கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நாகலிங்கப்பூ குறிப்புகள்

Wednesday, November 05, 2014

Haider (ஹதர்)

விஷால் பாரத்வாஜிற்கு ஷேக்‌ஷ்பியர் மீது பித்து இருப்பதை அவரின் கடந்தகாலத் திரைப்படங்களில் பார்க்கமுடியும். ஹதர் எனப்படும் இப்படம் 'ஹம்லட்'டின் பாதிப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கேன் காஷ்மீர் மக்களின் பின்னணி தேவைப்பட்டது என்பது இன்னும் புரியவில்லை. 'சுதந்திரம் என்பது பழிக்குப் பழி வாங்குவதில் அல்ல, வன்முறையைத் தாண்டி இருக்கிறது' எனச் சொல்லப்படுவதும் நல்லதொரு செய்திதான். ஆனால் சிக்கல் என்னவென்றால், ஒடுக்கப்படும் சமூகம்/இனம் மீதுதான் எல்லோரும் அறிவுரை மழைகளைப் பொழிகிறார்களே தவிர, ஒடுக்கும் அரசு/சமூகம் மீது மென்மையாகக் கூட ஏன் எதுவும் கூறத் தயங்குகின்றார்கள் என்பதுதான் புரியவில்லை.

இந்தத் திரைப்படம், மிகவும் 'சென்டிவ்வான' காஷ்மீர் சிக்கல்களை தெளிவாகச் சொல்லாது, குறிப்பிட்ட சில குடும்பங்களுக்குள் சுருங்கியதை ஒருபுறம் விட்டுவிடுவோம். கொல்லப்படும் உடலங்களும், பெருகும் இரத்தமும், துப்பாக்கிச் சூடுகளும் - இவற்றை- மிக வெளிப்படையாக வைக்கும் திரைப்படங்கள் என்னை நெருக்கமுறச் செய்வதில்லை. மிகவும் அந்தரத்தோடு அவற்றை கடந்துவிடவே என்னுடைய போர்க்கால அனுபவங்கள் எப்போதும் நினைவூட்டிக்கொண்டிருக்கும். இந்தப்படத்திலிருக்கும் அதீத வன்முறையான பல இடங்களை அவ்வாறே தாண்டியிருக்கின்றேன்.

இந்தப் படத்தில் விஷால் அப்பாவி முஸ்லிம்கள் காஷ்மீரில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவதை வெளிப்படையாகக் காட்டியிருக்கின்றார். அவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா அல்லது இல்லையா எனத்தேடுகின்றவர்களின் துயரமும் ஓரளவிற்குச் சொல்லப்படுகின்றது. கைதுசெய்யப்படுபவர்கள் பற்றிய விபரம் உரிய முறையில் அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தவேண்டும் என ஐ.நா வலியுறுத்துவதையும், அதில் கையெழுத்திட்டிருக்கின்ற இந்தியா மீறிக்கொண்டிருப்பதையும் காட்டுகின்றார். அதுமட்டுமின்றி எப்படி ஒன்றுமே தெரியாத அப்பாவிகளின் நகங்கள் பிடுங்கப்படுவதை, நிர்வாணமாக்கி மின்சார ஷொக் கொடுக்கப்படுவதை, ஆண்மை முற்றாகச் சிதைக்கப்படுவதை - இந்தியா இராணுவத்தின் உண்மையான முகத்தை- நேரடியாகக் காட்டியிருப்பதை வரவேற்றாக வேண்டும், காஷ்மீர் இயல்புநிலைக்கு வருவதற்கு அங்கே பெருமளவாய்க் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தை அகற்றுதல் முக்கியமானது என ஒரு குரல் கூறுவதும் கவனிக்கத்தக்கது.

இந்தியா இராணுவத்தின் முற்றுகைகளும், ஆண்களை/சிறுவர்களை அடையாள அட்டைகளுடன் ஊர்களின் பொதுவெளியில் கூடச்சொல்வது, அவ்வாறு வந்தவர்களை தலையாட்டிகளின் முன் நிறுத்துவதும், கைதுசெய்வதுமென... அப்படியே எனக்கு ஈழத்தின் இந்திய இராணுவகாலத்தை முன்னிறுத்தியது. எல்லா இடங்களிலும் உடல் பரிசோதனை நிகழ்த்தப்படுவதைக் கூட விஷால் ஒரு பாத்திரம் மூலம் தத்ரூபமாய்க் காட்டியிருப்பார். ஒருவர் தன் வீட்டிற்குள் நுழையாது வெளியிலே நிறைய மணித்தியாலமாய் நின்றுகொண்டிருப்பார். தாய் அவரை உள்ளே வாருங்கள் எனச்சொன்னாலும் வரவேமாட்டார். இதைப் பார்க்கும் தெருவில் ஒருவர், அந்த ஆணிடம் வந்து அடையாள அட்டையைக் கேட்டுவிட்டு, உடல் பரிசோதனையை செய்வார். இவையிரண்டும் முடிந்தவுடன் அந்த ஆண் வீட்டிற்குள் தன்பாட்டில் சென்றுவிடுவார். எப்படி இப்படி பரிசோதனைகளுக்கு மனிதர்கள் உட்படுத்தப்பட்டு, அது ஒருவித மனவியாதியாகி/சாதாரணமாகி விட்டிருக்கின்றது என ஒருவகையான எள்ளலில் இங்கே கூறப்படுகிறது.

மேலும், எப்படி இந்திய இராணுவத்தால், காஷ்மீரில் போராடும் இயக்கங்களுக்கு எதிரான முஸ்லிம் அமைப்புக்கள் வளர்த்தெடுக்கப்பட்டு, அவர்கள் சாதாரண பொதுமக்களை கொலைசெய்வதை இந்த 'தீவிரவாத' இயக்கங்களே செய்கின்றன என ஊடகங்களினூடு பொதுமக்களுக்கு செய்தியை தவறாக வழங்குகின்றன என்பதையெல்லாம் வெளிப்படையாக விஷால் வைப்பதைப் பாராட்டத்தான் வேண்டும்.

காஷ்மீர் போராட்டத்தை எதிர்க்கும் பெரும்பான்மையான அரசு/இராணுவம் சார்பானவர்கள் வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு பாகிஸ்தானே இந்த இயக்கங்களுக்கு ஆதரவும் ஆயுதமும் அளிக்கிறது என்பது. அந்த மக்களின் ஆதரவில்லாமல், எந்த ஒரு இயக்கமும் இயங்குதல் எளிதல்ல என்பது ஒருபுறமிருக்க, சரி அதையே உண்மையாக எடுத்தால் கூட, ஏன் கடந்தகாலங்களில் இதே இந்திய அரசு ஈழத்தில் தோன்றிய இயக்கங்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்ததென தம் அரசை நோக்கி இவர்கள் கேள்வி கேட்பதேயில்லை. சரி, ஈழத்தில் தமிழ்மக்கள் ஒடுக்குமுறையிலிருந்து விடுபடத்தான் ஆயுதங்களை இந்திய அரசு கொடுத்திருக்கின்றதென்று சொன்னால்கூட, ஏன் பல்வேறு இயக்கங்களை வளர்த்தது என்பது (இலங்கையரசோடு போரிடமட்டுமின்றி, தங்களை மீறி வளர்ந்தால், அவர்களுக்குள் சண்டைபிடிக்க எளிதாகவும்) பற்றியும் யோசித்தாகவேண்டும்.

இறுதியில் இந்தப்படம் ஹம்லட்டின் உளவியல் பிரச்சினைகளுக்குள் போனதும், முஸ்லிம்களின் வெவ்வேறுதரப்புக்களை எதிர்த்தரப்புக்களாகக் காட்டுவதாயும் சுருங்கிவிட்டாலும், ஏதோ ஒருவகையில் இந்திய இராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காஷ்மீரையும், அந்தமக்கள் அனுபவிக்கும் வேதனைகளையும் ஒரளவிற்குக் காட்டுவதை மறுத்துவிடமுடியாது.


 அம்ருதா பத்திரிகை

'அம்ருதா' இதழோடு எப்படித் தொடர்பு ஏற்பட்டதெனச் சரியாக நினைவினில்லை. அநேகமாய் 'காலம்' இதழில் வந்துகொண்டிருந்த படைப்புக்களினூடாக 'அம்ருதா'வின் நண்பர்கள் என்னைக் கண்டடைந்திருக்கக் கூடுமென நினைக்கின்றேன். 'அம்ருதா'விற்கு ஆக்கங்கள் அனுப்பச் சொல்லிக் கேட்டனர். அவ்வப்போது 'அம்ருதா'விற்கு படைப்புக்களைக் கொடுத்துக்கொண்டிருந்தபோது, 'அம்ருதா'வின் நண்பரொருவர் தொடர்/பத்தி எழுத அழைப்பு விடுத்தார். நான் விரும்பியபோது எழுதுபவனே தவிர தொடர்ச்சியாக எழுதுபவன் அல்ல என்பதால் சம்மதஞ் சொல்லத் தயக்கமாயிருந்தது. எனினும் தற்கால ஈழ/புலம்பெயர் படைப்புக்கள் குறித்து தமிழக வாசகர்களுக்கு அறிமுகஞ்செய்ய நல்லதொரு சந்தர்ப்பம் இது என்பதால் தவறவிடக்கூடாதென பின்னர் முடிவு செய்திருந்தேன்.

'வன்னி யுத்தம்' (அப்பு), 'அகாலம்' (புஷ்பராணி), 'பாலைகள் நூறு' (இரவி) என தனிப்பட்ட நூற்களை மட்டுமில்லாது 'கவிதைகளில் நகரும் வரலாறு', 'சில அரசியல் பிரதிகள்' என்பவற்றிலும் பல ஈழ/புலம்பெயர்ந்தவர்களின் படைப்புக்களை முன்வைத்து எழுதியிருக்கின்றேன். மேலும் ஈழத்துக்குப் போனபோது அங்கே தசாப்தங்களுக்கு மேலாய் கைவிடப்பட்டிருந்த என் கிராமம் பற்றியும், ஈழத்தில் சந்தித்த நண்பர்கள் பற்றியும் எழுத முடிந்திருந்தது. இந்தத் தொடரில்தான், பலர் தங்களுக்குப் பிடித்ததாய்க் கூறிய வான்கோவின் ஓவியங்களை ஆம்ஸ்டடாமில் நேரில் பார்த்த பரவசத்தில் 'வர்ணங்களில் தெறிக்கும் வாழ்க்கை'யினையும் எழுதினேன்.

இணையத்தைத் தவிர இலங்கையிலிருப்பவர்களை நேரடியாக அணுகமுடியாத சூழலில் - முக்கியமாய் வன்னி யுத்தம் போன்றவற்றை வெளிப்படையாக விற்கவே முடியாத ஈழத்துச்சூழலில்- ஏதோ ஒருவகையில் இலங்கையிலிருப்பவர்களையும் 'அம்ருதா'வினூடு நெருங்க முடிந்திருந்தது. 'சில அரசியல் பிரதிகள்' மீண்டும் இலங்கையில் ஒரு சஞ்சிகையில் மீள்பிரசுரமானதைத் தற்செயலாய்ப் பார்க்கவும் நேர்ந்தது.

சென்ற வருடங்கூட மெக்ஸிக்கோ போய், மாயாக்களின் கலாசாரத்தை நேரில் பார்த்து வந்த திளைப்பில் மிகப்பெரிய் பயணக்கட்டுரை (ஏழெட்டுப் பக்கங்களுக்கு மேல் வரும்) எழுதி அனுப்பியபோது, எவ்விதத் தயக்கமோ, வெட்டலோ இன்றி அப்படியே 'அம்ருதா' பிரசுரித்தது. எனக்கே பிறகு அந்த இதழின் பெரும் பகுதியை எடுத்துவிட்டேன் என்ற குற்றவுணர்வு சஞ்சிகையைப் பார்த்தபோது வந்தது. அந்தளவிற்கு என் மீது நம்பிக்கையும், எதையும் எழுதலாம், வெட்டமாட்டோம் என்று மிகப்பெரும் சுதந்திரத்தையும் அம்ருதா தந்திருக்கின்றது. 'அம்ருதா'வில் மிகப் பிடித்த இன்னொரு விடயம் என்னவென்றால், நிறைய ஈழ/புலம்பெயர் படைப்பாளிகளின் படைப்புக்களைத் தொடர்ச்சியாக வெளியிடுவது.

அச்சு ஊடகம் என்றவகையில் இங்கே 'வைகறை' பத்திரிகையிற்குப் பிறகு எனது ஆக்கங்கள் நிறைய வெளிவந்தது 'அம்ருதா'வில் என்றே நினைக்கின்றேன்.

ஒரு சஞ்சிகை தொடர்ச்சியாக வெளிவருவது அவ்வளவு எளிதல்ல. 'அம்ருதா' இப்போது 100வது சஞ்சிகையையாக மலர்ந்திருக்கின்றது.

மிகுந்த மகிழ்ச்சி, 'அம்ருதா' நண்பர்களுக்கு வாழ்த்து!


நேற்று எலிஸபெத் தனது நண்பர் ரிச்சர்ட் பற்றிப் பகிர்ந்திருந்தார். Eat, Pray, Love நூலை வாசித்ததவர்களுக்கு ரிச்சர்ட்டை எலிஸபெத் இந்தியாவிலுள்ள ஆச்சிரமத்தில் சந்திப்பது பற்றிய பகுதிகள் நினைவிருக்கக் கூடும். எலிஸபெத்தின் கடந்தகாலத்தில் உறைந்துவிட்ட மனதை ரிச்சர்ட்டே சற்று அதட்டிக் கதைத்து நிகழ்காலத்திற்குக் கொண்டுவருவார். பிறகான காலத்தில் எலிஸபத்தும் ரிச்சர்ட்டும் அமெரிக்காவில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது அவர்கள் கிராமப்புறமாய்க் காரில் போகும்போது, சனநடமாட்டமற்ற ஒரு வீட்டை உடைத்து உள் நுழைகின்றனர். எலிஸபெத் 2ம் மாடியிற்குப் போவதற்கான ஏணியைப் பிடித்துக்கொண்டிருக்க, ரிச்சர்ட் வீட்டிற்குள் நுழைந்து ஒவ்வொரு யன்னலினூடாகவும் குழந்தை போல மகிழ்ச்சியாக எட்டிப் பார்த்தார் என -இப்போது இறந்துவிட்ட- ரிச்சர்ட்டை எலிஸபெத் நினைவுகூர்கின்றார்.

இதேமாதிரி வீடுகளிற்குள் களவாக நுழைந்து பார்ப்பதை கொண்டாட்டமானதாய் ஒரு திரைப்படத்தில் (பெயர் மறந்துவிட்டது) பார்த்தது நினைவுக்கு வருகின்றது. ஒரு ஆணும் பெண்ணும் தற்செயலாய் எங்கோ ஓரிடத்தில் சந்தித்து நட்பாகின்றனர். பின்னர் இருவரும் வெவ்வேறு நகர்களுக்கு road trip செல்கின்றனர். ஒவ்வொரு புதிய நகரிலும் காணும் ஒரு குடும்பத்தைத் தெரிவுசெய்து, அவர்கள் வசிக்கும் வீடுகளை நோட்டம் விட்டு, பிறகு அந்தந்தக் குடும்பங்கள் வெளியே போகும்போது வீடுகளை நுட்பமாய் உடைத்து உள்நுழைவார்கள். அங்கேயே பல்வேறு தோற்றங்களுடன் வேடமிட்டு கலவியும் செய்கின்றனர் . ஓரிருமுறை வீட்டின் சொந்தக்காரர்கள் திரும்பிவர அரைகுறையில் எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடித்தப்புவார்கள். அதிலொரு காட்சியில் முதிய தம்பதிகள் திரும்பிவர இவர்கள் அரைநிர்வாணமாய் நிற்கும் காட்சியைப் பார்த்து அவர்கள் திடுக்கிடுவதை இப்போதும் நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கக்கூடியது.

ஹருகி முரகாமியின் புதிய கதையான Scheherazade ல் இப்படி வீடுடைத்து உள்ளே நுழையும் கள்ளப் பழக்கம் பற்றியே அதிகம் விபரிக்கப்படுகின்றது. தன் பதின்மங்களில் ஒரு இளைஞன் மீது காதல்கொண்டு Scheherazade அவனது வீடு எப்படியிருக்குமென ஒருநாள் பாடசாலை நேரத்தில் அவன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைகின்றார்.

அவ்வாறு நுழைந்து வெளியே வரும்போது ஏதாவது ஒருபொருளை அந்தப் பையனின் நினைவாக ஒவ்வொருமுறையும் எடுத்தும் கொண்டுவருவார். ஒருகட்டத்தில் அப்படி வீட்டிற்குள் அத்துமீறி நுழைவது இவருக்கு நிறுத்தவே முடியாத விளையாட்டாய் ஆகிவிடும். அதேசமயம் தான் அந்தப் பையனின் வீட்டுக்குள் நுழைவதை அவன் அறியவேண்டும் என்பதற்காய் சில பொருட்களை நுட்பமாய் விட்டுவிட்டும் வருவார். ஒருகட்டத்தில் தான் இப்படி அத்துமீறி நுழைவது கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸால் மாட்டவேண்டிவருமோ என்ற பயமும் Scheherazadeற்கு வருகின்றது. இந்த தொடர்ச்சியான நிகழ்வு எப்படி பின்னர் நிறுத்தப்படுகிறது என்பதை முரகாமி சுவாரசியமாகச் சொல்லியிருப்பார்.

இதேபோன்றுதானோ உலகில் செல்வந்தர்களாகவும்/செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருப்பவர்கள் சிலவேளைகளில் கடைகளில் பொருடகளைத் திருடச்செய்வதை அறியும்போது நினைப்பதுண்டு. பெறுமதியான எந்தப் பொருட்களை வாங்க பணமிருந்தும் ஏன் மிகச்சாதாரண பொருட்களை திருடுகிறார்கள், பிறகு பிடிபடுகின்றார்கள் என்று யோசிப்பதுண்டு. அது ஒரு குறுகுறுப்பான அவ்வளவு எளிதில் நிறுத்தமுடியாத செயல் போலும். அது ஒருவகையான "வியாதி' எனச் சொல்பவர்களும் உண்டு.

ஒரே ஒழுங்கில் எல்லாவற்றையும் வாழ விரும்புவர்களுக்கோ அல்லது சட்டம்/ஒழுக்கத்திற்குக் கட்டுப்படுபவர்களுக்கோ இவ்வாறான விடயங்களை அவ்வளவு எளிதாக விளங்கிக்கொள்ளவும் முடியாது.

0 comments: