கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாசிப்பது எளிது!

Saturday, March 27, 2021

ஒவ்வொரு ஞாயிறும் நான்கைந்து நண்பர்கள் வாசித்த புத்தகங்கள் பற்றியும், இலக்கிய உலகில் நடக்கும் களேபரங்கள் குறித்தும் பேச ஒன்றுகூடுவோம். அதிலும் மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ, பருவம் நான்கும் காதலின் நிமித்தம் மற்ற விடயங்களெல்லாம் வீணென்று குப்புறப்படுத்திருக்கும் என்னைப் போன்றவனுக்கு நண்பர்கள் பகிரும் பல தகவல்கள் சுவாரசியமாக இருக்கும்.

இம்முறை ஒரு நண்பர், எப்படி உங்களுக்கு இப்படி வாசிக்க நேரம் கிடைக்கிறதென்று ஒரு வினாவை காற்றலைகளில் அள்ளியெறிந்தார். ஒவ்வொரு நண்பர்களும் தாம் எப்படி வாசிக்க நேரம் ஒதுக்குகின்றோம் என்று சொன்னார்கள்.

என் முறை வந்தபோது,'இங்கே பாருங்கள். இருபதுகளில் நான் காதலித்த மாதிரி இப்போது காதல் இல்லை' என்றேன். கேட்ட நண்பருக்கோ, தான் வாசிப்பது பற்றிக் கேட்டால், இவன் காதலிக்கின்றது பற்றி கதைக்கின்றானே என ஒரே குழப்பம். கனடாவில் பனி பொழிகின்றதா அல்லது உண்மையில் உனக்குத்தான் பனி சரியாப் பிடித்துவிட்டதோ என்று கேட்டார்.

அவசரப்படாதீர்கள் என்று எனது விளக்கத்தைத் தொடர்ந்தேன். அதாவது என் 20களில் நான் எப்படி நேசித்தேன் என்று பாருங்கள்.

ஒருமுனையில் இருந்து நான் அன்பே நீங்கள் என்ன சாப்பிடுகின்றீர்கள் என்று கேட்பேன். எதிர்முனையிலும் அதே கேள்வி என்னை நோக்கி வரும். நான் பிட்டும் சம்பலும் சாப்பிடுகின்றேன் என்றால், காதலி இடியப்பமும் சொதியும் சாப்பிடுகின்றேன் என்பார். பிறகு கதைக்க என்ன இருக்கும்? ஒன்றுமே இருக்காது. இறுதியில் அவர் இடியப்பத்தில் குறுக்குமறுக்குமாய் ஓடும் பின்னல்களை எண்ண, நான் உதிர்ந்துபோன புட்டின் துணிக்கைகளை தவறில்லாது எண்ணத்தான், என்னைப் போன்றவர்கள் காதல் வளர்த்தவர்கள். அப்படி நாங்கள் புட்டோடும் இடியப்பத்தோடும் வளர்த்த மாதிரியா இப்போது காதல் வளர்க்கின்றார்கள்.

இது பீட்ஸாக் காலம். எதிர்முனையில் காதலியிடம் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால், மூன்று துண்டு பீட்ஸா சாப்பிட்டுவிட்டேன். அடுத்து என்ன அடுத்து என்ன சொல் என்று பறக்கின்றார்கள். அவ்வளவு அவசரம்.

அதனால்தான் அவர்களுக்காய் நான் புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்கின்றேன். புத்தகங்களை வாசித்தால்தான் கொஞ்சமாவது காதலிகளோடு சுவாரசியமாக எதையாவது பகிர்ந்துகொள்ள முடியும். இல்லாவிட்டால் எதிர் வரிசையில் இன்னொருவன் ஹாவாயன் பீட்ஸாவோடு காத்து நிற்பான். என்னிடம் இருந்து அறிவதற்கு இனி எதுவுமில்லையென்றால், எனக்கான காதலும் கடந்துபோய்விடும் என்றேன்.

'சரியடா, இப்போது என்ன சொல்ல வருகின்றாய்?' என்று நண்பர் இன்னும் கூடக் குழம்பியபடி கேட்டார்.

நான் வாசிப்பது என் அறிவை வளர்ப்பதற்கோ, என் மகிழ்ச்சியிற்காகவோ இல்லை. என் காதலிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காய்த்தான் கஷ்டப்பட்டு வாசிக்கின்றேன். அப்படி நீங்களும் ஒரு ஸ்நேகிதியை கண்டுபிடித்துவிட்டால், வாசிக்க நேரமில்லை என்று கவலைப்படாது நிறைய வாசிக்கத் தொடங்கிவிடுவீர்கள் என்றேன்.

அவருக்கும் கொஞ்சம் ஆசை (எந்த ஆசை?) எட்டிப்பார்த்திருக்கவேண்டும். 'என்றாலும் புதிதாய் ஒரு ஸ்நேகிதி வந்துவிட்டால் என் மனைவி கோபிக்கமாட்டாரா?' என்றார்.

'யோசிக்காதீர்கள். அதற்கும் ஒரு வழியிருக்கின்றது. உங்களது மனைவிக்கும் நான் ஒரு நல்ல வாசக ஸ்நேகிதனை அறிமுகப்படுத்திவிடுகின்றேன்' என்றேன்.

அவ்வளவுதான். அத்தோடு அவர் வெளிநடப்புச் செய்துவிட்டு காற்றலைகளில் இருந்து விலகிப்போய்விட்டார். அடுத்த வாரம் அவர் வருவாரோ தெரியாது.

ஏன், இனி இப்படிக் கூட்டம் தொடர்ந்து நடக்குமோ தெரியாது.
................................

(Nov 23, 2020)

0 comments: