கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சுகுமாரனின் 'பெருவலி'

Tuesday, October 12, 2021

சில படைப்புக்களை வாசிக்க வழமையை விட நிறையக் காலம் எடுக்கும். இன்னுஞ் சில தம்மை வாசிப்பதற்கான நேரம் இதுவல்லவென உதாசீனம் செய்யும். இவ்வாறு அருந்ததி ரோயின் The God of small thingsஐ பலமுறை வாசிக்கத் தொடங்கியும் முழுமையாக வாசித்து முடிக்காதிருக்கின்றேன். இன்னும் இதை வாசித்து முடிப்பதற்கான காலம் வரவில்லையென என்னை ஆறுதற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு பிரான்ஸிஸ் கிருபாவின் 'கன்னி'க்கும் தொடக்கத்தில் நிகழ்ந்திருக்கின்றது.

அதேசமயம் பதின்மத்தில் இருக்கும் அக்காவின் மகளுடன் தொலைபேசிக்கொண்டிருந்தபோது, அவர் God of small thingsஐ வாசித்துவிட்டாரென்றபோது வியப்பாக இருந்தது. ஆனால் நான் அருந்ததி ரோயின் அடுத்த நாவலான The Ministry of Utmost Happiness வந்தவுடன் ஒரே இழுவையில் வாசித்து முடித்துவிட்டேன். எனக்கு பிடித்த நாவல்களில் அதுவுமொன்று.
மைக்கல் ஒண்டாச்சியின் எந்த நாவலனெறாலும் உடனேயே வாசித்து முடித்துவிடும் எனக்கு, இறுதியாக வந்த அவரின் நாவலான Warlight இற்குள் எந்தப் பக்கத்திற்குள்ளால் நுழைந்து எப்படி வெளியேறுவதென்பது இன்னும் தீர்க்கமுடியா மர்மமாய் இருக்கிறது.
இப்போது அதே ஒரு திகைப்பு, அனுக் அருட்பிரகாசத்தின் இரண்டாவது நாவலான A Passage Northஇற்கும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. தெரிந்த நிலவியல், ஒரளவு பரிட்சயமான மாந்தர்கள் என்றாலும் ஒரு கிழமைக்கு மேலாய் இப்போதுதான் நூறு பக்கங்களைத் தாண்டி வந்திருக்கின்றேன்.
அதேவேளை அவரின் முதல் நாவலான The Story of a Brief Marriageஐ அவ்வளவு இலயித்து வாசித்திருக்கின்றேன். அது அவ்வளவு பிடித்தது என்பதால்தான் எவரையும் நேர்காணல் செய்ய விரும்பாத என்னை ஒரு சிறு நேர்காணலை அவருடன் செய்ய வைத்திருந்திருக்கின்றது. நாவல் பற்றிய என் வாசிப்பும், அவரின் நேர்காணலுமென அன்று 'அம்ருதா'வில் அவை வெளிவந்துமிருந்தன.
அனுக்கின் இரண்டாவது நாவலில் என் வாசிப்பு மெதுநடையில் போகும்போதுதான் இந்தப் பாதை சரிவராதென ஹெமிங்வேயின் 'A Moveable Feast' இற்குள் நுழைந்திருந்தேன். இது ஹெமிங்வே அவரின் முப்பதுகளில் எழுதிப் பிரசுரமாகாத குறிப்புகள். ஹெமிங்வேயின் மறைவின் பின் இது அவரின் மனைவியால் பிரசுரிக்கப்பட்டது. ஒரு எழுத்தாளன் பாரிஸ் கஃபேயில் இருந்து தனது கதைகளை எழுதுவதும், அங்கே வரும் பெண்ணை இரசிப்பதும், அந்தப் பெண்ணை எப்படித் தன் கதைக்குள் ஒரு பாத்திரமாகக் கொண்டுவருவதுமென கற்பனை செய்வதும், ஹெமிங்வேக்கு பிரியமான மதுவகைகளுமென அந்த நூல் விரிந்துகொண்டிருக்கின்றது.

ப்படி அனுக்கையும், ஹெமிங்வேயையும் வாசிக்கும்போதுதான் தற்செயலாக சுகுமாரனின் 'பெருவலி'க்குள் வந்து விழுந்தேன். வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டிருந்தாலும் மிகச் சுவாரசியமான நாவல். வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு இளவரசியின் நாட்குறிப்புகளினூடாக இந்த நாவல் எழுகின்றது. அதற்கு சுகுமாரனுக்கு இருக்கும் கவித்துவமொழி வளஞ்சேர்க்க, உடனேயே வாசித்து முடித்துவிடவேண்டுமென்ற உந்துதலைத் தந்திருந்தது. தமிழ்ச்சூழலில் நான் கதைக்கும்போது, பலரைக் கவராத அவரின் முதலாவது நாவலான 'வெலிங்டன்' எனக்குப் பிடித்த நாவல்களிலொன்று.
அவ்வளவு எளிதில் என் வாசிப்பின் பொருட்டு நிகழ்வது இல்லையெனினும் எனக்கு சுகுமாரனின் அடுத்த நாவலான 'பெருவலி'யும் பிடித்திருக்கிறது. அதேபோல இந்த நாவலை வாசிக்கும்போது இந்த நாவலுக்கு அவர் செய்திருக்ககூடிய ஆய்வுகளும், தேடல்களும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. நமக்குப் பரிட்சயமில்லாத விடயங்களையும், நமக்கு புறத்தேயுள்ள கலாசாரங்களையும் எப்படி சுவாரசியமான புனைவாக்கலாம் என்பதற்கு 'பெருவலி' நல்லதொரு உதாரணம். அதைவிட சுகுமாரன், -நான் அடிக்கடி வலியுறுத்தும்/விரும்பும்- 200 பக்கங்களுக்குள்ளேயே இதை கச்சிதமாக எழுதி முடித்திருக்கின்றார் என்பது இன்னொரு வியப்பு.
இந்தக் குறிப்பு ஒரு நல்ல நாவலாக எனக்குத் தோன்றும் 'பெருவலி'யை வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் தவறவிடக் கூடாதென்பதற்காய் எழுதப்படுகிறது.

****************

(Aug 09, 2021)

0 comments: