கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்

Monday, March 29, 2021

ரு குடும்பத்தின் மீது வீழும் சாபம் அந்தக் குடும்பத்தின் தலைமுறைகளைப் பாதிக்கின்றது. ஒரு பெண் அநியாயமாக தன் வாழ்வைப் பலிகொடுக்கின்றாள். தந்தை,சகோதரர்களென அடுத்தடுத்து -இப்பெண் தன் மரணத்தின் பின்பாகப் பலிவாங்க- ஒவ்வொருத்தராகத் தற்கொலை செய்கின்றார்கள். அவ்வாறாக இறந்த அத்தை, அடுத்த தலைமுறையான கதைசொல்லியின் மீது சாபத்தை நிழலாக விழுத்த இவனது வாழ்வும் குலைகின்றது. 


ஒருமுறை ஆச்சி சிறுவயதில் இவனுக்கு 'உன் தாத்தன் மொத்தமா கருவறுத்திட்டாரு. வாழ நினைச்சவள பருந்து மாதிரி சுத்தியே நாக்கால கொத்திட்டாரு. அவ திருப்பி கொத்தாம விட மாட்டா. பாசமா, பழியான்னு கேட்டா, பழிதான் முந்திக்கிட்டு வந்து நிக்கும். அதான் இயற்கை. அவளைக் கும்பிடதறத் தவிர வேறு வழியே இல்ல உனக்கு' என்று சொன்னது இவனுக்கு நினைவு வருகின்றது.


வாழ்வு கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டவன், உடல் சார்ந்த உறவுகளில் தன்னைத் தொலைத்து அதுவும் சுயசித்திரவதையாகி நீண்டு, உடல் அழுகிப் போய்க்கொண்டிருக்கின்றபோது என்ன நடக்கின்றது என்பதை முன்னும் பின்னுமாகப் பார்க்கின்ற புதினமாக சரவணன் சந்திரனின் 'சுபிட்ச முருகன்' இருக்கின்றது.


சரவணன் சந்திரன் எழுதிய நாவல்களில் 'ஐந்து முதலைகளின் கதை'யையும், 'ரோலக்ஸ் வாட்ச்சையும்' வாசித்திருக்கின்றேன். அவற்றுக்கான கதைக்களங்களில் இருந்து வேறுமாதிரியானது இது. ஆனால் அவற்றில் இருந்த சுவாரசியத்திலிருந்து விலகி, ஒருவகை அலுப்பான வாசிப்பை இது தர, பல பக்கங்களை மேலோட்டமாக வாசித்துக் கடந்துமிருந்தேன். இந்தப் புதினத்தில் ஒரு எழுத்தாளராக சரவணன் சந்திரனைச் சிலதைக் கண்டெடுத்திருக்கலாம். ஆனால் எனக்கு இதில் பெரிதாக எடுத்துக்கொள்ள எதுவும் இருக்கவில்லை. இவ்வாறான கதைகளை பாலகுமாரனின் கதைகளில் என் பதின்மங்களில் வாசித்திருக்கின்றேன் (கனவுகள் விற்பவன்?). பின்னர் எஸ்.ராவின் 'துயில்' போன்ற நாவல்களில் இது வேறுவகையில் மெல்லியதாக வெளிப்படுகின்றது. இவ்வாறான கதைகளை/தொன்மங்களை, அண்மையில் வெளிவந்த 'பேய்ச்சி' நாவலில் கூட  ம.நவீன அழகாகக் கையாண்டிருக்கின்றார்.


இந்ந்தாவலின் கதைசொல்லி பெண் உடல்கள் மீதான பித்தத்தில் கோயில் போன்ற பொது இடங்களில் உரசுவதிலிருந்து, பின்னர் பல இடங்களில் அடிபட்டுத் தெளிந்து, தொலைவிலிருந்து பெண்களைப் பார்த்து சுயமைத்துனம் செய்வதிலிருந்து, இன்னபிற 'தகாத' காரியங்களைக் கூட்டாகப் பிறருடன் செய்யும்போது கூட, அவை ஏன் இவன் இவ்வாறாக செய்கின்றான் என்று அனுதாபம் வருவதற்குப் பதிலாக எரிச்சலே வருகின்றது. சரவணனின் எல்லாவற்றையும் 'சுவாரசியமாக்க' விரும்பும் எழுத்தின் பலவீனமாக இது இருக்ககூடும். இந்தக் கதைசொல்லி தன் காதலியான கீர்த்தனாவோடு பல்வேறுவகையில் புணர்ந்ததைச் சொல்லும்போதும் கூட சலிப்பும், பிறகு இப்படி என் நிலைமை இப்படியாயிற்றே எத்தனை முறை கீர்த்தனாவின் உறையை (வெள்ளிச் சவ்வுறை) கிழிந்திருக்கின்றேன் என்று நினைவேக்கம் கொள்ளும்போதெல்லாம், ஒரு பெண்ணுக்கு எத்தனை உறைகள்(?) உள்ளே இருக்குமென நாம் திகைத்து வாசிக்கவேண்டியிருக்கின்றது. 


எனது நண்பரொருவர்,  உடல் முயக்கங்களைப் பற்றிப் பேசும்போது, நீங்களெல்லாம் ஸிப்பைக் கழட்டுவது மட்டுந்தான் புணர்தல் என்பதை அறிந்துவைத்திருக்கும் தலைமுறை என்பார். இன்றையகாலம் காமம் பற்றி அழகாகப் பேசுவதற்கு மிகப்பெரும் சுதந்திரத்தைத் தந்தாலும், அலுப்பான மொழியில், அரைகுறையான வகையில்தான் பலர் எழுதிக்கொண்டிருக்கின்றனர். இந்த நாவலில் கூட காமம் எப்படி பின்னர் அழகியலிருந்து குரூரத்தை நோக்கி நகர்கின்றதென்பதைக் கூட வார்த்தைகளுக்குள் கொண்டுவரக் கஷ்டப்படுகின்றது என்பதுதான் துயரமானது.


காமத்தை, காமத்தைப் பற்றி விபரிக்காமல்  அதில் மூழ்கடிக்க பாமுக்கின் 'எனது பெயர் சிவப்பை' ஒருமுறை வாசித்துப் பார்க்கலாம். காமத்தை நேரடியாகச் சொல்வது போன்ற பாவனையுடன்,  ஆனால் நம்மை வாசிக்குந்தோறும் கிளர்த்தும் எழுத்துக்களுக்காய் ப்யூகோவ்ஸ்கி புகைபிடித்தபடி தனது புதினங்களில் நமக்காய்க் காத்திருக்கின்றார். ஆனால் நாமின்னமும் தமிழில் மூன்றாந்தரப் பத்திரிகைகளில் வந்த மொழிக்கு அப்பால் போக முடியாத அவலத்துடன் நின்று எழுதும்போது, அவை வெறும் சம்பவங்களாகக் கடந்து போகின்றன.


திருவண்ணாமலையில் சில வருடங்களுக்கு முன் நின்றபோது அங்கேயிருக்கும் சில சாமியார்களைப் பற்றி சற்று அறியக்கூடியதாக இருந்தது. அதில் ஒரு சாமியார் அடிக்கின்ற சாமியெனப் பெயரென எடுத்தவர் எனச் சொன்னார்கள். அவர் அடித்துவிட்டால் அதிஷ்டம் வாழ்வில் கொட்டுமென ஒரு கூட்டம் எப்போதும் அவரிடம் அடிவாங்க காத்து நிற்குமெனச் சொன்னார்கள். அதுபோல இந்தப் புதினத்தில் ஒரு எச்சில் சுவாமியார். அவர் துப்புவதைக் கைகளில் வாங்குவதற்காய் சனம் அவரிடம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அவரின் மரணம் ஒரு செய்தியை இந்தக் கதைசொல்லியிடம் சொல்லிச் செல்கின்றது.  இவ்வாறு ஒரு சில தெறிப்புக்களை/திறப்புக்களை இந்தப் புதினம் வைத்திருக்கின்றதே தவிர, ஒரு நாவலாக முழுமைகூடி இது வரவில்லை என்றே சொல்வேன்.

...................................

(Nov 07, 2020)

0 comments: