கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

செம்மணி

Saturday, November 01, 2025

  செம்மணிப் புதைகுழிகளில் உறங்க மறுக்கும் கிரிஷாந்திகளின் குரல்கள்

 

ண்மையில் கனடாவில் நடந்த தேவகாந்தனின் 'கனவுச்சிறை' ஆங்கில நூலின் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அப்போது இதை தமிழிலிருந்து ஆங்கிலமாக்கிய நேத்ரா ரொட்ரிகோ, தனது ஓர் அனுபவத்தைச் சொன்னார். அவர் இளம்பெண்ணாக இருந்தபோது கொழும்பிலிருந்து பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு புத்தகங்களைப் படிக்கப் போவார். எப்போது அங்கே போனாலும் இராணுவத்தின் டிரக்கும் இராணுவத்தினரும் நின்றுகொண்டிருப்பார்கள் என்றார். ஒரு பெண்ணாக அதுவும் தமிழ் பெண்ணாக, சிங்கள இராணுவத்தின் மீது பயத்தோடும் பதற்றங்களோடும் அன்றைய இளம் நேத்ரா சென்று கொண்டிருந்ததை அவர் விபரித்திருந்தார். இராணுவத்தினர் ஒரு பெண் மீது செய்யும் சேட்டைகளையும் தாண்டிச் சென்ற அந்த நாட்களினது வடுக்களையும் மீண்டும் நினைவுபடுத்தினார் நேத்ரா. 


நான் நேத்ராவின் நனடைதோய்தலில், இன்னொரு காலத்தில், இன்னொரு நிலப்பரப்பில் இப்படி இராணுவக் காவலரணைத் யாழ்ப்பாணத்தில் செம்மணியில் தாண்டிக் கொண்டிருந்த  கிரிஷாந்தியை நினைத்துக் கொண்டேன். தனது பதின்வயதில் உயர்தர பரிட்சையான இரசாயனவியல் பாடத்தின் தேர்வை எழுதிவிட்டு  96ம் ஆண்டில் கிரிஷாந்தி செம்மணி காவலரணைத் தாண்டிக் கொண்டிருந்திருப்பார். அன்று பரிட்சையை மதியம் எழுதிமுடித்துவிட்டு, முதல் நாள் இறந்துவிட்ட தன் தோழியின் மரணவீட்டுக்குப் போய்விட்டு கிரிஷாந்தி  தனித்து அந்தத் தெருவால் வந்தபடி இருந்திருப்பார். அவரது பாடசாலைத் தோழி,  அதற்கு முதல்நாள் (இராணுவ வாகனத்தால்) அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். அந்தத் தோழியின் மரணமும் சந்தேகத்துக்குரிய வகையில் இராணுவத்தினால் நிகழ்த்தப்பட்டதாக ஓர் கதையிருக்கின்றது. 


கிரிஷாந்தியை, காவலரணில் இருந்த இராணுவ கோப்ரலான ராஜபக்சே மறித்து பதுங்குகுழிக்குள் அடைத்து வைக்கின்றார். தனது மகள் நேரத்துக்கு வராது பதறிய கிரிஷாந்தியின் தாயார் இராசம்மா, மகள் இராணுவத்தால்தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதை அறிந்து, அவரது தனது இளைய மகனான பிரணவனுடனும், அயலவரான கிருபாமூர்த்தியுடனும் அந்தக் காவலரணுக்குச் செல்கின்றார்.


இராசம்மா இதற்கு 10 வருடங்களுக்கு முன் தனது கணவரைப் புற்றுநோயிற்கு இழந்தவர். தனியொருவராக தனது இரண்டு பெண் பிள்ளைகளையும், ஒரு ஆண் பிள்ளையும் வளர்த்து வந்தவர். கிரிசாந்திக்கு மூத்த சகோதரியான பிரஷாந்தியும், இளைய சகோதரனான பிரணவனும் இருந்தார்கள். இராசம்மா மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் இலங்கையில் கல்விகற்று, 50களின் இறுதியில் இந்தியாவுக்கு சென்று பொருளாதாரத்தில் இளங்கலைமாணி பட்டத்தையும் பெற்று வந்து, ஒரு பாடசாலையில் உப அதிபராகப் பணிபுரிந்தவர்.


இராசம்மா, அவரின் இளைய மகன் பிரணவன், அயலவர் குமாரசாமி ஆகிய மூவரும் இராணுவத்திடம் கிரிஷாந்தி எங்கே என்று வினாவுகின்றனர். அவர்களோ அப்படியொருவரை தாங்கள் கைது செய்யவில்லை என்று மறுக்கின்றார்கள். அதை நம்பித் திரும்பிப் போகின்றவர்கள், இராசம்மாவின் பிடிவாதத்தால் மீண்டும் காவலரணுக்குத் திரும்பி கிரிஷாந்தி எங்கே என்று வினாவுகின்றனர். 


இப்போது இராசம்மா, தனது மகளை விடுதலை செய்யாதவரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றார். ஒரு தாயின் மனது, இந்த இரவை தன் மகள் இராணுவ முகாமிற்குள் கழித்து விட்டால் இனி என்றென்றைக்கும் மீள மாட்டாளென நம்பியிருக்கலாம்.
இராசம்மாவுக்கு சிங்களமும் நன்கு தெரியும். ஆகவே அவர் சிங்களத்தில் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்.


எப்போது துப்பாக்கியோடும், அதிகாரத்தோடும் இருக்கும் எந்த தரப்பாயினும் இப்படி ஒருவர் அடங்காது நியாயம் கேட்பது கோபத்தை வரவழைக்கத்தானே செய்யும். அதுவும் இராணுவம் என்றால் சொல்லவும் வேண்டுமா? அந்த முகாமில் இருந்த இராணுவத்தினர் இந்த மூன்று பேரையும் இன்னொரு பதுங்குகுழியில் கொண்டு போய் அடைத்து வைக்கின்றது.


பிறகு நடந்தவற்றை நான் விரிவாகச் சொல்லப் போவதில்லை. ஒருபுறத்தில் கிரிஷாந்தி கூட்டு வன்புணர்வுக்கு ஆளானபோது, இவர்கள் மூன்று பேரும் அருகிலேயே வைத்து கொல்லப்படுகின்றார்கள். கிரிஷாந்தி உள்ளிட்ட இந்த நான்கு பேரும் கொல்லப்பட்ட முறை மிகக் கோரமானது.

ற்றைக்கு இது நடந்து 30 வருடங்களாகி விட்டது. ஆனால் இதைச் சாட்சியமாகச் சொன்னவர்களின் வாக்குமூலங்களை வாசிக்கும்போது மனம் பதறுகின்றது. அதை தொகுத்து நூலாக்கி 'வன்மம' என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் இலங்கையில் வெளிவந்த நூலின் ஒவ்வொரு பக்கங்களைப் புரட்டும்போதும் கைவிரல்கள் படபடக்கின்றன.


அன்று இந்த விடயம் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவின் கவனத்துக்கொண்டு செல்லப்பட்டபோது, இராணுவ/பொலிஸ் குழுவொன்றின் விரைவான விசாரணையினாலாயே இது ஒரு முக்கிய மனிதவுரிமை மீறல் சம்பவமாகப் பொதுவெளிக்கு தெரிய வந்தது. மேலும் எதற்கும் பயப்பிடாது சாட்சி சொல்ல வந்த பொதுமக்களினதும்,  குற்றஞ்சாட்டப்பட்ட ராஜபக்சே உள்ளிட்டவர்களிலிருந்து அரச சாட்சியாக மாறிய ச நஸார், சமரசிங்க போன்றவர்களின் சாட்சியங்களும் முக்கியமானவை. நஸாரின் சாட்சியங்களில், அவருக்கு கிரிசாந்தியின் கூட்டுப் பாலியல் வன்புணர்வில் பங்கிருக்கின்றதா இல்லையா என்று சற்றுக் குழப்பம் இருந்தாலும், அவர் அரசசாட்சியாக மாறியது  இந்த வழக்கின் முக்கியமான திருப்பமாகும். 

 

அது போலவே சமரசிங்க என்று ஒரு பொலிஸ்காரர் அன்று கோப்பாயில் பணிபுரிந்து கொண்டிருந்தவர். அவர் ஒர் அரிய மனிதாபிமானியாகவே இக்கொடும் நிகழ்வில் புலப்படுகின்றார். அவரே கிரிஷாந்தி உள்ளிட்ட நால்வரின் விடுதலைக்கு அவருக்கு இயன்றமுறையில் முயற்சித்திருந்தவர்.


கிரிஷாந்தியைப் மதியத்தில் கைதுசெய்து காவலரணில் வைத்து விட்டு, ராஜபக்‌ஷே, சமரசிங்கவை கிரிஷாந்திக்கு விடுதலைப் புலிகளோடு தொடர்பிருக்கா என விசாரிப்பதற்காய் அங்கே வரச் சொல்கின்றார். சமரசிங்கவிற்கு தமிழ் தெரியும் என்பதால் பதுங்குகுழிக்குள் இருந்த கிரிஷாந்தியை அவர் விசாரிக்கின்றார். கிரிஷாந்தி அதை மறுப்பதுடன், எதற்காக என்னை இங்கே தடுத்து வைத்திருக்கின்றீர்கள் எனக் கேட்கின்றார். அதுவே சமரசிங்க முதலும் கடைசியுமாகக் கிரிஷாந்தியை உயிருடன் சந்திப்பது.


இப்படி கிரிஷாந்தியை விசாரித்துவிட்டு  பகல் 3.00 மணிக்குத் திரும்புகின்ற சமரசிங்க, மூன்று பேர் அதே காவலரண்களுக்குள் நுழைவதைக் காண்கின்றார் (இதை சமரசிங்க நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும்போது நினைவுகொள்கின்றார்). அதன் பின்னர் கோப்பாயுக்கு திரும்புகின்ற சமரசிங்க மனம் அமைதி கொள்ளாது, மாலையில் இன்னொரு பொலிஸ்காரரை சைக்கிளில் அழைத்துக் கொண்டு, கிரிஷாந்தியை கைதுசெய்யப்பட்ட காவலரணுக்குச் சென்று கிரிஷாந்தி உள்ளிட்ட மற்றவர்கள் மூன்று பேரையும்  விடுதலை செய்யக் கேட்டிருக்கின்றார். அது வாக்குவாதமாக மாறி கோபத்தில் சமரசிங்கவையும், அவரது நண்பரையும் அங்கிருந்து ராஜபக்‌ஷே உடனே திருப்பிப் போகச் சொல்கின்றார்.


இந்த நிகழ்வில் குற்றஞ்சாட்டப்பட்டு, அரச தரப்புவாதியாக மாறி நஸாரின் சாட்சியம் இன்னும் கோரமானது. கிரிஷாந்தி தடுத்து வைக்கப்பட்ட காவலரணுக்கு அருகில் காவலில் இருந்தவர் நஸார். ராஜபக்‌ஷே தனது  இராணுவ நண்பர்களிடம் கிரிஷாந்தியின் உடல் மீது வன்புணர்வை நடத்த அனுமதி கொடுத்தபின், நஸாரும் செல்கின்றார். தான் தமிழில் பேசியதால் முனகிக்கொண்டிருந்த கிரிஷாந்தி தன்னிடம் தண்ணீரும் கேட்கவும் தான் கொடுத்ததாகவும், அப்போது யாரோ கெட்டவார்த்தைகளால் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்று கேட்டபோது தான் அந்த இடத்திலிருந்து நகர்ந்ததாகவும் சொல்கின்றார். அப்படித் திரும்பிப் போகும்போது 75 மீட்டர் தொலைவில் கிரிஷாந்தியின் தாயார் இராசம்மா பேச்சு மூச்சின்றி இறந்து கிடந்திருக்கின்றார்.


இலங்கை இராணுவம் இவர்கள் அனைவரையும் சுருக்குக் கயிறை இரண்டுபக்கமும் போட்டு இழுத்தே கொன்றிருக்கின்றது. இந்தக் கொலைகள் நடக்கும்போது துப்பாக்கியோடு காவல் இருந்ததாக நஸார் சொல்கின்றார். பின்னர் இராணுவத்தினர் மண்வெட்டிகளோடு அந்த உடல்களைப் புதைக்கச் சென்றதையும் கண்டதாகச் சாட்சியில் சொல்லியிருக்கின்றார்.

கிரிஷாந்தியின் வழக்கு பிற வழக்குகள் போல இல்லாது, அதிகளவு அழுத்தத்தால் இரண்டு வருடங்களில் முடிந்திருக்கின்றது. இந்த நான்கு பேரும் அன்று கொலைசெய்யப்பட்ட உடனேயே ஓர் பெரும் எதிர்ப்பு எல்லாத் தரப்புக்களிலும் இருந்து வந்ததாலேயே, உரியவர்கள் கைதுசெய்யப்பட்டு, புதைக்கப்பட்ட இந்த உடல்கள் 40 நாட்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டு மீளத்தோண்டி எடுக்கப்பட்டன. அந்த மீளக் கண்டுபிடித்தல் தமிழ் மக்களை மட்டுமில்லை, மனிதாபிமானமுள்ள சிங்களவர்களையும் தட்டியெழுப்பியது. ஆகவே இரண்டு ஆண்டுகளில் விசாரணை நடந்து தீர்ப்பும் கொடுக்கப்பட்டது. வழக்கு நடந்த சில நாட்களிலேயே, 9 குற்றவாளிகளில் முதல் குற்றவாளியான ராஜபக்‌ஷே நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடி சில வாரங்களின் பின் வேறொரு நிகழ்வால் கைதுசெய்யப்பட்டது எல்லாம், இலங்கை நீதிமன்றங்களின் வழமையாக நடக்கக்கூடிய நிகழ்வுகள் எனச் சொல்லலாம்.


இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளில் முடிந்தாலும், இவ்வாறு இதேகாலகட்டத்தில் வன்னியில் குமாரபுரத்தில் பால்பண்ணைக்கு அருகில் தமிழ்ப்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்புணர்வின் தீர்ப்பை வழங்க 20 ஆண்டுகள் எடுத்திருக்கின்றது என்று இதே 'வன்மம்' நூலில் நாம் அறிய முடிகின்றது. ஆகவே நீதி என்பது எல்லோர்க்கும் சமம் இல்லை என்பதையும் நாம் கண்டுகொள்ள முடியும்.


கிரிஷாந்தியின் கொலைவழக்கில் எட்டுப் பேருக்கு குற்றத்தைச் செய்தற்காக தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போதுதான் ராஜபக்‌ஷே இன்னொரு பேரவலமான உண்மையையும் நீதிமன்றத்தில் அறிவித்தார். நீங்கள் என்னை இந்த நான்கு பேரைக் கொன்று புதைத்ததற்காக குற்றஞ்சாட்டுகின்றீர்கள். நானறியவே இதே செம்மணிப் பகுதியில் 300-400 தமிழர்கள்  கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன எனச் சொன்னார். அப்படிச் சொன்னதோடு மட்டுமில்லாது என்னால் அவற்றையெல்லாம் அடையாளம் காட்டமுடியும் என்றும் அறிவித்தார். 


அதில் ஒரு சம்பவமாக, தனது அதிகாரியாருவொருவர் ஒரு திருமணமான தமிழ் தம்பதியைக் கூட்டிக்கொண்டு வந்து, அந்தக் கணவனின் முன்னேயே அந்தப் பெண்ணை வன்புணர்ந்தவர்; பிறகு அவர்கள் இருவரையும் மண்வெட்டியால் அடித்துக் கொன்றுவிட்டு செம்மணியில் புதைத்தவர்; அதற்குச் சாட்சியாக நானே அந்த அதிகாரிக்கு மண்வெட்டியைக் கொடுத்தேன் என்று இன்னொரு அதிர்ச்சியான நிகழ்வைச் சொன்னார்.


அதேபோன்று ஒருநாளில் 22 இற்கு மேற்பட்ட ஆண்களை அரியாலையில் கைதுசெய்து சித்திரவதை செய்து புதைத்தோம் என்றிருக்கின்றார். அதில் ஒரு சிலரின் பெயர்களை, அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை 'வன்மம்' நூலை வாசிக்கும் ஒருவர் அறியமுடியும்.


அதன்பின்னர் இவ்வாறு பல உண்மைகளை வெளியுலகிற்குச் சொன்ன ராஜபக்‌ஷேவிற்கு மரண அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டதும், அவரின் மனைவி தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டதுமென பலதும் இலங்கையில் நடந்திருக்கின்றது. அன்றைய சந்திரிக்காவின் காலத்தில் ராஜபக்சேவின் வாக்குமூலத்தை வைத்து செம்மணி புதைகுழிகள் மீண்டும் தோண்டப்பட்டத் தொடங்கியதும், பின்னர் இடைநிறுவில் நிறுத்தப்பட்டதுமென்பதும் கடந்தகால வரலாறு.


இப்போது மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பின் செம்மணி மீண்டும் தோண்டப்படுகின்றது.  இதுவரை இருநூறிற்கும் மேலான எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டிருக்கின்றன. நாம் எவ்வாறு கொல்லப்பட்டோம் என்று சொல்லாது, அமைதியாக உறங்கப் போவதில்லையென எலும்புக்கூடுகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை  சாட்சியங்களாக நம்முன்னே எழுந்தபடி இருக்கின்றனர். 


***

('வன்மம்' - ஆங்கிலத்தில் பகவதாஸ் சிறிகந்ததாஸால், கிரிசாந்தியின் கொலையின் நீதிமன்ற வழக்கின் முழுப்பிரதியை முன்வைத்து எழுதப்பட்ட நூலாகும்.  இது விண்மணி என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டு அண்மையில் இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது)


-நன்றி: 'அம்ருதா' - ஐப்பசி, 2005-



0 comments: