கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எல்ல (Ella)

Wednesday, April 22, 2020


ல்லவிற்கு (Ella) இரெயினில் போவதென்றால், பல மாதங்களுக்கு முன்னரே பதிவுசெய்ய வேண்டும். என்றாலும் கடைசிநேரத்தில் அடித்துப் பிடித்து கெஞ்சிப்பார்த்ததில் மூன்றாம் வகுப்பில் இடங்கிடைத்தது. கொழும்பிலிருந்து எல்லவிற்கான பயணம் 9 மணித்தியாலங்களுக்கு நீளக்கூடியது. இலங்கையில் இருக்கும் இரெயின் பாதைகளில் மிக அழகானது, இந்தப் பயணத்தடம் எனச் சொல்லப்படுகின்றது. விடிகாலை ஆறுமணிக்கு இரெயின் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டது. பொழுது மெல்லப் மெல்லப் புலர, இயற்கையும் மனிதர்களும் அவ்வளவு புத்துணர்ச்சியாய்த் தெரிய, நமது மனதும் பயணத்தின் இடையே அசையும் தாமரைகளையும், அல்லிகளையும் போல எளிதில் மலர்ந்துவிடும்.

மூன்றாம் வகுப்பு என்றாலும் ஏறிய‌ அநேகமானவர்கள் இளஞ்சோடிகளாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்து வயதான எனக்கு கடந்தகால‌ காதல் நினைவுகள், பச்சையத்தை இழந்து நின்ற முதிர்ந்த மரத்தின் மீது பொழிகின்ற மழை போல திரளத்தொடங்கின. கனடாவில்தான் நண்பர்கள் எனனைச் சோதிக்கின்றார்கள் என்றால், பயணத்திலும் இப்படி ஏன் கடவுள் என்னைப் பெருமூச்சுவிடச்செய்கின்றார் என்று நினைத்தபடி அவர்களின் காதல் சில்மிஷங்களைப் பார்த்தும் பார்க்காது மாதிரியும் யன்னலுக்கு வெளியே பார்வையை எறிந்தேன்.

ஒவ்வொரு இனிதான பயணங்களிலும் இடைஞ்சல் தருவதற்கெனவே சில மனிதர்கள் வந்துவிடுவதுண்டு. அழகான காலைப் பொழுதை குலைப்பதற்கென ஏறிய இரண்டு ஆண்கள், சிங்களப் பாடல்களை கூடிய சப்தத்தில் ஒலிக்கவிட்டிருந்தனர். கூட வந்த நண்பருக்கு சத்தம் ஒரு பெரும் சிக்கல்.
அவர்களிடம் போய் சத்தத்தைக் குறைக்கச் சொல்லலாம் என்றாலும், அவர்களுக்கு பொதுபல சேனாவின் ஞானசாரதேரர் குருவாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தால், முள்ளை முள்ளால் எடுக்கவேண்டுமென்று என் அலைபேசியில் இருந்த ராப் பாடல்களை உரக்க நான் போட்டுவிட்டேன்.

அவர்களிடம் மேலதிகமாய் ஸ்பீக்கர் இருந்தது. ஆகவே இன்னும் சத்தத்தை உயர்த்திவிட்டனர். நீயும் உனது முள்ளை முள்ளால் எடுக்கும் சிகிச்சையும் என்று தலையிடி கூடிய நண்பர் முறைத்துப் பார்த்தார். அய்யா, இது உங்கள் 'சிங்கள-பெளத்த' நாடுதான், நாங்கள் பிறகு வள்ளத்தில் வந்திறங்கிய வந்தேறிகள்தான் என்று அவர்களிடம் சரணடைந்து, ராப்பை நிறுத்திவிட்டேன். அப்படி வழிக்கு வாவென்று அவர்களும் சத்தத்தைப் பிறகு குறைக்க, நமக்குள் நல்லிணக்கம் நிகழ்ந்துவிட்டது.

பேராதனையை இரெயின் அண்மிக்க அண்மிக்க வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை கூடத்தொடங்கியது. அதுவரை எதிரெதிர் இருக்கையில் வேறு எவருமின்றி துட்டகைமுனு எல்லாளனை வென்றபின் நிம்மதியாக காலை நீட்டி உறங்கியதுபோல இருந்த எமக்கு இது பெரும் தொல்லையாகிவிட்டது. எதிரே இருந்தவர் இங்கிலாந்து என்றால், பக்கத்தில் அமர்ந்தவர் ஆஜானுபாவான ஜேர்மன்காரர். இனி இப்படி ஒடுங்கியபடி மூன்று இருக்கை ஆசனத்தில் இருத்தல் சாத்தியமில்லையென இரெயினின் வாசல்பக்கமாய்ப் போய் நான் குந்திவிட்டேன். அப்போதுதான் இந்த 'அந்நியர்களுக்கு' பாடங்கற்பிக்க ஒரு ஆயுதம் என்னிடம் இருப்பது நினைவுக்கு வந்தது.

து இந்தப் பயணத்துக்கு முதல் நாளிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு உறவினர் வீட்டுக்குச் சென்றபோது, அபகரித்து வந்த பிரியாணிச் சட்டி. வாசல்பக்கமாய் ஒரு துண்டைப் போட்டுவிட்டு வயதான ஆச்சிமார் காலை நீட்டியிருப்பதுபோல இருந்துகொண்டு பிரியாணிச் சட்டிக்குள் புது உலகத்தைத் தேடத் தொடங்கினேன். நல்ல வாசனையோடு, கோழிக்காலை வழித்து இழுத்து உறிஞ்சிய என்னைப் பார்த்து அவர்களுக்கு உடனேயே இரெயினை விட்டுவிட்டு ஓடவேண்டும் போல இருந்திருக்கும். ஐரோப்பாவில் வெவ்வேறு நாடுகளுக்கிடையிலான இரெயின் பயணங்களில் எவ்வளவு நாசுக்கான மேற்கத்தைய நாடகத்தை நானெல்லாம் சாப்பிடும்போது போட வேண்டியிருந்திருக்கிறது. அதற்கு இது நல்லதொரு பழிவாங்கல் என என் வாயும் கையும் சொல்லிக்கொண்டன.

ஒருமாதிரியாக எல்லயை, போகும் நேரத்தைவிட ஒரு மணித்தியாலம் பிந்திப் போய்ச் சேர்ந்தோம். நிற்கும் இடத்தில் வசதி இல்லாவிட்டாலும், காலையில் நல்லதாய் காலைச்சாப்பாடு தருகின்ற இடமாய்ப் பார்த்து பதிவு செய்திருந்தோம். அங்கே நின்ற சிங்களப் பெண் வழியில் பார்த்த தாமரைக்கு உயிர் வந்தமாதிரித் தெரிந்தார்.. சுற்றுலாப் பயணிகள் திரியும் இடமென்பதால் எல்லாம் விலையாக இருந்தன. அதனால் சாப்பிட்டுக்கொண்டு இடைநடுவில் 'லயனை'ச் சந்திக்ககூடாது, முதலிலேயே அதனோடு பொருதவேண்டுமென 'லயனை' குளிராக விற்ற கடையில் எனக்கும், நண்பர் ஒரு சூழலியல் ஆர்வலர் என்பதால் அவருக்கு somersetயையும் வாங்கிக்கொண்டு, ஒரு விளையாட்டுத்திடலினடியில் ஒதுங்கினோம்.

என் வீரத்தின் வலிமை கண்டு அஞ்சியோ என்னவோ, மரத்தில் இருந்து ஒரு பூச்சி கீழே என் தோளில் விழுந்தது. ஒரு வீரனுக்கு இப்படியுமா ஒரு சோதனை வரவேண்டும் என்று அதைத் தட்ட கழுத்தில் கடித்துவிட்டு அது தப்பிவிட்டது. ஆனால் கழுத்தோ கொஞ்சம் கொஞ்சமாய் வீங்கத் தொடங்கிவிட்டது. சா, ஒரு லயனோடே பொருதமுடிகின்ற எனக்கு இந்தப் பூச்சி இப்படியொரு பாடங்கற்பித்துவிட்டதே என்று எனக்குக் கொஞ்சம் பயம் வந்துவிட்டது.

பயத்தை இலயனின் கடைசிமிடறு வென்றதால், நாங்கள் செஃப்வ் ஹவுஸ் என மரப்பொருட்களால் நன்கு அலங்கரிக்கப்பட்ட உணவுகத்திற்குள் நுழைந்தோம். எதிரே கொத்துரொட்டிக் கடையில் கொத்துப்போட, அந்த இசையோடு அதற்கு அருகில் இருந்த கடையின் பெயரான I love Ceylon என்பதை வைத்தே நான் பல்வேறு இராகங்களில் கர்நாடக சங்கீதக் கச்சேரி வைக்கத் தொடங்கினேன்.

இவ்வளவு இசைவளம் எனக்குள் இத்தனை நாள் எங்கு ஒளிந்திருந்தது என நான் வியப்படைய, நண்பரோ அமைதி அமைதி, மற்றவர்கள் பார்க்கின்றனர் என்றார். என்னாலோ நான் கட்டுப்படுத்த முடியாதவளவுக்கு இசை 'இலயனோடு' பெருங்கெடுத்துப் பாயத் தொடங்கிவிட்டது.  ஆனால்இப்படி ஒரு நல்ல இசை அனுபவத்தை, ஒரு கொடுமையான நிகழ்வு பிறகு நிகழ்ந்து  இல்லாமற் செய்துவிட்டதுதான் பின்னர் நிகழ்ந்த துயரம்.

வீட்டுச்சாப்பாடு மாதிரி செப்ஃவ் சமைத்துத்தருவார் என்று நினைத்து நான் பட்டர் சிக்கனை ஓடர் செய்திருந்திந்தேன். வந்ததோ ஏதோ கலங்கிய தண்ணிக் குழம்பு போன்ற ஒரு புளிப்புச் சிக்கன். எனக்கு வந்த விசரில் சிலோனாவது மண்ணாவது என்று கச்சேரியை விட்டுவிட்டு, உணவைக் கொண்டு வந்தவரிடம், 'அண்ணை நீங்கள் லெமன் சிக்கன் போன்ற ஒன்றை, பட்டர் சிக்கன் என்று கொண்டு வந்து தந்துவிட்டீர்கள்' என்றேன். அவரோ,  ஒருமுறை டிஷ்ஷை கூர்ந்து பார்த்துவிட்டு, 'இல்லை சரியான ஓடர்தான்' என்றார். 'இதற்குள் பட்டரே இல்லை வெறும் தண்ணீர்தான் இருக்கிறது'என்றேன். சரி அவர் என்ன செய்வார், பாவம். I love Ceylon என்ற என் பூபாளம் போய்  I want to see the Chef என்ற முகாரி எனக்குள் உருவெடுக்கத் தொடங்கியது.

கூட இருந்த நண்பர்தான் எப்படியோ என்னைத் தேற்றி விடுதிக்கு கூட்டிக்கொண்டு வந்தார். வரும் வழியெல்லாம், உலகெங்கோ எல்லாம் சென்று எத்தனையோ விதமான பட்டர்-சிக்கன் சாப்பிட்டிருக்கின்றேன், எல்லயிலே மட்டுந்தான் பட்டரே இல்லாது பட்டர் சிக்கன் சாப்பிட்டு சாதனை படைத்திருக்கின்றேன் என்று புலம்பியபடி வந்தேன்.

ஆனால் அடுத்தநாள் காலையில், நான் தங்கி நின்ற வீட்டுச் சிங்களப் பெண்மணி, பொல் ரொட்டி சுட்டுத்தர, அதை எல்லயின் மென்குளிரில் சாப்பிட்டபோது நான் மீண்டும் இயல்புக்கு வந்திருந்தேன். அதுவும் வீட்டிலே அவர்கள் தயாரித்த விளாம்பழ ஜாமை வாட்டிய பாணின் மீது தடவிச் சாப்பிட்டபோது, ஒரு முத்தத்தைப் போல இதமாய் இருக்க,   அந்த பட்டர் சிக்கன் செய்த செப்ஃவையே போனால் போ என்று மன்னித்துவிட்டேன்.

நல்லவேளையாக அடுத்தநாள், உணவுக்காக இலங்கையில் மீண்டும் நிகழ இருந்த ஒரு எல்லாள- கைமுனு யுத்தம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது.
...........................................

(Feb 11, 2020)

0 comments: