தேவாலயத்தைவிட, Sant Pau என்னை இதன் எளிய/திருத்தமான வடிவமைப்பால் அதிகம் கவர்ந்திருந்தது.


Paella

Paella என்பது ஸ்பெயினில் பிரசித்தமான உணவாகும். உண்மையில் இது ஸ்பெயினில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் உணவாக, உள்ளூர் ஸ்பானியர்களாகக் கொள்ளப்பட்டாலும், நம்மைப் போன்ற பயணிகள் இதை ஸ்பெயினின் தேசிய உணவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

Paella என்று பெயரிருந்தாலும் பை(ய்)யா என்றே உச்சரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த உணவின் அநேகமான எல்லாவகையையும் சுவைத்திருந்தேன். தனியே மரக்கறிகளால் மட்டும் ஆனது, தனியே கடல் வகையால் மட்டும் ஆனது, கடல் உணவும், கோழியும் கலந்தது என பல்வேறு வகையில் பைய்யா தயாரிக்கப்படுகின்றது. சோற்றுடன் கலந்து பரிமாறப்படும் எதுவுமே எனக்குச் சொர்க்கம் போன்றதென்பதால் நானும் ருசித்து ருசித்து பைய்யாவைச் சாப்பிட்டேன்.

என்றேனும் ஒருகாலம் நானுமொரு சிறு உணவகம் அமைத்து, சாப்பிடுபவர்களும் என்னை நம்பி வந்தால், நானும் இப்படி இலங்கையில் வைத்து பைய்யாவைச் சுடச்சுடப் பரிமாறுவேன் எனக் கூடவே சாப்பிட்டுக்கொண்டிருந்த நண்பருக்குச் சொன்னேன்.

'ஓ.. நீ வழமையாக அவிக்கும் சோற்றுக்குள் மரக்கறிகளையும், கொஞ்சம் மைசூர்ப் பருப்பையும் போட்டு வேகவைத்து இதுதான் எங்கள் அம்பனை இராசதானியின் தேசிய உணவென்று பரிமாறுவாயே, அதுதானா உனது Jaffna style Paellaவா' என்று கேட்டார் நண்பர்.

நல்லதொரு எழுத்தாளன் ஆவதுதான் கனவாகிப்போய்விட்டதென்றால், சிறந்ததொரு சமையற்காரன் ஆகவும் இந்தச் சமூகம் விடாதென்று நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.
....................


நன்றி: 'அம்ருதா' - ஆவணி, 2018

0 comments: