கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பனிக்காலத் தனிமை - 11

Saturday, October 18, 2025

 

மெரிக்காவில் ஸென்னைப் பரவலாக்கிய ஒருவராகிய சூஸிகி ரோஸி சான் பிரான்ஸிற்கோவிற்கு வரும்போது அவருக்கு 55 வயதாகியிருந்தது. சூஸிகி ரோஸியின் குழந்தைப் பருவம் வறுமைக்குள் கழிந்தது. தனது சிறுவயதில் வளர்ந்த தலைமயிரைக் கூட சலூனுக்குச் சென்று வெட்ட முடியாத காரணத்தால், தனது தந்தையார் தனது தலையை நன்றாக மழித்துவிடுவார் என்றும் அதனால் பாடசாலையில் தனது மொட்டைத்தலையை எள்ளல் செய்தபடி சக மாணவர்கள் இருப்பார்கள் எனவும், இதனால் தனது பாடசாலைப் பருவம் மகிழ்ச்சியாக இருந்ததில்லை எனவும் ரோஸி சொல்லியிருக்கின்றார்.

சூஸிகி ரோஸியின் தந்தையார் ஒரு புத்த மடலாயத்திற்குப் பொறுப்பானவராக இருந்தவர் . ஆனால் அன்றைய மெஜி பேரரசர் (Emperor Meiji) பெளத்த மடாலயங்கள் அனைத்தையும் ஷின்டோ (Shinto) மடலாயங்களாக மாற்றி அரசின் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்திருந்தார். ஒருவகையில் வேறிடத்தில் இருந்த பெளத்தம் வேண்டாம், ஜப்பானிய பூர்வீக மதங்களுக்குத் திரும்பவேண்டும் என்ற நோக்கில் இப்படி அனைத்தும் ஷின்டோவாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன.

சூஸிகி ரோஸி தனது 13 வயதில் தந்தையிடம் அனுமதி கேட்டு இன்னொரு பெளத்த மடலாயத்தில் சென்று சேர்கின்றார். ரோஸி ஆசிரியராக ஸென்னைக் கற்பிக்கும் நிலைக்கு வந்தபோது அவர் அமெரிக்காவுக்குச் செல்ல விரும்புகின்றார். அவருக்கு ஜப்பானில் பெளத்தம் அதன் அசலான நிலைமையிலிருந்து மாறிவிட்டதாகத் தோன்றுகின்றது. புதிய நிலப்பரப்பில், பெளத்தம் குறித்து எவ்வித முன்முடிவுகளும் இல்லாத இடத்தில் ஸென்னை கற்பிப்பது சிறந்ததென முடிவு செய்கின்றார்.
ஆனால் ரோஸியின் ஆசிரியர் அவரது இந்த முடிவுக்கு சம்மதிக்கவில்லை.

பின்னர் அவர் தனது ஐம்பதுகளில் (1959இல்) அமெரிக்காவுக்கு ஒரு ஜப்பானிய மடலாயத்துக்கு குருவாக வருகின்றார். அங்கும் அது ஒரு மதகுருவாக இருந்தாலும் அவரது கனவான ஸென்னை அதன் மூலத்தில் சொல்லிக் கொடுப்பது என்பதற்காக காலையிலும் மாலையிலும் 'சடங்குகளுக்கு' வெளியே சொல்லித் தர, பின்னர் சூஸிகி ரோஸி ஒரு முக்கிய ஸென் ஆசிரியராக மாறியது வரலாறு.

சூஸிகி ரோஸி 'ஏன் அமெரிக்காவுக்கு வந்தேன்?' என்று உரையாடியிருக்கின்றார். இத்தனைக்கும் ரோஸி அமெரிக்காவுக்கு வந்து உயிரோடு இருந்த ஆண்டுகள் 12 ஆண்டுகள் மட்டுமே. ஸென் வரலாறுகள் இது ஒரு சொற்பகாலம். ஆனால் ரோஸி தனக்குப் பின் குறிப்பிட்ட மாணவர்களை உருவாக்கியதோடல்லாது, அநேக ஸென் மடலாயங்கள் போல, மாஸ்டர்கள் இறந்துபோக காலத்தில் கரைந்துபோகாது இன்றும் சூஸிகி ரோஸியை நினைவுபடுத்தியபடி பல நூறு மாணவர்களின் அவர்களின் தலைமுறைகளும் வந்தபடி இருக்கின்றன.

ஒன்றுமே இல்லாது வந்த சூஸிகி ரோஸி அவர் இறந்துபோனபோது மூன்று வெவ்வேறு மடாலயங்களைத் தொடங்குமளவுக்கு அவரது மாணவர்களை வளர்த்துவிட்டிருந்தார். சூஸிகி ரோஸி அமெரிக்கா வந்த இரண்டு வருடங்களில் அவரது மனைவி அமெரிக்காவுக்கு வருகின்றார். சூஸிகி ரோஸி காலையில் மாணவர்களோடு இருந்து தியானம் செய்வது முடிந்தவுடன் உடனேயே மடலாயத்தில் செய்யவேண்டிய வேலைகளுக்காக உடையை மாற்றிவிட்டு அந்நிலத்தில் ஏதாவது செய்யத் தொடங்கிவிடுவார் என்று மனைவி குறிப்பிடுகின்றார்.

அதுபோலவே இரவுணவைச் சாப்பிட்டுவிட்டு தன்னோடு கொஞ்ச நேரப் பொழுதைக் கழியுங்கள் என்றாலும் எனக்கு இந்த அமெரிக்காவில் ஸென்னை பரப்பும் விருப்பம் இருக்கின்றதெனச் சொல்லி வாரம் ஒரு முறை நடக்கும் ஆங்கில தம்ம உரைக்குத் தயாராக தனது அறைக்குச் சென்று விடுவார் எனச் சொல்கின்றார்.

ன்றைய அநேக ஜப்பானிய ஸென் ஆசிரியர்களைப் போல சூஸிகி ரோஸிக்கு ஆங்கிலம் அவ்வளவு தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் உரையாற்ற கடும் உழைப்பைக் கொடுத்திருக்கின்றார். சிலவேளைகளில் இப்படி வாரம் முழுதும் தயாரித்த உரையைக் கேட்க, ஆரம்ப காலகட்டத்தில் மூன்று/நான்கு மாணவர்கள்தான் வந்தபடி இருந்திருக்கின்றார்கள். இப்படி கடுமையாக உரையைத் தயார் செய்ததற்கு ஒரு பத்துப்பேர் வந்தால் கூட பரவாயில்லை என்று தான் ரோஸியிடம் கேட்டதாக ரோஸியின் மனைவி குறிப்பிட்டிருக்கின்றார். அதற்கு ரோஸி, ஒருவரா இல்லை ஆயிரம் பேரா , அது எனக்கு பொருட்டில்லை; நான் இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன் எனச் சொல்லியிருக்கின்றார்.

இவ்வாறு தொடர்ச்சியான கடும் உழைப்பில்தான் சூஸிகி ரோஸி தனது மாணவர்களை உருவாக்கியிருந்தார். அதேபோல அவர் நம்பிக்கையீனங்களையும் தனக்குள் உருவாக்காது, அவரின் வாழ்க்கையில் அறிந்த ஸென்னைத் தீவிரமாக நம்பியிருக்கின்றார். அவரது கடைசிக்கால உரையில் கூட ரோஸி, நான் இன்னும் கூட பெளத்தத்தை ஆழ அறிவுப்புலத்தில் வைத்து வாசித்திருக்கலாம், இன்னும் கூட நேரம் தியானத்தில் அமர்ந்திருக்கலாம்; ஆனால் நாளாந்த வேலைகளில் நேரத்தைச் செலவிட்டுவிட்டேன். ஆனால் எனது மாணவர்கள் மீது நம்பிக்கை இருக்கின்றது. அவர்கள் என்னை அறிவுப்புலத்திலும் தியானத்திலும் விஞ்சிப்போவார்கள். என் வயதொத்தவர்கள் (60களில் இருப்பவர்கள்) என் மாணவர்களைத்தான் அதிகம் நம்புவோம். நீங்கள் ஏதோ ஒருவகையில் சாதித்துக் காட்டுவீர்கள்' என்றிருக்கின்றார்.

அந்த நம்பிக்கையை வீணடிக்காது அவரின் சிறந்த மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களாக வெளிவந்திருக்கின்றார்கள். அவர்கள் வெவ்வேறு திசைகளுக்குச் சென்று ஸென்னை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். அதைவிட நிறையப் புத்தகங்களை ஸென் பற்றியும், அவர்களின் ஆசிரியரான சூஸிகி ரோஸி பற்றியும் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். சூஸிகி ரோஸியின் நேரடி மாணவர்களுக்கே இப்போது 80 வயதுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இந்த 80 வயது ஆசிரியர்களின் அடுத்த தலைமுறை மாணவர்கள் கூட தமது ஆசிரியர்களினூடாக சூஸிகி ரோஸியை நினைவுபடுத்தியபடி இருக்கின்றார்கள். ஒரு நீண்ட தலைமுறை இப்போது சூஸிகி ரோஸிக்கு உருவாகிவிட்டிருக்கின்றது.

சூஸிகி ரோஸியை வாழ்வைப் பார்க்கும் நாங்கள் நம்பும் ஓரு விடயத்தை எவ்வளவு உழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என யோசித்துப் பார்க்கின்றேன். அதுவும் ஈழத்தமிழர்களாகிய நாம் இதை இன்னும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கலாம். ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆனபின்னும் ஒரு grassroots இயக்கத்தையும் எந்த நம்பிக்கை/அரசியல் சார்ந்தும் நம்மால் வளர்த்தெடுக்க முடியவில்லை.

இத்தனைக்கும் பல்வேறு அரசியல்/ஆன்மீக நம்பிக்கையாளர்கள் புலம்பெயர்ந்த தேசம் உள்ளிட்ட பல இடங்களில் இருக்கின்றார்கள். நாம் எல்லோரையும் ஏன் இப்படி தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் உழைக்கவில்லை என்று கேட்க முடியாது. ஆனால் இவ்வாறு சமூகத்தில் செயற்பாட்டாளர்களாக இருப்பவர்கள் அல்லது சொல்லிக் கொள்பவர்கள் ஏன் ஒரு சிறு காலடியைக் கூட உருப்படியாக வைக்க முடியவில்லை என்று அவரவர்கள் சுயவிமர்சனம் செய்யவேண்டும்.

சூஸிகி ரோஸி 1950களில் அமெரிக்காவுக்கு வரும்போது அவருக்கு எந்தப் பின்புலமும் இல்லை. ஆங்கிலம் கூட ஒழுங்காய்த் தெரியாது. முற்றிலும் புதிய நிலப்பரப்பு மட்டுமில்லை, மனிதர்களும் கூட புதியவர்கள். என்கின்றபோது 12 ஆண்டுகளிலேயே மிகச் சிறந்த மாணவர்களையும், ஸென் மடாலயங்களையும் உருவாக்க முடிந்தது. அதுமட்டுமின்றி அவருக்குப் பின்னும் அது உயிர்வாழும் விதைகளையும் ஊன்ற முடிந்திருக்கின்றது. இத்தனைக்கும் ரோஸி தனது ஸென் உரைகளையும், தியானத்தையும் கற்பித்தபோது வந்த மாணவர்கள் நான்கைந்து பேரே.  

ஸென் என்றோ ஒருநாள் அமெரிக்காவில் பரவும் என்கின்ற அந்த மாபெரும் நம்பிக்கை, தொடக்ககால மாணவர்கள் ஒருசில  என்றாலும் அவர்களை அரவணைத்த விதம் இன்றைக்கு சூஸிகி ரோஸியின் மூலம் ஸென் மாபெரும் ஆலமரமாக வேரை மட்டுமில்லை விழுதுகளையும் விட்டு பரவியிருக்கின்றது.

மே
லும் சூஸிகி ரோஸி  ஒருவருக்கு வயது கூட ஒரு பொருட்டேயல்ல என்று நிரூபித்துமிருக்கின்றார். இன்றைக்கு 80களில் ஆயுதப்போராட்டத்தில் பங்காற்றியவர்கள் உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் முடிந்தபோது பங்கேற்றவர்கள் உள்ளிட்ட அனைவரின்முன் நீங்கள் உண்மையிலே தமிழ்ச் சமூகத்திடம்  கொடுக்க உங்களிடம் எதை வைத்திருக்கின்றீர்கள் என்பதையும், உங்களை அதற்காக எவ்வளவு தயார்ப்படுத்தி நிகழ்காலத்தோடு நிற்க முடிகின்றதா என ஒவ்வொருவரும் தம்மைத்தாமே கேட்க வேண்டும். அவ்வாறில்லாதுவிட்டால் அவை வெறும் வெற்று வார்த்தைகளாக/ வீணான நம்பிக்கைகளாக, தரிசு நிலத்து விதைகளாகவே நீங்கள் விதைக்கும்/பேசும் எதுவும் இருக்கும் என்பதாக அமையும் அவலச்சூழலுக்குள் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை உணரவேண்டும்.

சூஸிகி ரோஸி, அமெரிக்காவிற்கு வந்த புதிதில் அருகிலிருக்கும் கடையில் ரெட்டிஷ்களை சூப்புக்காக வாங்குவாராம். இவர் எப்போதும் பழைய/ வாடிய ரெட்டிஷ்களை வாங்குவதைப் பார்க்கும் கடைக்காரர், புதிதை தேர்ந்தெடுக்கலாமே என்று கேட்பாராம். அதற்கு, புதியதை வாங்க எவரும் வருவார்கள், வாடியதை ஒருவரும் வாங்கமாட்டார்கள் என வாங்கிச் செல்வராம் ரோஸி. அதுபோலவே சூஸிகி ரோஸி தனது கடைசிக்காலத்தில் ஒரு அறுவைச் சிகிச்சையைச் செய்தபின்னும், ஓய்வெடுக்காமல் அவரது தோட்டத்தில் எதையாவது வெட்டிக் கொட்டிக் கொண்டிருப்பாராம். இதைப் பார்த்த அவரது மனைவி, இப்படியே வேலை செய்தால், உங்கள் ஆயுள் சுருங்கிவிடும் என்று கத்துவராம். அதற்கு சூஸிகி, நான் என் ஆயுளைச் சுருக்காமல் விட்டால்,  எனது மாணவர்கள் வளரமாட்டார்கள் (If i dont cut my life short, my students will not grow) என்று பதிலளிப்பாராம்.

சூஸிகி ரோஸியை தொடக்க காலத்தில் நினைவுபடுத்தும் அவரது பலர் மாணவர்கள் அவர் நன்றாகப் புகைப்பவராகவும், வாரவிறுதிகளில் பார்க்கும் ஜப்பானிய Rom-Com திரைப்படங்களுக்கே கண்ணீர் விடுபவராகவும் இருந்தவர் எனக் குறிப்பிடுகின்றனர். ஒரு ஸென் ஆசிரியரை, அதுவும் அமெரிக்காவில் ஸென்னை பரவலாக்கிய ஒரு ஆசிரியரை இப்படி நம்மால் கற்பனை செய்யமுடிகின்றதா? ஆனால் இப்படியெல்லாம் இருந்தபோதும், அவரின் முதன்மை நோக்கான ஸென்னை அமெரிக்க மண்ணில் விதைப்பது என்ற விடயத்தில் ஒருபோதும் சமரசம் செய்யாது அவரின் இறுதிக்காலம் வரை முயன்றிருக்கின்றார். அதுவே அவரது ஸென், அதுவே அவரது தம்மம்.

*******

0 comments: