கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கே.ராமானுஜமும், வான்கோவும்....

Thursday, April 28, 2016

சென்ற வருடம் சென்னையில் நின்றபோது 'ஆதிமூலம்' நினைவாக நடந்த நிகழ்விற்கு 'ஸ்பேசஸிற்கு'ப் போகும் சந்தர்ப்பம் வாய்த்தது. அங்கே சி.மோகன் ஓவியர் கே.ராமானுஜம் பற்றி ஒரு நினைவு உரையை 'Mapping Mind and Matter' என்ற தலைப்பில் ஆற்றியிருந்தார். அத்துடன் ராமானுஜடன் படித்த/தெரிந்த பல ஓவியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அன்றைய நிகழ்வில் நடேஷ், தட்சிணாமூர்த்தி, டக்ளஸ், ட்ராஸ்கி மருது போன்றவர்களை கண்ட உற்சாகத்திலும், அலைகள் தழுவி வந்த இதமான இரவுக்காற்றாலும் முழுதாக அமிழ்ந்து சி.மோகனின் உரையைக் கேட்கமுடியவில்லை. நல்லவேளையாக, அந்த உரையை சிறுபுத்தகமாகவும் நிகழ்விற்கு வந்தவர்களுக்கு அச்சிட்டுத் தந்திருந்தார்கள். இப்போது ஆறுதலாக வாசிக்க, எனக்கு ஒரளவு தெரிந்த ராமானுஜம் இன்னும் நெருக்கமாகிப்போகின்றார்.
ராமானுஜத்திற்கும் வான்கோவிற்கும் இடையிலான ஒற்றுமைகளே எனக்குள் விரியத்தொடங்கின. வான்கோ போலவே ராமானுஜமும் மனப்பிளவிற்குள் ஆளானவர். வான்கோ போலவே ராமானுஜத்திற்கும் பாடசாலைப் படிப்பு பிடித்ததில்லை. ராமானுஜம் இடை நடுவில் பாடசாலையிலிருந்து விலகி ஓவியக்கல்லூரியில் சேர்கின்றார். தனித்தும், அதிகம் பேசாதவராகவும் ராமானுஜம் இருந்திருக்கின்றார். வான்கோவிற்கு தியோ இருந்ததுமாதிரி, ராமானுஜத்தின் திறமையைக் கண்டுபிடித்தவர் கே.பணிக்கர். ஆகவேதான் வீட்டால் புறக்கணிக்கப்பட்டு தெருக்களில் ஓரிடமில்லாது அலைந்து திரிந்த ராமானுஜத்தை, பணிக்கர் சோழமண்டலத்திற்குள் இருத்துகின்றார்.

வியம் வரைவதே அக/புற உலகினுள் இருந்து தப்புவதற்கு ஒரேயொரு வழியாக இருவருக்கும் இருந்திருக்கின்றது. வான்கோவின் ஓவியங்களை ஆம்ஸ்டடாமில் 'வான்கோ மியூசியத்தில்' நேரடியாகப் பார்த்தபோது பல விடயங்களை வான்கோவின் ஓவியங்களுக்கு அப்பால் அறிய முடிந்திருந்தது, வான்கோ தான் வரையும் ஓவியங்களை வீட்டின் முன்னால் பிறருக்கு காட்சியிற்கு வைப்பதைப் போல, ராமானுஜமும் ஓவியக்கல்லூரியில் தன் அறையின் முன் வைத்திருக்கின்றார். அவ்வப்போது வரைந்த ஓவியங்களை உணவு போன்ற நாளாந்த விடயங்களை மிகக்குறைந்த விலைக்குக் கொடுத்து தம் தேவைகளை இருவரும் நிறைவேற்றியுமிருக்கின்றார்கள்.

அதேபோல வான்கோ தான் வரையும் தாள்களை ஒரளவு ஈரமாக்கி வரைவது போலவே, ராமானுஜமும் தாள்களை ஈரமாக்கி காயமாக்கி பிறகு மெல்லிய ஈரத்துடன் தன் ஓவியங்களை வரைந்திருக்கின்றார். இருவரும் மனிதவுருவங்களை வரைவதிலும் ஆர்வமாய் இருந்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் உருவாக்கிய ஓவியங்கள் பல கனவுநிலையில் இருப்பவை. சிலவேளைகளில் சாதாரண மனிதமனங்களால் அவர்களின் எல்லைக்கு சிறகடித்துப் பறக்கமுடிவதும் அவ்வளவு எளிதாக இருக்காது. அதேபோல இருவருக்குள்ளும் பெண் பற்றிய ஏக்கம் ஆழமாகவும், அதேவேளை அந்த நெருக்கம் அவ்வளவு கிடைக்காதும் தவிர்த்தவர்கள்.

இன்று பல லட்சங்கள் மதிப்பிருக்கும் ராமானுஜத்தின் ஓவியங்கள் அவரிருந்த காலத்தில் அந்தளவிற்கு மதிப்பிருக்கவில்லை. விற்பனை செய்யப்படவுமில்லை. வான்கோவும் எப்படி அவரின் இறப்பின்பின் பிரபல்யமடைந்தார் என்பதைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை.

மேலும், வான்கோ தன் 37 வயதிலும், ராமானுஜம் தன் 33 வயதிலும் தமக்கான மரணத்தை தற்கொலைகள் மூலம் தேர்ந்தெடுத்தும் கொண்டனர்.

0 comments: