கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 112

Sunday, September 21, 2025

 

சில வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் நான் அலைந்து கொண்டிருந்தேன். அப்போது சுவிஸில் சூரிச் பல்கலைக்கழகத்தில் புகைப்படக் கண்காட்சியொன்று நடைபெறுவதை அறிந்து அங்கே போயிருந்தேன். அது ஈழத்தில் இறுதியுத்தம் நடைபெற்றபோது அமரதாஸ் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி. வளாகத்தில் திறந்தவெளி அரங்கின் மையத்தில் அவை  காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

என்னால் ஒருபோதும் போர்க்கால அழிவுகளின் புகைப்படங்களை நிதானமாகப் பார்க்க முடிவதில்லை. இந்தப் புகைப்படங்கள் இயன்றளவு கோரத்தை மறைக்கும் கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களாக இருந்தபோதும் அவற்றில் இருந்து விலகிப் போகவே விரும்பினேன். ஆகவே உயர்ந்துபோய்க்கொண்டிருந்த படிக்கட்டுக்களில் அமர்ந்திருந்து புகைப்படங்களை அல்ல, அவற்றைப் பார்க்கும் மனிதர்களின் உணர்ச்சிநிலைகளை அவதானித்துக் கொண்டிருந்தேன்.

அமரதாஸ் எனக்கு அறிமுகமான நண்பர் என்கின்றபோதும், அவருக்கு என் வரவை அறிவிக்காதே சென்றிருந்தேன். நான் சென்றிருந்த நேரம் அமரதாஸ் இருக்கவில்லை. இப்படி புகைப்படக் கண்காட்சிக்குச் சென்றேன் என இன்னொரு நண்பரான புகைப்படக் கலைஞரான ஜெயந்தனிடம் சொன்னபோது அவர் அங்கே நடைபெற்ற ஒரு சம்பவத்தைச் சொன்னார்.

இதற்கு முன் நடந்த இவ்வாறான புகைப்படக் கண்காட்சியில் இது நடந்திருக்கின்றது. புகைப்படங்களை காட்சிப்படுத்திய ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு மூதாட்டி வந்து கொண்டு போய்க்கொண்டிருந்தார். அவர் ஏன் தினம் வருகின்றார் என்று பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கின்றது. விசாரித்தபோது, யுத்தத்தில் காணாமற்போய் விட்ட தனது மகன் இந்தப் புகைப்படங்களில் இருக்கின்றாரா எனத் தேடியிருக்கின்றார்.

இத்தனை காலத்துக்குப் பிறகு மகன் உயிரோடு இருக்கமாட்டார் என்று அவரின் உள்மனது அறிந்திருக்கக் கூடும். ஆனால் அவர் தனது மகனைத் தேடிக் கொண்டிருக்கின்றார். சிலவேளைகளில் போரின் நிமித்தம் அனைத்தையும் தொலைத்து தனது மகனின் புகைப்படம் எதுவும் கூட அவரின் கையில் இறுதியில் எஞ்சாமலும் போயிருக்கலாம். ஆகவே நிஜத்தை மீண்டும் நினைவில் கொண்டுவர வந்திருக்கலாம். இன்னொருவகையில் இவ்வாறு புகைப்படங்களைப் பார்த்து ஒருவகையான ஆற்றுப்படுத்தலை அவர் செய்வதாகக் கூட இருக்கலாம். அதாவது தனியொருத்தியின் துயரமாக அல்லாது, ஒரு கூட்டுச் சமூகத்தின் இழப்பாக தன் துயரத்தைக் கரைத்துவிட அவர் முயன்றிருக்கலாம்.

அமரதாஸின் இந்த புகைப்படங்கள் பின்னர்  தொகுக்கப்பட்டு ஒரு புகைப்பட நூலாக 'Through The Fire Zones' என்ற பெயரில் வந்திருக்கின்றது. அந்தப் புகைப்படங்களைப் பற்றிய ஒரு சர்ச்சையும் அந்தக் காலங்களில் எழும்பியிருக்கின்றது. அதை இப்போதைக்கு விடுவோம்.



நேற்று இப்படியான, இறுதி யுத்தங்களின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொகுக்கப்பட்ட 'போரின் சாட்சியம்' என்ற நூல் வெளியீடு இங்கே நடைபெற்றது. இந்த நூலை சுரேன் கார்த்திகேசு என்று யுத்தகாலங்களில் ஊடகவியலாளராக இருந்தவர் வெளியிட்டிருக்கின்றார். மேலும் புகைப்படங்களுக்கு அவற்றோடு சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் எழுத்தாகவும் பதிந்திருக்கின்றார்.

இந்த நிகழ்வில் உருப்படியாக பேசிய ஒருவரென்றால் பா.அ.ஜயகரன் என்று சொல்வேன். நூலின் தலைப்பு 'போரின் சாட்சியம்' என்றால், ஒருவர் சாட்சியம் சொல்ல வந்தால், அதற்குக் குறுக்கு விசாரணைகள் இருக்கவும் செய்யும், அதையும் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதன் மூலம், நாம் நமக்கிழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரும்போது, நமது கரங்களில் படிந்திருக்கும் இரத்தக்கறைகளை நோக்கியும் பார்வையைச் செலுத்தவேண்டும் என்பது மறைமுகமான உணர்த்தலாக இருந்தது. மேலும் அறம் என்பது, தன்னைப் போன்றவர்கள் ஏன் நம்மவர்கள் அனுராதபுரத்தில் சிங்கள மக்களைக் கொலை செய்கின்றார்கள், சுழிபுரத்தில் இளைஞர்களைக் கொன்று புதைக்கின்றனர் என்று அன்று எழுப்பிய கேள்விகளைப் போன்று இருக்கவேண்டும் என்று ஒருசார்பாகவே பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்த அந்தச் சபையில் ஜயகரனின் கேள்விகள் முக்கியமானவை. அதேவேளை இந்த நூலுக்கு இருக்கும் பெறுமதியின் கனத்தையும் குறைக்காது அவரது பேச்சு காத்திரமாக அமைந்திருந்தது.

எனக்கு இந்த நூலாசிரியரைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. முகநூலில் நண்பரும் இல்லை. ஆனால்  ஒருகாலத்தில் ஏதோ ஒரு சர்ச்சையின் நிமித்தம் இவர் பெயரும் அமரதாஸைப்போல அடிபட்டதாகக் கொஞ்சம்  நினைவிருக்கிறது. நிகழ்வில், சுரேன் ஈழத்தில் இறுதி யுத்தம் நடைபெற்றபின் கனடாவுக்கு வந்த கப்பலில் இருந்த ஒருவரெனச் சொன்னார்கள். இற்றைக்கு 15 வருடங்களான பின்னும், இன்னும் அவரின் அகதி நிலைக்கோரிக்கை  ஏற்காது ஓர் ஏதிலியாக இருக்கின்ற அவலமும் இருக்கின்றது. அன்றைய காலங்களில் இரண்டு கப்பல்களில் வந்தவர்களில் 60% இற்கு மேலானவர்கள் அகதி நிலை கனடாவில் அங்கீகரிக்காத துயரத்தோடு இங்கே வாழ்ந்தபடி இருக்கின்றார்கள் என்பது இன்னும் துயரமானது. இந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு சாரோன் பாலா 'Boat People' என்கின்ற கவனிக்கத்ததொரு புதினத்தை எழுதியிருக்கின்றார்.

இப்போது சுரேனின் முகநூலை, இப்பதிவை எழுதுவதற்கு முன்னர் சும்மா எட்டிப் பார்த்தேன். கனடாவின் வலதுசாரி எதிர்க்கட்சித்தலைவரின் ( Sun Sea கப்பல் வந்த நினைவின் நிகழ்வொன்றுக்கான) செய்தியைப் பகிர்ந்திருக்கின்றார். ஆனால் இதே வலதுசாரி மிதவாத அரசுதான்  அன்று கப்பலில் சுரேன் போன்றவர்கள்  வந்தபோது ஆட்சியதிகாரத்தில் இருந்தது. அப்படி இவர்கள் ஏதிலிகளாகக் கனடாவுக்குள் வந்தபோது பொதுவெளியில் போர்க்குற்றவாளிகள் என்று குற்றஞ்சாட்டி அவர்களைப் புறக்கணித்துமிருந்தது.

அதுமட்டுமில்லாது ஒருவர் கனடாவின் நில/நீர் எல்லைகளுக்குள் வந்து அகதியென தன்னை அறிவித்தால் அவர்களை எவ்விதக் கேள்விகளுமில்லாது அகதியென ஏற்றுக்கொள்ளவேண்டுமிருந்த கனடாச் சட்டங்களையெல்லாம், இந்தக் கப்பலில் நிமித்தம் வந்தர்களை முன்னிட்டு Bill C-31 என்ற அகதிகளுக்கெதிரான  புதிய சட்டத்தை  அன்றைய வலதுசாரி அரசு இயற்றியுமிருந்தது. இப்படி பல அநீதிகளைச் செய்த இந்த மிதவாத அரசிடமிருந்துதான் ஒரு வாழ்த்துச் செய்தியைப் பெற்றிருக்கின்றார் சுரேன்.  அப்படியாயின் இவரைப் போன்றவர்கள் -அதுவும் ஊடகவியலாளராக இருப்பவர்கள்- பெற்றிருக்கும்  உண்மையான அரசியல் அறிவு என்பதுதான் என்ன?

மற்றும்படி இந்த நூல் ஈழத்தில் இறுதிக்காலத்தில் நடந்தவற்றைப் பதிவாக்கின்ற முக்கியமான ஆவணம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சுவிஸில் கறுப்பு வெள்ளை புகைப்படங்களைப் பார்ப்பதையே தவிர்த்த நான், இதில் வர்ணங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்ற நூலை நிதானமாக இருந்து புரட்டப்போவதில்லை. இந்த நூலை வாங்கி வந்திருந்தாலும் அது குறித்த பதற்றத்தினால், வீட்டுக்கு வந்திருந்த அண்ணாவிடமே நீங்கள் கொண்டுபோய் வாசியுங்களென உடனேயே கொடுத்துவிட்டேன். இவ்வளவு பாரங்களை என்னால் சுமக்க முடியாதென்கின்றபோது நேரடியாக இந்தச் சம்பவங்களைப் பார்த்த சுரேன் போன்றவர்களின் உளவடுக்கள் ஆற ஒரு வாழ்க்கைக் காலம் போதுமா தெரியவில்லை.

இந்த நிகழ்வுக்குப் போகமுன்னர் முள்ளிவாய்க்காலின் கடைசிநாள் வரை இருந்து தப்பி வந்த ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு அப்போது பதின்மம். அவரிடம் போர் குறித்த நினைவுகளை நான் ஒருபோதும் கேட்பதில்லை. சிலவேளைகளில் நான் ஈழப்போர் குறித்த நூல்களை வாசித்துவிட்டு அவரிடம் பகிரும்போது அவர் தன் நினைவுகளை இயல்பாகப் பகிரத் தொடங்குவார். அவர் நந்திக்கடலைக் கடந்துவந்தபோது அவரது கால்களில் தட்டுப்பட்ட உடல்கள் இன்னமும் கனவில் வந்தபடி இருக்கின்றதென்றார். தினம் 40-50 சாவுகளை நேரடியாகப் பார்த்தவள் என்றவகையில், இப்போது யாரும் விபத்தில் நான்கைந்து பேர் இறந்திருக்கின்றார்கள் என்று சொன்னால்கூட அது தனக்கு உறைப்பதில்லை என்றும், அதையிட்டுக் கவலையுறாத தன்னைப் பார்த்து மற்றவர்கள் அதிர்ச்சியடைவதையும் சொல்லிக் கொண்டிருந்தார். பல வருட கால நட்பென்றாலும், இன்னமும் என்னிடம் கூடப் பகிரமுடியாப் பல கதைகள் அவரிடம் இருக்கின்றன என்பதையும் நான் அறிவேன்.

நாம் எல்லா நேரமும் மெளனமாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்காக எந்நேரமும் அரசியல் சரி/பிழைகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கவும்  தேவை இல்லை. எந்தத் தரப்பாயினும் உணர்ச்சியரசியலைவிட்டு அருகிலிருப்பவர்களைக் கொஞ்சம் பரிவுடன் பார்க்கவும், அவர்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்கவும் முதலில் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

*********

(Aug 30, 2025)

0 comments: