கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இளையராஜா இசைக்கச்சேரி

Friday, November 30, 2018

Surgeryற்குப் பின், அவ்வப்போது வைத்தியரைப் பார்த்து மூக்கு என்ன நிலையில் இருக்கின்றது என்று சோதித்ததை  விட இந்த 2 வாரங்களில் வெளியே எங்கும் போக இல்லை. இப்படி வீட்டிற்குள் முடங்கிக்கிடந்த என்னைப் பார்த்த நண்பர் , ஒன்று மூக்கை உறிஞ்சுக்கொண்டிருக்கின்றாய் அல்லது முகப்புத்தகத்திற்குள் ஏதேனும் சர்ச்சைகள் வருகின்றவனா என மூக்கை நுழைத்துக்கொண்டிருக்கின்றாய், ஏதேனும் உருப்படியாய் செய்யக்கூடாதா என்றார்.

ஏன் நினைத்த நேரத்திற்கு நித்திரை நன்கு   கொள்கின்றேனே, அது உருப்படியான ஒரு செயல்தானே என்றேன். அவர் முறைத்துவிட்டு, இளையராஜாவின் இசை நிகழ்ச்சியிற்குப் போவாமா என்று இன்று மாலை கேட்டார். நிகழ்ச்சி நடப்பதற்கு மூன்று மணித்தியாலங்களுக்கு முன் கேட்டால், என்ன செய்வதென முதலில் திகைப்புத்தான் வந்தது.

நான் மாயா(M.I.A) , ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோரின் அதிதீவிர இரசிகனே தவிர இளையராஜாவின் இரசிகனல்ல. இவர்கள் இருவரினதும் live concert களை ஏற்கனவே பார்த்துமிருந்தேன்.   'ஏ.ஆர்.ஆர் இரவில் இசையமைப்பார், ஆனால் ராஜா இரவிற்கென இசையமைப்பார்' என சந்தோஷ் நாராயணன் போன்று இசையைப் பற்றி மனோரதியமாய் நான் எழுதுபவனுமனல்ல. அப்போது கூட, 'ஏ.ஆர்.ஆர் இரவில் இசையமைத்தாலும் (அவர் என்னைப்போன்றவர்க்கு) அலுப்பில்லாது 24 மணி நேரமும் துணையிருப்பவர்' என்றுதான் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

என்னுடைய காலத்துப் பலர் ராஜாவின் இரசிகர்களாக இருந்தாலும், நான் ஏ.ஆர்.ஆரின் இரசிகன். எப்படி ராஜாவின் தீவிர இரசிகர்கள் ராஜாவை விட்டு நீங்கமாட்டாது அடம்பிடிப்பார்களோ, அப்படி ஏ.ஆர்.ஆரின் திறமையும் ஒருபக்கம்  சேடமிழுத்தாலும், நான்  ஏ.ஆர்.ஆரின் இரசிகனே இப்போதும்.

இப்படி ஏ.ஆர்.ஆரை 'வழிபடும்' ஒருவன், ராஜாவின் நிகழ்ச்சியிற்குப் போவதென்பதற்கு இரண்டு காரணம். ஒன்று இனிவரும் காலங்களில் ராஜாவின் இப்படியான இசைநிகழ்ச்சியைப் பார்ப்பது அவ்வளவு அரிதான ஒரு சந்தர்ப்பமாக இருக்கும், ஆகவே நம்மிடையே இருக்கும் அதிசிறந்த கலைஞரான அவரை ஒருமுறையேனும் நேரில் பார்க்க வேண்டும்.  இரண்டாவது அவருக்கென வூடாபெஸ்டிலிருந்து பின்னணி இசைக்க வந்த கலைஞர்கள்.

ராஜா கடந்தமுறை இங்கே இசை நிகழ்ச்சி செய்தபோது செய்த சில சிறுபிள்ளைத்தனங்களை ஏற்கனவே அறிந்திருந்தேன். அது அநேக கலைஞர்களுக்கும் இருக்கும் ஒருவகையான 'கிறுக்குத்தனம்' என்பதாகவும் புரிந்துவைத்திருந்தேன்.

ஆக, அதிகம் எதிர்பார்க்காது போனதால் நிகழ்ச்சி என்னைப் பொறுத்தவரை நிறைவாக இருந்தது. இந்த நிகழ்வில் ராஜா பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. அவரில்லாமலே இந்த நிகழ்ச்சியைச் செய்து முடித்திருக்கமுடியும். அவர் பாடிய 3-4 பாடல்களில், 2 பாட்டை அவராலேயே ஒழுங்காகப் பாடமுடியாதிருந்தது. பெருந்தன்மையாக ஒன்றுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். குறைகள் இருப்பதுதானே எல்லாவற்றிற்கும் அழகு. நிறைவின்மையின் வனப்பு அவ்வாறான குறைகளில்லவா ஒளிர்ந்துகொண்டிருக்கும்.

எனக்கு இந்த நிகழ்ச்சியில் ராஜாவைப் பார்த்தபோது, அவர் செய்த சாதனைகளை கடந்தகாலத்தில் போய் ஒருவர் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல, தனது இசையின் நுட்பங்களை ஒருமுறை மீள ஆறுதலாக நின்று இரசிப்பவர் போலத்தான் தோன்றியது. அது ராஜாவின் பலவீனமல்ல. தனது காலம் கடந்துகொண்டுவிட்டதை ஏற்று, அதை இரசிக்கும் சாதித்த ஒருவரின் பயணம் எனலாம்.

ராஜாவை மட்டுமில்லை, ஏ.ஆர்.ஆரையும் கூடக் கடந்து ஒரு தலைமுறை தமிழில் வந்துவிட்டது. நம் ஒவ்வொருவருக்கும் வயதாகிக்கொண்டிருப்பதைக் கூட இப்படி நமது காலத்து இசை/இலக்கியம்/கலை ஆளுமைகளினூடாகக் கண்டும் கொள்ளலாம். ஒருவகையில் அவர்களை அங்கீகரிப்பது, நமது வாழ்வின் இலைகள் நிறமாறவும், பழுக்கத் தொடங்குவதையும் அனுமதிப்பது என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.

நிகழ்வில், ராஜா காரணமேயில்லாமல் எல்லோரும் சத்தம் போடாது கேட்கவேண்டும் ஒரு ஆசிரியரைப் போல வெருட்டினார். இடையில் தான் மிகக் கஷ்டப்பட்டு இங்கே இசை நிகழ்ச்சி தர வந்திருக்கின்றேன் என்றும் சொன்னார். அதைவிட என்னுடைய பாட்டுக்கள் இல்லாது உங்களால் உயிர்வாழமுடியுமா கண்ணா எனவும் சிலாகித்தார். நிகழ்ச்சி முடிய இரண்டு பாட்டுக்கள் இருக்கும்போதே உரிய முறையில் இரசிகர்களிடமிருந்து விடைபெறாது மேடையிலிருந்து ஒன்றும் சொல்லாமலே இறங்கியும்போனார்.

இவையெல்லாம் ராஜாவின் தீவிர இரசிகராய் இருக்கும் ஒருவருக்கு பெரிய விடயங்களல்ல. நமது ஜெயமோகனிடம்  கேட்டால் அந்தக் கர்வந்தான் ஒருவரைக் கலைஞராக்கின்றது என்பார். எனக்கும் ராஜாவின் இசைக்கு அப்பாலான கிறுக்குத்தனங்கள் தெரியும் என்பதால் இவை பெரிதாகத் தெரியவில்லை. எனது நண்பருக்குத்தான் ராஜாவின் இந்த attitude பிடிபடவில்லை. புலம்பிக்கொண்டிருந்தார்.

ராஜாவின் ஒரு நிகழ்ச்சியிற்கு மட்டும் வந்து இப்படி குறைகள் சொல்கின்றீர்கள், தினமும் ஜெயமோகனின் வலைத்தளத்தை வாசிக்கும் என்னைப் போன்றவர்களின்  நிலைமைகளையும் தயவு செய்து நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும் என்றேன். அத்தோடு அவர் அமைதியாகிவிட்டார்.

மற்றும்படி மூன்று மணித்தியாலங்களிற்கு மேலாய் நீண்ட இந்த நிகழ்ச்சி எங்கள் இருவருக்கும் பிடித்திருந்தது. ஓர் அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிடாததில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

(Apr 02, 2018)

0 comments: