மே மாதம் வந்துவிட்டது. உழைப்பின் முக்கியத்துவம்/தொழிலாளர் உரிமைகளை நினைவூட்ட உழைப்பாளர் தினமும் ஒவ்வொருவருடமும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மூலதனம் பற்றியும், உழைப்பு/உற்பத்தியின் மூலம் மனிதர்கள் அந்நியமாதல் பற்றியும் மார்க்ஸ்/ஏங்கல்ஸ் நிறையப் பேசியிருக்கின்றனர். அந்தப் பாதையில் பின்னர் வந்த பாப் பிளாக் போன்றவர்கள் 'உழைப்பை ஒழிப்பது' (The Abolition of Work) பற்றி விவாதித்திருக்கின்றார்கள்.
புத்தரும், ஸென் ஆசிரியர்களும் உழைப்புப் பற்றி என்ன சொல்லியிருக்கின்றனர் என்பது வேறொரு பரிணாமத்தை நமக்குத் தரக்கூடும். ஸென் இங்கேயுள்ள உயிரிகள் எல்லாமே எப்போதும் வேலை செய்து கொண்டிருக்கின்றன என்பதை வரையறுக்கின்றது. அது உடலுழைப்பாகவோ, கற்றல்/கற்பித்தல் இருந்தாலோ எதுவாக இருந்தாலும் எப்போதும் நாம் எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்கின்றோம் என்கின்றது. ஒரு அலுவலகத்துக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ காலை போய் மாலை வருவது மட்டும் 'உழைப்பு' என்று ஸென் வரையறுப்பதில்லை.
மேலும் எந்த வேலையைச் செய்தாலும், அதனோடு முற்றுமுழுதாக இயைந்து செய்யவேண்டும், அது எப்படியெனில் ஒரு விறகுக்கட்டையானது முற்றுமுழுதாக ஒரு தடயமும் இல்லாது எரிந்து போவதுபோல, செய்யும் வேலையுடன் ஒன்றிணைந்து செய்ய வேண்டும் என்கின்றது. ஒரு வேலையைச் செய்யும்போது எமக்கு எப்போது எரிச்சலோ, கோபமோ, மற்ற சக பணியாளர் எமக்கு ஒத்துழைக்க இல்லை என்ற சலிப்போ வருகின்றது என்றால், நாம் பல விடயங்களை மனதில் எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்று அர்த்தம். எனவே இந்த விடயங்களை ஒரு வேலையைச் செய்யும்போது, எம் எண்ணங்களில் இருந்து வெளியே போக (Letting Go ) செய்ய அனுமதிக்க வேண்டுமென ஸென் சொல்கிறது.
புத்தரின் வரலாற்றைப் பார்த்தால், அவர் தனது சங்காவில் இருந்த பிக்குகளும், பிக்குணிகளும் அவ்வாறு மட்டுமே இருக்க வேண்டுமென விரும்பியவர். பிற விடயங்களில் கவனஞ்செலுத்தாது இப்படி இருப்பதே ஞானமடைவதற்கு எளிதாக இருக்குமென புத்தரும் அவரின் பின்வந்த ஆசிரியர்களும் நம்பினார்கள். அதனால்தான் அன்றைய காலத்தில் உணவுக்காக பிக்குகள் மடிப்பிச்சை கேட்டு சுற்றியிருந்த ஊரவர்களிடம் சென்றார்கள். அவர்களின் ஒரேயொரு முதன்மை நோக்கம் தியானத்தில் இருப்பதேயாகும். பின்னர் பெளத்தம் சீன/ஜப்பான் போன்றவற்றுக்குப் பரவியபோதும் இந்த கலாசாரமே நெடுங்காலம் நீடித்தது. இவ்வாறு பிச்சை கேட்டு செல்வதால் இன்னொரு நல்ல விடயமும் ஸென் மரபில் நிகழ்ந்தது. அதாவது சாதாரண மக்களோடு பழக, சுற்றியிருக்கும் ஊர்களில் என்ன நடக்கின்றது என்பதை அவர்களால் எளிதாக அறிய முடிந்தது.
நான் சில வருடங்களுக்கு முன் கம்போடியாவுக்குப் போனபோதும், இவ்வாறு உணவுப் பிச்சை கேட்டு வந்த பிக்குகளைக் கண்டிருக்கின்றேன். ஒரு சிலரோடு உரையாடியும் இருக்கின்றேன். ஆக இன்றும் சில மடாயலங்களில் இந்தக் கலாசாரம் நீடித்தபடி வந்திருக்கின்றது.
இந்த 'உழைப்பு' எங்கே சலிப்பாகின்றது என்பதற்கு இன்னொரு உதாரணத்தைத் தருகின்றேன். எனது ஆசிரியரான தாயின் ப்ளம் விலேஜ் மடாலயம் பிரான்ஸில் இருக்கின்றது. தாயின் மறைவின்பின் அதை சங்காவின் உறுப்பினர்கள் பொறுப்பெடுக்க வேண்டி வந்தது. ஏனெனில் எனது ஆசிரியர் தாய், தனக்கு அடுத்தவர் இவர்தான் மடாலயத்தின் தலைமைக்குரியவர் என்று (திபெத்திய தாய்லாமா மாதிரி தேர்தெடுக்கவில்லை. அந்த மரபு ப்ளம் விலேஜில் இல்லை. இதனால் தாயோடு நீண்டகாலம் இருந்த Brother Phap Huu மடாலயத்தின் பொறுப்புக்களை எடுத்தபோது தனக்கு சலிப்பும்/எரிச்சலும் வந்ததென்கின்றார். அதனால் மடலாயத்தைவிட்டு ஒரு வருடProbation எடுத்து, வெளியே போக விரும்பியிருக்கின்றார். ஏனெனில் தான் இந்த மடலாயத்துக்கு தன்னிலை அடைவதற்கான பாதையை அறிய வந்தேனே தவிர, மடத்தின் கணக்குவழக்குகள், ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கவரவில்லை என்ற எண்ணமே தன்னை ஒருபொழுது ஆக்கிரமித்தது என்றார்.
அது ஒருவகையில் உண்மைதான். இன்றைய நவீனகாலத்தில் புத்த மடலாயங்கள் தன்னிருப்பை வைத்திருக்க வேண்டுமெனில் புதிய வழிகளில்தான் செல்ல வேண்டியிருக்கின்றது. பின்னர் Brother Phap Huu, இது தனது ஆசிரியர் தமக்கான விட்டுச் சென்ற பணி, அவரில் மதிப்பிருந்தால், அவரை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல, இந்த மரபை/மடலாயத்தை தொடர்ந்து நடத்துவதில் செயலாற்றுவதே முக்கியமென்ற தீர்மானத்துக்கு வந்தார் என்கின்றார். ஆக, ஒரு புத்த பிக்குவிற்கு, அதுவும் 25 வருடங்களுக்கு மேலாக மடாலாயத்தில் தங்கி ஓர் ஆசிரியரோடு வாழ்ந்தவருக்கும் நம்மைப் போன்ற வேலை/பணிச் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றது என்பதற்காகச் சொல்கின்றேன். எல்லாம் துறந்தவர்க்கே இப்படியான இருத்தலியச் சிக்கல்கள் இருக்கின்றனபோது, நாம் பரவாயில்லை என நம்மைத் தேற்றிக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் எவ்வாறு இதை ஸென்னினூடாக அணுகி தெளிவடைகின்றார்கள், மீண்டும் மீண்டும் இயல்புக்கு வந்து யதார்த்ததை எவ்வாறு நேரடியாக எதிர்கொள்கின்றார்கள் என்பதே நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.
ஒரு வேலை எப்போது அழகற்றதாக இருக்கின்றதெனில், அந்த வேலையில் கலைத்துவமோ, சிருஷ்டிப்பதோ, அந்த வேலையினால் ஒரு முக்கியமோ இல்லாதபோது வேலை கொடுமையாகின்றது. இதைத்தான் மார்க்ஸ் 'அந்நியமாதலில்' விரிவாகப் பேசுகின்றார். ஒருவகையில் ஸென்னும் அதைத்தான் கூறுகின்றது. உங்கள் வேலையில் முழுமையாக, அது ஒரு வேலை என்று அறியாது செயற்பாட்டில் முற்றாக ஒன்றிணந்து இருக்கச் சொல்கின்றது.
உதாரணத்துக்கு, ஊர்களில் தோட்டங்களில் வேலை செய்பவர்களைப் பாருங்கள். அவர்களுக்கு ஒரு நாள் விடியும்போது, அவர்களுக்கு தோட்ட வேலைகளும் தொடங்கிவிடுகின்றது. அவர்கள் இது எனது வேலை, எனது ஓய்வு என்று பிரித்துப் பார்ப்பதில்லை. தோட்ட வேலையைச் செய்யும்போதோ, அங்கே வரும் அயலவர்களுடன் கதைக்கின்றார்கள். மற்ற வேலைகளைச் செய்கின்றார்கள். அவர்கள் எது முக்கியமாக அந்தக் கணத்தில் இருக்கின்றதோ அதை மனமொன்றிச் செய்கின்றார்கள்.
மேலும், நிலத்தைப் பண்படுத்துவதில், பயிர்களை நடுவதில், அவை செழித்து வருவதிலென ஒவ்வொரு காலகட்டத்திலும் அழகைப் பார்க்கின்றார்கள். மனநிறைவை அடைகின்றார்கள்.
எனது சிறுவயதுகளில் வாசித்த அநேக (ஈழத்து) நாவல்களில் கதைகள் தோட்டம் செய்யும் பாத்திரங்களோடோ தொடங்கும். அதையெல்லாம் வாசிக்கும்போது எவருக்கும் கட்டுப்படாத எவ்வளவு அழகான வாழ்க்கை என்று நினைப்பதுண்டு. என் சிறுவயதுக் கனவாக தோட்டம் செய்வதாகவே இருந்தது. இத்தனைக்கும் எங்களுக்கென தோட்டம் செய்த நிலங்களே இல்லாமலே இந்தக் கனவு எப்படி எனக்குள் உள்நுழைந்தது என்பது வியப்பானது.
இதனால் தோட்டங்களைச் செய்பவர்கள் கஷ்டங்களையோ, துயரங்களையோ அனுபவிப்பதில்லை என்பதல்ல அர்த்தம். ஆனால் அவர்கள் அந்தத் 'தொழிலை' நம்மைப் போன்ற நவீன காலத்து மனிதர்கள் போல பிரித்துப் பார்க்காது, அதனோடு ஒன்றிணைந்து பார்த்தார்கள் என்பதையே கவனப்படுத்துகின்றேன்.
நாங்கள் வேலையை ஒரு 9-5 பிரித்து வைத்திருக்கின்றோம். ஆனால் இந்த 9-5 மட்டுமா வேலை செய்கின்றோம்? இல்லையல்லவா? அதற்கு முன்னரும் பின்னரும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றோம். ஒரு மரம் என்பது முளைப்பதிலிருந்து அது பட்டுப்போகின்றவரை 'உழைத்து'க் கொண்டுதான் இருக்கின்றது. அது தொடர்ந்து ஏதோ பிறருக்கு வழங்கிக் கொண்டே இருக்கின்றது. ஆனால் ஒருபோதும் அது 'வேலை' செய்துகொண்டிருக்கின்றேன் என்று நினைப்பதில்லை. அது எத்தனை காலநிலை மாற்றங்களை, நோய்களை எதிர்கொண்டிருக்கும். ஆனாலும் அது வளர்ந்துகொண்டே இருக்கின்றது. இலைகளையும், பூக்களையும், கனிகளையும் வழங்குவதில் பின்னிற்பதில்லை.
மரங்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் நாங்கள் 'பகுத்தறிவை' வைத்து அதிகம் சிந்திக்கின்றோம், செய்த பல விடயங்களுக்கு பிறரிடம் இருந்து அங்கீகாரத்தை எதிர்பார்க்கின்றோம். அந்த அங்கீகாரம் நம் உழைப்புக்காகக் கிடைக்காதபோது சுருங்கிப் போகின்றோம். இன்னும் ஒரு எல்லை மேலே சென்று பிறரைக் குற்றஞ்சாட்டுகின்றோம். இதனால் எமக்கோ பிறருக்கோ எந்த நன்மையும் விளையப்போவதில்லை. ஏனெனில் நாம் பலவற்றை அழுத்திப் பிடித்து (hold) வைத்திருக்கின்றோம், அவற்றை எம்மிடையே இருந்து வெளியே போக (Let Go)அனுமதிப்பதில்லை.
மேலும் ஸென் ஒருபோதும் பணம் சம்பாதிப்பதையோ/செல்வம் சேகரிப்பதையோ அது தவறென்று சொல்வதில்லை. பணத்தைப் பற்றி மட்டுமில்லை எந்த ஒன்றையும் ஸென் நிராகரிப்பதில்லை. ஏனெனில் ஸென்னில் discriminate என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால் அதை சேகரித்து சேகரித்து மட்டும் உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள் என்று எச்சரிக்கையைத் தருகின்றது. இதைவிட எல்லையற்ற மகிழ்வுக்கும் நிம்மதிக்கும் அழைத்துச் செல்லும் பாதை தியானத்தினூடு இருக்கின்றது என்று நம்பிக்கையைத் தருகின்றது. நீங்கள் உழைப்பதும், செல்வம் சேர்ப்பதும் ஒரு மலர் விரிவதைப் போல் இயல்பாக இருக்கவேண்டும். வேறு எவரையும் சுரண்டி உழைப்பதோ/ செல்வத்தைச் சேர்ப்பதோ கர்மாக்களுக்கு வழிவகுக்கும் என சில ஸென் மரபுகள் நமக்கு நினைவூட்டுகின்றன.
இவை எல்லாம் எளிதா என்றால், இல்லை எனத்தான் சொல்ல வேண்டும். நாம் தொடர்ச்சியாக பிற விடயங்களால் செல்வாக்கு செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இப்படி ஒரு வழி இருக்கின்றதென்றாலே, நமது மனம் இதெல்லாம் சாத்தியமா, இதெல்லாம் கற்பனாவாதம் என்று சமாந்திரமாக யோசிக்கத் தொடங்கும். மூளை மிகச்சிறந்த தந்திரசாலி. உங்களை ஒவ்வொரு கணமும் குத்துச்சண்டை மேடையில் மூர்க்கமாக அடித்து வீழ்த்திக் கெக்கலிக்கும்.
ஸென் வேலை என்பது எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றது என்று சொல்கின்றது. மனிதர்கள் பிறந்ததிலிருந்து காலமாகும்வரை ஏதோ ஒருவகையில் உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த உழைப்பு/வேலை எவ்வாறாக இருந்தாற் கூட அதை mindfulness ஆகச் செய்யச் சொல்கின்றது. சாதாரண வேலையில் வரும் சலிப்பு/எரிச்சல்/கோபம் என்பவை பிறரால் அல்ல, நாம் அழுத்தமாகப் பிடித்து வைத்திருக்கும் எண்ணங்களாலே உருவாகின்றதே தவிர, நாம் பிறரை குற்றஞ்சாட்ட அவசியமில்லை எனவும் நினைவூட்டுகிறது.
ஒரு வேலையைச் செய்யும்போது விறகு போல முற்றுமுழுதாக எரிந்து, ஒரு சிறுதடயமும் இல்லாது செய்து முடியுங்கள் எனச் சொல்கின்றது. ஏனெனில் அப்போது நீங்களும், வேலையும் வேறு வேறானதல்ல. இரண்டுமே ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து நீங்கள் தொலைந்துவிடுகின்ற அருமையான தருணம்!
********
(May 02, 2025)
0 comments:
Post a Comment