கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ரஞ்சித்-ரஜினி ‍-காலா-தூத்துக்குடி

Tuesday, June 09, 2020

சென்ற வருடம் எனக்குப் பிடித்த படைப்பாளியொருவரைச் சந்தித்திருந்தேன்.  அப்போதுதான் 'காலா' திரைப்பட போஸ்டர்  முதன்முதலில் வந்திருந்தது. ரஜினி ஜீப்பில் மேல் அமர்ந்திருக்க அவரது கால் நம்பர் பிளேட்டைத் தொடுவதாக கீழே தொங்கியபடியிருக்கும். இந்த நண்பர், அம்பேத்கரின் வாகன இலக்கத்தை இப்படி ரஜினியின் காலால் 'காலா' அவமானப்படுத்துகிறது என்றார். அதன் நீட்சியில் ரஞ்சித், ரஜினியின் கபாலி, காலா என பேச்சு நீண்டபடியிருந்தது. தன்னையொரு தலித் படைப்பாளியாக எவ்வித தயங்குமுமின்றி முன்வைக்கும் நண்பர், ரஞ்சித் ரஜனி படங்களை இயக்குவது பற்றி விமர்சித்துக்கொண்டேயிருந்தார். நானும் எதிர்முனையில் இருந்து ரஞ்சித்தை கைவிடாது அவர் சார்பாகப் பேசிக்கொண்டிருந்தேன். அஃதொரு நட்புமுரண் உரையாடல், நண்பரும் தலித்தாக இருந்தபோதும் அப்படி ரஞ்சித் படங்கள் மீது விமர்சனங்கள் வைத்தது அவரில் இன்னும் மதிப்பை உயர்த்தியிருந்தது என்பதும் உண்மையே.

அவரின் முக்கிய விமர்சனம், ரஞ்சித் தனது அரசியலை ரஜினி போன்ற ஒருவரினூடாக முன்வைக்கக்கூடாது என்பது. நான் பிறிதொருதிசையில் நின்று ரஞ்சித் தனது குரலை அது பரவலாகக் கேட்கக்கூடிய ஊடகம்/விம்பத்தினூடாகப் பேசுகின்றார் என்பது. இற்றைவரை தலித் படைப்பாளிகளையே நுழையவிடாத சினிமா உலகத்தினுள் நுழைந்து ரஞ்சித்  செய்துகொண்டிருப்பது ஒருவகையில் பெரும் பாய்ச்சல் என்றும், இலக்கிய உலகில் தலித் இலக்கியம் என்று ஏற்கனவே அழுத்தமாகத் தடம் போடப்பட்ட பாதையிற்குள் நின்று, அதற்கு நிகராக சினிமாவிற்குள் தலித்தியத்தைப் பார்ப்பது சரியான மதிப்பீடில்லை என்று வாதிட்டுக்கொண்டிருந்தேன்.

மேலும் நவீனத்துவ கால 'இலட்சியவாதத்தை' எல்லாம் நாம் இப்போது பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால். ரஞ்சித் போன்ற நமது நட்புசக்திகளையெல்லாம் எதிர்முனையில் தள்ளிவிடுவோம் எனவும் சொல்லியிருந்தேன். மற்றும்படி ரஞ்சித் மீதான உங்கள் சில விமர்சனங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடிகிறது, ஆனால் அது ரஜினியை ரஞ்சித் பாவித்துக் கொண்டிருக்கின்றார் என்பதற்காய் மட்டும் ரஞ்சித்தை இப்போது விமர்சிப்பது அவசியமில்லை என்பதே என்னுடைய நிலைப்பாடெனச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

முக்கியமாய் தலித்துக்களுக்கோ, அவர்களின் வாழ்வியலுக்கோ, அவர்களைப் பற்றிய ஓர் உரையாடலுக்கோ இயல்பான சூழ்நிலையை அமைத்தே தராத தமிழ்ச்சினிமாச் சூழலில் ரஞ்சித்தின் நுழைவும், விரும்பியோ/விரும்பாமலோ ரஜினி இணைந்து ரஞ்சித்துடன் இரண்டு படங்களில் அடுத்தடுத்து பணியாற்றுவதோ முக்கியமான திறப்பென்பதே என்னுடைய அன்றையதும் இன்றையதுமான நிலைப்பாடாக இருக்கிறது.

சென்ற வருடம் இப்படி ரஞ்சித்தை விமர்சித்து காரசாரமாய் உரையாடிய நண்பர், ரஞ்சித்துடன் இணைந்து ஒரு புகைப்படம் போட்டு தம்பி ரஞ்சித்தென காலா படத்திற்கு வாழ்த்தியிருப்பதை இப்போது பார்த்தேன்.

ஆக, காலா படத்தில் ரஞ்சித்தின் வெற்றி என்பதைவிட, ரஞ்சித் பேசிய அரசியல், இப்படியாக  சென்ற வருடம் ரஞ்சித்தை விமர்சித்த  இந்த நண்பரையே இணைய வைத்திருக்கின்றது என்று நினைக்கின்றேன். அதையே இங்கே முக்கியப்படுத்த விரும்புகின்றேன்.


ஞ்சித்தின் 'மெட்ராஸ்' படமே எனக்குப் பிடித்தமானது. 'கபாலி' என்னைக் கவரவில்லை. 'அட்டைக்கத்தி' இன்னும் பார்க்கவில்லை. ஆக இப்படி ரஞ்சித்தின் படங்களையே ஒழுங்காகப் பார்க்காத எனக்கு ரஞ்சித்தை விட்டுக்கொடுக்கக்கூடாதென்பதற்கு அவர் பேசும் அரசியலும் அவர் வளர்ந்து/வந்த சூழ்நிலையையுமே எனக்கு முக்கியமாகப்பட்டது. இப்போது ரஞ்சித் போட்டுக்கொடுக்கும் பாதையினூடு இன்னொரு புதிய இளைஞர் அலை தனக்கான அரசியலைப் பேசியபடி திரையுலகினுள் உள்ளே நுழையக்கூடும். அப்படி நுழைவதே ரஞ்சித்தின் உண்மையான வெற்றியாக இருக்கும்.

'காலா'வை முதல்நாளன்றே பார்த்துவிட்டேன். அதுபற்றி எனக்கு mixed feelingsயே உள்ளது. அதாவது அது பேசும் அரசியல் மிக உவப்பானதாகவும்,   அதேவேளை திரைப்படங்களுக்கென்றே தனித்துவமாய் இருக்கும் கலை அமைதி குறித்து சிக்கலான பார்வையும் எனக்கு இதில் உள்ளது. அதை இப்போது விரித்துப்பேசுதல் அவசியமுமற்றது. ஆறுதலாய் 'காலா' அலை அடித்தோயும்போது உரையாடலாம்.

ஆனால் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்போல சினிமாவிற்குள்ளும், வெளியே தந்திரமாக அரசியல் பேசிக்குழப்பங்களை ஏற்படுத்தும் ரஜினியை, ரஞ்சித் இதில் 'வைச்சுச் செய்திருக்கின்றார்' என்றே கூறுவேன்.

ரஞ்சித்திடம் ஒரு கேள்வி:
'காலா' படம் வந்தவுடன் (அல்லது முதலோ தெரியவில்லை) ஒரு நேர்காணலில் ரஞ்சித்திடம் ஒருவர் கேட்பார்...நீங்கள் இப்படி அரசியல் பேசும் திரைப்படங்களை எடுப்பவர் என்கின்றபோது, அதைவிடுத்து உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஆவணப்படங்களை எடுக்கலாமே எனக் கேட்பார். அப்போது நீங்கள் அருமையான பதிலைச் சொல்லியிருப்பீர்கள். எங்கள் மக்களிற்குள் போய் ஆவணப்படங்களை எடுக்கலாந்தான். ஆனால் அது ஒருபோதும் பரவலாகப் போய்ச் சேரப்போவதில்லை. அதைவிட இப்படியே  எவ்வளவுகாலந்தான் எதையும் மாற்றாமல் ஒடுக்கப்பட்டவர்களிடம் போய் உரையாடிக்கொண்டிருப்பது. நாங்கள்  நம்மை ஒடுக்குபவர்களிடம் அல்லவா மாற்றம் வேண்டுமெனில் பேசவேண்டும். ஆகவேதான் திரைப்படங்களாய், என் அரசியலைப் பேசிக்கொண்டிருக்கின்றேன் எனக் கூறுவீர்கள். அந்தப் பதில் எனக்கு மிகப்பிடித்த குரல். மாற்றங்களை ஏற்படுத்துவதற்காய் அதிகாரத்தை நோக்கி  பேசுவதற்காய்  ஊடகம்/சந்தர்ப்பங்களை நீங்கள் பயன்படுத்துவதையும்,  பிறரது இசை/நாடகம்/ஆவணப்படங்களுக்கு ஆதரவளிப்பதன் ஊடாகவும் அதை நீங்கள் செய்து காட்டியும் வருகின்றீர்கள்.

இப்போது என்னுடைய கேள்வி என்ன என்றால், அதிகாரத்திற்கு நெருக்கமாய், ஒரு அபத்தமான குரலாய், விரைவில் தானே ஒரு அரசியல் அதிகாரமாய் மாறிவிடத்துடிக்கும் ரஜினியை உங்களின் 'காலா' திரைப்படம் ஒரு சிறுதுளியாவது தீண்டியிருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

ஆமெனில், இந்தத் திரைப்படத்தில் நடித்த சூட்டோடு சூடாக 'காலா' முன்வைக்கும் அரசியலுக்கு முற்றிலும் எதிரான திசையில் நின்று, எப்படி ரஜினியால் தூத்துக்குடி சம்பவம் குறித்து இப்படிப் பேசியிருக்கமுடியும்?

...........................

(ஜுன், 2018)

0 comments: