கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஹெக்டரும், மகிழ்ச்சியைத் தேடும் பயணமும்

Monday, December 01, 2014

நாம் எம்மை யாரென்பதை அறிய இடையறாது தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பதைப் போல, நமக்கான மகிழ்ச்சியும், நிம்மதியும் எதுவாயிருக்குமெனவும் தேடுகின்றோம். ஆனால் மகிழ்ச்சியிலிருந்து மகிழ்ச்சியின்மையையும், நிம்மதியிலிருந்து நிம்மதியின்மையும் பிரிக்கமுடியாது என்பதே யதார்த்தமானது. மேலும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கும்போது இறுதியில் எந்த ஒன்றுமே மிச்சமாவதும் இல்லை. ஹெக்டர் ஒரு மனநல மருத்துவர். அவருக்குச் சொகுசான வாழ்வும், எதையும் செய்துகொடுக்கும் துணையிருந்தாலும் அவருக்கு வாழ்வு அர்த்தமில்லாதது போலத் தோன்றுகின்றது. அவரிடம் உளநலத்திற்காய் ஆலோசனை கேட்க வரும் நோயாளிகளையும், அவரால் நிம்மதியான/மகிழ்ச்சியான தளத்திற்கு நகர்த்த அவ்வளவு எளிதாய் முடிவதும் இல்லை. இது இன்னும் அவரை மனவழுத்ததிற்குள் இழுத்துச் செல்கின்றது.

உண்மையான மகிழ்ச்சி எதுவாயிருக்குமென அவருக்குக் கேள்வி வருகின்றது. அதை அறிவதன் மூலம் தனக்கு மட்டுமில்லை தன்னிடம் வரும் நோயாளிகளுக்கும் உதவமுடியும் என திடீரென்று பயணம் ஒன்றைத் தொடங்குகின்றார். அவரோடு இணைந்து வாழும் துணையான கிளாராவிற்கு இதில் அவ்வளவு சம்மதமில்லை என்பதை அறிந்தே ஹெக்டர் புறப்படுகின்றார்.

மகிழ்ச்சியைத் தேடும் அல்லது மகிழ்ச்சி என்பது எதிலிருக்கிறது எனத் தேடும் தன் பயணத்திற்கு ஹெக்டர் முதலில் சீனாவைத் தேர்ந்தெடுக்கின்றார். அந்தப் பயணத்தின்போது ஒரு பெரும் பணக்காரரை விமானத்தில் சந்திக்கின்றார். அவரிடம் தன் பயணத்தின் நோக்கம் பற்றி பகிரும்போது, மகிழ்ச்சி என்பது பணத்தில் இருக்கிறதெனக் கூறி ஹெக்டருக்கு ஷங்காயின் இடாம்பீக நள்ளிரவு வாழ்க்கையைக் காட்டுகிறார், அங்கே சந்திக்கும் இளம்பெண் ஒருவர் மீது ஹெக்டர் மையல் கொள்கிறார். அப்போது அவர் கிளாராவையும் நினைவுகூர்ந்து 'மகிழ்ச்சி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஒரே நேரத்தில் நேசிப்பதாலும் வரலாம்' என நினைத்துக்கொள்கிறார்.ஆனால் தொடர்ச்சியான நாட்களில் அந்தச் சீனப்பெண் ஒரு பாலியல் தொழிலாளி எனத் தெரியும்போது 'மகிழ்ச்சி என்பது சிலவேளைகளில் முழுக்கதையையும் தெரியாமல் இருப்பதிலும் இருக்கிறது' என தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதுகிறார்.

துயரமாய் முடிந்த இத்தேடலின் பின் பனிப்பிரதேசத்திலிருக்கும் திபெத்திய புத்தமடலாயத்தில் ஹெக்டர் போய்த் தங்குகின்றார். ஒருநாள் சூரிய வெளிச்சத்தில் மினுங்கும் கொடிகளைப் பார்த்து உற்சாகமாயும் மகிழ்ச்சியாகவும் நடனமாடும் துறவிகளைப் பார்த்து, இதிலென்ன இருக்கிறதென ஹெக்டருக்கு வியப்பாயிருக்கின்றது. ஒரு துறவி 'மகிழ்ச்சியிற்கான பாதையை, மகிழ்ச்சியில்லாத விடயங்களைத் தவிர்த்து ஒருபோதும் அடைய முடியாது' என மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதென்பதை வேறொருவகையில் ஹெக்டருக்கு உணர்த்துகின்றார்.

சீனா/திபெத் பயணத்தின்பின், ஹெக்டர் ஆபிரிக்க நாடொன்றுக்குப் பயணிக்கின்றார். அங்கே அவரது பல்கலைக்கழகக்கால நண்பர் வேலை செய்துகொண்டிருக்கின்றார். ஒரு ஆபிரிக்காப் பெண்மணியை இடையில் சந்திக்கும்போது, ஹெக்டரை அவர் விருந்திற்கு வரச் சொல்கிறார். உற்சாகமாய் விருந்தைக் கொண்டாடும் ஹெக்டர் திரும்பி வரும்வழியில் ஒரு குழுவினரால் ஆயுதமுனையில் கடத்தப்பட்டு மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டு வருகின்றார். அதிலிருந்து வெளியே வரும்போது மகிழ்ச்சி என்பது எவ்வாறாக இருக்கக்கூடும் என்பதைத் தன் அனுபவத்தினூடாக கண்டுகொள்கிறார். அதேசமயம் அவரது பல்கலைக்கழக நண்பர், தான் gay என்பதை ஹெக்டருக்கு உணர்த்தி, 'மகிழ்ச்சி என்பது நீங்கள் எதுவாக இருக்கின்றீர்களோ, அதன் நிமித்தம் நீங்கள் நேசிப்படுவதில் இருக்கிறது' என்கின்றார் அந்த நண்பர்.

இவ்வாறாக ஹெக்டர் தன் பயணத்தின்போது சந்திக்கும் ஒவ்வொருவரிடம் 'நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்களா? மகிழ்ச்சி என்பது என்ன?' எனக் கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பெற முயல்கின்றார். இடையில் இலண்டனில் இருக்கும் கிளாராவோடு ஸ்கைப் மூலம் உரையாட முயலும்போதெல்லாம், ஏதோ இருவருக்குமிடையில் விரிசல் வந்துவிட்டது மாதிரி இருவரும் உணர்கின்றனர். உரையாடல்களையெல்லாம் இடைநடுவில் நிறுத்தியும் கொள்கினறனர். மேலும், தொடக்கத்தில் ஹெக்டர் திடீரென்று பயணத்தைத் தொடங்கும்போது கிளாரா, ஹெக்டர் அவரது முன்னால் காதலியோடு இருக்கும் புகைப்படம் ஒன்றையும் கண்டுபிடிக்கின்றார். ஹெக்டர் சந்தோசத்தைத் தேடிப் போவதாய்ச் சொன்னாலும், அவர் தன் பழைய காதலியைத் தேடித்தான் செல்கின்றார் என்கின்ற சந்தேகமும் கிளாராவிற்கு வருகின்றது.


அதே போன்று தன்னால் முழுமையான சந்தோசமாய் இருக்க முடியாததற்கு, தன் பழைய காதலி சிலவேளைகளில் ஒரு காரணமாய் இருக்கலாமோ என்பதை அறிய, ஹெக்டர் ஆபிரிக்காவிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸிற்குப் பயணிக்கின்றார். விமானப் பயணத்தில் மூளைப் புற்றுநோயில் இறுதிக்கட்டத்திலிருக்கும் ஒரு பெண்ணைச் சந்திக்கும் ஹெக்டர், அவருடைய கடினபயணத்தில் உறுதுணையாக இருக்கின்றார். அப்போது அந்தப் பெண், 'மரணத்தைப் பற்றி அறியாத ஒருவராலும் வாழ்வைப் பற்றி அறிய முடியாது. நான் அதை அறிந்தவள்; எனக்கு மகிழ்ச்சியாக இருக்கத் தெரியும்' என மகிழ்ச்சியிற்கான புது விளக்கம் ஒன்றைக் ஹெக்டருக்குக் கொடுக்கின்றார். மேலும் மகிழ்ச்சி என்பது 'எப்படிப் பிறர் கூறுவதை நிதானமாய்க் கேட்பது என்பதைக் கற்றுகொள்வதிலும் இருக்கிறது' என்கின்றார். ஹெக்டர் அவ்வாறானதொரு கனிந்த மனிதரெனவும் அந்தப் பெண் குறிப்பிடுகின்றார்.

இறுதியில் லொஸ் ஏஞ்சல்ஸிற்குப் போகும் ஹெக்டருக்கு என்ன நிகழ்கின்றது? கிளாராவிற்கும் ஹெக்டருக்குமான உறவு என்னவாகிறது, ஹெக்டர் அவருக்குரிய மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்கின்றாரா என்பதை நீளும் திரைப்படத்தில் பார்க்கமுடியும்.

இப்படி மகிழ்ச்சி எப்படி இருக்குமென அறியப் பயணிக்கும் ஹெக்டரை ஒப்பிட்டுப் பார்க்க உடனே நினைவிற்கு வருவது 'Eat, Pray, Love' . அது பெண் ஒருவருடைய தன்னைப் பற்றிய தேடல் என்றால் இந்தத் திரைப்படத்தை ஆணின் மகிழ்ச்சியிற்கான தேடலென எடுத்துக்கொள்ளலாம். இரண்டுமே அதிக சலுகைகள் உள்ள வெள்ளையினத்தவர்களைப் பற்றியது (white privilege) எனினும் 'Eat, Pray, Love யில் எலிஸபெத் சென்ற ஆழத்திற்குள் ஹெக்டரின் பயணம் அமையவில்லை. எலிஸபெத் நாளொன்றின் சிறிய விடயங்களில் மகிழ்ச்சியைக் கண்டதுமாதிரி ஹெக்டர் தனக்கான சந்தோசத்தைச் சிறிய விடயங்களில் கண்டுகொள்ள முனையவேயில்லை. ஆண்களுக்குரிய இன்னுமின்னும் சாகசம் செய்து பார்ப்பதில் இருக்கும் கவனத்தினால், மிகச்சிறிய விடயங்களின் அழகான தருணங்களை கோட்டை விட்டு விடுகின்றனர் போலும்.

ந்தப் படம் மகிழ்ச்சியை/நிம்மதியைத் தேடிப்போகும் ஒரு ஆணின் பயணம் என்றளவில் என்னை கவர்ந்திருந்தாலும், இது வேறு பல சிக்கல்களையும் கொண்டிருக்கின்றது. சீனாப் பயணத்தின்போது ஹெக்டர் சந்திக்கும் ஒரேயொரு பெண்ணும் பாலியல் தொழிலாளியாகவே இருக்கின்றார். அதுவும் ஹெக்டர் இறுதியில் அந்தப் பெண் தன் அடையாளத்தை மறைத்து தன்னை ஏமாற்றியவர் என்று எதிர்மறையாகத்தான் அவரைப் பற்றி நினைக்கின்றார். ஆபிரிக்கா நாடொன்றின் பயணத்தின்போது, 'ஆபிரிக்கா' எனவே கூறப்படுகின்றது. ஆபிரிக்காக் கண்டத்தில் எத்தனையோ நாடுகள் இருக்கின்றன. அவற்றின் ஒரு பெயரைக் குறிப்பிட மறுத்து ஆபிரிக்கா எனப் பொதுப்படையாக குறிப்பிடுவது இன்னுமிருக்கும் காலனித்துவ மனோநிலையன்றி வேறெதுவாக இருக்கும்.

ஆபிரிக்க நாடொன்றில் நிகழும் விமானப்பயணத்தைக் கூட மிக மோசமாய் விமானத்திற்குள் சிகரெட் பிடிப்பவர்களாய், காலநிலைக்கு தாங்கமுடியா பழைய விமானமாய், இன்னும் கொண்டுபோகும் கோழி குலுக்கலில் முட்டையிடுவதாய்க் காட்டுவதெல்லாம் ஆபிரிக்கா கண்டத்து மக்கள் பற்றிய 'வெள்ளையினத்தவரின் பொதுப்புத்தியே' தான். அது மட்டுமில்லாது ஹெக்டரின் ஆபிரிக்காப் பயணம் முழுதும் ஆயுதக்குழுக்களும், இராணுவமுமே காட்டப்படுகின்றன, இவையெல்லாம் தற்செயலான நிகழ்வு என்று எவரும் சொல்லமுடியாதளவிற்கு காட்சிப்படுத்தப்படுகின்றது.

மகிழ்ச்சியை/நிம்மதியைத் தேடிக்கொண்டிருக்கும் அல்லது அது எதுவாய் இருக்குமென தேடிக்கொண்டிருப்பவர்க்கும், பயணங்களின் மீது தீராக் காதல் இருப்பவர்க்கும் இத்திரைப்படம் வசீகரிக்கவே செய்யும். ஆனால் அதேவேளை, காலனித்துவ எச்சங்களுடன் வெள்ளையின மேலாதிக்கத்துடன் எடுக்கப்பட்ட பல்வேறு காட்சிகள் எரிச்சலைத் தருவதையும் மறுக்கமுடியாது,

மேலும் மகிழ்ச்சி என்பது இன்னொருவரால்/இன்னொன்றால் தரப்படுவதில்லை. அது நம் அகமனதோடு சம்பந்தப்பட்டது. சிலவேளைகளில் பயணங்கள் மூடப்பட்டிருக்கும் அந்த அகமனதைத் திறந்துவிடக் கூடியன. மேலும் எதுவுமே நிரந்தரமில்லாதது போல, மகிழ்ச்சியும் கணப்பொழுதுகளில் மாறிவிடக்கூடியதே. அதைத் தெளிவாக உணராதவரை நாம் மகிழ்ச்சி என்கின்ற கருத்துருவாக்கங்களினால் மட்டுமே சிறைப்பட்டிருப்போம். ஹெக்டர் கண்டடைகின்ற பாதை அவருக்குரியது. ஒவ்வொருத்தருக்கும் அவரவர்க்கான தனித்துவமான வழிகள் என்றுமே திறந்தபடியே இருக்கின்றன. புத்தர் ஒருவகையில் கூற விழைந்ததும் இதையேதான்.

(Movie: Hector and the Search for Happiness)
(நன்றி: 'அம்ருதா' - கார்த்திகை இதழ்)

பிற்குறிப்பு:இத்திரைப்படம் Francois Lelordன் பிரெஞ்சுப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. நிஜவாழ்வில் Francois Lelord ஒரு உளவியல் நிபுணராக இருந்து, பல்வேறு வாழ்வு முன்னேற்றப் புத்தகங்களையும் எழுதியிருக்கின்றார். ஒருகட்டத்தில் அவ்வாறான நூற்களை எழுதுவதில் சோர்வு வந்து ஹொங்கொங்கில் நின்றபொழுது(2002ல்) ஹெக்டர் என்ற பாத்திரத்தை உருவாக்கி புனைவுகளை எழுதத் தொடங்குகின்றார். பின்னர், நீண்டகாலம் செய்து வந்த ஆலோசனை வேலையைத் துறந்து, சார்ஸ் தொற்றுநோய் பரவிய காலத்தில் வியட்னாமில் பணிபுரியச் செல்கின்றார். அங்கேயே அவர் தனது இன்றையகால துணையைச் சந்திக்கின்றார். இன்று பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்ட 'ஹெக்டரும் அவரது மகிச்சியைத் தேடும் பயணத்துடன்' ஹெக்டர் என்ற பாத்திரத்தை வைத்து மேலும் பல்வேறு நூற்களை அவர் எழுதிவிட்டார். 1953ல் பிறந்த Francois Lelord தற்சமயம் தனது துணையுடன் தாய்லாந்தில் வசித்து வருகின்றார்.

0 comments: