கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை - எஸ்.ராமகிருஷ்ணன்

Wednesday, March 17, 2021

காதல் என்பது நாம் இதுவரை அறியாத‌ நம் உணர்வுகளின் ஆழங்களைத் தொடுகின்றது. எந்தக் கணத்தில் எப்படி ஒரு காதல் உறவு முகிழுமென்பதையும் அறியமுடிவதில்லை. அதன் முன் நாம் கற்றவைகளையும், அறங்களையும் கைவிட்டு எதுவுமற்றவர்களாய் சிலவேளைகளில் சரணடையவும் செய்கிறோம். இவ்வாறான ஒரு மறக்கமுடியாதக் கதையை எஸ்.ராமகிருஷ்ணன் 'ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை' யில் சொல்லப்போகின்றார் என்ற ஆவலுடனேயே இதை வாசிக்கத் தொடங்கினேன்.


வெயில் உருகி வழியும் கோயில்பட்டியிலுள்ள‌ தனது தாத்தா வீட்டுக்கு, பாடசாலை கோடைகால விடுமுறையில் போகும் ராமசுப்பிரமணியன் என்பவன், அங்கே சில்வியால் என்கின்ற மெட்ராஸிலிருந்து வந்த‌ ஒரு பதினைந்து வயதுப் பெண்ணைச் சந்திக்கின்றான். அங்கிருந்து முகிழ்வதே இந்தக் காதல் கதை. தொடர்ச்சியாக மூன்று கோடைகாலங்களில் கோவில்பட்டியில் சில்வியாவும், சுப்பிரமணியனும் சந்திக்கின்றனர். முதல் கோடைகால விடுமுறையில் சில்வியா சுப்பிரமணியனுக்குப் பலதைக் கற்பிக்கின்றாள், காட்சிப்படுத்துகிறாள். ஒரு பெண் இப்படிப் பதின்மவயதில் மிகச் சகஜமாக இருப்பாளா என்ற வியப்புடன் இவன் அவளைப் பின் தொடர்ந்தபடியே இருக்கின்றான்.


ஆனால் அடுத்தடுத்து வரும் கோடை கால விடுமுறையில் சில்வியா வெவ்வேறு வடிவங்களை எடுத்து சுப்பிரமணியிடமிருந்து விலகிப் போகின்றவளாக‌ இருக்கின்றாள். நட்பை மீறிய‌ காதல் இவர்களுக்குள் இருக்கின்றது. உதடுகளில் முத்தமிட்டு மூன்றாம் கோடை விடுமுறை முடிந்தவுடன் அவர்கள் என்றென்றைக்குமாய்ப் பிரிந்துவிடுகின்றார்கள். காலம் இருவரையும் பின்னர் வெவ்வேறு சூழல்களுக்குள் இழுத்துச் செல்கின்றன. இப்போது 40களில் இருக்கும் ராமசுப்பிரமணியன் சில்வியாவை சந்திக்கச் செல்வதிலிருந்து புதினம் காலத்தின் பின்னும் முன்னுமாக நகர்கின்றது. 


இது கோடைகாலக் காதல் கதை என்றாலும், நாவல் காதலை மட்டும் பேசுவதில்லை. மனிதர்கள் காதலோடு எப்படி நாளாந்த அல்லாடல்களுக்கிடையில் சிக்கித்திணறுகிறார்கள் என்கின்ற‌ தீற்றோவியத்தையும் இது தருகிறது. எஸ்.ராவின் இதற்கு முன் வந்த 'பதினை' வாசித்தபோது ஏமாற்றமாக இருந்தது. இது அந்தவகையில் ஏமாற்றத்தைத் தராதபோதும், இது இன்னொரு சாதாரணக் காதல் கதை போலவே வாசிப்பின் முடிவில் தோன்றியது. கடந்த நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ரஷ்ய காதல் கதைகளின் இருந்த உயிர்ப்புக் கூட இதில் இல்லாது கோவில்பட்டி வெயிலைப் போல வாசிப்பில் ஒரு உலர்நிலை எப்போதும் இதனூடு வந்துகொண்டிருந்தது.


பதினைந்து வயதுக் காதலாக இருந்தாலென்ன, முதிர்ந்த வயதிலும் காதலுக்காய்க் காத்திருக்கின்ற 'கொலராக் காலத்தில் காதல்' என்கின்ற மார்க்வெஸில் நாவலாய் இருந்தால் என்ன, ஏன் அவர் இறுதியில் எழுதிய  Memories of My Melancholy Whoresஇல் எண்பது வயதுடையவர்க்கு, இளம் பெண்ணின் மீது வரும் காதலாய் இருந்தால் என்ன,  அதன் சரி/பிழை, அறம்/அறமின்மை என்பவற்றுக்குப்பால நம்மை அந்தப் பாத்திரங்களோடு ஒன்ற வைக்கின்றதல்லவா? எஸ்.ராவின் இந்தப் புதினத்தில் அவர் மட்டுமில்லை, வாசிக்கும் நம்மையும் மூன்றாம் நபராய்/வெளி ஆளாக  காதலிலிருந்து நம்மை தொலைவில் வைத்திருப்பதால்தான் என்னை இந்த நாவல் அவ்வளவு ஈர்க்கவில்லை என நினைக்கிறேன் . 


அதுவும் நாற்பதிலும், முப்பத்தொன்பதிலும் இருக்கும் ராமசுப்பிரமணியனும், சில்வியாவும் ஏதோ வயதுபோன முதியவர்களைப் போல கடந்த வாழ்க்கையையும், நிகழ் வாழ்க்கையையும் துயரமாக மட்டும் பார்க்கும்போது,  இந்த வயதிலேயே மனிதர்களை இழந்துபோனவைகளை மட்டும் நினைத்து ஏக்கமுறுபவர்களாக ஏன் கைவிடவேண்டும் போலத் தோன்றியது. வாழ்க்கை மட்டுமில்லை, காத்லும் தொடர்ந்து ஆற்றைப்போல‌ ஓடிக்கொண்டிருப்பதுதான்.  கடந்தகாலத்தை மட்டும் நினைத்து ஏங்குபவர்க்குத் தேங்கிப் போன குளம் மட்டுமே சொர்க்கம் போலத்தோன்றும். 'நண்பனே உன்னுடைய வயது என்ன?' எனக் கேட்கின்றபோது 'சாகும்வரை காதலிக்கும் வயது தோழி' என்று சொல்லிய நம் ஈழக்கவிஞனின் குரலே என் பாதையுமாகும்.


எனக்கு மிகப் பிடித்த உபபாண்டவத்தையும், யாமத்தையும், துயிலையும், பால்யநதியையும் எழுதிய எஸ்.ராவிடமிருந்து அதற்கு நிகரான அல்லது தாண்டிப்போகின்ற ஓர் அழகான காதல் கதையை எதிர்பார்ப்பேனே தவிர, இப்போது புதிதாய் எழுதத் தொடங்குகின்ற ஒருவரைப் போல 'ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை'யை அவர் எழுத, நானதைக் கொண்டாடிக் குதூகலிக்கமாட்டேன்.

......................

(Oct 30, 2020)

0 comments: