கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மெக்ஸிக்கோ - ஜனனி செல்வநாதன்

Monday, May 02, 2022


மெக்ஸிக்கோ - ஒற்றை வரியில் சொல்வதானால் மனம் பிறழ்ந்தவனின் உணர்வைப் பேசும் உன்னத உளவியல்.


குடும்பமாகவோ துணையுடனோ பயணம் மேற்கொள்வோர் மத்தியில் ”எதையோ மறக்கவோ அல்லது எதையோ புதிதாய் கண்டடையவோ தான் பயணங்கள்” என தனித்து கனடாவிலிருந்து இரு வாரம் விடுமுறையில் மெக்ஸிக்கோ செல்லும் ஒருவன், (மன)வெளியில் ஒருவளைக் கண்டு அவளழகில் திகைத்து இலயித்து எளிதில் அவளைக்கடந்து போகவியலா தடுமாற்றத்துடன், எதையும் எதிர்மறை எண்ணங்களோடு எதிர்கொள்ளப் பழகியதால் அவளது வெளிப்படையான யதார்த்தமான பேச்சுக்களால் தனக்குள் சுருங்கி, தான் செய்யும் ஒவ்வொன்றுக்கும் அவள் எதிர்மறையாகச் சொல்லிக்கொண்டிருப்பதாக நினைத்து எதற்கெடுத்தாலும் சண்டைக்கோழி போல சிலிர்த்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாரா ஒரு கணத்தில் அவளால் அவன் காப்பாற்றப்பட, அவளோ அதற்கான எவ்வித பந்தாவோ பாசாங்கோ காட்டாது தன்னியல்பில் நகரத்தொடங்கிய கணத்தில், அவன் எண்ணத்தில் இதுவரை Bad Vibration என தேக்கப்பட்டிருந்த அவள் அவனறியாமலேயே அவன் அலைவரிசையிற்குள் பொருந்திக்கொள்ளத் தொடங்குகிறாள்; அப்போது எமக்குள்ளும் ஏதோ ஒன்று குமிழியிடத் தொடங்குகின்றது.

முதலாவது அத்தியாயத்தின் மூன்றாவது பத்தியிலேயே ”விலக்கப்பட்டவர்களையும் விசித்திரமானவர்களையும் பற்றி அக்கறைப்படுவதற்கும் இந்த உலகில் ஒரு சிலராவது இருக்கின்றார்கள்” என்ற ஒற்றை வரியில் மொத்தக்கதையையும் எமக்கு உணர்த்திவிட எத்தனிக்கும் எழுத்தாளர், இடையிடையேயும் சரி மனம் பிறழ்ந்தவனின் குறிப்புகள் எனும் அத்தியாயத்தின் ஊடேயும் சரி ‘அவனை’ப் பற்றிய படிமத்தை வலிந்து திணிக்காமல் போகிற போக்கில் முற்கூட்டியே இயல்பாய் ஆங்காங்கே வரைந்து முடித்து விடுகின்றார். இதனாலோ என்னவோ இறுதி அத்தியாயம் முடிந்தும்-சில நாட்கள் கடந்த பின்னும் ‘அவனை’யும் அவனுக்குள் இருக்கும் குழந்தையையும் மறக்கமுடியாமல் கண்ணீர் வழிய அணைத்துக் கொண்டிருக்கின்றேன்.

மனச்சுமையால் கட்டுண்டுகிடக்கும் ஒவ்வொரு மனிதனதும் மனச்சுமையைக் குறைப்பதற்கு ஏற்ற களமாக அமைவது கலைகளின் மாற்றுவடிவமே என சிக்மன் ஃப்ராய்ட் கூறுவது அரிஸ்டோட்டிலின் உளவியலான ‘கதாசிஸ்’ போன்றதே. ’கதாசிஸ்’ எனும் உணர்வு வெளியேற்றத்தை மிகவும் திறம்பட மெக்ஸிக்கோவில் கையாண்டுள்ளார் இளங்கோ.

Adults only புத்தகமென்று ‘சில’ரால் சொல்லப்பட்ட மெக்ஸிக்கோ தனக்குள் தனித்துப் பயணிக்கும் ஒருவனின் பயணக்குறிப்பை-அவனது மனப்பிறழ்வை- அவனது நகைச்சுவையை-அவனுள் அவனே உருவாக்கிய குழந்தையை-புத்தரைக் கொண்டாடும் உன்னதத்தை-அதேநேரம் புத்தரைக் கொண்டாடும் பிரதிநிதிகளின் அத்துமீறல்களால் புத்தர் எம் வெறுப்பின் அரசியலாக இருந்ததை-அதீத அன்போ காதலோ இருந்தும் அதை சொல்லத்தயங்கும் தயக்கங்களை-யாழ்ப்பாணத்து பதுங்கு குழிகளை-அதனோடு ஒட்டிய கதைகளை-யாழ்ப்பாணத்தில் இப்போதும் இருக்கின்ற 30/40 வருடங்களுக்கும் முற்பட்ட உயிருக்கு உத்தரவாதமில்லாத அவலத்தை-போரின் வடுக்களை-உலகின் நாகரீகங்களை-மெக்ஸிக்கோ நகரின் வரலாறை-ஃப்ரீடாவை அவரது பிரகாசமான நீலவர்ண ஓவியங்களை-வான்கோவை-அவரது மஞ்சள் வர்ணம் மீதான காதலை- பத்திரப்படுத்தி வைத்துள்ளது.

சிலரால் புறக்கணிக்கப்படுபவர்கள் தான் சிலரால் உன்னதமாகக் கொண்டாடப்படுவர். "இந்த உலகில் அனைவராலும் கைவிடப்பட்டு இனி எதுவுமேயில்லை என்ற விரக்தியில் இருக்கும் ஒருவனுக்கு, ஒரேயொரு அணைப்புப் போதும். அது கொடுக்கும் கதகதப்பில் வாழ்வதற்கான நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும்" என்ற எதிர்பார்ப்போடு-நேசிக்கப்பட்ட ஒருத்தியின் புறக்கணிப்பால் முழுவதுமாய் உடைந்து எதையும் எதிர்மறையாகவே பார்த்துப் பழகிய ‘அவனை’ அவனின் தாயாரின் சாயலோடு அவனது பலவீனங்களுக்காய் இரக்கப்படாது காதலோடு முழுவதுமாய் இட்டு நிரப்புகிறாள் ‘அவள்’...

காதல் ஒரு சாம்பல் பறவை...!

[குறும்படம் எடுக்கவேண்டும் என்ற எனது நீண்ட வருடக் கனவு இதுவரை கனவாகவே இருந்திருக்கின்றது. தன் வெறுமையையும் தனிமையையும் உதறித்தள்ள தனக்குள்ளே ஒரு குழந்தையை உருவாக்கி உரையாடும் ‘அவனை’-எந்த நேரத்தில் எந்த உணர்வுடன் இருக்கும் எனத் தெரியாத குழந்தையுடன் இருக்கும்,புரிந்து கொள்ள கஷ்டமான ‘அவனை’ அவனது இயல்புகள் சிதைந்துவிடாது செதுக்கி எடுக்க வேண்டும் எனது கனவுப் படத்தில்]

நன்றி: https://www.facebook.com/janany.selvanathan/posts/5460266957335075

0 comments: