கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எஸ்.பொவின் 'அப்பாவும் மகனும்'

Saturday, April 02, 2022

 (எஸ்.பொ - பகுதி 06)


1.


எஸ்.பொ அவரது தந்தையார் 1972ல் காலமாகும்போது 'அப்பையா' என்று அவரோடான தனது நினைவுகளைக் கவிதை வடிவில் எழுதுகின்றார்.  தகப்பனின் இறுதிச்சடங்கில் சில சம்பிரதாயமான சடங்குகளை எஸ்.பொ செய்யவேண்டியிருக்கின்றது. யாழ்ப்பாணத்து கிடுகுவேலிக் கலாசாரத்தையும், சடங்குகளையும் மறுதலித்து வந்த எனக்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டதென்று எஸ்.பொ கவலையுறுகின்றார். அப்போதுதான் உள்மனதில் தனக்கு ஒரு குரல் கேட்டது என்கின்றார். நீங்கள் நம்புகின்றீர்களோ இல்லையோ எனக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்கின்றார்.


"பல்கோடியின் ஒரு பின்னத்திலே ஒரு நிகழ்ச்சி - அல்ல, அற்புதம்- தன் பேரோளிக்குள் ஆழ்த்தியது. இது கற்பனை மயனின் குறளியாகச் சிலருக்குத் தோன்றலாம். உங்கள் சுயத்தை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், நடந்தது என்னவோ உண்மை என்று இப்போதும் சத்தியமாகவே நம்புகின்றேன்" என எஸ்.பொ கூறுகின்றார்.


அது அவரது தந்தையான அப்பையாவின் குரல்: "எட, தம்பி! நீயே அழுகிறாய்? நீ யாழ்ப்பாணச் சடங்குகளிட்டைத் தோத்துப் போனாய் எண்டு எந்த விசரன் சொன்னவன்? உன்ரை மயிர்க்கணுவைக் கூட எனக்கு நல்லாத் தெரியும். என் ஒருத்தன்ரை பட்சத்துக்காக தோத்துப் போனதாக நடிக்கிறாய். எடேய், தலையை நிமிர்த்தி நடவடா, நீயும் தோத்துப் போனால், எனக்கு வெற்றி ஏதடா? நீயும் உன்பட்சமுமே என் வெற்றி!" என்பதே அந்தக் குரல். தகப்பனுக்கான சடங்குகளுக்காய் மீசையை இழந்து, நான்கு முழக்காரிக்கன் மட்டுமே தன் சங்கையை மறைக்க, நடுத்தெருவில் நடந்தபடி தோளிலே கொள்ளிக் குடம் சுமந்தபடி குழந்தையாக தேம்பி அழுதபடி போகும் எஸ்.பொ தன் சுயத்தை அப்பையாவின் குரலிலூடாக தன்னை மீட்டுக்கொள்கின்றார். 


அப்பையாயா காவியத்திலேயே 'தேர்' கதை தனது தந்தையைப் பற்றியது என்று எஸ்.பொ நமக்கு வாக்குமூலத்தைத் தருகின்றார். "பேசாது/ நீண்டு மிகநீண்டென் நெஞ்சை நிறைத்தவராய்/தோன்ற அவருருவைத் தோயும் மன உயர்வை/அவரின் ஆரோ கணத்தை அவரோ கணகதியை/ எதிர் நோக்கித் தேர்-ஐ எழுதுகின்றேன்." என்று அப்பையா பற்றிய நூலில் குறிப்பிடுகின்றார்.


கவிதைகளால் சொல்லப்படும் அப்பையா காவியத்தில் எஸ்.பொ, தனது தந்தையுடனான நினைவுகளை சிறு சிறு குறிப்புக்களாய் நமக்குத் தருகின்றார். எஸ்.பொவுக்கு படிப்பித்து, யாழ்ப்பாணத்து 'வழக்கப்படி' நல்லதொரு சீதனம் வாங்கும்  நிலைக்கு வந்துவிட்ட நிலையில் எஸ்.பொ, மட்டக்களப்புப் பெண்ணை நேசித்துத் திருமணஞ் செய்கின்றார். 'மட்டக்களப்பாரின்/ மந்திரத்தில் கட்டுண்ட/ துட்டனவன் இனியும் / தொடர்புண்டோ? என்றோரை/ விட்டுப் பிரிந்து/ 'மகனே, நீ மணந்த/ மனைவி எனக்குத் தலைமை மருமகள்' என அப்பையர் எளிதில் ஏற்றுக்கொள்கின்றார். 


எஸ்.பொ அவர் மட்டுமில்லை, அவரின் பிள்ளைகளையும், சாதி பார்க்காதும், சீதனம் வாங்காதும் திருமணஞ் செய்யவிட்டவர். அவ்வப்போது எஸ்.பொ பெண்கள் பற்றிய கொஞ்சம் நக்கலும் நளினமும் கலந்து பேசி/ எழுதினாலும் அவர் தன் வாழ்வில் அவரது எழுத்தைவிட நேர்மையாக இருந்திருக்கின்றார். நம்மிடையே இருந்த பலரைப் போல (என் சமகாலத்திலும் கூட) ஒரு பக்கம் பெண்/சாதி விடுதலை பேசிக்கொண்டு மறுபக்கம் சாதி பார்த்தும், சீதனம் பெற்றுக்கொண்டும் மணம் செய்த பல 'படைப்பாளி'களை நான் நன்கு அறிவேன் என்பதால் எஸ்.பொவை எழுத்தால் மட்டுமில்லாது, எழுத்துக்கும் வாழ்வுக்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லாது வாழ்ந்தவர் என்பதிலும் ஆசானாகக் கொள்வதில் மகிழ்ச்சியாகவே இருக்கின்றது. 


எஸ்.பொவுக்கு அவரது அப்பையா 1972ல் இறக்கும்போது அதன் பின்னர் யாழ்ப்பாணத்தோடான நேரடித்தொடர்புகள் முற்றுமுழுதாக அறுந்துபோகின்றது. அதற்கு முன்னரே எஸ்.பொ மட்டக்களப்பில் வசிக்கத் தொடங்கினாலும், ஒரளவு தொடர்புகள் 1970கள் வரை அப்பையாவின் நிமித்தம் இருந்திருக்கின்றது. ஆகவேதான் எஸ்.பொவை ஜெயமோகன் யாழ் நிலத்துப் பாணன் என்கின்றபோது, 'எஸ்.பொ யாழ் நிலத்துப் பாணன்- 1970வரை மட்டும்' என்று வரவேண்டுமென நினைப்பதுண்டு. 


அதேபோன்று எஸ்.பொவை யாழ் நிலத்தோடு சுருக்க முடியாது. இது எப்போதும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு இருக்கும் உரிய சிக்கல். தங்களை மட்டும் உலகு பரவிய தமிழ் எழுத்தாளர்களாகவும், பிற நிலத்தில் வாழ்ந்தவர்களை எல்லாம் அந்தந்த நிலத்துக்கு மட்டும் உரியவர்களாகச் சுருக்கிவிடுவதாகும். அநேக தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் தாமாகவே இந்த authorityஐ எடுத்து தாங்களாகவே தமிழ்நிலத்து எழுத்தாளர்களாகி விடுகின்றார்கள். நம்மைப்போன்ற மற்றவர்கள் எல்லோரும் குறுநிலத்து மன்னர்களாகவோ/மறவர்களாகவோ ஆகிவிடுகின்றோம். இனியாவது இவர்கள் தமது  privilege குறித்துச் சிந்திக்கவேண்டும். அம்பை ஓரிடத்தில் குறிப்பிட்டதுபோல, ஆண்கள் தம்மைப்பற்றி எதைப்பற்றி எழுதினாலும் -அது ஆண் இலக்கியமாக அல்லாது- தமிழ் இலக்கியமாகவும், பெண்கள் தம்மைப் பற்றி எழுதினால் பெண் இலக்கியமாக மட்டும் சுருக்கிவிடுவதாகவும் அமைந்துவிடுகின்றது போலத்தான் இதுவும்.


2.


எஸ்.பொ தனது தந்தையை 1972ல் இழந்தது போல, விடுதலைப் போருக்காய்ச் சென்ற அவரது மகன் மித்ராவை 1986ல் இழக்கின்றார். தகப்பனையும் தனயனையும்  குறுகிய காலத்தில் இழக்கும் எஸ்.பொ பிறகு 90களில் தன் மகன் பற்றிக் கவிதைகளாக எழுதுகின்றார். இது இரண்டையும் தொகுத்தே 'அப்பாவும், மகனும்' என்ற தொகுப்பு 1999ல் வெளிவருகின்றது. எஸ்.பொ, மித்தி பற்றி எழுதிய ஆண்மை-15 கதையை வாசித்தவர்க்கு அதில் குறிப்பிட்ட பெருமளவான விடயங்களைத்தான் எஸ்.பொ இங்கே கவிதைகளாக்கி இருக்கின்றார் என்பது எளிதாகப் புரியும். ஒருவகையில் எஸ்.பொ அப்பையாவுக்கும், மித்திக்கும் 'கல்வெட்டுக்களை' இதன் மூலம் எழுதியிருக்கின்றார் எனக் கொள்ளலாம். அப்பையா கனிந்து உதிர்ந்துபோனது போலின்றி, மித்தி பிஞ்சிலே (23 வயதிலேயே) மறைந்துபோனவர். எனவே மகன் பற்றிய அந்தத் துயரம் இன்னும் கடுமையாகவே எஸ்.பொவைத் தாக்கியுமிருக்கும்.


இந்தப் பாயிரத்தில் மித்தியின் நினைவுகள் மட்டுமில்லை எப்படித் தமிழ் இனம் வரலாற்றில் தொடர்ந்தும் வஞ்சிக்கபட்டதென்று 1900களில் தொடக்கத்தில் இருந்து முக்கியமான நிகழ்வுகள் நடந்த வருடங்கள் குறிப்பிடப்பட்டு அப்போது நடந்த சம்பவங்கள் கூறப்படுகின்றது. ஒருவகையில் இது தனிப்பட்ட மகனின் நனவிடைதோய்தலாக மட்டுமின்றி வரலாறு குறித்த நனவிடைதோய்தலாகவும் இது அமைந்திருக்கின்றது.


இறுதியில் 'ஒன்று நீ தெரிக... நான் விழிமூடும்/ஒருபோழ்தில் உன்னையே நினைப்பேன்!/அன்றுநான் 'மகனே...! வருகிறேன் உன்றன்/ அருகினில் என்றார்த்தே வருவேன்!/ நின்றுநீ என்னை நெஞ்சோடும் அணைப்பாய்!/நினைவுகள் மீட்டுநாம் மகிழ்வோம்!" என்று எஸ்.பொ எழுதுவதில் அவர் மீண்டெழுந்துவிடாத அவரின் புத்திர சோகத்தைப் பார்க்கின்றோம்.


3.


எஸ்.பொ தனது தமிழ் ஊழியத்தை, தனி மனிதச் சாதனையாக ஒருபோதும் பார்த்தவருமில்லை. எல்லோரும் சேர்ந்து  'ஊர் கூடித் தேர் இழுப்போம்' என்று விரும்பியவர். தொடர்ச்சியாக இளவல்களை தமிழ் ஊழியத்துக்கு வாருங்களென  அழைத்துக் கொண்டிருந்தவர். ஆகவேதான் "பிறவியில் தமிழ்த்துவம் பொருத்துதல் மகத்தானது. என் அப்பையா எனக்களித்த பிதுரார்ஜிதம் அது. ஆனாலும், சாதாரண மனித ஆசைகளுடன் வாழும் சாமன்யன். தமிழ் உழைப்பிலும் ஊழியத்திலும் வெறிகொண்ட சாமான்யன். இந்த வெறியில் உலக இலக்கியத் திருத்தவிசிலே தமிழ்ப் படைப்புக்கள் சரியாசனம் சுகித்தல் வேண்டும் என்கிற பேராசையில் வசமிழ்ந்தவன். வெறியும் பேராசையும் தமிழ் ஊழியத்தில்  ஆகுமானவை." என்று தன்னைப் பிரகடனம் செய்தாலும், தானும் தன் ஊழியம் தமிழ் என்னும் பெருங்கடலில் சிறு துளி என்கின்றதை விளங்கிக்கொண்டவர். இன்று கொஞ்சம் எழுதினாலும் தாமே தமிழின் எல்லாச் செல்நெறிகளுக்கும் தலைமை தாங்குகின்றோம் என்று ஒளிவட்டம் வீசப்பேசுவோர் எஸ்.பொவிடமிருந்து  இவ்வாறான சிலதையாவது  கற்றுக்கொள்ளலாம்.


அது மட்டுமில்லை, "பேராசை கொண்ட தமிழ்ப் படைப்பிலக்கிய இளவல்களே, என் தோள் மீது ஏறி நின்று, தமிழ்ப் படைப்பிலக்கிய வெற்றிகளைத் தரிசிக்க வாருங்கள்" என எஸ்.பொ தன் தோள்களையே அடுத்த தலைமுறை ஏறி நின்று தரிசிக்க தருகின்ற படைப்பாளியும் கூட. ஒரு படைப்பாளி தன் தோளின் மீது ஏறி நின்று உலகைப் பார் என்றால், அதன் அர்த்தம் என் உழைப்பை/படைப்பைத் தாண்டி நீ செல்லவேண்டும் என்று பிரியப்படுவதுதானே! 


பெரும்பாலான ஆசான்கள் தம்மை மீறி எவரும் வளர்ந்துவிடக்கூடாதென்று பொறாமை கொள்கின்றபோது என்னைத் தாண்டிச் செல்வதுதான் இளவல்களே நீங்கள் தமிழுக்கும் எனக்கும் செய்யும் நன்றிக்கடன் என்று சொல்கின்ற எஸ்.பொவை ஆசானாகக் கொள்வதில் பெருமையே என்னைப் போன்றோர்க்கு என்றுமிருக்கும்.


**********


0 comments: