கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அசோகப்பூ குறிப்புகள்

Sunday, November 30, 2025

 
வ்வளவு அழகான விடயம் இது!


தாம் படித்த பாடசாலைக்கு இரு மாணவிகள் இருபது இலட்சம் செலவு செய்து நூலகத்தை சீரமைத்திருக்கின்றார்கள். அதுவும் பாடசாலை நூலகம் உள்ளிட நூலகம் உள்ளிட்ட நூலகங்களைத் தேடித் தேடி வாசித்த அனுபவத்தை இவர் கூறுவதும், நூல்களே தனது முதல் துணைவன் என்று கணவர் நகைச்சுவையாக அடிக்கடி சொல்வதையும் கேட்க  ஆனந்தமாக இருக்கின்றது.


எனது நூலக அனுபவங்களை ஏற்கனவே பலமுறை எழுதிவிட்டதால், என்னைப் பின் தொடர்பவர்களுக்கு அது அலுக்க அலுக்கத் தெரியும். ஊரில் நான் படித்த பாடசாலைக்கு ஓர் அரிய நூலகம் இருந்தது. அது பாடசாலை அதிபரின் அலுவலகத்திற்கும், விளையாட்டு மைதானத்திற்கும் அருகில் இருந்ததாலும் எப்போதும் நூலகம் நம் அனைவரின் கண்களுக்குப்பட்டபடியே இருக்கும். ஆனால் (O/L) வரை) பதினாறு வயதுக்குள் இருப்பவர்க்கு (படிப்பு கெட்டுவிடும்?) உள்ளே அனுமதி இல்லாததால் யன்னலுக்குள்ளால் எட்டிப் பார்த்தபடி என் பாடசாலைக் காலம் கழிந்திருந்தது. 


நான் பதினாறு வயதுக்குப் பிறகு அந்தப் பாடசாலையில் படிக்கவும் இல்லை. பாடசாலையும் என் 12/13 வயதில் என்னைப் போலவே அகதியாகவே உள்ளூருக்குள்ளே அலையவும் தொடங்கிவிட்டது. அப்போதும் இடம்பெயர்ந்து மருதனாமடத்தில் சொந்தமாய் ஓலைக்கொட்டில்கள் போட்டு நம் பாடசாலை இயங்கியபோது, இடப்பெயர்வோடு நூலகத்து நூல்களையும் கொண்டு வந்திருந்தனர். அவற்றைத் தூசிதுடைத்து ஒழுங்காய் அடுக்கும் வேலை என்னைப் போன்றவர்களுக்குக் கிடைத்திருந்தது. அப்போதுகூட இந்த தன்னார்வள வேலையின் நிமித்தம் பாடசாலை அதிபர் ஏதேனும் ஒன்றிரண்டு புத்தகங்களையாவது எனக்கு இலவசமாக வாசிக்கத் தருவார் என நம்பினேன்.

 

அந்த ஆசையெல்லாம் 'மண்'ணோடு போனதுபோல அதிபர் எதையும் தராத புத்தகக் கஞ்சனாக இருந்தார் என்பதையும் நினைவூகூரவேண்டும். ஆனால் இப்படியாக நம் அகதிப் பாடசாலையைத் தன் சொந்தப் பிள்ளைப்போல ஊர் ஊராகக் கொண்டு திரிந்த அந்த அதிபரையும் அவரின் ஓய்வுக்காலத்தில் நம் இயக்கம் போட்டுத்தள்ளியது என்பதால், பாவம் அந்த நல்ல ஆத்மா நிம்மதியாகத் தூங்கட்டும்.


இப்போது என் பாடசாலை மீண்டும் தன் சொந்த ஊருக்கு (எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான்) திரும்பிவிட்டது. ஆனால் என்ன பரிதாபம். முன்பு விசாலமான் இடத்தில், அனைவரும் பார்க்கக்கூடியதாக இருந்த நூலகத்தை -இடைஞ்சல் என்று- எங்கோ ஒரு ஒதுக்குப் புறத்தில் கொண்டு போய் மறைத்துவிட்டார்கள். கடைசியாக ஊருக்கும், ஊர்ப்பாடசாலைக்கும் போன நான், வடிவேல் 'எங்கேடா இங்கே இருந்த கிணறைக் காணவில்லை' என்று தேடியதுபோல எங்கள் பாடசாலை நூலகத்தைத் தேடியதுதான் மிச்சம்.


இப்படியாக 'வளர்ச்சி/ உலகமயமாதல்' நூல்கள் வாசிப்பதை மிகவும் சுருக்கி கொண்டிருக்கும் இன்றைய காலத்தில், இந்தப் பெண்களைப் போன்றவர்கள் நூலகங்களுக்காக தம் நேரத்தையும் பணத்தையும் ஒதுக்குவது மிகவும் பாராட்டிற்குரியது. 


சற்று கடந்தகாலத்தைப் பற்றி யோசியுங்கள். இப்போதுபோல அலைபேசிகளில் உலகம் சுருங்கிவிடாத காலங்களில், என்னைப் போன்ற சிறுவர்களின் -அதுவும் மூடுண்ட போர்க்காலத்தில் வாழ்ந்தவர்க்கு - யுத்தத்திற்கு வெளியே, அழகான உலகம் இருக்கின்றது என்ற நம்பிக்கையை மட்டுமின்றி வாழ்வதற்கான உயிர்ப்பையும் தந்தவை எமக்கு அன்று கைகளில் கிடைத்துக் கொண்டிருந்த புத்தகங்கள் மட்டுமே. 


சிரியாவில் கொடும் உள்ளூர் யுத்தம் நடக்கையில் அத்தனை இழப்புகள், இடப்பெயர்வுகளுக்கும் அப்பால் அந்த சில இளைஞர்கள் தொடர்ச்சியான குண்டுவீச்சில் தப்பும் நூல்களைச் சேகரித்துக் கொண்டு, நடமாடும் நூலகத்தை நடத்தி போரின்  நடுவிலும் நூல்களை மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்ததுதானே பின்னர் 'சிரியாவில் தலைமறைவு நூலகம்' என்ற ஒரு நூலாக நம் கைகளுக்கு வந்து சிலிர்க்கவும் நெகிழவும் வைத்தது.


கிருஷ்ணானந்தியும் அவரது தோழியும் போன்று எண்ணற்ற மனிதர்கள் இன்னும் நம் நிலத்தை நூல்களால் நிறைக்கட்டும். நூல்களால் நிறைப்பது மட்டுமின்றி -எனக்கு சிறுவயதில் பாடசாலை நூலகத்தில் நிகழ்ந்தது போலவன்றி- வாசிக்க விரும்பும் அனைவரும் எளிதாய் நூல்களை வாசிப்பதற்கான வழிகளும் திறக்கட்டுமாக..!

*

 

Ballad of a Small Player
 

'All Quiet on the Western Front', 'Conclave' ஆகிய படங்களை எடுத்த நெறியாளரின் புதிய படம். இது ஏற்கனவே நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது. தனது அசல் முகத்தைத் மறைத்து சூதாட்டத்தில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருக்கும் ஒருவனை எப்படி பெண் ஒருத்தி அதளபாதாளத்தில் விழுந்துவிடாமல் தடுக்கின்றாளா/இல்லையா என்பது பற்றிய கதை. ஒரு மேலைத்தேயத்தவனில் கீழைத்தேய பெளத்த கதையான 'பசித்த பேய்கள்' பாதிப்புச் செலுத்துவதை, தனிமனிதன் ஒருவனின் வீழ்ச்சியுற்ற ஆன்மாவை, அந்த ஆன்மீகம் அல்லது தொன்மம் காப்பாற்றுகின்றதா என்று அறிய விரும்புவர்கள் இத்திரைப்படத்தைப் பார்க்கலாம்.
 
*
 
 
நீர்முள்
 

செந்தில்குமார் நடராஜனின் சிறுகதைத் தொகுப்பு இது. அண்மையில் வாசித்தவற்றில் மனமொன்றி வாசித்த கதைகளின் தொகுப்பு என இதைச் சொல்லலாம். தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து இப்போது சிங்கப்பூரில் தொழில் நிமித்தம் வசிப்பவர் செந்தில்குமார். 'பேழை', 'முதுகுப்பாறை' தவிர்ந்த ஏனைய கதைகள் அனைத்தும் சிங்கப்பூர், மலேசியாவை, பர்மாவைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட கதைகள். எனக்கு 'சன்னதம்', 'பேழை', 'மறுமொழி', 'பிறழ்வு' ஆகிய கதைகள் நெருக்கமாக இருந்தன. ஒருவர் பிறந்த மண்ணை மட்டுமில்லை புலம்பெயர்ந்த நிலத்தையும் நுட்பமாக பார்க்காதவிடத்து இவ்வாறான கதைகளை எழுதியிருக்கவே முடியாது. தமிழில் சமகாலத்தில் அலுப்புத்தரும் ஒரே வகையான கதைசொல்லல் முறை/மொழிப் பயன்பாட்டைத் தவிர்த்து, புத்துணர்ச்சியான மொழியில் இதில் கதைகள் சொல்லப்படுவது எனக்குப் பிடித்திருந்தது. இது செந்தில்குமாரின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு. அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும்.
 
*
 
 
The Phoenician Scheme


நெறியாளர் யாரென்று தெரியாமலே ஒருவர் திரைப்படத்தில் வைக்கும் பிரேம்களை வைத்தே யார் இந்த இயக்குநர் என்று கண்டுபிடிக்கு முடியும் என்றால் அது என்னைப் பொருத்தவரை Wes Anderson ஆகத்தான் இருப்பார். அன்டர்சனின் புதிய படம் வந்த ஞாபகம் இல்லாததால் தற்செயலாக இத்திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கியபோது நெறியாளர் பெயர் திரையில் தோன்றமுன்னரே அந்த முதல் பிரேமிலே இது அன்டர்சனின் திரைப்படமாக இருக்கும் என்று கண்டுபிடித்துவிட்டேன். அன்டர்சனின் பெரும்பாலான திரைப்படங்களில் பெரிதாக கதை என்று எதுவும் இருக்காது. ஆனால் அவை எடுக்கப்படும் விதத்தில் நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கும். அவரின் Budapest Hotel படத்துக்குப் பிறகு நான் இரசித்துப் பார்த்த திரைப்படம் இதுவென்று சொல்வேன். பெரும் நடிகர்கள் ஒரு சில காட்சிகளில் வந்து போகின்றளவுக்கு அன்டர்சனின் திரைப்படங்களுக்கு ஒரு மரியாதை திரையுலகில் இருக்கின்றது. கொஞ்சம் பொறுமையாக அதிகம் பரிட்சயமில்லாத திரைமொழியில், ஆனால் அவ்வளவு அழகான திரைச்சட்டங்களுடன் (visual treats) ஒரு திரைப்படத்தைப் பார்க்க விரும்புகின்றவர்களுக்கான திரைப்படம் இது.
 
 
****

படுபட்சி: மோசமான மொழியில் எழுதப்பட்ட அசல் கதை

Thursday, November 27, 2025

 
"கலை என்பது ஒருபோதும் பாவனை செய்யக்கூடாது என்று நம்புபவன் நான். ஒரு படைப்பு எவ்வித ஆழமற்று, அப்பாவித்தனமாக இருந்தாலும், அது தன்னளவில் பாவனை செய்யாது இருக்கின்றதா என்பதைக் கூர்ந்து கவனிக்க விரும்புவன் நான்." என அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பேன். அவ்வாறு பாவனை செய்யும் படைப்பாக 'படுபட்சி' வந்திருப்பதுதான் கவலையானது. வெளியுலகிற்கு சொல்ல வேண்டிய அவசியமான, ஒரு தனி மனிதனுக்கு நிகழ்ந்த அனுபவங்களை இன்னொருவரால் சிதைக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக நாம் 'படுபட்சி'யை முன்வைக்க முடியும்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ச்சூழலில் ஒற்றைக்குரலின் ஆபத்துக்களைப் பற்றி விரிவாகப் பேசப்பட்டுவிட்டது. ஒருகாலத்தில் பின் நவீனத்துவத்தோடு இணைத்து தங்களைப் பேச விரும்பியவர்களே அதன் அடிப்படைக் கூறுகளையே விளங்கிக் கொள்ளாமல்தான் இப்படி தங்களை அன்று அடையாளப்படுத்தினார்களோ என்று நினைக்கும்போது அவர்களைப் பற்றி உண்மையிலே கவலையாக இருக்கின்றது.

'படுபட்சி'யின் தொடக்கமே தனது பாவனையை ஆஸ்திரேலியா பழங்குடிகளான 'அபோர்ஜின்'களோடு' கதையை இணைப்பதோடே ஆரம்பித்துவிடுகின்றது. ஒடுக்கப்படும் விளிம்புநிலையினரின் கதையை அல்லது அவர்களின் கலாசார/வரலாற்றுக் கூறுகளை அதற்கு வெளியில் இருந்து கதைகளைச் சொல்வோர் மிகுந்த கவனத்துடன் இவ்வாறான விடயங்களை அணுகவேண்டும் என்பது எளிய பாலபாடம். அந்த எந்த அடிப்படை தார்மீக அறமுமற்று 'படுபட்சி' அபோர்ஜின்களின் மீது கைவைப்பதை எவ்விதத்திலும் மன்னிக்க முடியாது.

இத்தனைக்கும் இது Auto Fiction என முகப்பில் சொல்லப்பட்டு விமானம் ஒன்றை இலங்கையில் உருவாக்க முயன்ற ஒரு இளைஞனின் பயணமும் பாடுகளும் என விளம்பரத்தப்படுகின்றது. இந்த நூலை உருவாக்கியவர்களுக்கு Autofiction என்ற அர்த்தம் உண்மையில் தெரியுமா என்பதே குழப்பமாக இருக்கின்றது. Autofiction  என்பது உண்மைச் சம்பவங்களில் அடிப்படையில் புனைவை இணைப்பது. ஆனால் அது உண்மைச் சம்பவங்களை (context) முற்றாக விலத்திப் போகவும் முடியாது. அந்த சூழலில்/சம்பவங்களில்  நாம் புனைவை விரும்பியவளவு சேர்க்கலாம். ஆனால் நடக்காத கதைகளை நடந்ததாகச் சொல்வது Auto Fiction ஆகாது. உதாரணத்துக்கு இந்தக் கதைசொல்பவனும், அவனின் தந்தையும், புலிகளின் கருணா அம்மானைச் சந்திப்பதாக இந்நூலில் ஓரிடத்தில் வரும். நிஜத்தில் அவர்கள் கருணா அம்மானைச் சந்தித்தார்களோ இல்லையோ, ஆனால் அந்தக் காலத்தில் கிழக்கில் ஒரு முக்கிய ஆளுமையாக கருணா அம்மான் இருந்ததால், அவரின் பாத்திர அமைப்பு Autofiction  வகைக்குள் வரக்கூடியதே.

ஆனால் இதே கதைசொல்லி அமெரிக்கா வந்து, அவருக்கு ஒரு மெக்ஸிக்கோ பெண் காதலியாக (திருமணம்?) இருப்பது வாழ்வியல் உண்மையாக இருக்கும்போது, அவன் ஒரு ஆஸ்திரேலியா அபோர்ஜின் பெண்ணைத் திருமணம் செய்பவனாகவும், அவர்களுக்கு ஓர் அபார்ஜின் குழந்தை இருப்பதாகவும் சித்தரிப்பது மிகக் கொடூரமானது. எப்படி காலனித்துவவாதிகள்,/ஆதிக்கசாதிகள் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளங்களை தமது சொந்தநலன்/புகழ் சார்ந்து பயன்படுத்தும் அபத்த அரசியலை நிகழ்த்தினார்களோ அதற்கு நிகராக 'படுபட்சி'யில் இவ்வாறாக ஆஸ்திரேலியா பூர்வீகக்குடிகள் பயன்படுத்தப்படுவது மோசமானது மட்டுமில்லை, கண்டிக்கப்பட வேண்டியதும் கூட.

மேலும் ஒற்றைக்குரலின் ஆபத்து என்பது, மேலாதிக்க வெள்ளையினத்தவர், -தமிழில்- ஆதிக்கசாதிகளின் மோசமான செல்வாக்கு என்பது அவர்கள் பிறரை தமது மொழிகளிலே கதைகளைச் சொல்ல வற்புறுத்துவதாகும். இந்த நூலில் மட்டக்களப்பு மக்களின் தனித்துவமான குரலையே கபளீகரம் செய்திருக்கின்றனர்.  இது ஒரு பொதுமொழியில் எழுதப்பட்டதால் மட்டும் அல்ல, அசலான யாழ்ப்பாண மொழியும் இங்கே நுட்பமாக கலந்திருக்கின்றது என்பதைக் கவனப்படுத்தியாக வேண்டும்.

எனக்கு மட்டக்களப்பு சார்ந்த மிகக்குறைவான அனுபவங்களே உள்ளன. ஆனால்  இன்றும் பல கிழக்கு மாகாண தோழிகள் நட்பில் இருக்கின்றனர். இந்த நூலில் கதைசொல்லி ஒரு கிழக்குமாகாண பெண்ணோடு காதல் வயப்படும்போது, 'நீர்' என்று விளித்து உரையாடல் செய்யப்படுகின்றது. அதை நான் பழகிய எந்த மட்டக்களப்புப் பெண்ணிடமும் கண்டதில்லை. அதுமட்டுமின்றி அவர்களோடு நான் என் யாழ் பேச்சுவழக்கில் சிலவேளைகளில் 'நீர்' என்று உரையாட முயலும்போது அது தங்களுக்கு செளகரியமில்லாத பேச்சுமொழியென்று ஆரம்பத்திலே கறாராகத் தவிர்க்கவும் சொல்லியிருக்கின்றார்கள்.

இவ்வாறு சாதாரண காதல் மொழியைக் கூட இந்த நூலில் கொத்துப்பரோட்டா போட்டு அதன் அசல் தன்மை கொல்லப்பட்டிருக்கின்றது. மேலும் இந்த நூலின் ஆசிரியரான டிலுக்சனும், நானும் கிட்டத்தட்ட ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்களாவோம். ஆனால் அவரின் பாடசாலைக் காலத்தைப் பற்றிய பாடத்திட்டம் எல்லாமே வேற்றுகிரகவாசிகள் பேசுவது போல இருக்கின்றது. உதாரணத்துக்கு பத்தாம் வகுப்பு சித்தியடைந்து பதினொராம் வகுப்பில் அறிவியல் பிரிவுக்குப் போவதாகவும், அதில் அவரின் காதலியோடு உரையாடல்களும் வருகின்றன. முதலாவது எமது காலத்தவர்கள் பதினோராம் வகுப்பு என்றே பாவிப்பதில்லை. அது ஏ/எல் என்று ஆகிவிடும். பத்தாம் வகுப்பும் ஓ/எல் ஆகிவிடும். மேலும் அறிவியல் என்ற தனிப்பிரிவோ, ஏன் ஒரு தனிப்பாடமோ 80களில் பிறந்தவர்களின் பாடத்திட்டத்தில் நானறிந்து இருந்ததாய் ஞாபகத்தில் இல்லை.

இதெல்லாம் ஒரு பெரியவிடயமா என்று ஒருவர் கேட்கலாம். இந்த நுண்ணிய விடயங்கள் மூலந்தான் நாம் ஒரு காலத்தின் கதையைச் சொல்லமுடியும். அதுபோலவே நாம் போரின் குழந்தைகளாக இருந்தவர்கள் என்பதால், டிலுக்சன் தனது விமானியாக  விரும்பும் கனவுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பது விபரிக்கப்படவே இல்லை. இதை அவர் கனடாவில் நடந்த உரையில், தான் பயிற்சிபெறப் பட்ட கஷ்டங்களைச் சொல்லியதின் ஒரு துளியேனும் இந்நூலில் பதியப்படவே இல்லை என்பது துயரமானது.

நமது காலங்களில் பொருளாதாரத்தடை காரணமாக யாழில் சாதாரண பட்டரிகளே அருமருந்த பொருளாக இருந்தது. ஏனெனில் சாதாரண 'டோர்ச் பட்டரிகள்' கூட ஆயுத உற்பத்திக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அரசு நினைத்து தடை செய்யப்பட்டிருந்த காலம். மின்சாரமும் என் பதின்மத்தில் பெரும்பகுதியில் இருக்கவே இல்லை. அவ்வாறே அதேகாலத்தில் கிழக்கு மாகாணமும் தனக்குரிய பொருளாதாரச் சிக்கல்களைக் கொண்டிருக்கும். அதிலிருந்து ஒரு இளைஞன் தனது கனவான (prototype) விமானத்தை அமைப்பதன் எல்லைவரை போகின்றான் என்றால் அது எவ்வளவு கடிய பயணமாக இருக்கும். ஆனால் நான் அதை உணருகின்ற அரிய தருணங்களோ, நாம் வியந்து பார்க்கும் சம்பவங்களோ அசல்தன்மையோடு இங்கே விபரிக்கப்படவே இல்லை.

இதிலிருக்கும் இன்னொரு சிக்கல் என்னவென்றால், நாவல் அல்ல, Autofiction என்று சொல்லியிருப்பதால்... இங்கே டிலுக்சனின் தந்தையார் டிலுக்‌ஷன்  விமானத்தை மட்டக்களப்பில் வடிவமைக்க முன்னரே நூலில் இறந்துவிட்டார் எனச் சொல்லப்படுகின்றது. கனடாவில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் தந்தையார் வந்திருந்தது மட்டுமின்றி, தந்தையார்தான் இந்த விமானம் அமைப்பதற்கு பல வழிகளில் உதவினார் என்று டிலுக்‌ஷன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அப்படியெனில் எதை அய்யா உண்மைகளின் அடிப்படைகளில் நூலில் நீங்கள் சொல்ல வருகின்றீர்கள்.

அதுமட்டுமின்றி டிலுக்‌ஷன் தனக்கு இரு அம்மாமார்கள் இருக்கின்றனர் என்றார் தனது உரையில். தனது பயாலாஜிக்கல் அம்மா, உண்மையில் வாய் பேசாத, காது கேட்காத ஒருவர் எனச் சொல்கின்றார். அந்த அம்மாவை இப்படி இந்த நூலில் அநியாமாக சாதாரணமாகப் பேசக்கூடிய ஒரு பாத்திரமாக எழுதி கொன்றுவிட்டீர்களே என்றுதான் என் மனம் அலறியது. அதுவும் இப்படி ஒரு அசலான அம்மாவை அப்படியே டிலுக்சனின் அனுபவங்களினூடு கொண்டுவரும்போது எவ்வளவு வீரியமான அம்மாவாக இருந்திருப்பார். அந்த வாய் பேசமுடியாத அம்மாவை மறைத்து வேறொருவராக அடையாளப்படுத்துவது கூட அயோக்கியத்தனந்தான்.

டிலுக்‌ஷனின் தந்தையாருக்கு அவரின் தாயார் தவிர்த்து இன்னொரு மனைவியும் இருப்பது இந்த நூலில் சொல்லப்படுகின்றது. இதை டிலுக்‌ஷன் அவரின் பதின்மத்தில் அறிகின்றார். இப்படி இன்னொரு பெண், தனது தந்தைக்கு மனைவியாக இருக்கின்றார் என்று ஒரு பதின்மன் அறிகின்றபோது எந்தளவு உளவியல் சிக்கலுக்குள் போயிருக்க வேண்டியிருக்கும். ஆனால் அது தந்தையின் புறவயமான பார்வையில் இந்த இன்னொரு உறவு எளிதாகச் சித்தரிக்கப்படுகின்றது. காலம் கடந்து போகையில் ஒரு முதிர்ச்சியில் இவ்வாறான பிறழ் உறவு(?)களை ஒரு பிள்ளை ஏற்றுக் கொள்ளக்கூடும். ஆனால் ஒரு பதின்மனுக்கு இது எவ்வளவு மனப்போராட்டத்தை அந்த வயதில் ஏற்படுத்தும் என்பதைக் கூட விரிவாகப் பதிவு செய்யவில்லை.

இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், வெளியே போர்ச்சூழல், குடும்பத்தில் இந்த உறவுப்பிறழ்வு, இவற்றுக்கிடையேதான் டிலுக்‌ஷன் தனது கனவான விமானியாகவும், தனி விமானத்தை உருவாக்கவும் முயன்றிருக்கின்றார் என்பதை வாசிப்பவரிடையே கடத்துதல் அல்லவா நூலில் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.

மேலும் அந்த அம்மாவையும், டிலுக்‌ஷனின் தங்கையையும் கூட ஒருகட்டத்தில் நூலில் கொன்றுவிடுகின்றனர். நிஜத்தில் அந்த வாய் பேசமுடியாத தாய் இலங்கையிலும், அந்தச் சகோதரி இப்போது ஜேர்மனியிலும் வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சொல்கின்றார். அப்படியாயின் படுபட்சியில் யாருடைய கதைகளை நீங்கள் எங்களுக்குப் பக்கம் பக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்?

ப்படி இந்த படுபட்சியில் நிறைய அபத்தங்களைச் சொல்லிக் கொண்டிருக்க முடியும். அண்மையில் எந்தப் புனைவையும் இவ்வளவு எரிச்சலுடன்  இப்படி ஒரு பாவனை செய்யும் முதல் அத்தியாயத்தை வாசித்ததாக ஞாபகத்தில் இல்லை. ஒரு நாளில் சில மணித்தியாலங்களில் இந்த நூலை வாசித்து முடித்திருந்தாலும், முதல் அத்தியாயம் வாசித்துவிட்டு ஒரு பெரும் இடைவெளிவிட்டே பிறகு வாசிக்கத் தொடங்கினேன். அந்தளவுக்கு ஒரு நல்ல கதையை வீணாக்கிவிட்டார்களே என்ற துயரமே வந்தது. (நூலை வாசிக்க முன்னரே நூலைப் பற்றித் தெரியுமா என்று கேட்காதீர்கள். டிலுக்சனின் உரையை நேரில் கேட்டுவிட்டே நூலை வாசித்தேன்).

அன்புள்ள டிலுக்சன், நீங்கள் பிறரின் குரல்களைக் கேட்பவராக இருந்தால் உங்களுக்கு ஒன்று சொல்வேன். உங்களின் கதையை இன்னொருவரிடம் கொடுத்து அவர் உங்களின் கதையை தனது மொழியில் எழுதி அவரின் இன்னொரு நூலைப் போன்று இதை மாற்றி வைத்திருக்கும் பெரும் கொடுஞ்செயலைச் செய்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்களோ தெரியாது.  ஆனால் எப்படி உங்கள் அசலான கதையின் ஆன்மா கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறி இந்த நூலில் இருக்கின்றதோ, அதற்கு உயிர்கொடுத்து தயவு செய்து அடுத்த திருத்திய பிரதியில், இந்த நூலை உங்கள் சொந்த மொழியில் மீண்டும் எழுதுங்கள். உங்களின் மொழி எவ்வளவு நொய்மையாக இருந்தாலும்,  உங்கள் மொழியில், மட்டக்களப்பு வாசம் நிறைந்த அனுபவங்களை நீங்கள் எழுதும்போதே அது உங்கள் அசலான கதையாக மாறும்.

தொடக்கத்தில் கூறியதுபோல, கலை என்பது ஒருபோதும் பாவனை செய்யக்கூடாது, ஆனால் உங்களின் இந்த 'படுபட்சி'யோ அவ்வளவு பாவனைகளுடன் வந்திருக்கின்றது. ஒரு வாசகராக படுபட்சியை வாசிக்கும்போது அதில் தெரிவது நீங்களல்ல, அதில் பளிச்சிடுவது உங்களுக்கு எழுத  உதவி புரிந்தவரின் அரசியலும், அவரின் மொழியும் மட்டுமே என்பது எவ்வளவு துயரமானது.

அது உங்களுக்கு எந்தச் சிறப்பையும் தரப்போவதில்லை. ஒரு அசலான மனிதனின் கதையை, என் சமகால வயதுடைய ஒருவனின் தனித்துவமான வரலாறை நான் ஒருபோதும் இப்படியான ஒரு குரலில் வாசிக்க விரும்பப் போவதே இல்லை.

***

கார்காலக் குறிப்புகள் - 118

Thursday, November 13, 2025


டந்த சனிக்கிழமை 'அன்புநெறி'  நாதசங்கமம் என்கின்ற ஓர் இசை நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது. இசை நிகழ்வென்றாலும் வீணை முன்னிலையாக இருக்க, வாத்தியங்களின் இன்னிசையெனத்தான் அதைச் செய்யவேண்டும். நிகழ்வின் நோக்கம், ஈழத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்ட நிதி சேகரிப்பதாகும். இந்த நிகழ்வு இதற்கு முதல் வாரம் மொன்றியலில் நிகழ்ந்திருந்தது. இங்கும் மொன்றியலில் நிகழ்ந்த நிகழ்வின் மூலம் 10 வீடுகள் கட்டுவதற்கான புரவலர்களின் நிதி கிடைத்தது மிக முக்கியமானது

 

நாத சங்கமத்தில் முதன்மை வாத்தியக் வீணை வாத்தியக் கலைஞராக இருந்த வாகிசன் கடந்தமுறையும் 'அன்புநெறி' நிகழ்வுக்கு இலங்கையிலிருந்து வந்திருந்தார். ஓர் இலங்கைக் கலைஞருக்கு முதன்மை கொடுத்து அன்புநெறியினர் அழைப்பதும், அவரின் திறமையை சபையினர் அங்கீகரிப்பதும் முக்கியமானது. இன்றைக்கு ஈழத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கே இந்தியக் கலைஞர்ளை அழைத்து படப்பிடிப்பு நடத்தும் அவல நிலைக்கே நாம் வந்துவிட்டபின், புலம்பெயர் தேசத்தில் இவ்வாறு அரிதாகவேனும் ஈழக்கலைஞர்களை மதிப்பதும், நிகழ்வுக்கு அழைப்பதும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

 

மேலும் வாகீசன் ஒருகட்டத்தில் இசையே வாழ்வென தீர்மானித்து தான் சென்ற கடினபாதையைப் பற்றியும் கொஞ்சம் கூறியிருந்தார். அதுவும் இலங்கையில் கலையை மட்டும் முன்னிறுத்தி ஒருவர் வாழப்போகின்றார் என்றால், நமது பெற்றோருக்கு வரும் பதற்றங்களை விபரிக்கத் தேவையில்லை. ஒருகட்டத்தில் இசையே வாழ்வென நினைத்து வாகீசன் இந்தியாவுக்குப் போய் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இசையைக் கற்றிருக்கின்றார். அத்தோடு நின்றுவிடாது audio engineering இல்  பட்டமும் அதே காலகட்டத்தில் பெற்றிருக்கின்றார்.

 

எப்படியெனினும் தன் இசையும் வாழ்வும் இலங்கையிலே என்று முடிவு செய்து இலங்கையில் வாழத் தொடங்கியபோது வெளிநாட்டு இசை நிகழ்வுக்கான வாய்ப்புக்கள் வந்தபோதும், இங்கிலாந்திற்கான விஸாவிற்கு நான்கு முறைக்கு மேலாக நிராகரிக்கப்பட்டதையும் குறிப்பிட்டிருந்தார். இப்போது வருடம் முழுவதும் பயணித்துக் கொண்டிருப்பவராக அவர் இருக்கின்றார் என்று நினைக்கின்றேன். மேலும் அந்நிகழ்வில் அவர் சொன்ன இன்னொன்றுதான் நினைவில் கொள்ளத்தக்கது. தனது குரு உனக்கு நல்ல திறமை இருக்கின்றதென்று வாழ்த்து அனுப்பியபோது, எப்போதும் பயிற்சி செய்வதை மட்டும் நிறுத்திவிடாதே என்று சொன்னதாகச் சொன்னார். அதனால்தான் தான் பயிற்சியை மட்டுமின்றி, இசையின் புதிய நுட்பங்களையும் தினமும் கற்றுக்கொண்டிருக்கின்றேன் என்றார். கலையில் ஆழம் செல்கையில் கலை தன்னியல்பிலே நம்மை அரவணைத்துக் கொள்வது என்பதும் உண்மைதானில்லையா?

 

*

 

வாகீசனின் இசை நிகழ்வு அவ்வளவு அருமையாக இருந்தது மட்டுமின்றி, அவ்வளவு எளிமையாகவும், பணிவானவராகவும் இருந்தார். எப்போதும் கற்றுக்கொள்ள விரும்பும் ஒருவர், அவரின் படைப்பு சார்ந்த விமர்சனங்களையும் கேட்க திறந்த மனதுடையவராக இருப்பதை நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கின்றேன். அவ்வாறான ஒருவராக வாகீசனும் இருக்கக்கூடும்.

 

அண்மையில் எதையோ குறித்த எழுதிய பதிவில் நான் மதிக்கும் சில ஈழ/புலம்பெயர் திரை நெறியாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றேன். அது நான் பார்த்த திரைப்படங்களின் அடிப்படையில் எழுதியது. அப்போது திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒருவர், நாங்கள் மூன்று முழுநீளத் திரைப்படங்கள் எடுத்திருந்தோம் எங்களைக் குறிப்பிடவில்லை என்று கவலைப்பட்டிருந்தார். அவர்களின் மூன்று திரைப்படங்களில் ஒன்றை மட்டுமே பார்த்திருந்தேன். அவரின் கருத்தைப் பார்த்தபோது மனதுக்குள், 'நான் திரையங்குக்குச் சென்று பார்த்த திரைப்படத்தை பற்றி என் விமர்சனத்தை எழுதினால் எனது பக்கமே எட்டிப் பார்க்கமாட்டீர்கள்' என்று சொல்லி, மெளனமாக அதைக் கடந்து போயிருந்தேன். அந்தப் படம் அந்தளவுக்கு மோசமாக இருந்தது. பார்வையாளர்களை முட்டாள்கள் போல நினைத்து பாவனை செய்து ஏமாற்றியிருந்தது. சிலவேளைகளில் மற்ற இரண்டு படங்கள் நன்றாக இருக்கலாம். ஆனால் பார்க்காதவை குறித்துக் கருத்துச் சொல்ல முடியாதே.

 

இப்போது அவர்களின் நான்காவது திரைப்படம் வெளிவருகின்றது போலும். அத் திரைப்படத்தின் கதை ஏற்கனவே நான் அறிவேன் (அது எப்படி என்னை வந்தடைந்தது என்கின்ற தேடல்கள் வேண்டாம்). ஆனால் திரைப்படத்தில் கரு மட்டும் நன்றாக இருந்தால் போதாது. அதைக் காட்சிப்படுத்துவதில்தான் எல்லாமே இருக்கின்றது. அதை அவர்கள் கற்றுக்கொள்ளாது, மற்றவர்களின் விமர்சனங்களைக் காது கொடுக்காதுவிட்டால், நமது இலக்கியவாதிகள் போல நாம் எழுதுவது மட்டுமே மேன்மையானது என்று தீவிரமாக நம்பி ஒரு குட்டைக்குள் நின்று நீச்சலடிப்பதாக முடிந்துவிடக்கூடும். அதனால் கலைக்கோ, பிறருக்கு என்ன நன்மை வந்துவிடப் போகின்றது என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்க வேண்டும். அப்படிக் கேட்கும்பட்சத்தில் உங்களின் கலை இன்னும் முன்னோக்கிச் செல்லும், நீங்கள் நினைக்காத இடங்களையெல்லாம் சென்று சேரும்.

 

மேலும் முழுநீளத்திரைப்படம் மட்டுமே எடுத்துத்தான் எங்களை நிரூபிக்க வேண்டும் என்றில்லை.  திரும்பத் திரும்பச் சொல்வதுதான், எத்தனை கதைகள் நம் ஈழநிலப்பரப்பெங்கும் பரவிக்கிடக்கின்றன. சின்ன சின்ன குறும்படங்களாகவோ, 30 நிமிடப்படங்களாகவோ அதை எடுத்து காட்சிப்படுத்தலாம். எத்தனையோ திரைப்பட விழாக்கள் இருக்கின்றன, அங்கே அனுப்பிக் கூடப் பார்க்கலாம். ஆனால் கதைகள் பாவனை செய்யாது, அசலான நம் வேர்களைப் பற்றிய கதைகளாக இருக்கும்போது மட்டுமே அவை தனித்துவமான படைப்பாக மாறும் என்பதையும் மறந்து விடக் கூடாது.

 

மேலும் அடிக்கடி நான்  குறிப்பிடுவதுதான், ஈழத்தில் யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களால் எடுக்கப்பட்ட (கல்லூரி வசந்தம்?) திரைப்படமும், புலம்பெயர் தேசத்தில் அருந்ததி நெறியாள்கை செய்த 'முகம்' என்கின்ற்திரைப்படமும் பலவற்றுக்கு நமக்கு முன்னோடி என்பேன். இவையிரண்டும் கையில் இருந்த பணத்தையும், முறைசார் நடிகர்களுமில்லாது எடுக்கப்பட்டவை. தொழில்நுட்பத்தில் கூட பல இடைஞ்சல்களைப் பார்வையாளருக்குத் தரக்கூடியது. ஆனால் 20/30 வருடங்களுக்குப் பிறகும் அதை ஞாபகம் வைத்து அடுத்து வரும் தலைமுறை பேச முடிகிறது என்றால் அவை அசலான நம் கதைகள் என்பதாலாகும்.  

 

அவ்வாறு ஒரு படைப்பை அதற்கான காலத்தையும் தாண்டியும் உருவாக்க முடிவது என்பதுதானே பெரும்பாலான கலைஞர்களுக்குரிய கனவாக இருக்குமே தவிர, சமகாலத்தில் எந்தக் குதிரை ஓடுகின்றதோ அதற்கு தீனி போட்டு பாராட்டைப் பெற முயற்சிப்பது ஒரு அசல் படைப்பாளிக்குரிய மனோநிலையாக இருக்காது அல்லவா?

 

*

 

நாத சங்கம் நிகழ்த்திய வாகீசன் இன்று முழுநேரக் கலைஞர். அவருக்கு இசை சோறு போடுவது மட்டுமில்லாது, உலகெங்கிலும் கலை இரசிகர்கள் அவரை அழைத்து அவரின் கலையைக் கொண்டாடவும் செய்கின்றார்கள். அந்தக் கலை, வசதி வாய்ப்புக்குறைந்தவர்கள் தமக்கான உறைவிடத்தையும் அமைத்துக்கொள்ள ஏதோ ஒருவகையில் உதவி செய்கின்றது என்பது எவ்வளவு அருமையானது. கலை அழைத்துச் செல்லும் பாதைகள் அற்புதமானவை. அதற்கு முக்கியமானது நீங்கள் அந்தக் கலைக்கு உண்மையாக எந்தளவுக்கு இருக்கின்றீர்கள் என்பதும், அதற்காக எவ்வளவு ஆத்மார்த்தமாக உங்கள் உழைப்பைக் கொடுக்கின்றீர்கள் என்பதுமாகும்.

 

******

 

 

 

வாசகர்கள்..!

Friday, November 07, 2025

 

மது ரமேஷ் பிரேதன் காலமானபோது அவர் குறித்து பகிரப்பட்ட பதிவுகளைப் பார்த்தபோது, ரமேஷ் உயிரோடு இருந்த காலங்களில் இவற்றில் ஒரு பத்துவீதமானவர்களாவது அவரை வாசித்துக் கொண்டிருக்கின்றோம் என்று அவரிடம் சொல்லியிருந்தால் எவ்வளவு அகமகிழ்ந்திருப்பார் என நினைத்துக் கொண்டேன். தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்களின் நிலைமை அனைவர்க்கும் தெரிந்திருக்கும். அப்படி இருந்தும் பலர் தமது வாழ்வின் பெரும்பகுதியை எழுத்துக்காக  காலங்காலமாக அர்ப்பணித்தபடி இருக்கின்றனர். அவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரும் அங்கீகாரம் அவர்களின் படைப்புக்களைப் பற்றி வாசகர்கள் உரையாடும்போதுதான் அதிகம் நிகழ்கின்றது. அதுவே அவர்களைத் தமிழ்ச்சூழலில் சோர்ந்து போகாது தொடர்ந்து   உற்சாகமாக எழுத வைக்கின்றதாகவும் இருக்கின்றது.


பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு மிக நெருக்கமான சில வாசகர்களாவது இருப்பார்கள். நானென் சிறுவயதுகளில் பாலகுமாரனின் மூழ்கியிருந்தபோது வாசகரான தேவகோட்டை வா மூர்த்தி (?) என்பவரின் அநேக கடிதங்கள் முன்னுரை போல பாலகுமாரனின் நாவல்களில் பிரசுரிக்கப்பட்டபடி இருக்கும். பாலகுமாரனின் மீதிருந்த அன்பால், இப்படியொரு ஒரு தீவிர வாசகனாக என் கடிதம் ஒன்றாவது பிரசுரிக்க வேண்டுமெனக் கனவு கண்டிருக்கின்றேன். அவ்வாறு ஹென்றி மில்லருக்கு அனானிஸ், நபகோவுக்கு வேரா(Vera), தமிழில் பிரமிளுக்கு கால சுப்பிரமணியம், வெங்கட் சாமிநாதனுக்கு தஞ்சை பிரகாஷ் என்று எண்ணற்ற வாசக உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.


*


கொழும்பில் ஒரு கஃபேயில், எனது ப்யூகோவ்ஸ்கி கவிதைகள் நூல் பற்றிய உரையாடலுக்கு நண்பர்கள் வந்திருந்தார்கள். கஃபேயின் மேற்றளத்தில் ஒரு பத்து நண்பர்கள் இலக்கியம் பேசி கொண்டுவிட்டு, கீழே இறங்கி வந்தபோது அவரது காதலியை அறிமுகம் செய்து வைத்திருந்தார். நான், அவரையும் மேலே அழைத்து வந்திருக்கலாம் என்று சொன்னபோது, பரவாயில்லை என்று இருவரும் சொன்னார்கள்.


அந்த நண்பர் எனது 'மெக்ஸிக்கோ' வாசித்து, அதன் மீது அவ்வளவு நேசத்துடன் இருந்தார். அவருக்கு கிட்டத்தட்ட எல்லாப் பக்கங்களும் பாடமென்றளவுக்கு அதை ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் வாசித்துமிருந்தார். அண்மையில்தான் இன்னொரு விடயமும் தெரிந்தது. அந்த நண்பர் தனது புத்தகங்களை காதலியின் வீட்டில் கொடுத்து வைத்திருக்கின்றார். அவ்வளவு வாசிப்பில் ஆர்வமில்லாத அவரின் காதலி தற்செயலாக 'மெக்ஸிக்கோ'வை எடுத்து வாசித்திருக்கின்றார். அது அந்தப் பெண்ணுக்கும் பிடித்ததால், இந்த நண்பர் 'ப்யூகோவ்ஸ்கி கவிதைகள்' நிகழ்வுக்கு வந்ததால், 'மெக்ஸிக்கோ' எழுதியவர் யாரென்று பார்க்க ஆவலுடன் வந்திருக்கின்றார். இது எனக்கு அப்போது தெரியாது. பின்னர் அந்த நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் இதைச் சொன்னார். அடடா இப்படியான ஒருவரை முறையாக வரவேற்கவில்லையே என எனக்குக் கொஞ்சம் வருத்தமிருந்தது.


இப்படித்தான் இன்னொரு வாசகர் இருக்கின்றார். அவர்தான் எனக்குக் கிடைத்த மிக இளம் வாசகர் என்று நினைக்கின்றேன். 'மெக்ஸிக்கோ' அவர் தனது பதினைந்து வயதுகளிலே வாசித்திருந்தார். அவரின் அக்காவின் சேகரத்தில் இருந்து எடுத்து வாசித்திருந்தார். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் இந்த விடயத்தை இந்த 'இளம் வாசகனை'ப் பற்றி பகிர்ந்தபோது, 'மெக்ஸிக்கோ' அவரைப் போன்றவர்கள் வாசிக்க ஏற்ற நாவலா என்று ஒரு சிறு உரையாடல் எனது முகநூலில் போனது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம்.


அவர் இன்று பல்கலைக்கழகத்துக்கு முதலாமாண்டு போகின்ற மாணவன். 'மெக்ஸிக்கோ'வோடு மட்டும் நிற்காது எனது அண்மைய நூலான 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' வரை வாசித்த வாசகர். தனது அக்காவோடு எனது எழுத்துக்கள் எப்படி மாறுதலடைந்து கொண்டு போகின்றது என்பதை எனது முதல் சிறுகதைத் தொகுப்பான 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவரை'த் தேடி வாசித்து உரையாடியிருக்கின்றார். அவரது அக்காவிற்கு தம்பி தன்னைவிட அதிகம் என் எழுத்துக்களை நுணுக்கமாக வாசிக்கின்றார் என்று திகைப்பு.


அண்மையில் கொழும்பில் அவர் வயதொத்ததவர்கள் கூடிப் பேசும் இலக்கியக் கூட்டத்திலும் தனக்குப் பிடித்த புத்தகம் என்று 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருக்கிந்தார்' பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். இன்று கூட அந்தப் புத்தகத்தை யாரோ ஒரு சிங்களத் தோழிக்கு (அவர் எழுத்துக்கூட்டி தமிழை வாசிப்பவர்) கொடுத்து அந்தத் தோழி வாசித்துக் கொண்டிருந்தபோது இன்னொருவர் அதைப் பார்த்து, 'இளங்கோவின் நூலையா வாசித்துக் கொண்டிருக்கின்றீர்கள்' என்று சொல்லி அவர்கள் என் எழுத்துக்களை விவாதித்திருக்கின்றனர். அதன் முடிவில்தான் இந்த புதிய நண்பர் எனக்கு நேசத்தை ஒரு காணொளியாக அனுப்பி வைத்தார்.


பதின்மத்தின் விளிம்பிலும், இருபதுகளின் தொடக்கத்திலும் இருக்கும் ஒரு புதிய தலைமுறை (என் எழுத்தை வாசிப்பதால் மட்டும் அல்ல) நூல்களை வாசிப்பதும் உரையாடுவதும் நிறைவாக இருக்கின்றது. அவர்களினூடாக புதியவர்கள் எழுத வந்து தமிழ்ச்சூழலின் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தவும் கூடும். இப்படியான வயதுகளில்தான் அதுவரை நான் வாசித்தவற்றின் திசையை மாற்றிய எஸ்.பொவின் 'ஆண்மை'யையும், சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சில குறிப்புகளை'யும் கண்டடைந்திருக்கின்றேன். அவ்வாறு தொடங்கிய ஒரு புதிய வாசிப்பு எழுச்சியும் வீழ்ச்சியுமான என் அலைச்சறுக்கு வாழ்க்கையில் என்னை துயரங்களில் எப்போதும் மூழ்கவிடாது கரைசேர்த்திருக்கின்றது. 


இந்த இளையவர்களுக்கும், அவர்களின் வாசிப்பு, அவர்களின் தத்தளிப்புக்களின் மட்டுமில்லாது, இனிய தருணங்களுக்கும் துணை நிற்கட்டுமாக. இதுவே அவர்களை சிறந்த எழுத்தாளர்களாக நாளை ஆக்குமென நம்பிக்கையும் கொள்கிறேன்.


***
 

கார்காலக் குறிப்புகள் - 117

Tuesday, November 04, 2025

 

 காளமாடன் (பைசன்)

***


லை என்பது எப்போதும் பாவனை செய்யக்கூடாது என்று நம்புபவன் நான். ஒரு படைப்பு எவ்வித ஆழமற்று, அப்பாவித்தனமாக இருந்தாலும், அது தன்னளவில் பாவனை செய்யாது இருக்கின்றதா என்பதைக் கூர்ந்து கவனிக்க விரும்புவன் நான். கலை என்பதன் நோக்கமே படைப்பும்/படைத்தல் சார்ந்ததும். அதன் நிமித்தம் கிடைக்கும் புகழ்,பணம், செல்வாக்கு என்பதல்ல, படைப்பின் மகிழ்ச்சிக்கு அப்பால் கிடைப்பவை. எனவே ஓர் உண்மையான படைப்பாளி படைப்பின் மூலம் கிடைக்கும் by product குறித்து அவ்வளவு அக்கறைப்படமாட்டார் என்று நினைக்கின்றேன்.


இப்போது இங்கு முதல் காட்சியாக பார்த்து வந்த காளமாடன் (பைசன்) அவ்வளவு மனம் நிறைந்திருக்கின்றது. வழமையான விளையாட்டு சார்ந்த திரைப்படங்களுக்கு ஒரு வாய்ப்பாடு இருக்கின்றது. அவ்வாறான எல்லைக்கோடுகளை ஆழப்புழா ஜிம்கானா போன்ற மலையாளப் படங்கள் உடைக்ககூடும், ஆனால் டங்கலோ, இறுதிச்சுற்றோ, சர்பட்டா பரம்பரையோ, ஏன் காளமாடனோ உடைத்தல் சற்றுக் கடினமானதுதான்; அதைப் புரிந்துகொள்ளவும் முடியும்.


ஆனால் அந்த எல்லைக் கோட்டுக்குள் நின்று மிகச் சிறப்பாக தன்னை மாரி செல்வராஜ் 'காளமாடனை' நமக்கு அளித்திருக்கின்றார். அதிலும் ஓடுக்கப்பட்ட சாதி/ஆதிக்க சாதிகளை அதன் சிக்கல்கள்/வன்மங்கள்/சண்டைகள் என்று காட்டியிருந்தாலும், அனைவருக்கும் சொல்லப்படாத பக்கங்களைக் காட்டியிருப்பது, முக்கியமாக துவிதநிலையில் நாயக ௴ எதிர்நாயக் விம்பங்களை நவீனத்துவ நிலையில் நின்று கட்டியமைக்காததும் முக்கியமானது.


எனக்கு இரத்தம் பிடிப்பதில்லை. அதற்கு என் சிறுவயதில் போரின் நிமித்தம் எறிகணை வீழ்ந்து இரத்தம் தோயத்தோய வைத்தியசாலைக்குக் கொண்டு வந்ததில் இருந்து எங்கும் பார்க்கப் பிடிப்பதில்லை. திரைகளில் என்றால் கண்ணை மூடிவிடும் சுதந்திரத்தை எப்போதும் அனுபவிப்பவன். இதிலும் வன்முறை கடுமையாகக் காட்டப்படுகின்றது. ஆனால் சட்டென்று இப்படி சாதித்தலைவர்களின் (அல்லது ரெளடிகள் என விளிக்கப்பட்ட) பல கதைகளை/செய்திகளை முகப்பில் தாங்கிவந்த ஜூனியர் விகடன்களைப் பார்த்த ஞாபகம் வருகின்றது.


மாரி பத்திரிகைச் செய்திகளில் இருந்து கடந்தகால யதார்த்தத்தை மட்டுமில்லை, அசலான மனிதர்களின் சாயல்களுள்ள பாத்திரங்களையும் காளமாடனில் கொண்டு வருவது அருமையானது. அதுபோலவே இந்தச் சாதிச்சகதிகளுக்குள் விரும்பாமாலே சிக்கிகொள்ளும் ஒருவனது (அப்பாவி என்று சொல்வது அல்லது காட்சிப்படுத்துவது கூட பிறருக்கு ஏற்ற அரசியலைச் சொல்வதுதானல்லவா?) வாழ்வில் நாமும் ஒரு அங்கமாகின்றோம். அவனைப் போல நாங்களும் அவன் ஊர் என்கின்ற சாதிநோய் பிடித்த நிலப்பரப்பிலிருந்து தப்பிப்போக வழிகள் திறக்காதா என ஏங்குகின்றோம்.


இதில் தகப்பனாக வரும் பசுபதிதான் எல்லாப் பாத்திரங்களையும் விட ஓர் முன்னே நிற்கின்றார் என நினைக்கின்றேன். ஏனெனில் அந்தப் பாத்திரமே கடந்தகாலத்தின் எல்லா அவமானங்களை அறிந்தும், அதேவேளை நிகழ்காலத்தில் மகனைக் காப்பாற்றி பத்திரமாக வேறொரு கரை சேர்க்க விரும்பும் இந்தத் தலைமுறையின் ஒருவராகவும் இரண்டு காலங்களிலும் காலூன்றி நிற்பவராக இருக்கின்றார்.


துருவ்வை படத்தின் நீண்டநேரம் வரை விக்ரமின் இளம் பிரதியொன்றைப் பார்க்கின்றேனா என்றுதான் தோன்றிக்கொண்டிருந்தது. ஆனால் அதைத்தாண்டி அவர் உடல்மொழியில் தன்னை அந்தப் பாத்திரத்தில் கரையும் போது, அவர் அந்தத் திருநெல்வேலியின் அசல் பாத்திரங்களில் ஒரு பாத்திரமாக கரைந்துவிடுகின்றார். ஒரு நடிகர் தன்னை இயக்குநனருக்குக் கொடுக்கும்போது எப்படி உருமாறமுடியும் என்பதற்கு இப்படத்தில் துருவ்வும், மாரியின் மற்றப்படமான 'மாமன்னனில்' வடிவேலும் நல்லதொரு உதாரணங்கள்.


என்னைப் போன்ற ஊரில் இருந்து வந்தவர்க்கு ஒரு துறையில் பிரகாசிப்பது என்பது எவ்வளவு கடினமென்று தெரியும். அதுவும் படிக்கும் பாடசாலையில் இருந்து பல்வேறு மட்டங்களில் நம்மை கீழிறக்க நம் கண்ணுக்குத் தெரியாத கரங்களோடு போராடிக் கொள்ளவேண்டும். அதுவும் ஒருவன் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்துவிட்டால், அவன் தன் திறமையைக் காட்ட மட்டுமல்ல, தன்னையொரு சக உயிரியாகத் தன்னை நிரூபிகவே தன் காலம் முழுவதையும் செலவழிக்க வேண்டியிருக்கின்றது என்பதற்கு காளமாடன் நம்முன் சாட்சியாக இருக்கின்றது.


லை என்ன செய்யும்? நாம் வாழாத வாழ்வைக்கூட அதன் ஒரு பகுதியாக நம்மைக் கரைத்து அந்த வாழ்வை வாழ்ந்து பார்க்க வைக்கும். நமது போலிப் பெருமிதங்களையும், சாதி ஆணவங்களையும் இது உங்களின் அடையாளங்களல்ல, அழுக்குகள் என்று ஒவ்வொருவரையும் உணரவைக்கும். அதை இந்தக் காளமாடன் செய்திருக்கின்றான். 


நமது ஈழப்போராட்டம் முடிவடைந்தபின் நமக்கான நீதியைக் கோருவதற்கு நாம் மற்றவர்கள் குற்றவுணர்வை அடைகின்றமாதிரியான படைப்புக்களைக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டேயிருப்பவன். எங்கள் வீரக்கதைகளைச் சொல்லி கடந்தகாலத்தில் நிலைத்து நிற்பதால் நமக்கு மட்டுமில்லை, அநியாயமாக இறந்துபோனவர்க்கும் நாம் அநீதி செய்தவர்களாகின்றோம். மேலும் நமது படைப்புக்கள் நம்மை ஒடுக்கிய இனத்தோடு மட்டுமில்லை, நாம் ஒடுக்கிய இனத்தோடும், ஏன் நமக்கிடையிலும் கூட உரையாடல்களைச் செய்வதாக இருக்க வேண்டும். 


மாரி இந்த காளமாடனினில் -அவரின் முன்னை திரைப்படங்களைப் போல- ஏன் அதைவிட இன்னும் மேலாக- ஆதிக்க சாதிகளிடையே ஓர் உரையாடலை - உணர்ச்சிவசப்படாது செய்ய வந்திருக்கின்றார். இந்திய/தமிழ்ச் சினிமாவின் செல்வாக்கில் அதைப் போல பாவனை செய்கின்ற நம் ஈழத்து/புலம்பெயர் சினிமாக்காரர்கள் ஆகக்குறைந்தது மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்களிடமிருந்து, எப்படி முரண்பாடுகளை நேர்மறையான கலைகளாக முன்வைப்பது என்கின்ற திசைகளைக் கற்றுக்கொள்ளலாம்.


மாரியும் ஓர் நேர்காணலில் சொல்லியிருப்பார், 'வாழை'யில் ஒரு நடந்தகதையை அப்படியோ சொல்லியிருக்கின்றேன். அதில் உரையாடல்களைச் செய்வதற்கு ஏதுமில்லை. அங்கே பார்வையாளர்களுக்கு ஒரு பெரும் மெளனத்தையே விட்டுச் சென்றேன். ஆனால் காளமாடான் பல்வேறு உரையாடல்களை அது நேரோ எதிரோ உருவாக்குவதையே விரும்புகின்றேன்  என்று கூறியிருப்பார்.


மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய, எந்தக் காட்சியிலும் ஏதோ ஒரு பக்கம் சாய்ந்து இன்னொரு தரப்பை உணர்ச்சியூட்டக்கூடிய அசலான கதையை பொதுவெளியில் பார்வையாளருக்கு முன்னே வைப்பதற்கு வீரத்தினால் அல்ல, ஒருவர் தன் கலையை அந்தளவுக்கு நம்பினால்தான் இவ்வாறு அச்சமின்றி ஓர் படைப்பை வைக்கமுடியும். அந்தவகையில் மாரி பாராட்டுக்குரியவர்.


இப்போது முன்புபோல அல்லாது மிகக் குறைவாக வருடத்துக்கு இரண்டோ/மூன்றோ தமிழ்த் திரைப்படங்களைத்தான் திரையரங்குக்குச் சென்று பார்ப்பேன். ஆனால் கடைசியாக வந்த மாரியின் 'மாமன்னன்', 'வாழை', இப்போது 'காளமாடன்' எல்லாவற்றையும் தவறவிடாது திரையங்கில் பார்த்தது மட்டுமின்றி முதல் காட்சியாக இவற்றைப் பார்த்திருக்கின்றேன் என்பதும் மாரி மீது என்னைப் போன்ற பார்வையாளர்கள் இன்னும் நம்பிக்கை இழக்காது இருக்கின்றோம் என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்கமுடியும்?



********

கார்காலக் குறிப்புகள் - 116

Sunday, November 02, 2025

 

 
ழுத்து எனக்கு அந்தரங்கமானது என்பது போல, படைப்பாளிகளையும் தனித்தோ, ஓரிருவர்களோடு சேர்ந்து சந்திப்பதே எனக்குப் பிடித்தமானது. அப்போதுதான் அவர்களோடு நெருக்கமாகவும், வெளிப்படையாகவும் உரையாட முடியும்.

 
எனக்குப் பிடித்த படைப்பாளிகளை மேடையில் பார்க்கும்போது எனக்குள்ளும் ஒரு பதற்றம் வந்துவிடும். இவர்களால் அரங்கில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியுமா என்று எண்ணற்ற கேள்விகள் எனக்குள்ளும் குவியத் தொடங்கிவிடும். இது இப்போதல்ல எனக்குச் சிறுவயதுகளில் இருந்தே வந்துகொண்டேயிருக்கின்றது. சிறுவயதுகளிலே பாடசாலையில் படிக்கும் யாரேனும் பெண்ணை எங்களுக்குச் சோடியாக வைத்து 'பட்டந்தெளிப்பார்கள்'. அப்படி எனக்குச் சோடியாக வைக்கப்பட்ட பெண்களில் யாரேனும் மேடையில் நாடகம் நடிக்கும்போதோ, பரதம் ஆடும்போது ஏதோ நானே நடிப்பது போலவும், ஆடுவது போலவும் எனக்குள் பதற்றம் வந்துவிடும்.


இது பிறகு வளர்ந்து இளைஞனானபோதும் என் காதலிகளில் யாரேனும் மேடையில் இருந்து உரையாற்றும்போதோ/பாடும்போதோ/விவாதங்களில் பங்குபற்றும்போதோ இவர்கள் யார் முன்னும் அவமானப்பட்டுவிடக்கூடாது என்ற பயம் வந்துவிடும். அதனால் நான் அரங்கில் இருந்தால் கூட அவர்களின் முகத்தை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவேன். இந்தச் சிக்கலுக்கு ஏதேனும் உளவியல் பெயர் கூட இருக்கக்கூடும். இதற்குள் இன்னும் போய் நான் மேலும் சிதைவடைய விருப்பமில்லை.


இங்கு நடக்கும் இயல்விருது குறித்து நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. தொடக்க காலங்களில் அது குறித்து நிறைய விமர்சித்து எழுதியுமிருக்கின்றேன் (விருப்பமுடையவர்கள் தேடி வாசிக்கவும்). ஒரு கட்டத்தில் அவர்களும் மாறப்போவதில்லை; என்னைப் போன்றவர்களும் திருந்தப்போவதில்லை என்று ஒரு 'சமாதான உடன்படிக்கை' நிலைக்கு மனதைக் கொண்டு வந்தாயிற்று. மேலும் இயல்விருதுக்கு மாற்றாக எதையும் நாங்கள் உருப்படியாக உருவாக்கவில்லை என்பது எங்களைப் போன்றவர்களின் வீழ்ச்சியே தவிர இயல்விருதுக்காரர்களுக்கு இதனால் இழப்பேதுமில்லை. நாங்கள் பேசுவதில் வல்லவர்கள்; ஆனால் செயற்பாட்டுக்கு வரத் தயங்குபவர்கள். வெவ்வேறு மாற்றுப்பார்வைகள் இருந்தாலும், சில புள்ளிகளில் உடன்பட்டு ஒன்றாய் ஊர்கூடித் தேர் இழுப்போம் என்பதற்கும் எமக்கும் எட்டாப் பொருத்தம்.


ஒரு கட்டத்தில் இதுதான் என்னால் சாத்தியமாகும் என்று பலரிடம்/குழுக்களிடம் இருந்து விலகி வந்தாயிற்று. ஆகக்குறைந்தது சிலரைப் போல ஆக்கபூர்வமான அமைப்புக்களை தனிப்பட்ட நலன்களுக்காக உடைக்கவில்லை/ பிரிக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டு ஏதுமின்றிய அமைதியாவது என்னளவில் இருக்கின்றது. இன்றையகாலத்தில் ஒரளவு நமக்கு உடன்பாடான அமைப்புக்களோடு, அமைப்புக்கு வெளியே இருந்து ஏதாவது செய்வது என்பது எனக்குப் போதுமாக இருக்கின்றது.


25 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் இயல்விருதுக்கு மாற்றாக ஒன்றை நாம் இத்தனை வருடங்களில் கட்டியெழுப்பியிருக்க முடிந்திருக்க வேண்டும். ஆகக்குறைந்தது எங்களால் அப்படிச் செய்யமுடியவில்லை என்கின்ற சுயவிமர்சனத்தைச் செய்து நாம் நம் பலவீனத்தையாவது ஒப்புக் கொள்ளவேண்டும்.


ஆக இப்போது இயல் விருதை,  அவர்கள் 'நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்கின்ற அளவில் எனக்குப் பிடித்த படைப்பாளிகள் புல்லாய் இருந்தாலும் அவர்களுக்கும் விருது கிடைக்கின்றதே என்று அகமகிழ்வதுடன் நின்றுவிடுவதுண்டு. ஒருகாலத்தில் அழைப்பிதழ் வராது எனக்குப் பிடித்த எஸ்.பொ, அம்பை போன்றவர்களின் விழாவுக்கு  எது நடந்தாலும் பார்ப்போம் என 'கலகக்காரனாக' இயல் விருதுக்குள் நுழைந்திருக்கின்றேன். இப்போது வயதாகிவிட்டது என்று அறிந்தோ என்னவோ அவ்வப்போது அழைப்பிதழ் மின்னஞ்சலில் வரும்/ சிலவேளைகளில் வராது. நான் நெருக்கமாக உணரும் படைப்பாளிகளுக்கு இயல் விருது அண்மைக்காலமாக கிடைக்காததால், அழைப்பிதழ் வருதோ இல்லையோ இப்போது இயல்விருது நான் போக விரும்பாத 'திருமண விழாக்கள்' போல ஆகி ஆண்டுகள் பலவாயிற்று.


டைசியாக ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் எனக்குப் பிடித்த இமையத்துக்கு இயல்விருது (2018?) கிடைத்தபோது போனதாக ஞாபகம். ஆனால் விருது நிகழ்வல்ல, இமையத்தோடு அவர் தங்கியிருந்த ஹொட்டலில் நாங்கள் ஓரிரு நண்பர்கள் அவரோடு உரையாடியதுதான் எனக்கு இன்னும் நினைவில் நிற்கின்றது. அவ்வாறே அதற்கு முன் சுகுமாரனுக்கு விருது கிடைத்தபோதும், அந்தக் காலப்பகுதியில் என் நூல் வெளியீடு ஒன்றும் நடந்ததால், சுகுமாரன் அங்கு வந்து பேசியதும், அவர் தங்கி நின்ற ஹொட்டலில் நாங்கள் சில பேர்  அவரோடு உரையாடியதும் நினைவில் மறக்காமல் இருக்கின்றது.


நேற்று 'காலம்' செல்வம், இம்முறை விருது பெற்றவர்களுடன்  ஓர் சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தார். விருது பெற்ற ஐந்து பேர்களையும் ஓரிடத்தில் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இவர்கள் ஒவ்வொரிடமிருந்தும் படைப்பினூடாக பெற்றுக்கொள்ளவும்,  விமர்சிக்கவும் நிறைய இருக்கின்றது.


முக்கியமாக கடந்த வருடம் யுவனைச் (சந்திரசேகர்) சந்தித்தபோதும், அவர் தனிப்பட்ட உரையாடலுக்கு சுவாரசியமான ஒருவராகத் தெரிந்தார். கடந்தமுறை 'என் படைப்புக்களை எத்தனை பேர் வாசித்திருப்பீர்களோ தெரியாது, ஆகவே நான் எதைப் பேசுவது' என்று தனது உரையைச் சுருக்கமாக முடித்து, உரையாடலுக்கு அன்று வந்திருந்த அனைவரையும் அழைத்திருந்தார். அப்போது யுவன் 'விஷ்ணுபுரம்' விருதைப் பெற்றிருந்து, அவரைப் பற்றிய ஆவணப்படமும் வெளிவந்திருந்தது. நான் யுவனிடம், 'நீங்கள் உங்கள் ஒரு நாவல் கணனியில் இருந்து அழிந்துவிட்டது என்றதும் பதற்றமடைந்ததும், அழவும் செய்தது என்னை மிகவும் பாதித்தது' என்று சொன்னதாகவும் நினைவு.

 

அதேபோன்று யுவனின் கதைகளை 'மாற்றுமெய்மை' என்று பெயரில் விதந்தோத்தும் விஷ்ணுபுரவாசிகளின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் எழுதியிருக்கின்றேன் (அவரிடம் அதைச் சொன்னேனா என்று ஞாபகத்தில் இல்லை). அவரின் சில நாவல்கள் அதன் இயல்பிலே கவனத்துக்குரியவையேயன்றி, இந்த 'மாற்றுமெய்மை'யினால் அல்ல என்பது என்னுடைய தனிப்பட்ட வாசிப்பு. யுவனின் இயல்பின்படி இதை நேரடியாகச் சொன்னால் கூட, ஏற்றுக்கொள்கின்றாரோ இல்லையோ, 'அப்படியா' என நிதானமாகக் கேட்டுக்கொள்ளவாவது செய்வார் என்கின்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.


வ்வாறான யுவன், சுகிர்தராஜா உள்ளிட்டோர் இருந்த அரங்கில் எந்தவகையான பொது உரையாடலும் நிகழாமல் அவர்கள் அங்கே தனித்துவிடப்பட்டதுதான் எவ்வளவு கவலையானது. நிகழ்வை ஒருங்கிணைத்த ஜயகரன் கூறியதுமாதிரி, இப்படி முக்கியமான படைப்பாளிகள் அனைவரிடம் ஓரிடத்தில் இருப்பது ஓர் அரிய சந்தர்ப்பம், ஆனால் அவர்களிடம் இருந்து பெறுவதற்குரிய சபை அமையவில்லை' என்பதை ஒருவகையில் இதுதான் கனடிய இலக்கிய உலகின் யதார்த்தம் என்பதாகவும் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் வாசிப்பவர்களே அரிதாகிவிட்டார்கள் என்பது மட்டுமில்லை, அறிவுபூர்வமாக உரையாடுபவர்களும் குறைந்துவிட்டோம் என்பதே கசப்பான உண்மை.


ஒரு நல்ல புத்தகத்தையோ, திரைப்படத்தையோ, கலையின் இன்னபிற நல்லவிடயங்களை ஆழமாகப் பேசவோ விவாதிக்கவோ நம்மில் பலர் தயாரில்லை. அதுவேதான் இவ்வாறு எழுத்தாளர்கள் இருக்கும் அரங்குகள் வீணாகிப் போய்வருவதற்கும் காரணமாகிவிட்டது.


இம்முறை எனது தமிழாசிரியரான இரவி அருணாச்சலத்துக்கும் விருது கிடைத்திருந்தது. அவருக்கு மாணவனான நான் இந்த விருது கிடைத்தற்கு வாழ்த்துக்கூறி ஒரு பதிவும் செய்யவில்லை என்று மனவருத்தம் இருந்ததாக (நண்பரொருவர் மூலம்) அறிந்துகொண்டேன். அவருக்கு என்றில்லை இயல்விருது கிடைத்ததற்காக எவருக்கும் நான் வாழ்த்துப் பதிவுகளை இதுவரைகாலமும் தனித்துப் போட்டதில்லை. ஆனால் எப்போதும் போல அவருக்கும் விருது கிடைத்தபோது அது பகிரப்பட்டவர்களின் முகநூலுக்குச் சென்று மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தேன் (என் வகுப்புத் தோழியின் பதிவுட்பட).


மேலும் ஒரு வாசிப்பாளானாக அண்மைக்காலமாக இரவியின் நாவல்கள் ஓரிடத்துக்குள் தேங்கிவிட்டதாக எனக்கு எண்ணமிருக்கின்றது. அவரது 'பம்பாய் சைக்கிள்' இன்னும் வாசிக்கவில்லை. எனவே அது குறித்துக் கருத்துச் சொல்லமுடியாது. அவரின் 'காலமாகி வந்த கதை', 'பாலைகள் நூறு' அவருடைய சிறந்த படைப்புக்கள். ஆகவே 'பம்பாய் சைக்கிள்' எப்படியென்றாலும், அவரின் இத்தனை கால எழுத்துக்காகவும் அவர் விருதுக்குத் தகுதியானவர் மட்டுமின்றி, காலம் பிந்தி விருது கொடுக்கப்பட்டவர் என்று கூடச் சொல்லலாம்.  அதேசமயம் அவரின் தளும்பும் அரசியலுக்கும், அந்த அரசியலை முன்வைத்து இலக்கியத்தில் அவர் செய்யும் இருட்டடிப்புகளுக்கும் நான் வேறுதிசையில் இருப்பவன் என்பதையும் இத்தருணத்தில் சொல்லிவிடுகின்றேன்.


நேற்றைய நிகழ்வில் யுவன் மொழியாக்கம் செய்து அண்மையில் வந்த கதையைப் பற்றி ஜயகரன் கேள்வியொன்றைக் கேட்டபோது, யுவன் அதைப் பற்றிப் பேசிவிட்டு இந்தக் கதையை எவரும் வாசித்திருக்கமாட்டார்கள் என்று அரங்கைப் பார்த்துச் சொன்னபோது, நானும் வாசித்தேன் எனச் சொன்னேன். 'இளங்கோ என்னை உளவாளி மாதிரி பின் தொடர்கின்றார்' என நகைச்சுவையாகச் சொன்ன யுவனிடம் கூட ஆறுதலாகப் பேச முடியவில்லை என்பது துயர்.


அதுபோலவே ரவி சுப்பிரமணியனைப் பார்த்து நான் இளங்கோ என்று அறிமுகம் செய்தபோது, எனக்கு உங்களை நன்கு தெரியுமே, 'அம்ருதா'வில் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கின்றேனே' என்று சொன்னார். அவர் முகநூலில் இல்லை என்பதால் எனது தொலைபேசி எண்ணை வாங்கிச் சேகரம் செய்தபோது, நீங்கள் 'சக்தித் திருமகனில்' நன்றாக நடித்திருக்கின்றீர்கள் என்று பாராட்டிவிட்டு வீட்டை வந்து பார்த்தால், ரவி சுப்பிரமணியன் ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டதால் பலரால் வறுத்தெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தார். புரட்டாசிச் சனி நமக்கு மட்டுமில்லை நம்மைச் சந்திக்கின்றவர்களுக்கும் தொடங்கிவிட்டதுக்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்.


எப்போதும் நிகழ்வுக்கு நேரம் பிந்திப் போகின்றவன் இம்முறை பொஸ்டனில் இருந்து வந்திருந்த 'பாஸ்டன்' பாலாஜி எனது நூல்கள் வேண்டுமென்று கேட்டதாலும் ஒரு மணித்தியாலத்துக்குள் விமானநிலையத்துக்குச் செல்லவேண்டும் என்று அவர் சொன்னதாலும் நான் நேரத்துக்குப் போயிருந்தேன். பாலாஜியைச் சந்தித்துவிட்டு, நேற்றைய நிகழ்வின் அரைவாசி நேரம் வெளியே இருந்து ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். அதுபோல நிகழ்வு முடிந்து கார் தரிப்பிடத்தில் வேறு மூன்று நண்பர்கள் 30-40 நிமிடங்களாவது பேசிக் கொண்டிருந்திருப்போம்.


அந்த 30 நிமிடங்களில்  நாம் பகிர்ந்து கொண்டதும், சிநேகிதபூர்வமாக இலக்கியச் சர்ச்சைகளை விவாதித்ததும் (முக்கியமாக ரமேஷ் பிரேதனின் மரணத்துக்குப் பிறகு நடைபெறுபவை), அரங்குக்குள் நடந்தவற்றை விட பெறுமதியாக இருந்தது என்பதுதான் உண்மை. இனி இலக்கியம் என்பது கனடாவில் கார்த்தரிப்பிடங்களில்/ கோப்பிக் கடைகளில் நான்கைந்து பேரோடு பகிர்ந்து கொள்வதாக மட்டுமே மாறிவிடும் போலத்தான் தோன்றுகின்றது.


****


செம்மணி

Saturday, November 01, 2025

  செம்மணிப் புதைகுழிகளில் உறங்க மறுக்கும் கிரிஷாந்திகளின் குரல்கள்

 

ண்மையில் கனடாவில் நடந்த தேவகாந்தனின் 'கனவுச்சிறை' ஆங்கில நூலின் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அப்போது இதை தமிழிலிருந்து ஆங்கிலமாக்கிய நேத்ரா ரொட்ரிகோ, தனது ஓர் அனுபவத்தைச் சொன்னார். அவர் இளம்பெண்ணாக இருந்தபோது கொழும்பிலிருந்து பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு புத்தகங்களைப் படிக்கப் போவார். எப்போது அங்கே போனாலும் இராணுவத்தின் டிரக்கும் இராணுவத்தினரும் நின்றுகொண்டிருப்பார்கள் என்றார். ஒரு பெண்ணாக அதுவும் தமிழ் பெண்ணாக, சிங்கள இராணுவத்தின் மீது பயத்தோடும் பதற்றங்களோடும் அன்றைய இளம் நேத்ரா சென்று கொண்டிருந்ததை அவர் விபரித்திருந்தார். இராணுவத்தினர் ஒரு பெண் மீது செய்யும் சேட்டைகளையும் தாண்டிச் சென்ற அந்த நாட்களினது வடுக்களையும் மீண்டும் நினைவுபடுத்தினார் நேத்ரா. 


நான் நேத்ராவின் நனடைதோய்தலில், இன்னொரு காலத்தில், இன்னொரு நிலப்பரப்பில் இப்படி இராணுவக் காவலரணைத் யாழ்ப்பாணத்தில் செம்மணியில் தாண்டிக் கொண்டிருந்த  கிரிஷாந்தியை நினைத்துக் கொண்டேன். தனது பதின்வயதில் உயர்தர பரிட்சையான இரசாயனவியல் பாடத்தின் தேர்வை எழுதிவிட்டு  96ம் ஆண்டில் கிரிஷாந்தி செம்மணி காவலரணைத் தாண்டிக் கொண்டிருந்திருப்பார். அன்று பரிட்சையை மதியம் எழுதிமுடித்துவிட்டு, முதல் நாள் இறந்துவிட்ட தன் தோழியின் மரணவீட்டுக்குப் போய்விட்டு கிரிஷாந்தி  தனித்து அந்தத் தெருவால் வந்தபடி இருந்திருப்பார். அவரது பாடசாலைத் தோழி,  அதற்கு முதல்நாள் (இராணுவ வாகனத்தால்) அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். அந்தத் தோழியின் மரணமும் சந்தேகத்துக்குரிய வகையில் இராணுவத்தினால் நிகழ்த்தப்பட்டதாக ஓர் கதையிருக்கின்றது. 


கிரிஷாந்தியை, காவலரணில் இருந்த இராணுவ கோப்ரலான ராஜபக்சே மறித்து பதுங்குகுழிக்குள் அடைத்து வைக்கின்றார். தனது மகள் நேரத்துக்கு வராது பதறிய கிரிஷாந்தியின் தாயார் இராசம்மா, மகள் இராணுவத்தால்தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதை அறிந்து, அவரது தனது இளைய மகனான பிரணவனுடனும், அயலவரான கிருபாமூர்த்தியுடனும் அந்தக் காவலரணுக்குச் செல்கின்றார்.


இராசம்மா இதற்கு 10 வருடங்களுக்கு முன் தனது கணவரைப் புற்றுநோயிற்கு இழந்தவர். தனியொருவராக தனது இரண்டு பெண் பிள்ளைகளையும், ஒரு ஆண் பிள்ளையும் வளர்த்து வந்தவர். கிரிசாந்திக்கு மூத்த சகோதரியான பிரஷாந்தியும், இளைய சகோதரனான பிரணவனும் இருந்தார்கள். இராசம்மா மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் இலங்கையில் கல்விகற்று, 50களின் இறுதியில் இந்தியாவுக்கு சென்று பொருளாதாரத்தில் இளங்கலைமாணி பட்டத்தையும் பெற்று வந்து, ஒரு பாடசாலையில் உப அதிபராகப் பணிபுரிந்தவர்.


இராசம்மா, அவரின் இளைய மகன் பிரணவன், அயலவர் குமாரசாமி ஆகிய மூவரும் இராணுவத்திடம் கிரிஷாந்தி எங்கே என்று வினாவுகின்றனர். அவர்களோ அப்படியொருவரை தாங்கள் கைது செய்யவில்லை என்று மறுக்கின்றார்கள். அதை நம்பித் திரும்பிப் போகின்றவர்கள், இராசம்மாவின் பிடிவாதத்தால் மீண்டும் காவலரணுக்குத் திரும்பி கிரிஷாந்தி எங்கே என்று வினாவுகின்றனர். 


இப்போது இராசம்மா, தனது மகளை விடுதலை செய்யாதவரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றார். ஒரு தாயின் மனது, இந்த இரவை தன் மகள் இராணுவ முகாமிற்குள் கழித்து விட்டால் இனி என்றென்றைக்கும் மீள மாட்டாளென நம்பியிருக்கலாம்.
இராசம்மாவுக்கு சிங்களமும் நன்கு தெரியும். ஆகவே அவர் சிங்களத்தில் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்.


எப்போது துப்பாக்கியோடும், அதிகாரத்தோடும் இருக்கும் எந்த தரப்பாயினும் இப்படி ஒருவர் அடங்காது நியாயம் கேட்பது கோபத்தை வரவழைக்கத்தானே செய்யும். அதுவும் இராணுவம் என்றால் சொல்லவும் வேண்டுமா? அந்த முகாமில் இருந்த இராணுவத்தினர் இந்த மூன்று பேரையும் இன்னொரு பதுங்குகுழியில் கொண்டு போய் அடைத்து வைக்கின்றது.


பிறகு நடந்தவற்றை நான் விரிவாகச் சொல்லப் போவதில்லை. ஒருபுறத்தில் கிரிஷாந்தி கூட்டு வன்புணர்வுக்கு ஆளானபோது, இவர்கள் மூன்று பேரும் அருகிலேயே வைத்து கொல்லப்படுகின்றார்கள். கிரிஷாந்தி உள்ளிட்ட இந்த நான்கு பேரும் கொல்லப்பட்ட முறை மிகக் கோரமானது.

ற்றைக்கு இது நடந்து 30 வருடங்களாகி விட்டது. ஆனால் இதைச் சாட்சியமாகச் சொன்னவர்களின் வாக்குமூலங்களை வாசிக்கும்போது மனம் பதறுகின்றது. அதை தொகுத்து நூலாக்கி 'வன்மம' என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் இலங்கையில் வெளிவந்த நூலின் ஒவ்வொரு பக்கங்களைப் புரட்டும்போதும் கைவிரல்கள் படபடக்கின்றன.


அன்று இந்த விடயம் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவின் கவனத்துக்கொண்டு செல்லப்பட்டபோது, இராணுவ/பொலிஸ் குழுவொன்றின் விரைவான விசாரணையினாலாயே இது ஒரு முக்கிய மனிதவுரிமை மீறல் சம்பவமாகப் பொதுவெளிக்கு தெரிய வந்தது. மேலும் எதற்கும் பயப்பிடாது சாட்சி சொல்ல வந்த பொதுமக்களினதும்,  குற்றஞ்சாட்டப்பட்ட ராஜபக்சே உள்ளிட்டவர்களிலிருந்து அரச சாட்சியாக மாறிய ச நஸார், சமரசிங்க போன்றவர்களின் சாட்சியங்களும் முக்கியமானவை. நஸாரின் சாட்சியங்களில், அவருக்கு கிரிசாந்தியின் கூட்டுப் பாலியல் வன்புணர்வில் பங்கிருக்கின்றதா இல்லையா என்று சற்றுக் குழப்பம் இருந்தாலும், அவர் அரசசாட்சியாக மாறியது  இந்த வழக்கின் முக்கியமான திருப்பமாகும். 

 

அது போலவே சமரசிங்க என்று ஒரு பொலிஸ்காரர் அன்று கோப்பாயில் பணிபுரிந்து கொண்டிருந்தவர். அவர் ஒர் அரிய மனிதாபிமானியாகவே இக்கொடும் நிகழ்வில் புலப்படுகின்றார். அவரே கிரிஷாந்தி உள்ளிட்ட நால்வரின் விடுதலைக்கு அவருக்கு இயன்றமுறையில் முயற்சித்திருந்தவர்.


கிரிஷாந்தியைப் மதியத்தில் கைதுசெய்து காவலரணில் வைத்து விட்டு, ராஜபக்‌ஷே, சமரசிங்கவை கிரிஷாந்திக்கு விடுதலைப் புலிகளோடு தொடர்பிருக்கா என விசாரிப்பதற்காய் அங்கே வரச் சொல்கின்றார். சமரசிங்கவிற்கு தமிழ் தெரியும் என்பதால் பதுங்குகுழிக்குள் இருந்த கிரிஷாந்தியை அவர் விசாரிக்கின்றார். கிரிஷாந்தி அதை மறுப்பதுடன், எதற்காக என்னை இங்கே தடுத்து வைத்திருக்கின்றீர்கள் எனக் கேட்கின்றார். அதுவே சமரசிங்க முதலும் கடைசியுமாகக் கிரிஷாந்தியை உயிருடன் சந்திப்பது.


இப்படி கிரிஷாந்தியை விசாரித்துவிட்டு  பகல் 3.00 மணிக்குத் திரும்புகின்ற சமரசிங்க, மூன்று பேர் அதே காவலரண்களுக்குள் நுழைவதைக் காண்கின்றார் (இதை சமரசிங்க நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும்போது நினைவுகொள்கின்றார்). அதன் பின்னர் கோப்பாயுக்கு திரும்புகின்ற சமரசிங்க மனம் அமைதி கொள்ளாது, மாலையில் இன்னொரு பொலிஸ்காரரை சைக்கிளில் அழைத்துக் கொண்டு, கிரிஷாந்தியை கைதுசெய்யப்பட்ட காவலரணுக்குச் சென்று கிரிஷாந்தி உள்ளிட்ட மற்றவர்கள் மூன்று பேரையும்  விடுதலை செய்யக் கேட்டிருக்கின்றார். அது வாக்குவாதமாக மாறி கோபத்தில் சமரசிங்கவையும், அவரது நண்பரையும் அங்கிருந்து ராஜபக்‌ஷே உடனே திருப்பிப் போகச் சொல்கின்றார்.


இந்த நிகழ்வில் குற்றஞ்சாட்டப்பட்டு, அரச தரப்புவாதியாக மாறி நஸாரின் சாட்சியம் இன்னும் கோரமானது. கிரிஷாந்தி தடுத்து வைக்கப்பட்ட காவலரணுக்கு அருகில் காவலில் இருந்தவர் நஸார். ராஜபக்‌ஷே தனது  இராணுவ நண்பர்களிடம் கிரிஷாந்தியின் உடல் மீது வன்புணர்வை நடத்த அனுமதி கொடுத்தபின், நஸாரும் செல்கின்றார். தான் தமிழில் பேசியதால் முனகிக்கொண்டிருந்த கிரிஷாந்தி தன்னிடம் தண்ணீரும் கேட்கவும் தான் கொடுத்ததாகவும், அப்போது யாரோ கெட்டவார்த்தைகளால் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்று கேட்டபோது தான் அந்த இடத்திலிருந்து நகர்ந்ததாகவும் சொல்கின்றார். அப்படித் திரும்பிப் போகும்போது 75 மீட்டர் தொலைவில் கிரிஷாந்தியின் தாயார் இராசம்மா பேச்சு மூச்சின்றி இறந்து கிடந்திருக்கின்றார்.


இலங்கை இராணுவம் இவர்கள் அனைவரையும் சுருக்குக் கயிறை இரண்டுபக்கமும் போட்டு இழுத்தே கொன்றிருக்கின்றது. இந்தக் கொலைகள் நடக்கும்போது துப்பாக்கியோடு காவல் இருந்ததாக நஸார் சொல்கின்றார். பின்னர் இராணுவத்தினர் மண்வெட்டிகளோடு அந்த உடல்களைப் புதைக்கச் சென்றதையும் கண்டதாகச் சாட்சியில் சொல்லியிருக்கின்றார்.

கிரிஷாந்தியின் வழக்கு பிற வழக்குகள் போல இல்லாது, அதிகளவு அழுத்தத்தால் இரண்டு வருடங்களில் முடிந்திருக்கின்றது. இந்த நான்கு பேரும் அன்று கொலைசெய்யப்பட்ட உடனேயே ஓர் பெரும் எதிர்ப்பு எல்லாத் தரப்புக்களிலும் இருந்து வந்ததாலேயே, உரியவர்கள் கைதுசெய்யப்பட்டு, புதைக்கப்பட்ட இந்த உடல்கள் 40 நாட்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டு மீளத்தோண்டி எடுக்கப்பட்டன. அந்த மீளக் கண்டுபிடித்தல் தமிழ் மக்களை மட்டுமில்லை, மனிதாபிமானமுள்ள சிங்களவர்களையும் தட்டியெழுப்பியது. ஆகவே இரண்டு ஆண்டுகளில் விசாரணை நடந்து தீர்ப்பும் கொடுக்கப்பட்டது. வழக்கு நடந்த சில நாட்களிலேயே, 9 குற்றவாளிகளில் முதல் குற்றவாளியான ராஜபக்‌ஷே நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடி சில வாரங்களின் பின் வேறொரு நிகழ்வால் கைதுசெய்யப்பட்டது எல்லாம், இலங்கை நீதிமன்றங்களின் வழமையாக நடக்கக்கூடிய நிகழ்வுகள் எனச் சொல்லலாம்.


இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளில் முடிந்தாலும், இவ்வாறு இதேகாலகட்டத்தில் வன்னியில் குமாரபுரத்தில் பால்பண்ணைக்கு அருகில் தமிழ்ப்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்புணர்வின் தீர்ப்பை வழங்க 20 ஆண்டுகள் எடுத்திருக்கின்றது என்று இதே 'வன்மம்' நூலில் நாம் அறிய முடிகின்றது. ஆகவே நீதி என்பது எல்லோர்க்கும் சமம் இல்லை என்பதையும் நாம் கண்டுகொள்ள முடியும்.


கிரிஷாந்தியின் கொலைவழக்கில் எட்டுப் பேருக்கு குற்றத்தைச் செய்தற்காக தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போதுதான் ராஜபக்‌ஷே இன்னொரு பேரவலமான உண்மையையும் நீதிமன்றத்தில் அறிவித்தார். நீங்கள் என்னை இந்த நான்கு பேரைக் கொன்று புதைத்ததற்காக குற்றஞ்சாட்டுகின்றீர்கள். நானறியவே இதே செம்மணிப் பகுதியில் 300-400 தமிழர்கள்  கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன எனச் சொன்னார். அப்படிச் சொன்னதோடு மட்டுமில்லாது என்னால் அவற்றையெல்லாம் அடையாளம் காட்டமுடியும் என்றும் அறிவித்தார். 


அதில் ஒரு சம்பவமாக, தனது அதிகாரியாருவொருவர் ஒரு திருமணமான தமிழ் தம்பதியைக் கூட்டிக்கொண்டு வந்து, அந்தக் கணவனின் முன்னேயே அந்தப் பெண்ணை வன்புணர்ந்தவர்; பிறகு அவர்கள் இருவரையும் மண்வெட்டியால் அடித்துக் கொன்றுவிட்டு செம்மணியில் புதைத்தவர்; அதற்குச் சாட்சியாக நானே அந்த அதிகாரிக்கு மண்வெட்டியைக் கொடுத்தேன் என்று இன்னொரு அதிர்ச்சியான நிகழ்வைச் சொன்னார்.


அதேபோன்று ஒருநாளில் 22 இற்கு மேற்பட்ட ஆண்களை அரியாலையில் கைதுசெய்து சித்திரவதை செய்து புதைத்தோம் என்றிருக்கின்றார். அதில் ஒரு சிலரின் பெயர்களை, அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை 'வன்மம்' நூலை வாசிக்கும் ஒருவர் அறியமுடியும்.


அதன்பின்னர் இவ்வாறு பல உண்மைகளை வெளியுலகிற்குச் சொன்ன ராஜபக்‌ஷேவிற்கு மரண அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டதும், அவரின் மனைவி தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டதுமென பலதும் இலங்கையில் நடந்திருக்கின்றது. அன்றைய சந்திரிக்காவின் காலத்தில் ராஜபக்சேவின் வாக்குமூலத்தை வைத்து செம்மணி புதைகுழிகள் மீண்டும் தோண்டப்பட்டத் தொடங்கியதும், பின்னர் இடைநிறுவில் நிறுத்தப்பட்டதுமென்பதும் கடந்தகால வரலாறு.


இப்போது மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பின் செம்மணி மீண்டும் தோண்டப்படுகின்றது.  இதுவரை இருநூறிற்கும் மேலான எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டிருக்கின்றன. நாம் எவ்வாறு கொல்லப்பட்டோம் என்று சொல்லாது, அமைதியாக உறங்கப் போவதில்லையென எலும்புக்கூடுகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை  சாட்சியங்களாக நம்முன்னே எழுந்தபடி இருக்கின்றனர். 


***

('வன்மம்' - ஆங்கிலத்தில் பகவதாஸ் சிறிகந்ததாஸால், கிரிசாந்தியின் கொலையின் நீதிமன்ற வழக்கின் முழுப்பிரதியை முன்வைத்து எழுதப்பட்ட நூலாகும்.  இது விண்மணி என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டு அண்மையில் இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது)


-நன்றி: 'அம்ருதா' - ஐப்பசி, 2005-