கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நிலம் தாண்டி நீளும் மழை

Friday, June 10, 2016

 Maheshinte Prathikaaram & Charlie (மலையாளம்)

டந்த வாரவிறுதியில் அவ்வப்போது பெய்துகொண்டிருந்த மழையோடு (ஆலங்கட்டி மழை உட்பட) இரண்டு மலையாளப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். Netflixல் இனிப் பார்ப்பதற்கு நல்ல திரைப்படங்கள் இல்லையென, 'How to be Single' என பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு 'Maheshinte Prathikaaram'ம் 'Charlie'யும் மிகுந்த குதூகலத்தைத் தந்திருந்தன. அந்தப் படங்களை பார்த்த நீட்சியில் 'கலை ஏன் நமக்குத் தேவை அல்லது எது கலையாகிறது' என ஒரு கட்டுரையை எழுதத் தொடங்கி, இடைநடுவில் எழுதுவதை விட அனுபவங்களோடு கரைதலே இனிதென வாரவிறுதியைக் கடந்து வந்தாயிற்று.

தமிழ்நாட்டு நிலப்பரப்பும், மக்களும் தொலைவிலிருந்த எனக்கு நெருக்கமானதிற்கு முக்கிய காரணம், சிறுவயதுகளிலிருந்து வாசித்த கலை, இலக்கியப் படைப்புக்கள் எனச் சொல்வேன். ஆனால் எழுத்தினூடாக எனக்குள் கட்டியமைக்கப்பட்ட நிலவரைவியலை தமிழகத் திரைப்படங்கள் எதுவுமே நெருக்கமாக நின்று கற்பிக்கவில்லை என்பது ஒருவகையில் துயரமானது. தமிழ்த்திரைப்படங்களில் கற்பித நிலப்பரப்புக்களே (அது தவறில்லையெனினும்) பெரும்பான்மையென்றாலும் அவைகூட என்னை அவ்வளவாகக் கவர்ந்ததில்லை.

ஆனால் மாறாக மொழியே பரிட்சயமில்லாத மலையாளத் திரைப்படங்கள் கேரளாவின் நிலப்பரப்புக்களை மிக விசாலமாகவும், ஆழமாகவும் எனக்குள் கட்டியெழுப்பியிருக்கின்றது. ஆகவேதான் தமிழ்நாட்டிற்குள் பயணிப்பதைவிட நிலம்சார்ந்து பயணிக்க கேரளா என்னை எப்போதும் ஈர்த்துக்கொண்டேயிருக்கிறது.

Maheshinte Prathikaaramலும் Charlieயிலும் கதைகள் மிக எளிமையானவை. ஆனால் கேரளாவின் நிலப்பரப்புக்களினூடும் அவர்களின் கலை/ கலாசாரங்களின் ஊடும் அவர்கள் அதை நம்மைப் பாதிக்கும் வகையாகக் காட்சிப்படுத்துகின்றனர். சார்ளியில் முக்கிய இரண்டு பாத்திரங்களும் ஒருமுறையேனும் இறுதிவரை சந்திக்கமாட்டார்கள். ஆனால் பல்வேறு சந்தர்ப்பங்களினூடாக தொய்வே ஏற்படாதமாதிரி கதையைக் கொண்டு சென்றிருப்பார்கள். துல்காருக்கு அவர் ஏற்கனவே நடித்த 'நீல ஆகாசம் பச்சைக்கடல் சுவர்ணபூமி' போல அலைகின்ற ஒருவனின் கதாபாத்திரந்தான் (இங்கே கேரளாவிற்குள் அலைகின்றார்). துல்காருக்கோ, பார்வதியிற்கோ உணர்ச்சிவசமான எந்த கடந்தகாலத்தையும் காட்டாமல் அலைகின்ற இருவர் என்கின்ற அலைவரிசையில் மட்டும் இணைவதைக் காட்டும் முறைகூட பிடித்திருந்தது.

Maheshinte Prathikaaram திரைப்படம் இன்னும் ஆழமாய் கேரளாவின் உட்கிராமங்களில் இறங்குகின்றது. சிறு ஊர்களிலிருந்து இருந்து பிறந்து வளர்ந்த நமக்குத் தெரியும், சிறுசிறு பிரச்சினைகளுக்கே உறவுகள்/நட்புகள் சண்டை பிடிப்பதும், பகைத்துக் கொள்வதும் பற்றி. இதில் ஊர்ச்சந்தியில் தற்செயலான நிகழும் ஒரு சண்டையைத் தடுக்கப்போகும் ஒருவன் இன்னொருவனால் அவமானப்படுத்துகின்றான். ஒரு அப்பாவியான அந்தப் பாத்திரம், எப்படி தன்னை அவமானப்படுத்தியவனை பழிவாங்குகின்றது என்பதையும் அந்தப் பழிவாங்குதல்வரை செருப்பைக் காலின் அணியமாட்டேன் என சூளுரைத்து செருப்புப் போடாமல் திரிவதுந்தான் முழுக்கதையும்.

துல்காருக்குள் இயல்பாகவே ஒரு துள்ளல் இருப்பதைப் போல, எனக்குப் பிடித்த பகத் ஃபாசிலுக்குள் எப்போதும் ஒரு தனிமை விரிந்துகொண்டிருக்கும் என எண்ணிக்கொள்பவன் நான். அவருடைய அநேக திரைப்படங்களில் எத்தகைய கதாபாத்திரமாய் இருந்தாலும், அந்தத் தனிமையை நாம் எளிதாகக் கண்டுகொள்ளமுடியும். இங்கே அவருக்கும் தந்தையிற்குமான அவ்வளவு பேசாத உறவு அந்தளவு இயல்பானது, அவரின் காதல் முறிவின்போது, 'நீ அவளை நிறைய நேசித்தாய் அல்லவா?' எனக் கேட்பது, ஊர் மக்கள் முன்னர் வேட்டி கழன்று விழ அடிவாங்க அவமானப்பட்டபின், 'அடித்தாயிற்று அல்லவா, இனி அவனை விட்டுவிடுங்கள், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுங்கள்' என தந்தையிற்கும் மகனுக்குமான ஒரு இடைவெளி இருந்தாலும் அதை மீறி உள்ளேயூறும் நேசம் அருமையாக வந்திருக்கும்.

இந்த இரண்டு திரைப்படங்களிலும் நிலப்பரப்பு, நாயகர்கள் என்பதற்கு அப்பால் பெண்களின் பாத்திரங்களும் அருமையாக அமைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதைகள் ஆழமாக இல்லாவிட்டால் கூட, கதாபாத்திரங்களை வலுவாக்கிவிட்டால் ஒரு திரைப்படம் நம்மால் எளிதில் கடக்க முடியாதவையாக மாறிவிடுகின்றது என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள்.
எது கலையாக மாறுகிறது அல்லது ஏன் கலை நமக்குத் தேவையாகிறது என்பதற்கு இந்த இரண்டு திரைப்படங்களும் சில புள்ளிகளை என்னளவில் விட்டுச் சென்றிருந்தன.

மகிழ்ச்சியான மனோநிலையின் தீற்றை ஏதோ ஒன்று உங்களில் பற்றவைத்துவிட்டால் அந்த நாள் இன்னும் அழகாவிடுகிறது. அந்தத் தருணங்களை உருவாக்கியவர்களை நன்றியுடன் நினைத்துக்கொள்ளத் தொடங்கிவிடுவீர்கள். மழை பிறகு மனதிற்குள்ளும் பொழியத் தொடங்கிவிடும்.

(மே 19, 2016)

0 comments: