கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பத்து வருட நாடோடி வாழ்க்கை

Sunday, April 19, 2020

யணங்கள் ஒருவகையில் வாழ்க்கை குறித்து புத்தர் கூறியதுமாதிரித்தான். அவரவர் அவரவர்க்கான பாதைகளை கண்டுபிடிக்கவேண்டும், பிறரைப் பின்பற்றக் கூடாது என்பது.  மத்தியூவின் (Matt) 'பத்துவருடங்கள் ஒரு நாடோடி' என்கின்ற இந்த நூலும் அப்படிப்பட்ட ஒன்றுதான். இருபதுகளில் இருந்த மத்தியூஸ் 2003ல் முதன்முதலாக தனித்து அமெரிக்காவிலிருந்து கோஸ்டா ரிக்காவுக்குப் பயணிக்கின்றார். அது அவருக்கு கொடுக்கும் உற்சாகத்தின் காரணமாக 2006-2016ல் வரை ஒரு நாடோடியாக 90இற்கு மேற்பட்ட நாடுகளுக்கு அலைந்து திரிந்திருக்கின்றார். அந்த அனுபவங்களின் ஒரு பகுதியையே இந்த நூல் பேசுகிறது.

பயணங்களில் tourist, traveler என இரண்டு வகையாக இருப்பதை நாமெல்லோரும் அறிவோம். மத்தியூஸ் ஒரு பயணியாக அலைந்தபடியால், நீண்டகாலம் அலைவதற்கான முக்கிய பல விடயங்களைச் சொல்கின்றார். அவரின் பெரும்பயணம் முதல் சுற்று இத்தாலி, கிரீஸ், செக் என நீண்டு தென்கிழக்காசியா வரை போகின்றது. பெற்றோருக்கு இது விருப்பமில்லாத விடயம், நண்பர்களுக்கு இப்படி செய்வது ஒரு முட்டாள்தனம், உயரதிகாரி வேலையை இராஜினாமாச் செய்யும்போது career பற்றிய அறிவுரைகள், இத்தனை விரும்பி ஏற்காப் 'பொதிகளுடனும்' மத்தியூ பயணம் செய்யும்போது அப்போது ஏற்படும் பதற்றங்களையும், பரவசங்களையும் இதில் உயர்வு நவிற்சியில்லாமல் இயல்பாய்ப் பதிவு செய்கின்றார்.

இவ்வாறாக நீண்டகாலம் பயணிக்கும்போதுவரும் காதல்கள் (destination travel love) குறித்தும் தன் அனுபவங்களை முன்வைத்தும் பேசுகின்றார். அவர் பல்வேறு பெண்களைச் சந்திக்கின்றார். தொடக்கத்தில் சில பெண்கள் அவரை தமது காதலனாக்கி ஏதாவது ஓரிடத்தில் 'செட்டில்' செய்யக் கேட்கின்றார்கள். இந்தப் பெண்களைப் பிடித்திருந்தாலும், அவரின் அலைந்து திரியும் இயல்பால் அவை எதுவும் சாத்தியமாகாது போகின்றது. அதேபோல பிற்காலங்களில் அவருக்குச் சில பெண்களைப் பிடித்து, அவர்களோடு சேர்ந்து வாழ விரும்பும்போது, அவர்கள் தொடர்ந்து பயணம் செய்யும் விருப்புடையவர்களாக இருப்பதால் இவரின் காதலை மறுக்கின்றார்கள். இவ்வாறு எல்லாவிதமான காதல்களையும், குழப்பங்களையும், ஏக்கங்களையும், ஏமாற்றங்களையும் எழுதிச் செல்கின்றார்.

ஆர்ஜெண்டீனாவில் நிற்கும்போது ஒரு சுவீடன் பெண்ணைச் சந்திக்கின்றார். அந்தப்பெண் இணைய உலகை முற்றாக மறுதலிப்பவர். தன் இயல்பில் போகும் இடங்களில் வேலை செய்து, அந்தப் பணத்தைக் கொண்டு உலகெங்கும் அலைந்து கொண்டிருப்பவர். புகைப்படங்கள் எடுப்பதையோ, தன் அனுபவங்களை எந்த ஷோசல் மீடியாவில் பகிர்வதையோ சற்று விரும்பாதவர் மத்தியூஸோ கொஞ்சம் கொஞ்சமாக தனது பயணத்தை எழுதுவதன் மூலம் (மில்லியன்கணக்கான பார்வையாளர்கள் அவருக்கு இருக்கின்றார்கள்) இணையத்தில் உழைத்து ஒரு digital nomad ஆக மாறிக்கொண்டிருப்பவர். இந்தப் பணத்தை வைத்தே அவர் பயணங்களைச் செய்கின்றவர்

சுவீடன் பெண்  இன்னொரு நண்பரின் படகில் கடலில் பயணித்து கொலம்பியாவுக்குச் செல்லலாம் வருகின்றாயா எனக் கேட்கின்றார். இவர் முதலில் அந்தப் பெண்ணி மீதான காதலில் வருகின்றேன் என்கின்றார். பின்னர் கடலில் இருக்கும் நாட்களில் இணையத்தில் உலாவமுடியாது, அதனால் தனது வாசகர்களை இழந்துவிடுவேன் என்பதால் கடைசி நேரத்தில் அந்தப் பயணத்தைத் தவிர்த்து, விமானத்தின் மூலம் வந்து அந்தப் பெண்ணைச் சந்திக்கின்றேன் என்கின்றார். சில நாட்கள் இணையத்தை விலத்தி இருந்தால், இந்த உலகம் அழியவா போகிறது என்று அந்தப் பெண் கேட்கின்றார். இறுதியில் படகுப் பயணத்தைச் செய்து போகும் அந்தப் பெண் இவரைப் பிறகு ஒருபோதும் தொடர்புகொள்ளவேயில்லை. ஒரு அருமையான காதலை இணையத்தின் மீதான காதலால் இழந்த சோகம் மத்தியூக்கு நிகழ்கிறது.

யணமும், இப்படி சமாந்தரமாக இணையத்தில் வேலை செய்வதும்/இயங்குவதும் எங்கே மத்தியூஸை இறுதியில் இழுத்துக்கொண்டு செல்கின்றது என்றால் அவருக்கு panic attackன் எல்லை வரைக்கும். ஒருமுறை அல்ல, இரண்டு முறை பல்வேறு சந்தர்பபங்களில் panic attack  வருகின்றது. மாத்திரைகளாலும் அவரை இயல்பாக்க முடியாத ஒரு நிலைக்கு அவர் இதன்மூலம் போகின்றார்.அப்போதுதான் பயணமும், பயணத்தின் நடுவே வேலை செய்வதும் சாத்தியமில்லை என்பது புரிகிறது. மேலும் மற்றவர்களின் விருப்புக்கேற்ப நாம் ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியாது என்பதையும் அவர் உணர்கின்றார்.

பத்து வருடங்களின் பின் 'வீடு' அடைதலை யோசிக்கின்றார். பொஸ்டனைச் சேர்ந்தவர் என்றாலும் மத்தியூ பின்னர் டெக்ஸஸை தனது இருப்பிடமாக மாற்றிக்கொள்கின்றார்.  இப்போது பயணங்கள் குறித்து பல்வேறு இடங்களில் பேச்சுக்களை வழங்குகின்றவராக, பயணக்குழுக்களுக்கு உதவுகின்றவராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அண்மையில் ஐரோப்பா பயணம் நிமித்தம்  கொரானா வைரஸ் positive ஆகி, இப்போது தன்னைத் தனிமைப்படுத்தியிருப்பதாகவும் தனது இன்ஸ்டாவில் சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருக்கின்றார்.

உண்மையில் இந்த நூலை வாசிக்கும்போது இது ஒருவகையில் புத்தர் கூறிய வீடு அடைதலையே நமது மனித மனங்கள் தேடிக்கொண்டிருக்கின்றன என்ற மறைபொருள் நமக்கு விளங்குகின்றது. சிலர் பயணத்தின் மூலம் Alchemist மாதிரி, அதைக் கண்டடைந்து கொள்கின்றனர்.  வேறு பலரோ பயணங்கள் செய்யாமலே தம்மைக் கண்டுகொள்கின்றனர். அவரவர் அவரவர்க்கான பாதைகளில் தமக்க்கான நிம்மதியைக் கண்டுபிடிக்கவேண்டியதுதான். ஆனால் ஒருவர் இவ்வாறான பயணங்களின் மூலந்தான் தன்னைக் கண்டுபிடிக்கப்போகின்றார் என்றால், அவரைச் சோர்வாக்காமல், உற்சாகத்துடன் அனுப்பிவிடுவதை வேண்டுமானால் நாம் செய்யலாம்.

இவ்வாறாக பத்துவருடத்தில் தான் பெற்ற எல்லாவகை அனுபவங்களையும் மத்தியூ கூறியிருந்தாலும், நூலில் முடிவில் அனைவரையும் பயணம் செய்ய உற்சாகப்படுத்துகின்றார். உல்லாசப் பயணியாகப் போகாமல், உள்ளூர் மக்களுடன் கலந்து பழகும் சாதாரணமான பயணியாகப் போகச் சொல்கின்றார். எப்படிப் பயணங்களைச் செய்யலாம் என்று பின்னிணைப்பாக நான்கைந்து பக்கங்களுக்கு அவசியமான குறிப்புக்களைத் தருகின்றார்.

நாம் பயணித்துப் பார்க்காதவரை எந்தப் பயணநூலும் பிரயோசனம் தரப்போவதில்லை, தனது நூல் உட்பட என்று சொல்லும் மத்தியூ, இந்த ஐந்து பக்கங்களைக் கிழித்து எடுத்துக்கொண்டு நம்மைப் பயணிக்கச் சொல்லி  புன்னகையுடன் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கின்றார்.

Ten Years a Nomad: A Traveler's Journey Home
Matthew Kepnes
..................
(Mar, 2020)

0 comments: