கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சி.மோகன்

Wednesday, May 04, 2016

மோகன் எனக்கு அவரின் 'புனைகளம்' இதழ்களினூடாகத்தான்  முதன்முதலாக அறிமுகமாகியிருக்கவேண்டும் என நினைக்கின்றேன். 2002ல் இலண்டன் போயிருந்தபோது சபேசனின் வீட்டில் புனைகளம் இதழ்களை முதன்முதலாக வாசித்திருக்கின்றேன். அதன்  நேர்த்தியான வடிவமைப்பும், நாட்டார் கலைகளுக்காய் அதிக பக்கங்களை ஒதுக்கியிருந்ததும் என்னை சடுதியாகவே இழுத்துக்கொண்டது. அப்போதுதான் ஒரளவு தீவிரமான வாசிப்பு நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த மாணவபருவம். சிற்றிதழ்களுக்குரிய மொழிக்குள் நுழைய எனக்குச் சற்று சிக்கலாயிருந்தாலும், புனைகளம் எனக்குள் ஒரு புதிய வெளியைத் திறந்திருக்கின்றதென இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது. நாட்டார் மற்றும் நுண் கலைகளுக்காய் தன்னை அர்ப்பணிந்திருந்த 'புனைகளம்' இதழ் ஏதோ ஒன்றில்தான் அ.மார்க்ஸ்(?) எழுதிய நாட்டார்கலைகளோடு பின்னிப்பிணைந்திருக்கும் சாதி பற்றியும் நாம் மிக அவதானமாக இருக்கவேண்டும் என எச்சரித்த கட்டுரையையும் வாசித்ததாகவே நினைவு. 

பின்னர் மோகன் ஒருகாலத்தில் 'தீராநதி'யின் கடைசிப்பக்கங்களில் நுண்கலைகளை அறிமுகஞ்செய்யும் பத்தியை ஆர்வமாய் வாசித்தது வந்ததும் நினைவிலிருக்கின்றது. இப்போது 'ஓநாய் குலச்சின்னம்' மொழியாக்கம் என் வசத்து இருக்கின்றது. இன்னமும் 'விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்' நாவல் கையில் கிடைக்கவில்லையெனினும் விரைவில் வாசிக்கவேண்டும் என்கின்ற ஆவல் இருக்கின்றது.

மோகன் தமிழ்ச்சூழலில் தேடித்தேடி அறிமுகப்படுத்திய விடயங்களுக்காய், நாம் அவர் இருப்பை அங்கீகரித்திருக்கின்றோமா என்று இப்போதும் எனக்குள் கேள்வி இருக்கின்றது. மோகனின் தேடலில்லாவிட்டால் இன்றுகூட ப.சிங்காரத்தை கண்டுபிடித்திருப்போமா என்று தெரியவில்லை. ஜி.நாகராஜனோடு இறுதிக்காலத்தில் நெருக்கமாய் இருந்து, ஜி.ரா பற்றி மோகன் எழுதிய பதிவை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது    இப்போது புனைவாய் எழுதிய ''விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்' கூட கலைகளில் மீது பித்துபிடித்து தன்னை உருவழித்து நம் சூழலில் அவ்வளவு கவனிக்கப்படாதிருந்த ஓவியரான ராமானுஜத்தைப் பற்றிய கதையல்லவா?

இவ்வாறு நாம் கண்டுகொள்ளாது எளிதாய் மூடிமறைக்கப்பட்டவர்களையும், கலைகளின் மீது பித்துப்பிடித்தலைபவர்களையும் தேடித்தேடி மோகன் நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கின்றார். இத்தகைய எழுத்தாளர்கள், ஓவியர்கள் நம்மிடையே வாழ்ந்தார்களா என ஒருவகையில் வியப்பையும் இன்னொருபுறத்தில் அவர்களைக் கவனிக்கத்தவறிய நம்மை வெட்கிக்கவும் செய்கின்றார்.

ராமானுஜம் பற்றிய சிறப்புரையை வழங்க வந்திருந்த மோகனைச் சந்தித்தபோது ஒரு நண்பர் என்னிடம், எத்தனையோ பேருக்கு இயல்விருது வழங்கும்போது ஏன் மோகனுக்கு எந்த விருதும் கொடுக்கவில்லை எனக் கேட்டார். நான் இயல்விருதை பிரதிநிலைப்படுத்துபவன் என்றில்லாவிட்டாலும் கனடாவிலிருந்து வந்தவன் என்பதால் அவர் என்னிடம் கேட்டிருக்கலாம். மோகனை நன்கறிந்த 'காலம்' செல்வம் போன்றவர்கள் இயல்விருதுக் குழுவில் இருக்கின்றனர்,இதைக் கவனித்திருக்கலாம் என நாங்களிருவரும் ஒருவகையான சோர்வுடன் தொடர்ந்து பேசியதாய் நினைவிருக்கிறது.

'விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரத்தில்' ஓரிடத்தில் 'நாலு காசுக்காக அவன் கால்கள் பூமியில் தரித்திருக்கவில்லை. அதனால்தான் அவனால் நிலவைக் கைப்பற்ற முடிந்தது' என ஓவியர் ராமனைப் பற்றி பணிக்கர் கூறுவதாய் வரும்.

அதையேதான் நானும் மோகனுக்குப் பொருத்திப் பார்க்கின்றேன். தங்களை தாங்கள் ஒன்றித்துப் போகும் கலைகளுக்காய் அர்ப்பணித்துப் போகின்றவர்கள், பொருளாதார வசதி குறித்தோ, தங்களை முன்னிறுத்தும் அரசியல்பற்றியோ அவ்வளவு யோசிப்பதில்லை.

ஆகவேதான் மோகன் என்னை இன்னுமின்னும்  வசீகரிப்பவராக இருக்கின்றார்.

(June 26, 2015)

2 comments:

natesh said...

ப்ரமாதம் ....அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை பிழை திருத்திய போது பலமுறை வாசிக்கவேண்டி வந்தது. என்னை அழவெய்த்த இடங்கள் உண்டு அதில்... குறைந்தது இரு முறையாவது .....இக்காலத்திலும் நாங்கள் நடத்தப்படும் விதம் இன்னும் மாறவில்லை..... மோகன் ஒரு அற்புதப்பொக்கிஷம்

5/05/2016 07:34:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி நடேஷ். 'ஓநாய் குலசின்னத்தை'யா நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்?

5/06/2016 11:50:00 AM