கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ரொறொண்டோவில் தமிழ்ப்புத்தகங்கள் இரவல் பெறுவது பற்றி..

Sunday, November 11, 2018

1.
ரொறொண்டோ மாநகரசபையின் கீழ் 100 நூலகக் கிளைகள் இருக்கின்றன. அதில் 24 கிளைகளில் தமிழ் நூல்களை நாம் நேரடியாகச் சென்று எடுக்கும் வசதி இருக்கின்றன. ரொறொண்டோவில் -ஆங்கிலம்/பிரெஞ்சு தவிர்ந்த- பிறமொழிகளில் சீன மொழிக்கு அடுத்து, தமிழ்ப்புத்தகங்களை நூலகங்களில் வந்து எடுக்கும் தமிழர்களே இருக்கின்றார்கள். தமிழுக்குப் பிறகே இந்தி உள்ளிட்ட ஏனைய மொழிகள் இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.
எனினும் கடந்த நான்கு வருடங்களில் சடுதியாக தமிழ்ப்புத்தகங்களை நூலகத்தில் எடுத்து வாசிப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 44%மாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது. 2013ல் ரொறொண்டோ நூலகங்களில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகங்கள் 163, 077 ஆகவும், பின்னர் 2017ல் 102,015 ஆகி வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
இன்றைய கூட்டத்தில் இதற்கான காரணங்கள் என்ன, எப்படி இதை மாற்றமுடியும் என்பது பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டிருந்தது. நான் இந்தக்கூட்டத்திற்குப் போனபோது 2 கேள்விகள் கட்டாயம் கேட்கவேண்டும் என்றே போயிருந்தேன். அதே வேண்டுகோளை வந்திருந்த பிறரும் கூறியதால் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
(1) ஈழத் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் ரொறொண்டோவில் இலங்கைப் புத்தகங்கள் அரிதாகவே வாசிக்க நூலகத்தில் கிடைக்கின்றது.
(2) புலம்பெயர்ந்து எழுதும் எழுத்தாளர்களின் படைப்புக்களும் குறைவாகவே காணக்கிடைக்கின்றன (ரொறொண்டோவில் கிட்டத்தட்ட ஒவ்வொருமாதமும் ஏதோ ஒரு தமிழ்ப்புத்தகம் வெளியிடப்படுகின்றது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்).
குறைகேள் நிகழ்வில், வாசிப்பு 44% குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. அடுத்தடுத்த தலைமுறைகள் தமிழ்ப்புத்தகங்களை வாசிப்பது குறைவு என்பது ஒரு காரணம் என்றாலும், இப்போது அதிக தமிழர்கள் ரொறொண்டோவைத்தாண்டி (ரொறொண்டோவில் வீட்டுவிலை அதிகரிப்பால்) புறநகருக்கு வாழச்சென்றுகொண்டிருப்பதாலும் இந்த வீழ்ச்சி நடந்திருக்கலாம் என்று இலங்கதாஸ் கூறியது கவனிக்கத்தக்கது.
மற்றொரு முக்கிய காரணம் நூலகத்திற்கான புத்தகங்களை எப்படித் தெரிவு செய்கின்றார்கள் என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், கடந்த சில வருடங்களாக ஒரு குறிப்பிட்ட பதிப்பாளர்களின் புத்தகங்களை மட்டுமே இங்கே பார்க்க முடிகிறது என்பதையும் சொல்லியாகவேண்டும். உண்மையில் நூல்களைத் தெரிவு செய்யும் முறையானது இன்னும் சனநாயகத்தன்மையுடன் பல்வேறுவகையான வாசிப்பு நிலைகளைக் கொண்டவர்களின் ஒரு குழுவாக இருக்கவேண்டும் என்பதையும் நாம் பரிந்துரைக்கவேண்டும்.
ரொறொண்டோ நூலகத்தில் வேலை செய்பவர்களும், அதற்கு வெளியே இருக்கும் சிலரும் சேர்ந்தே இந்த நூல்களை வாங்கிக் கொள்கின்றனர். சிக்கல் என்னவென்றால் இன்றைய கூட்டத்திற்கு நூல்களை வாங்கிக்கொடுப்போர் எவருமே வரவில்லை என்பதேயாகும். நான்கு வருடங்களுக்கு முன் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டொலர்கள் தமிழ் நூல்கள் வாங்க நூலகத்தால் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்றறிந்தபோது வியப்பாக இருந்தது. ஆனால் நமக்குக் கிடைக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை/தரம் போன்றவற்றைப் பார்க்கும்போது அந்த நிதி உரியமுறையில் செலவு செய்யப்படவில்லை என்பதில் ஏமாற்றமாகவே இருக்கின்றது.
எத்தனையோ ஆண்டுகள் ஆனபின்னும், தமிழ் நூல்களை வாங்கி நூலகத்தில் சேர்ப்போர் இற்றைவரை பொதுவெளிக்கு -புலம்பெயர்ந்து புத்தகங்களை வெளியிடும் எம்மிடம்- இன்னும் வரவில்லை என்பது ஒருபுறம் இருக்க, இத்தனை ஆண்டுகளானபின்னும் (முன்னராவது போர் இலங்கையில் நடந்தது என்ற ஒரு காரணம் இருந்தது) இலங்கையில் இருக்கும் வெளியீட்டாளர்களுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தாமல் இருப்பதை அவ்வளவு எளிதில் கடந்து செல்லமுடியாது.
இலங்கையில் இருந்து கவனிக்கத்தக்க படைப்புக்கள் என வைத்துக்கொண்டால் ஒரு நூறு புத்தகங்கள் வருடமொன்றுக்கு வருமென்றால், அதை சற்றுத்தேடி இங்கே நூலகங்களுக்கு எடுப்பதற்கு இவர்களுக்கு ஏன் ஏலாமல் இருக்கின்றது என்பதும் புரியவில்லை.
ரொறொண்டோ நூலக -தமிழ் தெரியாத- பொறுப்பாளர் ஒருவருடன் தனிப்பட்டு உரையாடியபோது, பல பதிப்பகங்கள் இப்படி நூல்களை வாங்கும்போது, தமது பதிப்புக்களைக் கொடுக்க விரும்பவில்லை எனச் சொன்னார். அப்படி இருக்கமுடியாதென நானும் இன்னொரு நண்பரும் அவருக்குச் சொன்னோம். பதிப்புரிமை சார்ந்து தமது நூல்களைக் கொடுக்க வெகு சில பதிப்பகங்கள் தயங்கி இருக்கலாம். இவ்வாறு ரொறொண்டோ நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொடுக்க மறுத்திருந்தால் யாரேனும் பதிப்பாளர்கள் (இந்திய/இலங்கை) இருந்தால் அறியதரலாம்.
ஏற்கனவே இருக்கும் ஒரு பொறிமுறையை முற்றாக நிராகரித்து, புதிதாக ஒன்றைத் தேடவேண்டும் எனச் சொல்லவில்லை. இருக்கும் பொறிமுறையை இன்னும் செப்பனிடுவதற்கான புதிய அடிகளை ரொறொண்டோ நூலக தமிழ்ப்புத்தகத்தேர்வில் நாங்கள் எடுத்துவைக்க வேண்டியிருக்கின்றது என்பதாலே இதை எழுதுகின்றேன். 2.
நாங்கள் எடுக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையை வைத்தே ஒவ்வொரு மொழிக்கும் ஒதுக்கும் நிதி ரொறொண்டோவில் இருக்கின்றது. ஆங்கிலம்/பிரெஞ்சு தவிர்ந்து கிட்டத்தட்ட 40 மொழிகளில் நூல்களை இங்கே நூலகங்களுக்கு எடுக்கின்றார்கள் என்பதால், அவர்களின் வேலையின் கடினத்தையும் ஒருவகையில் புரிந்துகொள்ளமுடிகின்றது.
இயன்றளவு தமிழ் நூல்களை நூலகத்தில் எடுப்பதற்கு நாமெல்லாம் முயற்சிக்கவேண்டும். நானெல்லாம் சாதாரணமாக நூலகத்திற்குப் போனாலே ஏதேனும் ஒன்றிரண்டு தமிழ்ப் புத்தகங்களை கூடவே எடுத்து வருகின்றவன். அத்தோடு மூன்றுவாரத்தில் வாசித்து முடிக்கின்றேனோ இல்லையோ எனக்குப் பிடித்த தமிழ்ப் புத்தகங்கள் இருந்தால் பத்து/பதினைந்து என அள்ளிக்கொண்டு வருகின்றவன். அப்படி எடுக்கையில் ஒருநாள் தவணை பிந்தினால் நிறையப் பணத்தை அபராதமாகச் செலுத்தவேண்டி பலமுறை வந்திருப்பினும், புத்தகங்களுக்கும்/பொதுப்பாவனைக்கும் போகும் பணம் ஒருபோதும் வீணாகாது என்பதால் அது குறித்து ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. அண்மையில் 'அந்நியனை'ப் பார்த்து எடுத்துவந்து எங்கையோ தவறவிட்டதால் 25டொலர்கள் தண்டப்பணமும் கட்டியிருக்கின்றேன்.
எமது பிற நண்பர்களையும் நிறையப் புத்தகங்களை எடுக்க வைக்க முயற்சிக்கலாம். மேலும் உங்களுக்கு அருகில் இருக்கும் நூலகத்தில் (24 கிளைகளில் மட்டும் தமிழ்ப்புத்தகங்கள் இருக்கின்றன) தமிழ்ப்புத்தகங்கள் இல்லையென்றாலும், நீங்கள் இணையத்தில்/நேரில் ஓடர் கொடுத்தால் வேறு கிளைகளிலிருந்தாலும் அந்தப் புத்தகங்களை உங்கள் கிளையில் கொண்டுவந்து தருவார்கள். அப்படியும் தமிழ்ப் புத்தகங்களை எளிதாக இரவல் பெறலாம்.
மற்றது முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில் மட்டும் எழுதுவதோடு நின்றுவிடாது இவ்வாறான பொதுமக்களுக்கான கருத்துக்கேட்டறிதல் நிகழ்ச்சிகளிலும் பெருமளவு கலந்துகொண்டு நமது எண்ணங்களை அவர்களின் செவிகளுக்குக் கொண்டு செல்லலாம். ஏனெனில் எழுதுபவர்கள்/வாசிப்பவர்கள் என்று எனக்குத் தெரிந்த நண்பர்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே இன்றைய கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தார்கள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
(Oct 16, 2018)

1 comments:

கரிகாலன் said...

நீங்கள் சொல்வது பலவகையில் உண்மைதான் டீ.சே தமிழன் .பல நூலகங்களில் தமிழ் புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதையும் காண முடிவதுடன் எங்கள் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை காணமுடிவதில்லை என்பது மிகவும் ஒரு பெரிய குறை .

நான் வாசிக்க நேரம் கிடைக்கிறதோ இல்லையோ ஆறு ,எழு புத்தகங்களை ஒவ்வொரு முறையும் எடுத்து வருவேன் .

11/11/2018 08:50:00 PM