கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தமிழ் கவியின் 'இனி ஒருபோதும்'

Thursday, October 11, 2018

மகாலத்தில் எழுதுகின்ற ஈழத்தவர்களில் இருவர், எதேனும் கருத்துக்கள்  கூறினால் தூரத்துக்குப் போய்விடுவேன்.  புனைவுக்கு வெளியில் இவர்கள் இப்படி அபத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தாலும் இந்த இருவரும் புனைவில் என்னைத் தொடர்ந்து தேடி வாசிக்கச் செய்பவர்கள்.  அதில் ஒருவர் தமிழ் கவி (நல்லவேளையாக நான் அவரோடு முகநூலில் நண்பராக இல்லை).

அவருடைய நாவல்களில் 'இருள் இனி விலகும்' தவிர்த்து, 'இனி வானம் வெளிச்சிரும்', 'ஊழிக்காலம்' என்பவற்றை ஏற்கனவே வாசித்திருக்கின்றேன்.  'இனி ஒருபோதும்' அவரது நான்காவது நாவல். 1990களின் நடுப்பகுதியில் தொடங்கி, 2009ல் பெரும்போர் நிகழ்ந்தகாலப்பகுதி வரை நீளும் கதை. 'ஊழிக்காலத்தை' ஏற்கனவே வாசித்தவர்க்கு அதில் வரும் பாத்திரங்கள் இதில் வருவதையும், அந்த நாவலின் சம்பவங்கள் பல இதற்குள்ளும் இடைவெட்டுவதையும் எளிதாகக் கண்டுபிடிக்கமுடியும்.

தமிழ் கவியின் எழுத்தின் பலமும், பலவீனமும் நேரடியாகச் சம்பவங்களால் அவரது நாவல்கள் அனைத்தையும் நகர்த்திக்கொண்டு செல்வது. எல்லாவற்றையும் உரையாடல்களால் கொண்டு செல்லுதல் சரியான உத்தியா என நான்கு நாவல்களை எழுதிவிட்ட அவர் இனியாவது தீவிரமாகப் பரிசோதிக்கவேண்டும்.

தனது இரு மகன்களையும் போராட்டத்துக்குப் பலிகொடுத்து, புலிகளின் கலை பண்பாட்டு நிகழ்வுகளில் இணைந்து பணியாற்றும் பார்வதி, வறுமையின் கொடுமையிலிருக்கும் தனது பேரப்பிள்ளையான மீனாவைத் தன்னோடு கொண்டுவந்து வளர்க்கத் தொடங்குகின்றார். நாவல், பார்வதி, மீனா, மற்றும் மீனா மையல் கொள்ளும் மது என்கின்ற மூன்றுபேரின் பார்வைகளில் கொண்டு செல்லப்படுகின்றது.

கிளிநொச்சியை இலங்கை இராணுவம் கைப்பற்ற அகதியாக இடம்பெயரும் பார்வதியும் அவரது குடும்பவும், பின்னார் புலிகளால் கிளிநொச்சி மீளவும் கைப்பற்றப்படும்போது அங்கே வாழச் செல்வதும், பின்னர் இறுதியுத்தத்தில் இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றும்போது, உயிரைத் தப்பவைக்க ஓடத்தொடங்கி 'வெள்ளைமுள்ளிவாய்க்காலில்' வந்து நிற்கும்வரை கதை நீள்கின்றது.

தனது பேத்தியின் 'வெறித்தனமான' காதலைப் புரிந்துகொள்வது, அதன் நிமித்தமும், கட்டாய ஆட்சேர்ப்பின் அழுத்தத்தாலும், மீனா தானாகவே புலிகளில் சென்று சேர்வதையும் ஏதோ ஒருவகையில் பார்வதி -மனதுக்கு உவப்பில்லையெனினும்- ஏற்றுக்கொள்கின்றார்.

இறுதிக்கட்டபோரின்போது தப்பி தங்களோடு வரக்கேட்கின்றபோது தனக்குக் கீழே இருக்கும் போராளிப் பிள்ளைகளை பாதுகாப்பாக அனுப்பியபின் வருகிறேன்  எனச் சொல்லும் மீனா இறுதியில் 'காணாமற்போகின்ற' ஒருவராக கதையில் ஆவதுகூட, இன்று ஏறக்குறைய போர் முடிந்து 10 ஆண்டுகளாகியபின்னும், வலிந்து காணாமற்போனவர்களைத் தேடி நமது அன்னையர்கள் நடத்தும் போராட்டங்களுக்கான பின்னணியை நம்மைப் புரிந்துகொள்ளக் கோருகின்றது.


போர், அவ்வப்போது வரும் சமாதானக் காலங்களில் கொஞ்சம் அமைதி, பின்னர் மீண்டும் போர், தனிப்பட்ட இழப்பு, வறுமை, வெளிச்சூழல் அழுத்தங்கள் என இன்னபிறவற்றுக்களுக்கும் இடையில் வாழ்வின் மீதான பிடிப்பைக் கைவிடாத  பார்வதி பாத்திரத்தில் நாம் எண்ணற்ற நம் அன்னைமார்களின் 'வைராக்கியத்தை'க் கண்டுகொள்ள முடியும். அதேவேளை பார்வதி பாத்திரம், பிற பாத்திரங்கள் தன்னைப் பற்றி -உதாரணத்திற்கு தொலைக்காட்சி/வானொலிகளில் பங்குபற்றி நிறைய இரசிகர்கள் இருக்கின்றார்கள் என- புகழ்வதற்கும் கொஞ்சம் கடிவாளம் போட்டிருக்கலாம்.

மீனாவின் காதலை சீதனத்தை மறைமுகமாய் காரணங்காட்டி உதாசீனம் செய்கின்ற மதுவின் குடும்பத்தினரை, மதுவின் தாய் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினராக இருப்பதைக் காட்டிக் குத்திக்காட்டுவதையும், தாங்கள் ஏதோ மாப்பாணர் சாதி எனவும், திருமண சம்பந்தங்களை வெள்ளாளர்களோடோ வைத்துக்கொள்பவர் என ஆற்றாமையில் எனினும் அவ்வாறு சொல்வதை நாவலில் கட்டாயம் தவிர்த்திருக்கவேண்டும். பார்வதி என்கின்ற பாத்திரம் தன்னை சீதன மறுப்பாளராகவும், சாதி மறுப்பாளராகவும் காட்டிக்கொள்கின்றபோது தன் பேத்திக்கு ஒரு துர்ச்செயலாக  இது நிகழும்போது வேறு விதத்தில் அதை எதிர்கொண்டிருக்கமுடியும். ஆனால் சுய சாதிப்பெருமை எங்கோ இருந்து இங்கே வரும்போது தன் சுயசாதி அடையாளத்தை அழிக்கமுடியாத ஒரு அவலமாகவே பார்வதியின் பாத்திரம் நமக்குள் வந்துசேர்கின்ற அபாயமும் நிகழ்ந்துவிடுகின்றது. அதிலும் மதுவின் தாயார் ஒரு சின்னமேளக்காரி என்றும், மதுவின் தகப்பனோடு அவர் ஓடிப்போய் மணம் செய்தவர் எனத் தூற்றவும் இங்கே செய்யப்படுகின்றார்.

அதேவேளை மீனாவின் தகப்பன் அவரது இரண்டாவது மனைவியாக கவிதாவை (மீனாவின் தாயார்) கடத்திக்கொண்டு மணம் செய்வதை பிடிக்காதுபோயினும் பார்வதி அதை பிறகான காலத்தில் ஏற்றுக்கொள்கின்றார். அந்த மனிதரை மதுவின் தாயாரை சாதியின் பெயரில் நிமித்தம் இழிவு செய்வதுபோல, எவ்வகையிலும் கீழிறக்குவதில்லை. ஆக பார்வதி என்கின்ற பாத்திரத்திற்குள்ளே தனது மகள்கள் ஒருவனுக்கு இரண்டாம் மனைவியாகப் பலவந்தமாகப் போய்விடுவதை விட,  தனது பேத்தியின் திருமணத்தை ஏதோ ஒருகாரணத்தால் மறுப்பதுதான் பெரிதாக விடயமாகப் போய்விடுகின்றது.

இவ்வாறான பலவீனங்கள் மற்றும் மிக மோசமாக திருத்தம் செய்யப்படாத வாக்கிய அமைப்புக்கள் ('செய்தனீங்கள்' என்ற போன்ற பேச்சு வழக்கு வருகின்ற இடங்களில் எல்லாம் என்பது 'செய்த நீங்கள்' என்று அனேக இடங்களில் பிரிக்கப்பட்டு வாசிப்பையே திகைக்கச் செய்கின்றன)  மற்றும் சிறுபிள்ளைத்தனமான முன்னட்டை வடிவமைப்பு போன்றவை இருந்தாலும் விலத்திவைக்காது வாசிக்கலாம். ஏனென்றால் போர் நடந்த நிலத்தில் நேரடிச் சாட்சியாக நின்ற தனிப்பட்ட  ஒருவரின் ஒரு காலத்தைய ஆவணமாக இது இருப்பதாலாகும்.

ஏன் இதை அழுத்திச் சொல்கின்றேன் என்றால் இவ்வாறு இன்னொரு புனைவை வாசிக்கத் தொடங்கியபோது,  அது அஷோக ஹந்தமகவின் 'இது எனது நிலவில்' ('This is my moon') சித்திரிக்கப்பட்ட தமிழ்ப்பெண்ணை விட மோசமாக இருந்ததால் தொடகத்திலேயே வாசிப்பதை நிறுத்திவைத்திருந்தேன்.

அந்தவகையில் தமிழ் கவி போன்றவர்கள் நிறைய எழுதவேண்டும்; ஆண்களாகிய நாம் பெண்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது என்பதைவிட, ஆகக்குறைந்தது போர்சூழலில் இருந்த பெண்களை எப்படி மோசமாகச் சித்தரித்து எழுதக்கூடாது என்பதற்காகவேனும்.

(Sep 16, 2018)

0 comments: