இலங்கையில் Walk for 'Peace'
இதன் நிமித்தம் அதே Walk for Peace ஒருபகுதியினர் அனுராதபுரத்திலிருந்து கொழும்புவரை கிட்டத்தட்ட பத்து நாட்கள் நடந்து செல்லத் தொடங்கியிருந்தனர். இந்த நிகழ்வை அறிந்தபோது இது குறித்து பகிர விரும்பியபோதும், இலங்கையின் நிலைமை குறித்து சரியாகத் தெரியாது பகிருதல் நல்லதல்ல என நினைத்திருந்தேன்.
நினைத்ததுபோலவே முதல் நாளிலிருந்து இலங்கை இராணுவம் சீருடையில் முன்னணியில் நிற்கும்போதே இந்த Walk for Peace எனக்கு எந்த அமைதியையும் தராது என்று விலத்தியிருந்தேன்.
*
இலங்கையைப் பெளத்த நாடென்றுதான் தொடர்ந்து அங்கிருப்பவர்கள் பிரகடனப்படுத்தியபடி இருக்கின்றார்கள். புத்தரும் அங்கே தெய்வந்தான். புத்தரின் படங்களுடன் ஆடையோ, ஏன் எமது உடல் எமது உரிமை என்று நினைத்து புத்தரைப் பச்சை குத்தியிருந்தால் கூட 'புத்தரை அவமரியாதை' செய்ததாக ஜெயிலில் போட்டது கடந்த காலத்தில் நடந்திருக்கின்றது.
பெரும்பான்மை
மக்களின் இந்த கடவுள் நம்பிக்கையில் நாம் தலையிடத் தேவையில்லை. அவரவர்க்கு
அவரவர் தெய்வம். ஆனால் இன்று வத்திக்கானில் இருக்கும் போப்பாண்டவரே
அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக பேசும் தைரியம் வந்தபோது கூட, இலங்கையில்
'இடதுசாரி' சார்புள்ள அரசு ஆட்சிப்பீடமேறியபோது மகாசங்கங்களில் ஆசியின்றி
ஏதும் செய்ய முடியாத நிலையே இலங்கையின் யதார்த்தமாகும்.
அமெரிக்க
ஜனாதிபதி போப்பாண்டவரை அவமதிப்பது போல இலங்கையின் இதுவரை எந்த
ஜனாதிபதியாலும் 'உங்கள் மதம் உங்களுக்கு, எங்கள் அரசு எங்களுக்கு' என்று
வாய்திறந்து வெளிப்படையாகப் பேசினால் அவர் அடுத்த நாள் ஜனாதிபதியாக
இலங்கையில் இருப்பாரா என்பதே சந்தேகந்தான். அந்தளவுக்கு அரசமரத்து வேர் போல
இலங்கையில் பெளத்தம் அரசியல்மயப்படுத்தப்பட்டிருக்கின்றது.
எனவே
இவ்வாறான இலங்கையில் புத்தர் ஒரு சாதாரண மனிதராக இருந்து நிர்வாணமடைந்தவர்
மட்டுமே என்று சொல்ல எவராலும் வெளிப்படையாக முடியாது. இது இலங்கைக்குரிய
பிரச்சினையில்லை. இயேசுவும் ஒரு சாதாரண மனிதர் என்று சொல்லமுடியாதளவுக்கு
கிறிஸ்தவமும் எப்போது நிறுவனமயப்படுத்தப்பட்டு விட்டது.
இப்படியாக
கடவுளாக்கி நிறுவனப்படுத்தப்பட்ட இடங்களிலிருந்து புத்தரும் இயேசுவும்
தப்பியோடுவார்களோ தெரியாது, ஆனால் நான் தப்பியோடிவிடுவேன். தப்பியோடுவது
என்பதன் அர்த்தம் இவ்வாறான இடங்களில் எனக்கு புத்தரோ இயேசுவோ அமைதியைக்
கொண்டு வந்து தரமாட்டார்கள் என்பதாகும்.
இன்று இலங்கையின் பிரபல்யமான
காட்டூனிஸ்டான அவந்த ஆட்டிக்கல நான் இலங்கையில் நடக்கும் Walk for Peace
குறித்து சரியாகப் பிரதிபலித்து ஒரு கார்ட்டூன் வரைந்திருக்கின்றார்.
*
புத்தருடைய
வாழ்க்கை வரலாற்றில், அவர் காசியப்பவைச் சந்திப்பது பற்றி அடிக்கடி
நினைவூட்டப்படுகிறது. மகாகாசியப்பாவே புத்தரின் மறைவின் பின் புத்ததர்மாவை
நிலைநாட்டியவரும் முதன்மைச் சீடரும் எனச் சொல்லப்படுகின்றார். ஸென் மரபில்
'சங்கம் (சங்கா) அமைத்த தந்தை' என புத்தரல்ல, மகாகாசியப்பதான் நினைவு
கூரப்படுகின்றார்.
ஸென் மரபில் மகாகாசியப்ப புத்தரைச் சந்திக்கமுன்னரே
காசியப்ப ஓர் அசிரியராக தனது ஐநூறு சீடர்களுடன் இருந்திருக்கின்றார்.
எனினும் காசியப்பாவின் வழிமுறை சடங்குகளை நிகழ்த்தி நிர்வாணமடைவதாக
இருந்திருக்கின்றது.
புத்தரைச் சந்திக்கும்போது காசியப்பவுக்கு
அவர்தான் தான் நிர்வாணமடைவதற்குரிய பாதையைக் காட்டக்கூடிய சிறந்த ஆசிரியர்
என்று உணர்ந்திருக்கின்றார். அப்போது ஓரிடத்தில் சடங்குகளா அல்லது அதைத்
தவிர்த்த புத்தரின் மத்தியபாதையா நிர்வாணமடைவதற்குச் சரியானது என்ற
கேள்விக்கு புத்தர் கொடுக்கும் பதில் சிறப்பானது. ஒருகட்டத்தில் காசியப்பா
தனது ஐநூறு சீடர்களுடன் புத்தரின் வழிக்குத் திரும்புகின்றார்.
ஸென்
(மகாயான புத்தம்) புத்தரை சாதாரண மனிதராக இருந்து நிர்வாணமடைந்தவர் என்று
தொடர்ந்து நினைவுபடுத்தியபடி இருக்க, தேரவாதமோ அவரை இன்னுமின்னும்
தெய்வமாக்கிக் கொண்டே போய்க் கொண்டிருப்பது. மேலும் இலங்கையில் இருக்கும்
தேரவாதபுத்தம் சடங்குகளுடன் அதிகம் பிணைந்திருப்பது. எனவே அதற்குள் கால்
வைப்பது என்பது முதலைகள் உள்ள குளத்தில் தாமரைப்பூ பிடுங்கப்போவது போல
ஆபத்தானது.
இன்னின்ன முறைதான் சரியென்று வாதிடுவது சரியல்ல. அப்படி
விவாதித்தால் 'எனது மத்தியபாதையை மறந்த மூடனே' என்று எங்களை புத்தர் எள்ளி
நகையாடக்கூடும். மேலும் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தால் இருமைகள் என்னும்
துவிதங்களுக்கும் எளிதாக சிக்கியும் விடுவோம். அது அவ்வளவு எளிதில் வெளியேற
முடியாத மர்மச்சூழலும் கூட.
ஆகவே இப்போது இலங்கையில் நடக்கும் இந்த
Walk for Peace யும், இலங்கையின் யதார்த்தத்தையும் பிரதிபலித்த இந்தக்
கார்ட்டூனையும் கொஞ்சம் மறப்போம் அல்லது தள்ளிவைப்போம்.
*
"புத்தரும்
அனைத்து புத்த வழித்தோன்றல்களும் ஞானமுற்று தம் முதல் போதனைகளை
வழங்கியபோது, மனவிழைவின் இரு எதிர்த்துருவங்களைச் சுட்டிக்காட்டினர் -
இன்பத்தில் திளைத்தல் அல்லது துன்பத்தில் அமிழ்தல். அவற்றுக்கிடையே
புலனின்பங்களில் மூழ்குபவர்கள் தாம் திளைக்கும் இன்பத்தால் ஒருபோதும்
நிறைவுறாமல் அமைதியிழந்து இறுதியில் துன்பமிக உழன்று நிலைகுலைந்து
தவிப்பர். இவ்வாழ் உழல்வு சம்சாரச் சூழல் மயக்கத்தின் பிரதிபலிப்பு.
அனைத்து
மனிதர்களும் இவ்விரு எதிர்த் துருவங்களில் சிக்கிக் கொள்கின்றனர்.
அவர்களால் தம்மத்தின் நடுவழியை ஒருபோதும் காணமுடிவதில்லை. புத்தர்கள்
இவ்விரு எதிர்த்துருவங்களால் விளையும் துயரைச் சுட்டிக் காட்டினர். எனினும்
நாம் தொடர்ந்து அத்துருவங்களுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதால், அவற்றை
மேலதிகமாக விழைவுவுறுவதால், மீண்டும் மீண்டும் அவற்றின் ஆதிக்கத்தின் கீழ்
வாழ்கிறோம். அவ்விரண்டும் மயக்கத்தின் வழிகள், தியானிப்பவரின் வழிகள் அல்ல.
அமைதிக்கான வழிகள் அல்ல என்கிறார் புத்தர்."
('புத்த தியானக் கருவூலம்,ப.38, வி.அமலன் ஸ்டேன்லி)
என்று அஜான் சா 'சுதந்திரத்தின் சுவை' நூலில் கூறுவதை நாம் இப்போது நினைவு கொள்வோம்.
***
(கார்ட்டூன்: Peace Walk by Awantha Artigala)



0 comments:
Post a Comment