கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 77

Sunday, March 02, 2025


அறம் எனப்படுவது யாதெனில்..
*********


1. 


நேற்று ஒரு கர்நாடக இசை நிகழ்வொன்றை காணொளியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். பாடகர்கள் இளையராஜாவின் பாடல்களை கர்நாடக மரபுக்குள் கொண்டுவந்து பாடிக் கொண்டிருந்தார்கள். பனிக்கால குளிர் இரவில் அது வேறு மாதிரியான உணர்வைத் தர, அதை முகநூலில் பகிர்ந்துகொள்வோமென நினைத்து, 'சனாதனத்தின் கதவைத் தட்டியுதைத்த இளையராஜா' என்றெல்லாம் எழுதிக்கொண்டிருக்கையில், இந்தப் பாடகர்களைப் பற்றிய ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. இவர்கள் டி.எம்.கிருஷ்ணாவிற்கு மெட்ராஸ் மியூசிக் அகாடமி விருதை அளித்தபோது, கிருஷ்ணா பெரியாரைப் பாடி கர்நாடக இசையை களங்கப்படுத்திவிட்டார் என்று அறிக்கை விட்டவர்கள் என்பது நினைவுக்கு வந்தது.

எனது நண்பருக்கு இதைச் சொல்லி, அழகியலா, அறமா முக்கியமாக என வருகின்றபோது அறமே முக்கியமென நினைத்து அந்தக் காணொளியைப் பகிர விரும்பவில்லை என்றே சொன்னபோது அவருக்கு சிரிப்பு வந்தது. இன்னும் நீ மாறவில்லையா என்று அவர் நினைத்திருந்தாலும் அந்த அத்தியாயம் அப்படியாக முடிந்திருந்தது. என்கின்றபோதும் இப்படி புனிதத்தைப் பேணும் இவர்களின் பாடல்களில், தவிர்க்கமுடியாத ஒர் ஆளுமையாக சூத்திரனான இளையராஜா போயிருப்பது நம் காலத்து பெரும் உடைப்பல்லவா?

அந்த கர்நாடக சகோதரிகள் இப்படி பெரியரைப் பாடி அவர்களின் துறை கறைபட்டதெனச் சொன்னதால் அவர்களின் பாடல்திறமையை நிராகரிக்கின்றேன் என்பதல்ல அர்த்தம். ஆனால் அவர்களை முதன்மையான ஆளுமைகளாக பொதுவெளியில் முன்வைக்க எனக்குரிய அறம் இடங்கொடுக்காது என்பதையே இங்கே சொல்ல விழைகிறேன்.

இந்தமாதிரியான அறமா, திறமையா எதை முன்னிலைப்படுத்த வேண்டும் என்கின்ற கேள்விக்கு நடிகை பார்வதி, அருந்ததி ரோயை அண்மையில் எடுத்த நேர்காணலைப் பார்ப்பது இன்னும் தெளிவு வரும். கலைஞர் ஒருவர் சர்ச்சைக்குரியவராக இருந்தால் அவரை முற்றாக நிராகரிக்கவேண்டுமா இல்லையா என்கின்ற முக்கியமான ஒரு கேள்வியை பார்வதி, நெறியாளர் ரோமன் போலன்ஸ்கியை முன்வைத்துக் கேட்டிருப்பார் (அப்படி உடனே நினைவுக்கு வரும் இன்னொரு நெறியாளர் எனக்கு மிகப்பிடித்த வூடி அலன்). அருந்ததி, இதற்கான பதில் எளிமையானதல்ல, மிகச் சிக்கலானது என்று அந்தக் கேள்விக்கான பதிலை இழையிழையாகப் பிரித்துச் சொல்லியிருப்பார்.

ஒருவகையில் -நான் நினைத்ததுமாதிரி- அந்தக் கலைஞரை முற்றாக நிராகரிக்க வேண்டியதில்லை. அதேசமயம் அவர்கள் செய்த விடயங்களை நாம் தொடர்ந்து எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கவேண்டும் என்கின்ற மாதிரியான பதிலை அருந்ததி பல்வேறு பாதைகளினூடாக அலசி வந்தடைந்திருப்பார். இன்றைக்கு பாப்லோ நெரூடாவின் கவிதையை வியந்தேத்தப் போகின்றோம் என்றால், ஓரத்தில் நெரூடா இலங்கையில் தலித் பெண் மீது நிகழ்த்திய பாலியல் வன்முறை நமக்கு நினைவில் இருக்கவேண்டும். இவ்வாறு சமகாலத்தில் இருக்கும் பல எழுத்தாளர்/கலைஞர்களின் பிறழ்வுகளை நாம் ஞாபகப்படுத்தியபடி பேசவேண்டியே அவர்களின் திறமையைப் பேசவேண்டியிருக்கும்.

அத்தோடு அவர்களின் திறமையைப் பேசுவதால் அவர்களுக்கு மன்னிப்பை அளித்துவிட்டோம் என்றோ அல்லது அவர்கள் திருந்திவிட்டார்களோ என்பதல்ல அர்த்தம். இனி வரும் சந்ததியினர் கவனமாக இவ்வாறான விடயங்களைக் கையாள்வதற்கான பாதைகளைத் திறந்துவிடுகின்றோம் என்பதே அனைத்தையும் விட முக்கியமானது. அந்த ஒரு முக்கியகாரணத்தால்தான் பாதிக்கப்பட்ட பலர் (victims) தமக்கு நடந்த பல சம்பவங்களை அந்த மனவடுக்களைத் (traumas) தாண்டி பேச வருகின்றார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் இவற்றைப் பேசுவதால் இன்னொரு முறை இந்த நரகத்தில் அவர்கள் இறங்க விரும்புவார்களா என்ன?

2.

 
இந்த வருடத்துக்கான ஒஸ்கார் விருதுகளுக்காக Emilia Pérez திரைப்படம் பத்துக்கு மேற்பட்ட விருதுகளுக்காகப் பட்டியலிடப்பட்டிருக்கின்றது. ஆங்கிலம் இல்லாத மொழிப்படம் இத்தனை விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் தரக்கூடியது. அது மட்டுமில்லை, இத்திரைப்படத்தின் மூலமாகவே திருநங்கை ஒருவர் முதன்முறையாக சிறந்த நடிகைக்கான விருதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றார். அந்தவகையில் இது வரலாற்றில் ஒரு மிகப்பெரும் பாய்ச்சல் எனலாம்.

ஆனால் இப்போது ஒரு பெரும் சிக்கலில் அந்த திருநங்கை நடிகையான Karla Sofía Gascón மாட்டியிருக்கின்றார். கார்லா ஸோபியா சில வருடங்களுக்கு மிக மோசமாக முஸ்லிம்கள், கறுப்பின மக்கள் பற்றி இனவாதமான கருத்துக்களைப் பகிர்ந்திருக்கின்றார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சில வருடங்களின் முன்பான ஒஸ்காரின்போது, ஒஸ்கார் கறுப்பினத்தவராலும், கொரியர்களாலும் மூழ்கடிக்கப்பட்ட ஒன்று என எழுதியதெல்லாம் இப்போது பெரும் சர்ச்சையாகி, அவருக்கு மட்டுமின்றி, Emilia Pérez படத்துக்கான பிற விருதுகளுக்கான சாத்தியங்களும் சரியத் தொடங்கியிருக்கின்றன.

இப்போது நமக்கான அறம் குறித்த கேள்விகள் இன்னும் சிக்கலாகின்றன. கார்லா ஸோபியா ஒரு திருநங்கை. அவர் விளிம்புநிலையாக்கப்பட்ட நிலையிலிருந்து இந்த இடத்துக்கு வர எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்தே வந்திருப்பார். ஆனால் ஸ்பெயினில் வசிக்கும் அவருக்குள் இந்தளவு இனவாதமான கருத்துக்களும் ஊறிக்கிடந்திருக்கின்றன என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.

இப்போது இந்த சர்ச்சை வந்தவுடன் அவரை ஒஸ்கார் விருதுக்கான பிரச்சாரங்களிலிருந்து Emilia Pérez திரைப்படக்குழு விலத்தி வைத்திருக்கின்றது. கார்லா இப்போது வெளிப்படையாக தனது கடந்தகாலத்துக்காக மன்னிப்புக் கேட்டிருந்தாலும், அவரை சிறந்த நடிகைக்கான விருதுப்பட்டியலில் இருந்து நீங்கவேண்டும் என்கின்ற குரல்களும் இனி தீவிரமாக ஒலிக்கவும் கூடும். அப்படி அவர் விருதுப் பரிந்துரையில் இருந்தாலும், முதன்முறையாக ஒரு திருநங்கை சிறந்த நடிகை விருதைப் பெறும் வரலாற்றுச் சந்தர்ப்பத்தை அவர் பெரும்பாலும் இழக்கத்தான் செய்வார் என நினைக்கின்றேன். இந்த விடயத்தில் நமக்குரிய அறமாக எது இருக்க வேண்மென்பதை உங்களின் யோசனைக்கு விட்டுவிடுகின்றேன்.

மேலும் Emilia Pérez ஓஸ்காருக்குப் பல விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்படாலும், மெக்ஸிக்கோவில் பெரும் எதிர்ப்பையும் அது பல்வேறு தரப்புக்களில் பெற்றிருக்கின்றது. மெக்ஸிக்கோவில் நடக்கும் போதைக்கடத்தல் குழுக்களினதும், காணாமற்போனவர்களின் துயரங்களையும் இந்தத் திரைப்படம் Exploit செய்கின்றது என்கின்ற விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. LGBTQ+ குழுவான Glaad, இத்திரைப்படத்தில் திருநங்கைகள் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர் என்று குற்றச்சாட்டு எழுப்பியிருக்கின்றனர். இந்தப் படத்தில் திரைப்படத்தில் நெறியாளரான Jacques Audiard மெக்ஸிக்கோ மக்களின் sensitive விஷயங்களை அவ்வளவு தீவிரமாக இல்லாது நகைச்சுவையாக்கியதற்கு மன்னிப்பை சிஎன் என் நேர்காணலில் இப்போது தெரிவித்திருக்கின்றார்.

இத்தனைக்கும் அவருக்கு ஸ்பானிஷ் தெரியாதது மட்டுமில்லை, மெக்ஸிக்கோவைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படத்தை செட் போட்டு ஐரோப்பாவில் எடுத்தார் என்பதற்காக மெக்ஸிக்கோக்காரர்கள் கோபத்தில் இருக்கின்றனர். மேலும் ஒன்றிரண்டு நடிகர்களைத் தவிர வேறு எவரும் மெக்ஸிக்கோ நாட்டைச் சார்ந்தவர்களுமல்ல (இதே குற்றச்சாட்டை தீபா மேத்தா, ஷியாம் செல்வதுரையின் funny boy ஐ திரைப்படமாக்கியபோது ஏன் தமிழ் நடிகரை முதன்மைப் பாத்திரத்தில் தேர்ந்தெடுக்கவில்லை என்ற கேள்வியை என்னைப் போன்றவர்கள் எழுப்பியபோது, நமது சில இலக்கியவாதிகள் அதெல்லாம் முக்கியமா என எள்ளல் செய்து எழுதியதும் நினைவுக்கு வருகின்றது).
 

இன்று உலகம் எல்லாவற்றையும் உற்றுக் கவனிக்கின்றது. எவ்வித விமர்சனமாக இருந்தாலும் அதை எவரும் எளிதாகக் கடந்து முடியாத விதமான சூழலில் அனைத்துக் கலைஞர்களும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை மறந்துவிடமுடியாது. சமகாலம் மட்டுமில்லை அவர்களின் கடந்தகாலமும் 'closet' எலும்புக்கூடாக வெளிவரலாம். ஆகவே கடந்த கால 'எலும்புக்கூடுகள்' எம்மை நோக்கி வந்து கேள்விகள் கேட்பதிலிருந்து நாம் எவரும் எளிதில் இனித் தப்பமுடியாது போலும்.

இப்போது Jacques Audiard மெக்ஸிக்கோ ஊடகங்களால் விமர்சிக்கப்படும்போது அவர் ஒரு கட்டத்தில் எனக்கு மெக்ஸிக்கோ குறித்து பெரிதாக எதுவும் தெரியாது என்று சொல்லி தப்பியோடுகின்றவராகவும் இருக்கின்றார். இதே தப்பித்தலை Jacques Audiard, தீபன் (Dheepan) என்கின்ற மோசமான படத்தை எடுத்தபோதும் செய்திருந்தார். அன்றைய ஒரு நேர்காணலில், இத்திரைப்படத்தின் கதையை எழுதிமுடிக்கும்வரை தனக்கு இலங்கை என்கின்ற நாட்டைப் பற்றியே தெரியாது என்று உண்மையைப் போட்டுடைத்தார். அப்படி இலங்கையைப் பற்றித் தெரியாத ஒருவருக்கு, எமது காலத்தைய இயக்கப்பாடலான 'எதிரிகளின் பாசறையைத் தேடிப் போகின்றோம்' என்கின்ற நுண்ணிய விபரங்கள் எல்லாம் எப்படித் தெரிந்தது என்பது யாமறியோம் பராபரமே.

ஓர் உண்மையான கலைஞன் என்றால் தான் எடுத்துக் கொண்ட கதைக்கு நேர்மையாக இருக்க வேண்டும். அதுவும் தான் சம்பந்தப்படாத நாடு/கலாசாரம்/பண்பாடு என வரும்போது இன்னும் கவனமாக தன் காலடிகளை முன்வைக்கவேண்டும். அது Jacques Audiardஇற்கு இலங்கையைப் பின்னணியாக வைத்து தீபன் எடுத்தபோது மட்டுமின்றி, மெக்ஸிக்கோவைப் பின்னணியாக முன்வைத்து Emilia Pérez எடுத்தபோதும் இல்லை என்பதுதான் பெருஞ்சோகம். ஒரு திரைப்படமாக வெளியில் இருந்து பார்க்கும்போது எப்படி தீபன் நன்றாக மற்றவர்களால் பாராட்டப்பட்டதோ, அப்படியே Emilia Pérezம் அழகியலாக எடுக்கப்பட்டிருப்பதற்காகப் பலரால் பாராட்டப்பட்டு ஒஸ்கார் வரை அதைக் கொண்டு வந்திருக்கின்றது. அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்; மறுக்கவும் போவதில்லை.

ஆனால் ஈழத்தவராக/புலம்பெயர்ந்தவராக இருந்து கொண்டு தீபனைப் பார்த்தபோது அதன் அரசியல் குறித்து எவ்வளவு எரிச்சல் எம்மைப் போன்றவர்களுக்கு வந்ததோ, அப்படி Emilia Pérez ஐ பார்க்கும்போது, தாம் இப்படத்தின் மூலம் Exploit செய்வதை அறியும்போது மெக்ஸிக்கோக்காரர்களாக அவர்களுக்குக் கோபம் வராதா என்ன?

ஆகவேதான் பெரும்பாலான சமயங்களில் அழகியலைத் தாண்டி அறத்தையும், அரசியலையும் நாம் மிக உன்னிப்பாகப் படைப்புக்களிலும், படைப்பாளிகளிடம் பார்க்க வேண்டியிருக்கின்றது எனச் சொல்ல விரும்புகின்றேன்.

************

(மாசி 07, 2025)