கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சென்னையில் சூரிய உதயம்

Sunday, July 30, 2023

 


வ்வப்போது அதிசயங்கள் நிகழ்வதுபோல இன்று விடிகாலையில் துயில் எழும்பியதால் சூரிய உதயம் பார்க்கலாம் என்று எலியிட்ஸ் கடற்கரைக்குச் செல்ல ஆயத்தமானேன். ஓட்டோ ஓடிக்கொண்டு வந்த தமிழ்ச்செல்வி அக்கா, ‘ விடிகாலையிலே ஊபரில் என்னைய்யா கிரடிட் கார்ட்டைப் போட்டிருக்கிறாய் காசிற்கு மாற்று இல்லாவிட்டால் சவாரியை நடுரோட்டில் நிறுத்திவிடுவேன் என்று வெருட்டினார். தமிழ் ஒரு அமிழ்தமொழி (நன்றி: தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியம்), ‘அக்கா நான் காசாகவே ஊபர் கேட்டதை விட 50 ரூபாய் கூட்டியே தருகிறேன், சூரிய உதயத்திற்கு மட்டும் அழைத்துச் செல்லாது விடாதீர்கள்’ என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டேன்.

எலியட்ஸ் பீச்சில் பொங்கல் நிமித்தமோ என்னவோ நிறையக் கடைகள் போட்டிருந்தார்கள். குப்பை அளவுகணக்கில்லாது இருக்க, சுத்தமான மணலில் கால் வைத்து நடக்கவே இடமில்லாது இருந்தது. துப்பரவுப் பணியாளர்களை இன்னும் வதைக்க நாமெல்லோரும் நன்கு மும்முரமாக வேலை செய்கிறோமென எண்ணிக் கொண்டேன்.  கடற்கரையோரமாக நீண்ட புற்களை காயவைத்து, அழகான யானைகளை வடிவமைத்திருந்தார்கள்.  பார்த்துக் கொண்டிருந்தால் அலுப்பே வராத தத்ரூபமான சிற்பங்கள் போல அவை காட்சியளித்தன.  சூரிய உதயம் பார்த்து முடித்து அருகில் ஒரு செவ்விளநீர் வாங்கிக் குடிக்கப் போனேன்.   அந்த இளநீர் கடையில் நல்ல வியாபாரம் போனதால், பக்கத்து இளநீர் கடைக்காரர் '..த்தா, உனக்கொரு அரைப்போத்தல் வாங்கித் தருகிறேன், வண்டியை எடுத்து தூரப் போயிடு, இங்கே நிற்காதே' என்று சத்தம் போட்டார். சென்னைக்காரர்கள் சண்டையில் கூடக் கோபத்தை மூர்க்கமாய்க் காட்டாது எவ்வளவு அழகியலாகச் செய்கின்றனரே, ‘விஷ்ணுபுரக்காரர்களின் இரசனை விமர்சனம் தெரியாது இது அவருக்குச் சாத்தியமாயிருக்காதென நினைத்துக் கொண்டேன்.


பின்னேரம் சென்னை வந்த சாட்டுக்கு என் புத்தகத்தை வெளியிட்டு வைக்க செல்வத்தாரையும், தளவாய் சுந்தரத்தையும் அழைத்திருந்தேன். செல்வத்தார் இனி நான் சர்வதேச எழுத்தாளன்,  உன்னை மாதிரி தரை லோக்கலுக்கெல்லாம் நேரம் ஒதுக்கமாட்டேன் என்று சொல்லி அடம்பிடித்துக் கொண்டிருந்தார். இனி இவரோடெல்லாம் கெஞ்ச முடியாதென, 'பின் தொடரும் நிழலின் குரல்' புகழ் சியாமளா அக்காவிற்கு ஓர் அழைப்பெடுத்தேன். அதற்குப் பிறகு மகுடிக்கு அடங்கிய பாம்பு போல சொன்ன நேரத்துக்கு வந்து சேர்ந்து செல்வத்தார் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார். ஆனால் சென்ற முறை "மெக்ஸிக்கோ"வை வெளியிட்டு வைத்து என்னைப் புகழ்ந்து நான்கு வார்த்தை பேசியது போல இம்முறை தாய்லாந்து’க்குப் பேசமாட்டேன் என்றார். ஏன் என்று கேட்டதற்கு முதல் நாளிரவு மிஷ்கினோடு சேர்ந்து தானும் பின்னணி பாடியதால் குரல் கட்டி விட்டதென்றார். 


எங்களைத்தான் இலக்கியத்துக்கு இழுத்துவந்து கெடுத்தது காணாதது என்று, தமிழகத்தில் ஒரளவு பார்க்கக் கூடிய திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த மிஷ்கினையும் பாடகராக்கிக் கெடுத்து விட்டீர்களா எனக் கேட்டேன். 'டேய் சும்மா இருடா, மிஷ்கின் இசையமைக்கும் படத்தில் நானும் பாடுகின்றேன் என்றார். எப்படி அது ஆ..ஈ..ஊ எனறு மாயா என்றப் பாடகியை அனிருத் 'விக்ரம்' படத்தில் பாடப் பயன்படுத்தியது போலவா எனக் கேட்க விரும்பினேன். கேட்கவில்லை.

புத்தகக் கண்காட்சியில் வைப்பதற்கு 'ப்யூகோவ்ஸ்கி கவிதைகள்', 'பேயாய் உழலும் சிறுமனமே' பிரதிகளை தளவாய் சுந்தரம் கொண்டு வந்திருந்தார். அதை இலங்கைப் படைப்புக்கள் கிடைக்கும் சஃப்ரியின் " புது உலகம்' அரங்கிற்குக் கொடுத்துவிட்டிருந்தேன். மெக்ஸிக்கோவை எனது நண்பர்கள் வாசிக்கக் கேட்டபோது, ' பணமெல்லாம் இப்போது வேண்டாம், தோழர் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்' என்று கேட்டவர்களுக்கு அனுப்பி வைத்து என்னை மிக நெருக்கமாக உணர வைத்தவர் சஃப்ரி. அவரிடம் பத்தினாதனின் 'அந்தரங்கம்' நூலை வாங்கிக் கொண்டு வெளியே வர, பொது அரங்கில் பவா செல்லத்துரை "ஆடு ஜீவிதம்" பற்றி உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.

நான் காணொளி கதைசொல்லல்/புத்தக விமர்சனங்களுக்கு மறுபுறத்தில் இருப்பவன். ஆனால் பவா போன்றோர்க்கு மிகப்பெரிய காணொளி வாசகர்கள் இருப்பதை நானறிவேன். புத்தகங்களை அவ்வளவு வாசிக்கப் பிரியப்படாத பலருக்கு இவ்வாறே பல படைப்பாளிகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றனர். மாற்றம் என்பதே மாறாதது. எழுத்தாளர் ஒரு படைப்பை எழுத,  அவரைத் தவிர அந்த நூலோடு தொடர்புடையவர்க்கு ஏதேனும் வெகுமதிகள் கிடைப்பது போல இதுவென நினைத்துக் கொண்டேன். இமையமும் அந்த மேடையில் அடுத்துப் பேச இருந்தார். சென்றமுறை ஏனடா உன் புத்தக வெளியீட்டுக்கு அழைக்கவில்லை என குறைபட்டுக் கொண்டார், இம்முறையும் அவரை அழைக்க மறந்துவிட்டேன் என்பதும் நினைவுக்கு வந்தது.

புத்தகக் கண்காட்சியில், ஏதோ புலம்பெயர் இலக்கியவாதிகள் தமிழகப் பரப்பில் அதிகம் ஆதிக்கம் செலுத்துவதாக ஓர் ஈழத்துப் படைப்பாளி பிறரிடம் குறைபட்டுக் கொண்டதாய் ஒரு நண்பர் சொல்லக் கேட்டேன். பின் அமைப்பியல்/ பின் நவீனத்துவம் அறிந்த ஒருவர் இந்த இருமைகளை/ துவிதங்களை நிராகரிக்கவே செய்வர். தமிழ் என்ற பெருங்கடலில் புலம்பெயர் இலக்கியம் ஒரு சிறு துளி. அதுவெல்லாம் தமிழுக்குத் தலைமை தாங்கும் என்ற எஸ்.பொவின் கனவே உதிர்ந்து நெடுங் காலமாயிற்று.

50 வருடங்களுக்கு முன் கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் நடந்த முற்போக்கு அணியினரின் மாநாட்டில் அவமதிக்கப்பட்டு, சூடோடு சூடாக மட்டக்களப்பில் தமிழ்விழாவெனப் பல படைப்பாளிகளை ஒருங்கிணைத்து ஆரவாரத்துடன் எஸ்.பொ, தன் எதிர்ப்பை நிகழ்த்திக் காட்டினார். பின்னர் நற்போக்கு இலக்கியத்துக்கு ஒரு கொள்கை விளக்க நூல் கூட அவர் வெளியிட்டும் இருந்தார். புலம்பெயர்ந்தவர்கள் அந்தளவுக்கு ஆளுமையுடையவர்களாகவோ, தொடர்ச்சியாகவோ இயங்காதபோது புலம்பெயர் இலக்கியம் தமிழகச் சூழலில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது எவ்வளவு வலுவான வினா என்பது கேள்விக்குரியது. எனினும் எல்லா வகையான உரையாடல்களும் நடப்பது நல்லது. அதுவே அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிவதைக் குலைக்கச் செய்பவை.

புத்தகக் கண்காட்சியில் 'அடையாளம்' சாதிக்கை நீண்ட வருடங்களுக்குப் பிறகு சந்தித்தேன். எனது முதலாவது கவிதை நூலான ‘நாடற்றவனின் குறிப்புகள்’ அவரிடமிருந்தே வெளிவந்தது. நான் எழுத வந்த காலங்களில் 'அடையாளம்', ' விடியல்' போன்றவற்றுக்கு  பெரும் மதிப்பிருந்தது. அவர் அன்று தன் விருப்பில் அனுப்பி வைத்ததால் "ஏலாதி" இலக்கிய விருது அந்தமுறை என் தொகுப்புக்கும், தமிழச்சி தங்கபாண்டியனின் 'வனப்பேச்சி'க்கும் கிடைத்திருந்தது. ஏதேனும் புதிய நாவல் எழுதுங்கள், எங்களிடம் நல்ல எடிட்டர்கள் இருக்கின்றார்கள். நன்றாகக் கொண்டு வரலாம் என்றார். முயற்சிக்கின்றேன் எனச் சொல்லவும் பயமாக இருந்தது. நமது ப்யூகோவ்ஸ்கி "Don't try" என்று தன் கல்லறையிலேயே எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டான் அல்லவா?

சாதிக், ஒருநாள் மதியமோ இரவோ சாப்பிடப் போவோம் நிச்சயம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புத்தக வெளியீடுகளை விட விருந்துண்ணலே முக்கியம், அதைத் தவறவிடமாட்டேன் எனச்சொல்லி அவரிடமிருந்து விடைபெற்றேன். கூடவே கண்காட்சியில் என்னோடு அலைந்து கொண்டிருந்த நண்பர், நீ எல்லோராலும் அணுக முடியாது ஆமை போல ஓட்டிற்குள் சுருண்டு கொள்கின்றவன், ஆனால் பத்தினாதன், 'காலம்' செல்வம், 'அடையாளம்' சாதீக், தளவாய் சுந்தரம் போன்ற சிலரோடு பேசும்போது மட்டும் ஓர் உயிர்ப்பு உன் உரையாடல்களில் வந்துவிடுகின்றதென்றார். அப்படி இருப்பின் எனது சென்னை கிரஷ்கள் (எனக்குத்தான் அவர்கள் கிர்ஷ்கள், நான் அவர்களுக்கு இல்லை), அழைத்து அவர்களோடு மெரீனா பீச்சில் கடலை கொறித்துக் கொண்டிருப்பேனே. அதுதான் நடக்கவில்லையே, அணில் படமா, ஆமைப் படமா முதலில் கவிழ்ந்தென்ற முகநூல் வெட்டி விவாதங்களில் சிக்கியிருக்கின்றேன், பார்க்கத் தெரியவில்லையா எனச் சலித்துவிட்டு பிரியாணிக் கடையைத் தேடத் தொடங்கினேன்.

இன்றைய ஆண்டிரியா ஆனாலென்ன, அஞ்சலி பட்டீலாலென்ன, எப்போதும் இருக்கும் என் நித்திய காதலி அஸினுக்கு சேர நாட்டுப் பராம்பரியத்தில் இருந்து வந்தவென நம்புகின்ற ஒருவனின் பொங்கல் வாழ்த்து -அனைவர்க்கும்- உரியதாகட்டும்.

**************

 

(Jan 17, 2023)

0 comments: