ஒசாமா பின் லாடனை பிடிப்பதற்கு அமெரிக்கா எவ்வளவு நீண்டகாலம் முயன்றது என்பது நம்மனைவருக்குந் தெரியும். இந்த ஆவணப்படமானது இந்த முயற்சியில் ஈடுபட்ட பலரைப் பேச வைத்ததன் மூலம் எப்படி ஒசாமா கொல்லப்பட்டார் என்பது வரை ஆழமாகக் காட்டுகின்றது. வளர்ந்த கடா நெஞ்சினில் மோதியது என்பது மாதிரி அமெரிக்கா வளர்ந்துவிட்ட ஒசாமாவே அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பினார். அது அமெரிக்க மண்ணிலே அமெரிக்காவே நினைத்துப் பார்க்க முடியாத 9/11 தாக்குதலாக மாறியியிருந்தது.
அன்று ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த ரஷ்யாவுக்கு(அன்றைய சோவியத் ஒன்றியம்) எதிராக போரடிய இயக்கமாகிய முஜாஜூனுக்கு மில்லியன்கணக்கில் அமெரிக்க பணத்தை அள்ளிவழங்கியது. அதிலிருந்து முளைத்தெழும்பிய ஓசாமா பின்னர் அல்-ஹைடாவை தனியொரு இயக்கமாக வளர்த்தெடுத்தது நாமனைவரும் அறிந்ததே.
அல்-ஹைடா அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் செய்த தாக்குதல்களை மறக்கமுடியாது. அதுபோல 9/11 உயிரிழந்த அப்பாவி மக்களையும் நாம் எளிதில் தாண்டி வரமுடியாது. ஆனால் தீவிரவாதத்தின் ஊற்றுமுகம் தனியே 'பயங்கரவாதிகள்' என நாமம் சூட்டப்பட்டவர்களிடமிருந்து மட்டும் வருவதில்லை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஓர் இயக்கம் செய்வதைப் 'பயங்கரவாதம்' என்று எளிதில் பெயர் சூட்டிவிட முடியும் நம்மால் இஸ்ரேல், இலங்கை போன்ற அரசுக்கள் செய்ததை/செய்வதை நாம் என்ன பெயரிட்டு அழைக்க முடியும்?
தனி மனிதர்களையோ, தனியே இயக்கங்களையோ அழிப்பதால் உலகில் அமைதி தோன்றிவிடும் என்ற பழைய மரபான சிந்தனைகளிடமிருந்து வெளிவராதவரை ஒசாமா பின் லாடன்கள் தோன்றுவதை நாம் ஒருபோதும் நிறுத்தமுடியாது. வேண்டுமெனில் ஒவ்வொரு நாடும் தான் கட்டியமைத்திருக்கும் 'தேசியப் பெருமிதத்திற்கு' இவை எண்ணெய்யை ஊற்றி மேலும் கொஞ்ச நேரம் எரிய வைக்கக்கூடும். அவ்வளவுதான். அதற்கப்பால் 'பயங்கரவாதம்' ஏன் தோன்றுகின்றது என்று அதன் வேர்களை நோக்கி ஆழமாய விடை காணாதவரை இந்த 'அழித்தொழிப்புக்கள்' தற்காலிக முடிவுகளே. அதைத்தான் இந்த ஆவணப்படத்தின் முடிவிலும் இது ஒசாமா என்கின்ற ஒரு அத்தியாயத்தின் முடிவு மட்டுமே எனச் சுட்டிக்காட்டுகின்றார் ஒருவர்.
**********
(Netflix இல் இன்று வெளியாகிய 'American Manhunt: Osama Bin Laden' ஆவணப்படத்தை முன்வைத்து)
-May 15-
0 comments:
Post a Comment