கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாசித்து அலைந்து எழுதுபவனின் சில குறிப்புகள் - 02

Thursday, August 11, 2022

 

வாசிப்பு

 

“great writers are indecent people

they live unfairly

saving the best part for paper.

                                           

good human beings save the world

so that bastards like me can keep creating art,

become immortal.

 

if you read this after I am dead

it means I made it.”

 

~Charles Bukowski

 

 

நண்பரொருவர்  'நீங்கள் எப்படி எழுதுகின்றீர்கள்?' என ஒருநாள் சடுதியாகக் கேட்ட்டார். சில வருடங்களுக்கு முன் இலங்கைக்குச் சென்றபோது இன்னொரு நண்பரினூடாக இந்த நண்பர் அறிமுகமாயிருந்தார். பின்னர் அவர் கனடாவுக்கு வந்த தொடக்க காலங்களில் அவரோடு ஒரளவு தொடர்பிருந்தது. பின்னர் தேய்பிறை போல அந்த நட்பு மங்கிப் போயிருந்தது.

 

திரும்பவும் அவர் தொடர்பில் வந்தபோது, அவர் இந்த இடைப்பட்ட காலங்களில் பெற்ற மாற்றங்கள் நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்காதவை. இலங்கையில் அவருட்பட்ட நண்பர்களோடு ஹிக்கடுவைக்கு ரெயினில் போனபோது  -வழமையாக  நான் ஒரு கால் விரலை இன்னொரு விரலுக்குள் மடித்து வைக்கும் பழக்கம் உள்ளவன் ஐயோ இவனுக்குக்கு ஒரு கால்விரல் இல்லையே என கவலைப்பட்ட மிகுந்த அப்பாவியாக இருந்தவர். அவர் கனடா வந்ததன்பிறகும் ஒருவகையான அப்பாவித்தனத்தோடு இருந்தது நினைவினிலுண்டு. அத்தோடு கொன்வென்ட் பாடசாலைகளில் படிக்கும் அநேக பிள்ளைகளுக்கு இருக்கும் பணிவு/கருணை என்பதும் அளவுக்கதிகமாக அவருக்கு இருந்தது. ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு இப்போது அவரைப் பார்த்தபோது முற்றிலும் வேறொரு நபராக மாறியிருந்தார்.

 

இடையில் எவையவை நடந்து, அவர் இந்த மாற்றங்களுக்கு ஆளானார் என்பது என்னளவில் முக்கியமில்லை. ஆனால் நான் பார்த்த பல பெண்கள் (ஆண்களை விட) அவ்வளவு சடுதியாக மாற்றங்களுக்கு உள்ளாகி நம்மை விஞ்சிப் போகின்றவர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்த நண்பர் இப்போது (அவர் சார்ந்த மதம் வேறெனினும்) புத்தருக்குள் ஆழப் போனவராக, ஒரு யோகா ஆசிரியராக மாறியிருந்தார். அதைவிட மிகச் சிறந்த பயணியாக மாறியிருக்கின்றார். ஒரளவு பயணங்கள் செய்து பயங்களை உதறித்தள்ளியவன் என்கின்ற எனக்கே தயக்கமாயிருக்கும் சில இலத்தீன் அமெரிக்க நாடுகள், வட ஆபிரிக்கா என பல இடங்களுக்குத் தனித்து அவர் பயணித்திருக்கின்றார் என்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது.

 

இப்போது என்னிடம் வந்து எப்படி எழுதுவது என்று கேட்டதற்கு, அவருக்கு இருக்கும் பயண அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற ஆவலில் இருந்து எழுந்ததென நினைக்கின்றேன்.

 

 

ந்த நண்பருக்குச் சொன்னது போலவே இங்கேயும் எழுதுவது என்பது எப்படியென்று நான் எதையும் பகிரப் போவதில்லை. ஏதோ இது நன்கு எனக்குத் தெரிந்து அதை இரகசியம் போல பதுக்கி வைத்திருக்கின்றேன் என்பதல்ல  இதன் அர்த்தம். வேண்டுமெனில் எல்லாமே 'விடாது முயற்சி' செய்வதில் இருக்கிறதென ஒர் எளிமைக்காகச் சொல்லிவிடலாம்.

 

ஒன்றைப் புதிதாக ஆரம்பிக்கும்போது வரும் எல்லாத் தயக்கங்களும் எழுதத் தொடங்கும்போதும் இருக்கும். ஆகவே நண்பருக்குச் சொன்னேன்; 'எது வருகின்றதோ எல்லாவற்றையும் தயக்கமின்றி எழுதிக் கொண்டு செல்லுங்கள். அதுதான் எழுதுகின்றபோது முக்கியமானது. பின்னர் எழுதி முடித்தபின் நீங்களே ஒரு விமர்சகராக இருந்து அதை வெட்டிக் கொத்தி திருத்திக் கொள்ளலாம்' என்றேன். எழுதத் தொடங்கும் எல்லோருக்கும் உடனே வரும் தயக்கம், நான் நன்றாக/சரியாக எழுதுகின்றேனா இல்லையா என்பது. அது எந்தக் கலையாயினும், அதில் ஈடுபடுகின்றவர்க்கு வருகின்ற அச்சமே. ஆனால் நினைவில் வைத்திருக்கவேண்டியது, உங்களை விட சிறந்த எழுத்துக்களும், எழுத்தாளர்களும் இருந்தாலும், உங்கள் அனுபவங்களையும், உங்கள் வாழ்வையும் எழுத உங்களை விடச் சிறந்த எவரும் இல்லை. ஆகவே தயக்கமின்றி எழுதிப் பாருங்கள் என்று சொன்னேன்.

 

அதேசமயம் எழுத்து ஒரளவு கைவந்தபின், 'போலச் செய்யும் பாவனை'களை நாம் தொடர்ந்து களைந்து வந்தபடியே இருக்க வேண்டும். ஒரு தேர்ந்த வாசகர் எமது பாவனைகளை/போலச்செய்தல்களை எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார். வாசகர்களை விட எழுதும் எமக்கு,  நாம் உண்மையில் எழுத்தின் ஊற்று பொங்க எழுதுகின்றோமா அல்லது பாலை நிலத்தில் இல்லாத ஊற்றைத் தேடி வறட்சியாக எழுதுகின்றோமா என்பது இன்னும் நன்கு தெரியும்.

 

இன்னொரு புள்ளி பலர் ஏற்றுக்கொள்வார்களோ இல்லையோ தெரியாது, ஆனால் என்னளவில் முக்கியமானது.  அது நீங்கள் தொடர்ந்து வாசிப்பவராக இருக்கவேண்டும். எழுதுவதற்கு, வாசிப்பது ஒரு முன் நிபந்தனை அல்ல. ஆனால் ஒருவர் தொடர்ந்து எழுதப்போகின்றார் என்றால் வாசிப்பு முக்கியமானது. ரொபர்தோ பொலானோ போன்றவர்கள் பாடசாலைப் படிப்பை இடைநடுவில் நிறுத்தினாலும், பெரும் வாசிப்பாளராக இருந்திருக்கின்றனர். வாசிப்பு உங்களுக்கு மிகப்பெரும் வெகுமதியை எழுத வரும்போது தரும்.

 

எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் பெரும் வாசிப்பாளர்களாக இருக்கின்றார்கள். ஆனால் எழுதுவதில்லை. ஒரு காலத்தில் அவர்கள் எழுத்துக்கு வந்தால் நம்மையெல்லாம் மிஞ்சிச் செல்லும் எழுத்தைத் தருவார்கள் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை.எழுதித்தீரா பக்கங்கள்எழுதிய 'காலம்' செல்வம் போன்றவர்கள் நீண்டகாலம் வாசிப்பவர்களாக இருந்தவர்கள்;  சமகாலத்தில் இலக்கியத்தில் நடைபெறுவதை அறிந்துகொண்டே வந்தவர்கள். ஆகவேதான் காலம் பிந்தி புனைவெழுத்தில் நுழைந்தாலும், அந்த வரவு கனதியாகவும் ஆழமாகவும் இருந்தது. அதேவேளை தொடக்க காலத்தில் நல்ல படைப்புக்களை தந்த எழுத்தாளர்களில் பலர் பிற்காலத்தில் அதை தக்கவைக்க முடியாமைக்கானகாரணங்களில் முக்கியமானது அவர்கள் வாசிப்பதை நிறுத்திவிட்டமையெனக் கண்டிருக்கின்றேன்.

 

மேலும் இன்றைக்கு நல்ல எழுத்துக்கள் என்று சொன்னவற்றை நாளை காலம் கருணையின்றி தள்ளிச் சென்றுவிடவும் கூடும். அப்படிப் பலரின் எழுத்துக்களுக்கு நம் கண்முன்னாலே நிகழ நாங்கள் சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டுமிருக்கின்றோம். ஆகவேதான் எழுதுவதென்பது ஒருவகையில் நம்மோடு நிகழும் அந்தரங்கமான உரையாடல் என்கின்றேன். அதற்கப்பால் நிகழ்வதும், நமக்குக் கிடைப்பதும் மேலதிக வெகுமதிகள் என்பேன்.

 

எழுத்தை எந்தவகையிலும் உயர்வுநவிற்சியாக்காத ப்யூகோவ்ஸ்கி தன்னால் ஒருபோதும் எழுதாமல் இருக்கமுடிவதில்லை என்கின்றார். ஒருவாரம் தன்னால் எழுதமுடியவில்லையெனில் தனக்கு நித்திரை வராது, வாந்தி வந்து, அந்த நாட்களெல்லாம் சோர்வாக இருக்கின்றனஎன்று சொல்கின்றார். 'இது கூட ஒருவகையில் நோய்தான், ஆனால் மற்ற நோய்களைப் போல அல்லாது நல்லதொரு வியாதி' என்கின்றார் ப்யூகோவ்ஸ்கி.

 

எனக்குத் தெரிந்த அளவில் எல்லாச் சிறந்த எழுத்தாளர்களும் (ஜெயகாந்தன் போன்ற சில விதிவிலக்குகள் இருந்தாலும்) தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருந்திருக்கின்றார்கள். ரொபர்தோ பொலானோ தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்ததால்தான் அவர் காலமாகின்ற காலத்தில் கவிதைகளை விட்டு புனைவுக்குள் பிரவேசித்தபோது, அது பெரும் பாய்ச்சலாக நிகழ்ந்திருக்கின்றது. ஹெமிங்வே போன்றவர்களின் ஆரம்பகால எழுத்துக்களை வாசித்தால் அவர்கள் புத்தகக் கடைகளையும், புத்தகங்களையும் தேடி எப்படியெல்லாம் அலைந்திருக்கின்றார்கள் என்று தெரியும். பொலானோ புத்தகங்களை களவெடுக்கும் ஒரு திருடராக நீண்டகாலம் இருந்திருக்கின்றார். அவ்வளவு ஒரு வெறி வாசிப்பதில் அவருக்கு இருந்திருக்கின்றது.

 

இவ்வாறு சிறுவயதிலிருந்தே வாசிப்பில் தோய்ந்து இன்னும் புத்தகங்களை வாங்கி வாசிப்பது அலுக்காத  என்னுடைய ஒரு தோழிக்கு புனைவுலகத்திற்கு வரக் கொஞ்சம் தயக்கமிருந்தது. அவரைக் கொஞ்சம் உற்சாகப்படுத்தினேன். அவரிடம் அவ்வளவு அனுபவங்கள் இருக்கின்றது. இப்போது கிட்டத்தட்ட auto fiction வகையில் எழுதியெழுதி அவ்வப்போது எனக்கு வாசிப்பதற்கு அனுப்பி வைப்பார். அந்த வகை எழுத்தை அவரால் மட்டுமே எழுதமுடியும் என்பது வாசிக்கும் எவராலும் எளிதாக உணரமுடியும். சில பகுதிகளை வாசிக்கும்போது மிகவும் அவதிப்பட்டேன். வாசிப்பவரைத் தொந்தரவுபடுத்தும் அத்தகைய அனுபவங்கள்.

 

ஒருவகையில் அவர் தொடர்ந்து இப்படி எவ்விதத் தயக்கமில்லாமமலே எழுதி முடித்து, நல்லதொரு எடிட்டிங்கும் செய்வார் என்றால், பிரியாவின் 'அற்றவைகளால் நிரம்பியவள்' போலவோ, பா.கண்மணியின் 'இடபம்' போலவோ வரும் எல்லாச் சாத்தியங்களும் அவரின் எழுத்துக்கு இருக்கின்றது.

 

இப்போது இதையெல்லாம் ஏன் எழுதுகின்றேன் என்றால், இதுவும் நாளை ஏதேனும் நன்றாக நான் எழுதிவிடக் கூடும் என்பதற்கான -இன்னமும் கைவிட்டு விடாமல் இருக்கும்-  எழுத்துப் பயிற்சிக்குத்தான்.


*****************

நன்றி: 'அகநாழிகை' ‍- ஆடி, 2022


 


0 comments: