கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வனம் திரும்புதல் - பொ.கருணாகரமூர்த்தி

Saturday, April 03, 2021

பொ.கருணாகரமூர்த்தி புலம்பெயர்ந்த சூழலில் நெடுங்காலமாக எழுதிக்கொண்டிருப்பவர்.  1985 இல்  'ஒரு அகதி உருவாகும் நேரம்' வெளிவந்திருப்பதை அவரது முதல் பிரசுரமான படைப்பாகக் கொண்டால், கிட்டத்தட்ட 35 வருடங்களாக சலிக்காது எழுதிக்கொண்டிருப்பவர் என்று அவரை சொல்லலாம். 'வனம் திரும்புதல்' - நல்ல கதைகளும், சாதாரண கதைகளும், கதைகள் என்பதற்காக எழுதப்பட்ட கதைகள் சிலவும் என எல்லாம் சேர்ந்து ஒரு தொகுப்பாக வந்திருக்கின்றது.'காலச்சிமிழ்', 'இராணுவத்தில் சித்தார்த்தன்', 'Donner  Wetter', 'ஸோபிதாவுக்கு பெர்லின் காட்டுதல்' என்பவை நல்ல வாசிப்பனுபவத்தைத் தருபவை.


'Donner Wetter'  ஜேர்மனியர் ஒருவரின் இனவெறியை அற்புதமாக எள்ளல் தொனியில் பழிவாங்கி எதிர்கொண்டு கடந்து செல்லும் கதையாகும். மேற்கத்தைய நாடுகளில் நாம் எதிர்கொள்ளும் இனவாதம் நுட்பம் நிறைந்தது. அதை நாம் பல்வேறு வழிகளில் கடந்து வந்தவர்கள்/வந்துகொண்டிருப்பவர்கள். ஆகவே இந்தக் கதை நமக்குரிய நுட்பமான பழிவாங்கலாக நினைத்து நெருக்கங்கொள்ளக்கூடிய கதையாகவும் இருக்கின்றது. 'காலச்சிமிழில்' மரணத்தை எதிர்நோக்கி படுக்கையில் கழிக்கும் ஒருவர் தன் கடந்தகாலங்களை நினைத்துப்பார்க்கும் நனவோடையாகும். இறுதியில் உறவுகள், பிள்ளைகள் மட்டுமில்லை மனைவி கூட தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என்கின்ற புரிதலுடன் விடைபெறும் ஒரு மனித உயிரியைப் பற்றிய கதையெனச் சொல்லலாம். 


'இராணுவத்தில் சித்தார்த்தன்' என்பது அதன் தலைப்பே கதையின் தன்மையைச் சொல்லிவிடும். புலிகளில் சேர்ந்து மரணமுற்ற ஒருவனின் சகோதரி, புலம்பெயர்ந்த தேசத்தில் திருமணத்தின் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேற ஏற்படும் சிக்கலை எப்படி ஒரு இராணுவத்தளபதி தீர்த்துவைக்கின்றார் என்பதாகும். 'ஸோபிதாவுக்கு பெர்லின் காட்டுதல்' என்பது ஐரோப்பாவுக்கு வருகின்ற ஒரு நடிகை, அவரின் மீது பித்துப்பிடித்து அலையும் சிலரை எப்படி எல்லாவற்றையும் வழித்துத் துடைத்து அனுப்பிவிடுகின்றார் என்பதைப் பற்றியதாகும். இவ்வாறு தென்னிந்திய திரைநட்சத்திரங்கள் எப்படி நம்மவர்களின் வருமானங்களையும்/சேமிப்புக்களையும் அழித்துச்செல்லுதல் என்பது இற்றைவரை நடந்துகொண்டிருப்பதுதான். எத்தனை அனுபவங்கள் வந்தாலும், தென்னிந்தியத் திரைமோகம் என்பது நம்மவர்களைப் பாடங்கள் எதையும் கற்றுக்கொள்ளாமல் தடுத்தும் கொண்டிருக்கின்றது. 


இத்தொகுப்பில் வந்த கதைகள் பல்வேறு சஞ்சிகைகளில் வந்தாலும் 'காலம்' இதழில் வெளிவந்த கருணாகரமூர்த்தியின் கதைகளே பெரும்பாலும் என் வாசிப்பில் சிறந்த படைப்புக்களாக இருப்பது தற்செயலானது என்றாலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. அவ்வாறேதான் ஜேர்மனியில் இருக்கும் பார்த்திபனின் கதைகளைத் தொகுப்பாக வாசித்தபோதும், காலம் இதழில் வெளிவந்த கதைகளே என்னை அதிகம் கவர்ந்தவையாக இருந்தன. 


கருணாகரமூர்த்தியின் எழுத்து நடை எப்போதும் அலுப்பில்லாது வாசிக்கக்கூடியது. ஆனால் அதில் சிக்கல் என்னவென்றால், அவர் இலங்கை மொழியில் எழுதுகின்றாரா, புலம்பெயர் நடையில் எழுதுகின்றாரா, இல்லை தமிழ்நாட்டில்  கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்ட அஹ்ரகார பாஷையில் எழுதுகின்றாரா எனத் திகைக்கவேண்டியது. அந்தத் திகைப்பு எப்படி இருக்குமென்றால் ஒரு கதையில் வரும் பாத்திரமே அந்நியனாகவும், அம்பியாகவும், ரெமோவும் பல்வேறு மொழிநடையைப் பேசுகின்ற நிலையைப் போன்றதாகும். இதை கருணாகரமூர்த்திக்கு அவரின் படைப்புக்களை வாசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே சுட்டிக்காட்டி வருகின்றேன். மேலும் இது  புத்தகமாகப் பிரசுரிக்கும்போது நல்லதொரு எடிட்டரை வைத்து எளிதாகக் களைந்துகொள்ளக்கூடிய விடயமும் ஆகும்.  


சிலவேளைகளில் கருணாகரமூர்த்தி இதை தனக்குரிய தனித்துவமாக வைத்திருக்க விரும்புகின்றாரோ தெரியாது, அப்படியிருப்பின் அதில் பெருமை கொள்ளக்கூடிய நிலை எதுவுமில்லையெனத்தான் தாழ்மையுடன் சொல்லவேண்டியிருக்கும்.

 

மற்றும்படி 'வனம் திரும்புதலை'  சுவாரசியமாக வாசிக்கக்கூடிய ஒரு தொகுப்பெனச் சொல்லலாம். ஆனால் இது இவரது சிறந்த தொகுப்பெனச் சொல்லமாட்டேன். கருணாகரமூர்த்தியை அவரின் தொடக்ககாலக் கதைகளாலும், 'பெர்லின் நினைவுகள்' என்கின்ற சுவாரசியமான நனவோடைதோயும் படைப்பினூடாகவுமே நினைவில் வைத்திருக்க நான் விரும்புவேன். 

..........................

(Nov 20, 2020)

0 comments: