ஸென்னில் எதையும் செய்யாமல் அப்படியே இரு என்பது அடிக்கடி நினைவூட்டப்படுவதை அறிந்திருப்போம். . தியானத்தின்போது கூட 'சும்மா அமர்ந்திருத்தல்' மட்டுமே போதுமானது என்று சொல்வார்கள். அதேபோன்று அப்படி சும்மா இருந்து தன்னிலையை அறிதல் சாத்தியமென்றாலும், அப்படி ஒருவர் நினைத்துக்கொண்டு தியானம் செய்தால், ஞானம் அடைதல் தூரப்போய்விடுமென்றும் பயமுறுத்துவார்கள்.
எனில், சும்மா உட்கார்ந்திரு என்பதன் அர்த்தந்தான் என்ன? சும்மா உட்கார்ந்திருப்பதற்காகவே சும்மா அமர்ந்திரு என்பதுதான். ஆனால் இந்த 'சும்மா இரு' என்பது எவ்வளவு கடினம் என்பது, பல்லாயிரம் எண்ணங்கள் எந்த நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு எளிதாய்ப் புரியும்.
புத்தரோடு தாமரைப் பூ எவ்வளவு நெருக்கமானது என்பதை நாம் அறிவோம். அதுபோலவே ஸென் மரபில் பிளமும்/செர்ரியும் மிக நெருக்கமானவை. ஒருவகையில் இம்மரங்கள் வசந்தகாலத்திற்கான முகிழ்ப்பை அறிவிப்பவை என்பதால் அவற்றின் முகையவிழ்ப்புக்கள் உலகெங்கும் முக்கிய ஓர் நிகழ்வாகக் கொண்டாடப்படுகின்றது.
ஸென்னில் பிளம் மரங்கள் முக்கியமான ஓரு படிமமாகக் கொள்ளப்படுகின்றது. ஸென் ஒருபோதும் கற்றல்/சொற்பொழிவுகள் மூலம் ஞானமடைவதை முன்னிலைப்படுத்துவதில்லை. எந்த ஒரு ஸென் ஆசிரியரும், தனது மாணவருக்கு 'செய்து காட்டுவதில்' மட்டுமேவிருப்பமுடையவர்கள். ஆகவேதான் மரபான ஸென் ஆசிரியர்கள் அதட்டிக் கொண்டிருப்பதையும், கேள்வி கேட்கப்படும்போது பிரம்பால் தரையில் அடிப்பதையே பதிலாகச் சொல்வதையும் பல்வேறு ஸென் கதைகளில் கேட்டிருப்போம்.
கீழே நான் தமிழாக்கியது டோஜன் பல நூற்றாண்டுகளுக்கு முன் சொல்லிப் போந்தது.
குளிர்காலத்தின் நடுவில் தியோடாங்கின் முதல் சொற்றொடர்:
முதிய பிளம் மரம் வளைந்து கரகரத்தது
அனைத்தும் ஒன்றாய்ச் சேர ஓர் அரும்பு மலர்ந்தது
இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மலர்கள்
எண்ணற்ற பூக்கள்!
அந்த தூய்மையில் பெருமை இல்லை
அதன் நறுமணத்திலும் பெருமை இல்லை.
அது பரவி வசந்தமாக மாறி
புற்களுக்கும் மரங்களுக்கும் மேலாக வீசி
காவியணிந்த பிக்குவின் தலையை வழுக்கையாக்குகின்றது.
அதுவே சுழன்றாடி, விரைவில் புயல் காற்றாகவும்,
பெரும் மழையாகவும் மாறி,
வீழ்கின்றது பூமியின் மீது பனியாக.
இந்த முதிய பிளம் மரம் எல்லையில்லாதது.
ஒரு கடும் குளிர் நாசியைத் துளைக்கிறது.
(By Eihei Dogen, translated by Kazuaki Tanahashi)
*
ஒரு முதிய பிளம் மரம் அதன் மூப்பில் வளைந்து போய், க்ரக் க்ரக் என்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு அது துயரப்பட்டிருந்தாலும், சட்டென்று எல்லாச் சூழ்நிலையும் இயைந்து வர ஒரு பிளம் பூவை மலர வைக்கின்றது.
ஒரு பிளம் பூ, பிறகு இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தென தன் இதழ்களை விரித்து பின் எண்ணற்ற கணக்கில் மலரத் தொடங்குகின்றது. பிளம் பூக்கள் அவ்வளவு தூய்மையாக இருக்கின்றது. அதன் வாசமோ அவ்வளவு நறுமணமாக இருக்கின்றது. ஆனால் அதையிட்டு அந்த மரத்துக்கு எந்தப் பெருமையும் இல்லை.
பிளம் மரத்தை நாம் நம் வாழ்வின் படிமமாகக் கூடக் கொள்ளலாம்.
முதிய பிளம் மரம் என்றவுடன் எமக்கு இறப்பு நினைவில் வரலாம். அதாவது வாழ்வு இனி இல்லை என்கின்ற உருவகம். ஆனால் அந்த 'வாழ்வில்லாத' நிலையில்தான் வாழ்வு என்பது மலர்கின்றது என்பதற்கு, இந்த முதிய பிளம் மரம் தன் அரும்புகளை மலர வைக்கும் தருணம் நினைவூட்டப்படுகின்றது. ஒன்று, இரண்டென எண்ணற்ற பூக்களை ஒரு முதிய பிளம் மரத்தால் முகிழவைக்க முடியுமென்றால், நமக்கு 'இனி வாழ்வில்லை' என்று எண்ணுகின்ற கணத்தில் கூட 'உயிர்ப்பு' வந்துவிடக்கூடுமென்று இந்த ஸென் கவிதை சொல்கின்றது. ஒருவகையில் இவ்வாறான கட்டுப்பாடுகள்/நிபந்தனைகளோடு வாழ்வில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் நாமும் பிளம் போல எந்தத் தருணத்திலும் மலர முடியுமல்லவா?
வளைந்தும், க்ரீச் க்ரீச் என்று முனகும் இந்த வயது முதிர்ந்த பிளம் மரம் எல்லாவகையான காலநிலைகளையும், கஷ்டங்களையும் கண்டிருக்கும். ஆனால் அது எங்கும் நகராது அனைத்தையும் நேரடியாக எதிர்கொள்கின்றது. காற்று, கடும் மழை, பனிப்பொழிவு என வெவ்வேறு சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும், இவையெல்லாம் அதன் இயல்பான வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிகளேயாகும். அதுபோலவே நாமும் இந்த வாழ்க்கையில் வெவ்வேறு சூழ்நிலைகளையும் அனுபவங்களையும் எதிர்நோக்க வேண்டியிருந்தாலும், அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளலே 'தம்மம்' என்கின்றது ஸென். அதுவே முழுமையான உண்மை. அதுவே ஞானமடைவதற்கு/தன்னிலை உணர்வதற்கான பாதையும் ஆகும். அதைத் தவிர வேறெந்த எளிய மாற்று வழிகளும் இல்லை எனவும் எச்சரிக்கின்றது ஸென்.
*
எங்கள் வாழ்க்கையும் இந்த முதிய பிளம் மரத்தைப் போன்றதே. இவ்வாறாக இந்த பிளம் மரத்தின் பின்னணியை எங்களால் அறிந்து கொள்ளமுடியுமெனில், நம் மனித வாழ்விற்கான அர்த்தத்தையும் ஒருவகையில் விளங்கிக்கொள்ளலாம் என்கின்றது இக்கவிதை. நாங்கள் ஒருபக்கத்தில் சிரிக்கின்றோம், அழுகின்றோம், வஞ்சிக்கப்படுகின்றோம், வருத்தமுறுகின்றோம், மறுபக்கத்தில் மகிழ்ச்சியையும், கெளரவத்தையும், நேசத்தையும், நம்பிக்கையும் பெறுகின்றோம்.
இவை எல்லாமே இந்த முதிய பிளம் மரம், பெருங்காற்றிலும், பெருமழையும், கடும்பனியிலும் அனுபவிப்பதைப் போன்றதற்கு நிகர்த்தது. ஒன்று நிகழ பிறிதொன்று அடுத்து நிகழ என்று ஒவ்வொரு நிலையும் மாறிக் கொண்டிருக்கின்றது. இந்த மாற்றத்துக்கு எல்லையென்ற ஒன்றே இல்லை. இதை நாங்கள் பிளம் மரம், இந்த கடும் காலநிலைகளால் வஞ்சிக்கப்படுகின்றோம் எனச் சொல்ல முடியுமா? இல்லை அல்லவா. இந்த மாறும் காலநிலைகளினூடு போராடியபடி முதிய பிளம் மரம் பூக்களை மலர வைப்பது வியப்பானதல்லவா? அவ்வாறுதான் எத்தகை நெருக்கடிகளிலும் எமது வாழ்விலும் 'பிளம் பூக்களை' மலரத்தான் செய்கின்றன என்கின்றார் டோஜன்.
இளவேனில் காலத்தில் சட்டென்று ஒரு பிளம் பூ மலர்வதில் தொடங்கி, பல்லாயிரக்கணக்கான பிளம் மலர்கள் விரிவதைப் போல, நாமும் ஏதோ ஒரு கணத்தில் மலரத் தொடங்குகின்றோம். முழுதாய் மலர்ந்துவிட்டாலும், அதையிட்டு நாம் பெருமை கொள்ளவோ, அகங்காரம் கொள்ளவோ தேவையில்லை. பிளம் மலர் தன் தூய்மையிலோ, நறுமணத்திலோ பெருமை கொள்வதில்லை. அவ்வாறிருப்பதே அதன் இயல்பு.
தன்னிலையடைந்தவர்க்கு ஒரு தூய்மையானதும், வாசமானதுமான நிலை வாய்க்ககூடும். ஆனால் அதைப் பற்றி யோசிக்கவோ, அளவிடவோ தேவையில்லை. ஏனெனில் எல்லாமே மாறிக் கொண்டிருப்பவை.
அதனால்தான் டோஜன், பிளம் பூ மலர்தலை அது எங்கும் பரவி, அழகான வசந்தமாகின்றது என்கின்றார். ஒரு பிளம் பூ மலர்தலில் ஒரு வசந்தற்கான முதல் தடம் இருக்கின்றதெனில் எவ்வளவு அதிசயமானது. ஆனால் அது எதற்காக மலர்கின்றது, எங்கு மலரவேண்டும் என்பது என்றெல்லாம் கவலைப்படுவதில்லை. அது முகிழ்வதற்கான காரணிகள் அமைந்துவிட்டன. ஆகவே மலர்தல் என்பதற்காக மலர்கின்றன. எந்தப் பூவாவது அதை யாரோ பார்த்து மகிழப்போகின்றார்கள், தான் அழகாக இருக்கின்றேன் என்பதற்காக மலர்கின்றதா என்ன? மலர்தல் அவற்றின் இயல்பு. ஆகவே இங்கே பிளம் பூ இளவேனிலாக மாறுகின்றது.
அது பின்னர் புற்களையும் மரங்களையும் அரவணைப்பதோடு அல்லாது, காவியணிந்த பிக்குகளின் தலைகளையும் மென்மையாக மழிக்கின்றது. எவ்வளவு அருமையான உவமை. இவ்வாறாக இந்த மலர்தல் எல்லா இடங்களையும் ஆரத்தழுவி, அதன் உதிர்ந்த மலரிதழ்கள் பூமியில் பனிக்குவியல் போல ஆகின்றது. இறுதியில் அதுவே நானும், நீங்களும் எல்லாமுமாக ஆகின்றது.
*
இந்த முதிய பிளம் மரத்தில் மலர்தல் இவ்வாறு எல்லையற்றதாகவும், எல்லாவற்றையும் ஆரத்தழுவிச் செல்வதாகவும் இருக்கின்றது. இறுதியில் இந்தக் கவிதை, அது கடும் குளிராக நம் நாசியைத் துளைத்தாலும், நாம் இந்த மலர்தலை உணர்கின்றோம் என்று சொல்கின்றது. இவ்வாறே எமக்குள்ளும் பிளம் மலர்கள் மலர்ந்தபடியே இருக்கின்றன. அந்த அனுபவமும் எல்லையற்றதாகவே இருக்கும். ஆனால் அதற்கு நாம் தன்னிலையடைதல் வேண்டும். அதைப் புறவயமாகத் தேடவும் முடியாது. அப்படி ஒரு கிடைதற்கரிய அனுபவமாக புறமாகத் தேடினால் அது பொருளைப் போன்று ஆகிவிடுகின்றது.
மலர்தல் என்பது உள்ளே நிகழவேண்டும். மேலும் அந்த 'மலர்தல்' மலரப்போகின்றோம் என்ற நினைப்பு எதுவுமில்லாது 'சும்மா தியானத்தில் அமரும்போது' அது ஒரு முதிய பிளம் மரம் பூப்பதைப் போல நிகழ வேண்டும். அவ்வாறு ஒரு மலர்தல் நமக்குள் அகவயமாக நிகழும்போது நாம் புத்தர்களைப் பார்ப்போம். அந்தப் புத்தர்கள் எல்லாம் இந்தப் பூமியில் காலூன்றி நடந்திருக்கின்றார்கள் என்பதையும் காண்போம்.
இதற்கெல்லாம் முன் நிபந்தனையாக எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி, சும்மா உட்காரவேண்டும். இவையெல்லாம் ஒருநாள் நிகழப்போகின்றது என்று 'நினைக்கத் தோன்றினாலே' நாம் இவை நடக்கும் எல்லாச் சாத்தியங்களுக்கும் வெளியே சென்றுவிடுவோம் என்பதையே ஸென் திரும்பத் திருப்ப நமக்கு நினைவூட்டுகின்றது.
இந்த முதிய பிளம் மரத்தைப் போல அவரவர்க்கு அவரின் இயல்புகள் முகையவிழ்த்து எண்ணற்ற மலர்தல்கள் எல்லைகளில்லாது நிகழட்டுமாக.
*********
(எழுதுவதற்கு உதவிய நூல்கள் Jakusho Kwong இன் 'No Beginning No End' மற்றும் 'Mind Sky')
-Apr 30, 2025-
0 comments:
Post a Comment