கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஜெயமோகனின் 'வெண்கடல்'

Sunday, June 24, 2018

வெண்கடலில் இருக்கும் கதைகளை ஏற்கனவே ஜெயமோகனின் தளத்தில் வாசித்தவையென்றாலும், நூல் வடிவில் இன்னொருமுறை பொறுமையாக கடந்த சில நாட்களாய் வாசித்துக்கொண்டிருந்தேன். பலருக்குப் பிடித்த 'அறம்' கதைகளின் தொடர்ச்சியில் எழுதப்பட்ட கதைகள் என்பதால் இவையும்  'உணர்ச்சி' பொங்க எழுதப்பட்டிருக்கின்றன.  ஜெயமோகனின் கதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒருவர்க்கு இதில் ஜெயமோகன் பாவித்த எழுத்து நடையை எளிதாக வித்தியாசம் கண்டுகொள்ளமுடியும். தற்கால சிறுகதைக்கான வழியை விட்டு பின்நகர்ந்து, இதிலுள்ள அநேக கதைகள் உரையாடல்களால் மட்டும் நகர்த்திச் செல்லப்படுகின்றது. எனவே எளிமையும், பாத்திரங்களிடையிலான மெல்லிய முரண்களும் எந்த வாசகரையும் எளிதில் உள்ளிழுத்துக்கொள்ளும்.

தமிழர்களாகிய நாம் எல்லாவற்றிற்கும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.  காட்டும் அன்பில் மட்டுமல்ல, நடைமுறை அரசியலிலும் கூட அப்படி அந்த 'உணர்ச்சிவசப்படல்களை' எங்கும் எளிதாகக் காணமுடியும். அந்த நூலிழையைப் பின்பற்றி ஜெயமோகன் அறத்திலும், வெண்கடலிலும் கதைகளை இழைத்தபடி போகின்றார்.
நடைமுறையில் எப்படி பெரும் உணர்ச்சிவசப்படல்களின் பின் நமது அறிவு சற்று வேலை செய்யத்தொடங்குமோ, அப்படித்தான் ஜெயமோகனின் இந்தக் கதைவரிசைகளைத் தாண்டிவரும்போது இவ்வளவு உணர்ச்சிக்கலவை சற்று அதிகமோ என்று எண்ணத்தோன்றுகின்றது. உரையாடல்களின் மூலம் கதை நகர்த்துவது ஒருகட்டத்திற்குப் பிறகு ஆபத்தாகிப்போய், அலுப்படையச் செய்துவிடுகிறன.

மேலும் எல்லாவற்றையும் உரையாடல்களினால் சொல்லிவிட்டால் வாசிப்பவர்க்கான வெளி என்னவாக இருக்கப்போகின்றது. ஒருவகையில் ஜெயமோகன் திரைப்படங்களில் எழுதப்போனபின் வந்த மாற்றமோ இது எனவும் எண்ணத்தோன்றுகின்றது. நமது பெரும்பாலான திரைப்படங்களில் இரசிகர்களுக்கு ஒன்றும் விளங்காதமாதிரி எல்லாவற்றையும் வெளிப்படையாகக் காட்டுவார்கள். ஜெயமோகனுக்கும் அந்தப் பாதிப்பு வந்திருக்ககூடுமோ என யோசிக்கத்தோன்றுகின்றது. இதை 'இரவு', 'உலோகம்' போன்ற நாவல்களிலும் அடையாளங்காணமுடியும்.

இந்த இடத்தில்தான் அசோகமித்திரன் நினைவிற்கு வருகின்றார். அவர் எந்தளவிற்குக் கச்சிதமாய் உரையாடல்களைப் பாவிக்கின்றார் என்பதை அவரின் கதைகளை வாசிக்கும் நாம் அறிந்துகொள்ளலாம். இன்னும் நிறைய உரையாடப்போகின்றாரோ என நினைக்குமிடத்தில் (சிலவேளைகளில் அதற்குமுன்னரே) நிறுத்திவிட்டு வாசிக்கும் நம்மை மேலும் கதையை வளர்த்துவிடும் சுதந்திரத்தைத் தந்துவிடுகின்றார். மேலும் எத்தகைய உணர்ச்சிமயமான கதையாக இருந்தபோதும் அசோகமித்திரன் திளைக்க திளைக்க உணர்ச்சிகளில் எம்மை அமிழ்த்துவதும் இல்லை. உதாரணத்திற்கு 'அம்மாவுக்கு ஒரு நாள்' என்பதை மிகுந்த உணர்ச்சிமிகுந்த கதையாக அ.மி எழுதியிருக்கலாம்.


தை, அம்மா ஒருநாள் மாலை படம் பார்க்கப் போக விரும்புவதாக வேலைக்குப் போகும் மகனிற்குச் சொல்கிறார். மகன் சும்மா வீட்டில் கிடவுங்கள் எனச் சொல்லிவிட்டு வெளியில் செல்கின்றான். எனினும் வேலையில் இருக்கும்போது, எங்களுக்கு எல்லாவற்றையும் செய்யும் அம்மா, வேறு எதை விரும்பிக் கேட்டார், இதையாவது அவருக்குச் செய்வோம் என நினைத்து வேலைமுடிந்து  வீட்டிற்குத் திரும்ப முனைகிறார். ஆனால் சந்தர்ப்பவசத்தால் அவரால் நேரத்திற்கு வீட்டிற்குத் திரும்பமுடியவில்லை. இறுதியில்  வீடு செல்லும்போது மிகுந்த குற்றவுணர்வுடன் திரும்புகிறார். அப்போதுகூட அம்மா அதைப்பற்றிய எந்தக்குற்றச்சாட்டுமில்லாது, அவருக்குத் தேநீர் தயாரித்துத் தரவா என்று கேட்கிறார். அந்தளவுதான். ஆனால் கதையை வாசித்து முடிந்தவுடன் நம் எல்லோரையும் நமது அம்மாக்களைப் பற்றி யோசிக்க வைத்துவிடுகின்றார். நாம் நம் அம்மாக்களுக்கு விரும்பியதை எப்போதெனினும் செய்திருக்கின்றோமா என இப்போதும் அந்தக்கதையை நினைக்கும்போது அசோகமித்திரன் நினைக்க வைக்கின்றார்.

இங்கே எந்த உணர்ச்சிகளோ, உசுப்பேத்தல்களோ இல்லை. ஆனால் மனதைவிட்டுக் கதை அவ்வளவு எளிதில் அகலவில்லை..
வெண்கடலில் முதலிலிருக்கும் கதையான 'பிழை'யில், காசியில் அலைந்துகொண்டிருப்பவனுக்கும் ஒருசாமியாருக்கும் இடையில் நடக்கும் உரையாடல் என்றாலும் அவனின் ஊடாக காந்தி கொண்டுவரப்படுகின்றார். காந்தி கொண்டுவரப்படுவதில் சிக்கலில்லை. ஆனால் காந்தியினூடாக ராமன் glorify செய்யப்படும்போதுதான் நமக்குப் பிரச்சினை தொடங்குகின்றது. அவரவர் தங்களுக்குப் பிடித்த கடவுளர்களோடு இருக்கலாம்.

'பிழை' கதையில் ராமன் திரைப்படத்தைக் காந்தி பார்க்கின்றார். திரையில் படத்தை ஆரம்பிக்கும்போது ராம் ராம் என்று கண்ணீர் மல்குவதோடு அல்லாது, இருகரம் கூப்பி தொழுதபடி இருக்கின்றார். உண்மையை எப்போதும் தேடிக்கொண்டிருக்கும் காந்தியிற்கு ராமன் பிடித்தவராய் இருந்தபோதும் அவர் தனது 'உண்மை' திரையிற்குள்ளால்தான் வருமென்று நம்பும்போது ராமபக்தர்களுக்கு மெய்கூச்செறியக்கூடும். ஆனால் காந்தியை அவரது பலவீனங்களினூடாகவும் நேசிக்க விரும்பும் ஒருவருக்கு, அய்யா ஜெயமோகன் போதுமய்யா உமது திருவிளையாடல், காந்தியைக் காந்தியாக விடுமென அவரைப் பார்த்துச் சொல்லத்தான் தோன்றும்.

காந்தியைத்தான் ஜெயமோகன் தனக்குரிய காந்தியாக வனைய விரும்புகின்றார் எனில், 'குருதி' மற்றும் 'நிலம்' கதைகளில் மண்தான் உயிரைவிடப் பெரிசு என்று சேத்துக்காட்டாரைக் கொண்டு உசுப்பிவிடும்போது நமக்கு வியப்பேற்படுகிறது. நம் சொந்தமண்ணை எந்தப் பொழுதிலும் கைவிடக்கூடாது என்று நிகழ்ந்த ஈழப்போராட்டம் குறித்த ஜெயின் 'கோணல்' பார்வை என்னவென்பதை நாமனைவரும் அறிவோம். அப்படியான கருத்துள்ள ஒருவர், 'மண்தான் நமது மானம், அதைச் சொந்தம் கொண்டாடுகின்ற அந்நியரைக் கூறுபோடு' என மோகினியாட்டம் வார்த்தைகளில் ஜெ ஆடும்போது எனக்கென்னவோ அவருக்குள் சோட்டாக்கரை பகவதியம்மன் தான் உள்நுழைந்து ஆடுகின்றாரோ என்ற அய்யம் வந்தது.

'இந்த மண் எங்களின் சொந்தமண்' போன்ற பாடல்களை என 6-7 வயதுகளில் கேட்டு வளர்ந்த, 'சிங்களவனிற்கு யாழ்ப்பாண கறுத்தக்கொழும்பான் மாங்காய்தான் பிடிக்கும், உள்ளே வரவிடப்போகின்றீர்களா(அதற்கு வேறொரு அர்த்தம் இருந்தது என்பதை பிறகு வளர்ந்தபோது அறிந்தபோதும்) என பத்து வயதுகளில் புலிகளின் வாஞ்சியர் வந்து பள்ளிக்கூடத்தில் உணர்ச்சிபொங்கப் பேசியதைக் கேட்ட எனக்கு, மண்ணா மசிரு, உசிருதான் எல்லாவற்றிற்கும் முக்கியமென  என்றோ விளங்கியபோது, ஜெ -அதுவும் தாழ்த்தப்பட்ட (?) சாதியொன்றிற்குள் வைத்து- இந்தக் கதையைச் சொல்லும்போது, இப்போதுதான் அவர்களே கொஞ்சமேனும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளார்கள், அவர்களாக எது வேண்டுமென அவர்கள் அறிந்து வரட்டுமென (நமது ஆயுதம் எதுவென எதிரியே தீர்மானிக்கின்றான் என மாவோ சொன்னது உதாரணம் சொல்வது ஜெயிற்குப் பிடிக்காவிட்டாலும்) நாம் சொல்லிவைப்போம்.

வெண்கடலிற்குள் பிடித்த கதைகள்  சில இருக்கின்றன. 'அம்மையப்பம்' , 'கிடா' மற்றும் மிக எளிமையாகத் தெரிந்தாலும் நம்மைக் கிராமத்திற்குள் நனையவைக்கும் 'தீபம்'  போன்றவை குறிப்பிடத்தக்க கதைகள்.

கதைகளில் குடிப்பவர்களாகவும் கஞ்சா புகைப்பவர்களாகவும், புகை பிடிப்பதிலும் பிரியமுடைய மனிதர்களாகவும் பாத்திரங்களை வார்க்க முடிகின்ற ஜெயமோகனால் ஏன் அதற்கு வெளியே குடிப்பவர்களையோ, புகைபிடிப்பவர்களையோ கூட்டங்களில் வர அனுமதிக்காதவராகவும், எவர் இறந்தாலும் இந்த விடயங்களைப் பெரும் விடயமாகச் சுட்டிகாட்டி உலகில் பெரும்பாவத்தைச் செய்தவர்களாகவும் எழுதுகின்றார் என்று யோசித்துப் பார்ப்பதும் சுவாரசியமாக இருக்கிறது. மேலும் நீலிகளையும், கொற்றவைகளையும் வியந்து எழுதித் தீர்க்கின்ற அவரால், ஏன் நிகழில் பெண்களுக்கான இடத்தைக் கொடுக்க மனம் முடிவதில்லை என்ற திசையிலும் சென்று சிந்திக்கலாம்.

பதின்மங்களில் பாலகுமாரனைப் போன்று பாதித்தவர் வேறு எவருமில்லை. என்னை வழிகாட்ட வந்த குருபோல நினைத்துக்கொள்ளுமளவிற்கு அவர் மீது 'பக்தி' வைத்திருந்தவன் நான். பின்னாட்களில் அவரது எழுத்துக்களை வாசிக்கப்போனபோது என்னால் முழுதாக வாசிக்க முடியாமைக்குப் போனதற்கு அவருடைய நாவல்கள் அநேகம் உரையாடல்களாலே வளர்க்கப்பட்டமை ஒரு முக்கிய காரணமாகக் கண்டுகொண்டேன். ஆனால் அசோகமித்திரனின்  'இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ளவேண்டுமோ அல்லது 'அம்மாவுக்கு ஒருநாளோ' 1950களில் எழுதியிருந்தாலும், இப்போது  அரை நூற்றாண்டுக்குப் பிறகு வாசித்தாலும் அலுக்கவேயில்லை.

இதை உரையாடல்களாலும், உணர்ச்சிக்குளத்திற்குள்ளும் அமிழ்த்தி அறமும் வெண்கடலும் எழுதிய ஜெயமோகனுக்கு சொல்ல வேண்டுமென்றில்லை. எல்லாம் அறிந்த எனக்கா அறிவுரை என்பார் அவர். அதுபோலவே முரண்பாடுகளுக்கு அப்பாலும்  அவர்மீது நமக்குள் மிதந்துகொண்டிருப்பதும் அக்கறை அல்லவா?

(Jun, 2016)

0 comments: