கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எஸ்.பொவின் 'வரலாற்றில் வாழ்தல்'

Monday, July 24, 2023


 -இரண்டாம் பாகம்-


ஸ்.பொவின் வரலாற்றில் வாழ்தல்இரண்டாம் பாகத்தின் அரைவாசிப் பாகம் புலம்பெயர் இலக்கியமே இனி தமிழிலக்கியத்தை முன்னெடுக்கும்என்கின்ற அவரின் சுவிஷேசத்தைப் பற்றியே பேசுகின்றது. அந்தவகையில் அவர் 2000களின் ஓர் உலகப்பயணத்தை ஆஸ்திரேலியாவிலிருந்து ஐரோப்பா, அமெரிக்கா, மேற்கொண்டார். அவற்றை இங்கே விரிவாகப் பதிவு செய்திருக்கின்றார் என்கின்றபோதும், அந்தப் பயணத்தின் பெறுபேறுகள் அவருக்கு அவ்வளவு உற்சாகத்தைக் கொடுக்கவில்லை. பனியும் பனையும்என்கின்ற 39 புலம்பெயர் எழுத்தாளர்களின் கதைகளின் அச்சடிக்கப்பட்.ட்தே 300 பிரதிகளே என்கின்றபோதும் அவையும் முழுமையாக விற்பனை போகாது இருக்கின்றதென்ற அவலத்தை எஸ்.பொ இந்நூலில் பதிவு செய்கின்றார். ஆனால் தன்னைத் தமிழுக்கு ஊழியம் செய்கின்ற படைப்பாளியாக முன்வைக்கின்ற எஸ்.பொ சலிக்காது இறுதிவரை தமிழ் இலக்கியத்தினூடாகப் பயணித்திருக்கின்றார் என்பதும் வரலாறுதான்.

எஸ்.பொவின் இந்த ‘வரலாற்றில் வாழ்தலில்அவரின் நைஜீரியா அனுபவங்களை முதன்மையாகச் சொல்வேன். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆபிரிக்காக் கண்டத்தில் வாழ்ந்த செழிப்பான அனுபவங்களைக் கொண்டவர் எஸ்.பொ. இன்னும் இந்த அனுபவங்களை விரித்து இங்கே விரித்து எழுதியிருக்கலாம் என்று எண்ணக்கூடிய அளவுக்கு எஸ்.பொ இந்த அனுபவங்களை சுவாரசியமாக எழுதியிருக்கின்றார். 70/80களில் ஆபிரிக்காக் கண்டங்களில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அநேகரைப் போல எஸ்.பொவும் தனது குடும்பத்தினரோடு புலம்பெயர்ந்திருப்பார் என்று இதுவரை எண்ணிய எனக்கு அவர் தனித்தே நைஜிரியாவில் இருந்திருக்கின்றார் என்பது புதுசெய்தி.

இந்த வரலாற்றில் வாழ்தலில்எஸ்.பொ அவர் கூறி வந்தவற்றையே தன் எழுத்தால் தானறியாமலேயே உடைத்திருக்கின்றார். எஸ்.பொ இப்படி புலம்பெயர்ந்தற்கு சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்களின் பழிவாங்கல்களே முக்கிய காரணம் எனத்தான் சொல்லித் திரிந்திருக்கின்றார். ஆனால் எப்போதும் ஆசிரியராகவே இருந்த எஸ்.பொ ஒருகட்டத்தில் ஒரே தொழிலைச் செய்வதால் அலுப்படைகிறார். இத்தனைக்கும் அவரின் ஆசிரிய தொழிலில் பெரும்பாலான பாடசாலைகளில் அவரைப் புரிந்துகொண்ட அதிபர்கள் இவருக்கு இலகுவான நேரசூசிகையையே போட்டுக்கொடுக்கின்றனர். அதன் நிமித்தம் எழுதவோ, வாசிக்கவோ, நாடகங்கள் போடவோ இவருக்கு நிறைய நேரம் கிடைக்கவே செய்கின்றது. எனினும் எஸ்.பொவுக்கு ஒன்றேயே திரும்பத் திரும்பச் செய்வதில் அலுப்பு வருகின்றது. 


அது எம்.ஜி.ஆர் தலைமையில் மதுரையில் தமிழராய்ச்சி மாநாடு நடக்கும்போது எஸ்.பொ இது பங்குபெறும்போதே, தமிழகத்திற்குச் சென்று வேலை பார்க்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றார். அவருக்கு வேலையொன்றும் தர எம்ஜிஆரின் அமைச்சரவையில் இருக்கும் ஒருவர் உறுதியும் கொடுக்கின்றார். எஸ்.பொவின் இந்தச் சலிப்பை விளங்கிக்கொண்ட ஏ.ஜே.கனகரட்ன, மு.நித்தியானந்தனின் வழிகாட்டலுடன் நைஜிரியாவுக்குப் புலம்பெயர்கின்றார். ஆக எஸ்.பொ ஊதிப்பெருப்பித்து நமக்குச் சொன்ன சிவத்தம்பி, கைலாசபதியின் பழிவாங்கலால்தான் புலம்பெயர்ந்தார் என்கின்ற வாதம் அவ்வளவு வலிமையானது இல்லையென்பதை இதை வாசிப்பதினூடாக நாம் உணர்கின்றோம்.


ந்தப் பாகத்தில் எஸ்.பொ, தனது மனைவியாரோடு பிணக்கு வந்து நீண்டகாலம் தனித்து அலைந்த பகுதி குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தொடர் குடிகாரராக இருந்த எஸ்.பொ, இந்தப் பிரிவின் பின் பெருங்குடிகாரராக ஆகின்றார். ஒருகட்டத்தில் குடிக்கு அடிமையாகி, நினைவு தெரியாது மயங்கிக்கிடந்து நண்பர்களின் முயற்சியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். இனி குடித்தால் ஆபத்து என்று வைத்தியர் எச்சரித்து அனுப்பியபோதும், 2 வாரங்களுக்குள் மீண்டும் குடிக்க ஆரம்பிக்கின்றார். கிட்டத்தட்ட ப்யூகோவ்ஸ்கியை நினைவுபடுத்தும் பகுதிகள் போல எஸ்.பொவின் இந்த அனுபவங்களை நான் வாசித்தேன். ஆனால் அப்படி இருந்த எஸ்.பொ கிட்டத்தட்ட 7-8 ஆண்டுகள் குடியிலிருந்து விலகியிருக்கின்றார். அதற்குப் பெரிய காரணம் எதுவுமிருக்கவில்லை. பிள்ளைகள் உயர்தரத்தில் படிக்கின்றார்கள், வீட்டுச் செலவீனங்கள் கூடிவிட்டதென குடியைக் கைவிடுகின்றார். பின்னர் மீண்டும் ஆரம்பிப்பது அவரின் மகனான மித்ர புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கடலிலே மரணமாகின்ற போதாகும்.

தந்தையர் கண்முன்னே தனயர்கள் இல்லாமற் போவது பெருஞ்சோகம். எஸ்.பொ மித்ரவை இழந்ததைப் போல பின்னர் அவரின் மற்ற மகனான புத்ரவை இந்தியாவில் இழக்கின்றார். இரண்டு மகன்களின் இறுதிச் சடங்குகளின்போது கூட (மித்ர எனப்படும் அர்ஜூனாவின் உடல் கடலிற்குள் போனது) எஸ்.பொவால் அந்தந்த இடங்களுக்குப் போகமுடியாத சூழல். ஒருவகையில் இந்த இழப்புக்கள் எஸ்.பொவை சோரவைக்கின்றது. ஆகவேதான் வரலாற்றில் வாழ்தலையும் தனது மகனான புத்ரவின் மரணத்தோடு முடிக்கவும் செய்கின்றார்.

ஓரிடத்தில் எஸ்.பொ எழுதுவார், ‘வாசிக்கும் நீங்கள் நினைக்கக்கூடும், என் பெரும்பகுதி இனிய நினைவுகளாக இருக்கின்றதென்று. அவ்வாறில்லை, இதைவிட மூன்றுமடங்கான துயர நினைவுகள் இருக்கின்றன, அவற்றையெல்லாம் எழுதித்தான் என்ன நடக்கப்போகின்றதுஎனச் சொல்லிக் கடந்துபோகின்றார். இந்த வரலாற்றில் வாழ்தலில் ஒரு சிறந்த கதைசொல்லியை, தமிழ் ஊழியத்தில் ஓர்மமுள்ள படைப்பாளியை, தன் ஈகோ சீண்டுப்படுகையில் இன்னும் மேலே ஏறி பிறரைச் சீண்டிப் பார்க்கும் எஸ்.பொவை பார்த்தாலும், இன்னொருபுறத்தில் சோர்வில் அவ்வப்போது உழலும், துயரங்களை மறைத்து உள்ளே கேவியழக்கூடிய ஓர் ஆத்மாவான எஸ்.பொவையும் காண்கின்றோம். அதுவே இயல்பானதும், அழகானதும் கூட.

இன்றைய காலத்தில் சில எழுத்தாளர்கள் தாம் மகிழ்ச்சியாகவும் சோர்வில்லாதும் இருக்கின்றோம் என அடிக்கடி குறிப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறு பிரகடனப்படுத்துபவர்கள்தான் பிறர் மீது சீண்டல்களையும், காழ்ப்புக்களையும், அவமதிப்புக்களையும் செய்பவர்களாக இருக்கின்றபோது, இவர்களின் மகிழ்ச்சியினதும், சோர்வற்றதன்மையினதும் உண்மையான அர்த்தம் என்ன என்று எனக்குள் அடிக்கடி கேள்விகள் எழுவதுண்டு. எஸ்.பொவைப் போல எல்லாச் சறுக்கல்களும், சலிப்புக்களும் கொண்டவர்கள் மீதும், அதை அப்படியே எழுத்தில் முன்வைப்பவர்கள் மீதுமே என்னால் இன்னும் நெருக்கம் கொள்ள முடிகின்றது.

இந்த வரலாற்றில் வாழ்தலில் இறுதி அத்தியாயமாக தவம்என்ற பகுதி இருக்கின்றது. தமிழ் மொழி மீதான தன் காதலை எஸ்.பொ இதில் அறிக்கையிடுகின்றார். புலம்பெயர்ந்த நாடுகளிலே தமிழ்ப்படைப்பு தொடரும் என்கின்ற நம்பிக்கையை முன்வைக்கின்றார். அதேவேளை புலம்பெயர்ந்த தேசங்களில் இருப்பவர்கள் மொழி அடையாளத்தையும், மத அடையாளங்களையும் குழப்பி வருவதாகத் தோன்றுகின்றது என்று எஸ்.பொ எழுதுகின்றார்.மத அடையாளங்கள், இன்றைய நிலையில் தங்களுடைய ஆன்மீகப் பலத்தினை முழுவதுமாக இழந்துள்ளன. இந்துத்துவத்தின் ஓங்காரம், தமிழ் உணர்வுகள் மீது ஆதிக்கஞ் செலுத்தும் ஓர் உள அர்த்தத்தினை மறைத்து வைத்துள்ளதாக எனக்குத் தோன்றுகின்றது. இந்த ஓங்காரம் தமிழின் செழுமைக்கு உகந்ததல்லஎன்று நம்மை எச்சரிக்கின்றார். இன்றைக்கு 20 ஆண்டுகளின் பின் இது புலம்பெயர்ந்த தேசத்துக்கு மட்டுமில்லை, ஈழத்துக்கும் பொருந்தும் என்பதை நாம் கவனிக்கவேண்டும்.

2000களின் தொடக்கத்தில் கனடா வந்த சுந்தர ராமசாமி, புலம்பெயர் தேசங்களில் இனி தமிழ் வாழாது என்கின்ற நம்பிக்கையீனத்தை வெளியிட்டிருக்கின்றார். ஒருவகையில் அது தேய்ந்து போய்க்கொண்டிருப்பதும் உண்மைதான். ஆனால் எஸ்.பொ புத்தாயிரத்துக்கு (2000) அப்பாலும் தமிழ் புலம்பெயர்ந்த தேசங்களில் இருக்குமென்று புத்தாயிரத்தில் எதிர்வு கூறினார். இற்றைக்கும் ஏதோ ஒருவகையில் புலம்பெயர் தேசங்களில் தமிழ் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றது. இலக்கியப் படைப்புக்களை சொற்பமானவர்கள்தான் வாசிக்கின்றார்கள்/எழுதுகின்றார்கள் என்றாலும் (அது எல்லாத் தேசங்களிலும் இயல்புதானே) புலம்பெயர் தேசத்து எழுத்தாளர்களுக்கும் தமிழில் இன்னும் இடம் இருந்து கொண்டேதானிருக்கின்றது. ஆகவேதான் அந்த புலம்பல்/அலட்டல் அண்மையில் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியிலும் சலசலப்புக்குள்ளானது. ஒருவகையில் அது எஸ்.பொ கண்ட கனவின் நீட்சி எனக்கூடச் சொல்லலாம்.

என் எழுத்து ஊழியம் என் தவமாக இனிக்கின்றதுஎன்ற வரிகளுடன் எஸ்.பொ, ‘வரலாற்றில் வாழ்தலைமுடிக்கின்றார். நமக்கோ எஸ்.பொவின் இலக்கிய இருப்பு, அவரின் எல்லாப் பலவீனங்களை மீறியும் பெருமிதப்பட வைக்கின்றது. ஆகவேதான் அவர் என்னைப் போன்றவர்களுக்கு ஓர் ஆளுமையுள்ள முன்னோடியாகத் திகழ்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

*********************


(Mar 13, 2023)

0 comments: