கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 155

Tuesday, July 14, 2026

 

 ஈழம் பற்றிய உரையாடல்கள்!



ஈழம் சார்ந்த விவாதங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட அனுபவங்களால் கட்டியமைக்கப்பட்டிருப்பவை. தனிப்பட்ட அனுபவங்கள் எவ்வளவு முக்கியமோ, அதேயளவு அதைத்தாண்டி பொதுவான வெளிக்குள் ஈழம் சார்ந்த உரையாடல்களை நகர்த்தவும் வேண்டியிருக்கின்றது. தனிப்பட்ட அனுபவங்கள் சார்ந்த விவாதங்கள் இரண்டு தரப்பினரை முதன்மையான எதிரிகளாகக் கட்டமைக்கின்றன. அவரவர்களின் தனிப்பட்ட அனுபவங்களின் நிமித்தம் அவர்கள் இலங்கையரசையோ அல்லது நீண்டகாலமாக போராட்ட களத்தில் இயங்கிய விடுதலைப்புலிகளையோ ஆதரிக்கவோ/எதிர்க்கவோ செய்வதாக விவாதங்கள் முடிந்து போகின்றன. ஆனால் அவ்வாறான ஒரு கறுப்பு வெள்ளைக்குள் ஈழம் சார்ந்த உரையாடல்கள் அமையமுடியாது என்பதுதான் யதார்த்தமாகும்.
 
 
ஆகவே ஈழம் சார்ந்த உரையாடல்களை எல்லாத் தரப்பினரும் பங்குபற்றும் பொதுவான தளத்துக்குள் நகர்த்த வேண்டியிருக்கின்றது. அவ்வாறு நகர்த்தினால் மட்டுமே அடுத்தகட்டத்துக்கான சிந்தனைகளை முன்வைக்க முடியும். அதேவேளை தனிப்பட்ட அனுபவங்களினூடு கிடைக்கும் கசப்பான உண்மைகளையும் ஏற்றுக்கொள்ளுபவர்களாக அனைத்துத் தரப்பினரும் இருந்தாக வேண்டும்.

அதற்கு ஓர் உதாரணமாக 'மாறிய நாட்களும் மாறாத சூரியனும்' என்ற வயிரமுத்து திவ்வியராஜன் எழுதிய நூலைச் சொல்லலாம்.

இந்த நூலில் கடந்தகால கசப்பான உண்மைகளை, தனிப்பட்ட ஒருவரின் அனுபவங்களினூடாகப் பார்க்கின்றோம். அதேவேளை அந்தத் தனிப்பட்ட அனுபவங்களின் நீட்சியில் அதைப் பொதுத்துயரமாக ஆக்கி ஈழம் சார்ந்த உரையாடல்களை உருவாக்க முயல்கின்றதையும் இந்த நூலில் அவதானிக்க முடியும்.

*

திவ்வியராஜன் தனது சிறுவயது அனுபவத்தைச் சொல்லும்போது 1950களிலே இலங்கை இராணுவத்தால் 'ஊரடங்குச் சட்டம்' அமுல்படுத்தப்பட்டு மாலை ஆறுமணிக்குப் பிறகு வீட்டுக்குள் அடங்கிய தமிழ்ச் சமூகத்தின் சுவடுகளைப் பார்க்கின்றோம். அதன் பின்னர் தனிச்சிங்களச் சட்டத்தின் நிமித்தம் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குதல் நிகழ்ந்து, 1977 இல் 'இனக்கலவரம்' நிகழ்ந்தபோது ஒரு தமிழனாக கொழும்பில் அவர்பட்ட கஷ்டத்தின் அனுபவத்தை நாம் வாசிக்கின்றோம்.


கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்து ஓர் அரசாங்க உத்தியோகத்தராக கொழும்பில் வேலை செய்யும்போது 1977 இல் இனக்கலவரம் நிகழ்கின்றது. தமிழராக இருந்து வேலைக்குப் போவது ஆபத்து என்று வீட்டுக்குள் அடங்கி இருக்கும்போது, இவரைத் தேடி அலுவலகம் வந்த நண்பரொருவரை அங்கே வேலை செய்தவர்களின் ஒருபகுதியினர் அறைக்குள் புகுத்தி அடித்துத் துவைக்கின்றது. இந்நிகழ்வை அறிந்த திவ்வியராஜன் அடுத்தநாள் அங்கே போய் இப்படிச் செய்வது நியாயமானதா என்று கேட்கும்போது, அந்த 'காடையர்' கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் ஒரு கம்யூனிஸ்டாக இருப்பதைக் கண்டு அதிர்கின்றார்.

இப்படி ஒரு சிங்கள கம்யூனிஸ்ட் இனவாதியாக மாறினாலும், திவ்யராஜனையும் அவரது சகோதரரையும் கவனமாக பம்பலப்பிட்டி பிள்ளையார்கோயில் அகதிமுகாமிற்கு அனுப்பி யாழ்ப்பாணம் போகும்வரை கவனமாகப் பார்த்துக்கொள்பவர்களாக சிங்களவர்களே இருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணம் வந்து வடமராட்சியில் வாழும் திவ்வியராஜனை, 1984இல் இலங்கை இராணுவம் பல இளைஞர்களோடு சேர்த்து கைதுசெய்து பலாலி இராணுவமுகாமிற்கு அனுப்பி வைக்கின்றது. அப்போதே திவ்யராஜனுக்கு திருமணமாகி மகளும் பிறந்துவிட்டார். அப்படியான ஒரு குடும்பஸ்தவன் எப்படி இயக்கக்காரனாக இருப்பான், மேலும் தானொரு அரச உத்தியோகத்தன் என்று அனைத்து வகைகளிலும் ஆதாரம் காட்டியபோதும், திவ்வியராஜன்  கைதுசெய்யப்படுகின்றார்.
அங்கே கைதியாக இருக்கும் காலத்தில் தப்பியோடும் முயற்சியைச் செய்ய விரும்பும்போதும்,  தப்பும்போது இறந்துவிட்டால் தன் மனைவி/பிள்ளைகள் நிலை என்னவாகும் என்கின்ற யோசனை அதைத் தடுக்கின்றது.  அங்கிருந்த பெரும்பாலான இளைஞர்களை விசாரணையின்றி பூஸா முகாமிற்கு அனுப்பி வைக்கும்போது, ஓர் இராணுவ அதிகாரியின் கருணையில் இவர் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்புகின்றார்.

ஆனால் அந்த வீடு திரும்புதலும் நிம்மதியாக திவ்வியராஜனுக்கு இருப்பதில்லை. அவரது சகோதரர் அப்போது கிழக்கு மாகாணத்தில் நிலஅளவையாளராக வேலை செய்துகொண்டிருக்கின்றார். அவர் அங்கே 'இனந்தெரியாத நபர்களால்' கைதுசெய்யப்பட்டிருக்கின்றார் என்ற தகவல் இரண்டு வாரங்களின் பின் திவ்வியராஜன் குடும்பத்தினருக்குக் கிடைக்கின்றது. தனது தம்பியைத் தேடி கிழக்கு மாகாணத்துக்குப் போகும் திவ்வியராஜன், அவரது தம்பியோடு பத்துப்பேர் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று அறிகின்றார். அப்படி 'காணாமல் போன' அந்தத் தம்பி பிறகு என்றென்றைக்குமாக திரும்பி வருவதில்லை என்பது அவ்வளவு துயரமானது.

*
இப்படியான துயரங்களோடு வாழும் திவ்வியராஜன் பிறகு 1987 'ஒபரேஷன் லிபரேஷன்' என்ற இலங்கை இராணுவத்தின் யாழ் தீபகற்பகத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையால் மீண்டும் கைதுசெய்யப்படுகின்றார். வடமராட்சியில் பெருமளவு ஆளணியுடன் முன்னேறி வந்த இராணுவத்தைக் கண்டு விடுதலைப் புலிகள் பின்வாங்கி ஓடிவிட, இவரைப் போன்ற பல இளைஞர்கள் இராணுவத்தால் பிடிபடுகின்றார்கள். அங்கிருந்து இளைஞர்கள் பலரை சிங்களப் பகுதியில் இருந்த சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க,  திவ்வியராஜனைக் கைதுசெய்து வைத்த இரண்டு இராணுவத்தின் கருணையாலும், திவ்வியராஜனுக்குத் தெரிந்திருந்த சிங்களத்தாலும் தப்பிச்செல்ல விடப்படுகின்றார் திவ்வியராஜன்.

பின்னர் இந்திய இராணுவத்தால் திவ்வியராஜனுக்கு ஏற்படும் துயரம் இன்னொருவகையானது.  இந்திய இராணுவத்தினர் தமக்கு மரியாதையைக் காவலரணில் தரவில்லை என்பதற்காக இவரது சைக்கிளைத் தோளின் மீது சுமந்துகொண்டு ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாம்வரை போகச் சொன்ன சென்ற தண்டனைகள் எல்லாம் நடந்திருக்கின்றன.

இவ்வாறு ஒருபக்கம் இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் போன்றவற்றால் ஏற்பட்ட துயரத்தைச் சொல்கின்ற திவ்வியராஜன், இன்னொருபுறத்தில் நமது தமிழ் இயக்கங்கள் செய்த அட்டூழியங்களையும் அதே கசப்புடன் பதிவு செய்கின்றார். மாறி மாறி சகோதர இளைஞர்களைச் சுட்டுக் கொல்கின்றவை, போஸ்ட்கம்பங்களில் குற்றவாளிகள் என்று அறிவித்து மரண தண்டனை  கொடுப்பது...அதுவும் ஒரு இயக்க இளைஞன் தப்பியோடும்போது அவனின் தாயின் முன்னாலே இன்னொரு இயக்கம் சுட்டுக் கொல்கின்றமை எல்லாம் இந்நூலில் குறிப்பிடப்படுகின்றது.

அதுபோல அவ்வளவு சித்திரவதைகொடுத்து 'துரோகி' என்று நாற்சந்தியில் எழுதி வைத்துவிட்டு, சரி இத்தோடு அந்த இளைஞனை விட்டுவிடுவார்கள் என்று நினைத்து முகம் திரும்பும்பொழுதில் நெற்றிப்பொட்டில் அந்த இளைஞனைச் சுட்டுக்கொல்ல, 'அய்யோ' என்று அருகிலிருந்த ஒரு பெண்  தரையில் விழுவதும், இந்தக் கொலையை ஒரு பத்துவயதுச் சிறுவன் பார்த்துக்கொண்டிருப்பதுமென எமது இயக்கங்களின் இரத்தம் தோய்ந்த கரங்களின் வரலாற்றையும்  இதில் திவ்வியராஜன் சொல்கின்றார்.

இந்திய இராணுவ காலங்களில் தெற்கில் எப்படி ஜேவிபியினர் ஒடுக்கப்பட்டனர் என்றும், சிங்களப் பேரினவாதம் தனது சொந்தமொழி பேசும்  சிங்கள இளைஞர்களைக் கூட சும்மா விடாது என்பதற்கான சாட்சியங்கள் இவை என்று சொல்லும் திவ்வியராஜன், எப்படி அதற்கு முன்னர் 1970களில் இதே ஜேவிபியினரை ஒடுக்க சிறிமா அரசுக்கும் இந்திய இந்திராகாந்தி அரசு உதவியது என்பதையும் நினைவூட்டுகின்றார்.

இப்படி தனது சொந்த நலன்கள் என்று வரும்போது தமது உரிமைகளுக்காகப் போராடுபவர்களை துச்சம் என நினைக்கின்ற வல்லரசான இந்தியாவிடந்தான் நமது இயக்கங்கள் ஆயுதப்பயிற்சியை எடுக்கப் போயிருந்தார்கள், அதே இந்திய அரசு தீர்வைத் தருவார்கள் என்று எப்படி நம்பினார்கள் என்றும் திவ்வியராஜன் இடைநடுவில் கேள்விகளை எழுப்புகிறார்.

*

இலங்கையில் இந்திய இராணுவ வெளியேற்றத்தின்பின், பிரேமதாசா அரசுடன் மீண்டும் போர் தொடங்கியபின், திவ்வியராஜன் இனி இலங்கையில் இருப்பது சாத்தியமில்லை என்று தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்குப் படகில் இரகசியமாக ஏறுகின்றார். சாதாரணமாக இரண்டு/மூன்று மணித்தியாலங்களில் முடிந்துவிடும் படகுப் பயணம்,  கிட்டத்தட்ட 18 மணித்தியாலங்கள் கடலுக்குள் நீடித்து திவ்வியராஜனும் அவரது குடும்பத்தினரும் எப்படியோ தப்பிப் பிழைத்து இந்தியாவின் கரைகளை அடைகின்றன்றனர்.

அங்கிருந்து தமிழ்நாடு-கேரளா எல்லையில் அமைந்த தக்கலை அகதிமுகாமில் இவர்கள் (1990களில்) தங்க வைக்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அந்த அகதிமுகாமில் இருந்த அனுபவங்களை திவ்வியராஜன் விபரிக்கும்போது, இதற்காகவா இந்தியாவுக்கு இவர்கள் தப்பிவந்தார்கள் என்கின்ற மனோநிலையே வாசிப்பவர்க்கு வரும். பிறகு ஒருமாதிரியாக அகதிமுகாமில் இருந்து வெளியேறி, 1994இல் திவ்வியராஜனும் அவரது குடும்பத்தினரும் கனடாவுக்கு வந்து சேர்கின்றனர்.

அப்போதும் இந்திய இமிக்கிரேஷன் அலுவலகர்கள் திமிர்த்தனமாகவே நடந்துகொள்கின்றார்கள். கனடாவுக்கு உரிய விஸாவுடன் (ஏற்கனவே அவரது தமக்கை முறையானர் கனடாவிலிருந்து ஸ்பான்ஸர் செய்கின்றார்) விமானநிலையம் போனபோதும், இது உரிய விஸாவல்ல என்று அந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர். கிட்டத்தட சில வாரங்களுக்குப் பிறகே அது அசலான விஸா ஆவணம் என்று ஏற்றுக்கொண்டு இவர்களைக் கனடாவுக்கு அனுப்பிவைக்கின்றனர்.

அந்தளவுக்கு அந்த அதிகாரிகள் ஈழத்தமிழர் மீது வெறுப்புற்றிருந்தாலும்,  தனது தாய்/தந்தையரைப் போல தமிழகத்தில் பேணிக்காத்த சில குடும்பத்தவர்களையும், திவ்வியராஜன் பங்குபற்றிய தமிழ்நாடு முற்போக்கு  சங்க கலையிரவுகள் பற்றியும், பல தமிழ்நாட்டு இனிய மனிதர்கள் பற்றியும் இந்நூலில் பதிவு செய்திருக்கின்றார்.

இறுதியில் கனடா 'வேற்றுமையில் ஒற்றுமை காணும்' தன்மை இருப்பது போலவோ, அல்லது யார் முதலில் வந்தோம் என்ற தூய இனக்கூச்சல் இல்லாது எல்லோரும் அமைதியாக வாழ முடிவதைப் போல, ஏன் மூன்று/நான்கு இனங்கள் மட்டும் வாழும் இலங்கையில் அது சாத்தியமில்லாது போய்க்கொண்டிருக்கின்றது என்றும் யோசிக்கின்றார்.

அதேவேளை நாம் எமது உரிமைகளைக் கேட்கின்றபோது, நம்மளவில் சரியானவர்களாக இருக்கின்றோமா என்ற கேள்விகளையும் இந்த நூலில் திவ்வியராஜன் சுட்டிக்காட்டுகின்றார். முக்கியமாக வடமாகாணத்தில் இருந்து 70,000 இற்கு மேற்பட்ட முஸ்லிம்களை ஒரே நாளில் நாம் அவர்களின் பூர்வீக நிலங்களில் இருந்து துரத்தியதையும், கோயில்களில் அகதிகளாக மக்கள் தங்கியபோது நுழைவாயில் கதவுகளைத் திறந்துவிட மறுத்ததையும், அகதிகளாக தங்கிய தங்கள் கிணறுகளில் வந்து தண்ணீர் குடித்துவிடக்கூடாது என்று சாதிவெறியுடன் குப்பைகளை அந்தக் கிணற்றுக்குள் நிரப்பிய நிகழ்வுகளையும் கவனப்படுத்துகின்றார். நாம் தமிழர்களாக சிங்களப் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அதேவேளை இன்னொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களைத் துரத்துவதும், நமக்குள்ளே சாதிய அடிப்படையில் மற்றவர்களையும் ஒடுக்கிக்கொண்டும் இருக்கின்றோம் என்றால், நாம் நம்மை நோக்கியும் பெருமளவான கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கின்றது என்பதையும் இந்த நூல் கவனமாக பரிசீலனை செய்யச் சொல்கின்றது.

இந்த நூல் 2014இல் வெளிவந்திருக்கின்றது. இப்போது ஆயுதப்போராட்டம் முடிந்தே கிட்டத்தட்ட17 வருடங்கள் கடந்துவிட்டன. நாம் இத்தனை ஆண்டுகளுக்குள் புதிய உரையாடல்களை நிகழ்த்தி அரசியல்/சமூகம் சார்ந்து எங்கேயோ நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் பழைய கதைபேசி புகழ்ந்து அல்லது திட்டி கடந்தகாலத்தில் மட்டுமாக உறைந்துவிட்டிருக்கின்றோம். அப்படி ஓர் அரசியல் மாற்றம் நிகழ்ந்திருந்தால், நாம் இப்போதும் அதேபழையபாணி அரசியல் சிந்தனைகளுக்குள்ளோ/ அரசியல் கட்சிகளுக்குள்ளோ அடைக்கலம் ஆகியிருக்கமாடோம்.

அதே பழைய கோஷம்! அதே பழைய பெருமிதம்! அதே பழைய இயக்கங்களின் 'ஒற்றை' அரசியல் பாதைகள்! ஆக நாம் அப்போதும் இப்போதும் ஏதோ ஓன்றுக்கான எதிர்ப்பு அரசியலை மட்டும் செய்து கொண்டிருக்கின்றோமே தவிர, ஒருபோதும் புதிய அரசியல் செல்நெறிகளை தொடங்கவோ, புதிய grass roots movements பற்றிச் சிந்திக்கவோ இல்லை என்பதே கசப்பான யதார்த்தம்.

ஆகக்குறைந்தது ஒற்றைக்கதையாடல்களினால் ஈழப்போராட்ட வரலாற்றைக் கட்டமைக்கும் ஆபத்தை, ஒருபக்க அரசியல் சார்பாக மட்டும் நின்று பேசுவதன் அபத்தத்தை, நமக்கு மென்குரலில் மறுத்து சொல்வதற்காகவேனும் இப்படி திவ்வியராஜன் போன்றோர் கடந்துவந்த அனுபவங்களினூடாக எழுதிய சில பனுவல்களாவது நம் கைகளில் இருக்கின்றன என்று இப்போதைக்கு நாம் கொஞ்சம் நிம்மதியடைய வேண்டியதுதான்.

****

நன்றி: 'யாவரும்'/ஆனி-ஆவணி மின்னிதழ்

 

கார்காலக் குறிப்புகள் - 154

Friday, July 10, 2026


Money Heist எனக்குப் பிடித்த ஒரு தொடராக இருப்பதற்கு எத்தனையோ 
காரணங்கள் இருந்தாலும் எனக்கு அது ஸ்பானியப் பின்புலத்தில் இருந்து வெளிவந்த ஒரு தொடர் என்பதுதான் முக்கிய காரணம். மேலும் Money Heist முதல் மூன்று சீஸன்களில் இருந்த சுவாரசியம் பின்னர் வந்த இரண்டு சீஸன்களில் இருக்கவில்லை. ஸ்பெயினுக்கு வெளியே வந்து சட்டென்று உலகக் கவனத்தை ஈர்த்த தொடராகியதால், பின்னர் மேலும் நீட்டிக்கப்பட்டதால் வந்த வினை  என நினைக்கின்றேன். அது  பல வெற்றிகரமான தொடர்களுக்கு இறுதியில் வழமையாக நிகழ்வதுதான்.
 



ஐந்து தொடர்களுடன் முடித்தாலும், அதை அப்படியே விட்டுவிடக்கூடாது என்று Pre sequal எடுக்கத் தொடங்கினார்கள். அப்படியான முதல் வந்த தொடர்தான் Berlin and the jewel of Paris. பெயரிலே இருப்பதுபோல இதில் பேராசிரியர் அல்ல, பெர்லின் தான் முதன்மைப் பாத்திரம். பெர்லினும் இன்னொரு பேராசிரியரும், மூன்று முக்கிய பாத்திரங்களும் மட்டுமேயுள்ள தொடர் அது. இவர்களோடு எனக்குப் பிடித்த அழகியான கமரோன் பின்னர் இந்தத் திருட்டுக் கூட்டத்தில் வந்து சேர்வார்.

இந்தத் தொடர் மூன்று வருடங்களுக்கு முன்னர் வந்தது. இப்போது அடுத்த ஒரு Pre sequal ஆக, Berlin and the Lady With an Ermine வந்திருக்கின்றது. முதல் தொடர் பிரான்ஸில் என்றால் இந்தத் தொடர் ஸ்பெயினில். இன்னும் திருத்தமாகச் சொல்வதென்றால் Seville இல் நடப்பது. அதேவேளை போலந்தில் இருக்கும் லியானார்டோ டாவின்ஸியின் ஓவியத்தைத் திருடுவதற்கான திட்டம் (அல்லது பாசாங்கு) சமாந்திரமாக இந்தத் தொடரில் நடக்கின்றது.

இந்தத் தொடரில் அவ்வளவு அழகான செபியாவை (எஸ்பநோல் உச்சரிப்பு) காட்டுகின்றனர். இதற்கு முன்னர் வந்த Money Heist இன் மயிர்கூச்செரியும் சாகசம் இதில் அவ்வளவு இல்லை. காதல் மட்டும் கட்டுக்கடங்காமல் ஓடுகின்றது. அதிலும் பெர்லினுக்கும் அவரது புதிய காதலிக்கும் வரும் காதல் காட்சிகள் அவ்வளவு இரசிக்கத்தக்கவை. அதேபோன்று களவுக்குப் போவதைவிட தனிமனித உறவுகளுக்குள்தான் இதில் ஆழப் போகின்றார்கள்.

கடைசி எபிஸோட்டில்தான் கொஞ்சம் வீரசாகசம் இருக்கின்றது. அதையும் அவ்வளவு விரைவாக ஓடி முடித்து விடுகின்றார்கள். எனக்கென்னவோ  Money Heist திரைக்கதை ஆசிரியர்கள் நமது சாண்டியலினின் 'கடல்புறா'வை வாசித்திருப்பார்களோ என்று தோன்றுகின்றது. கடல்புறா மூன்று பகுதிகள் கொண்டது. எல்லாப் போர் சாகசங்களும் மூன்றாம் பகுதியில்தான் தெளிவாக வருகின்றது. முதலாம் இரண்டாம் பகுதியில் சண்டைகள் எல்லாம் கெரில்லாச் சண்டைகள் போலத்தான் இருக்கும். அதைத்தாண்டி இளையபல்லவன் முதலாம்பகுதியில் காஞ்சனாதேவியுடனும், இரண்டாம்பகுதியில் மஞ்சளகியுடனும் காதல் சரசங்கள் செய்வதுதான் பலாப்பழத்தை தேனில் நனைத்துப் பரிமாறுவது போல எழுதப்பட்டிருக்கும்.

Money Heistகாரர்,  Pre sequal இப்போது எடுத்துக் கொண்டிருப்பதே பலவேறு வகைக் காதலைப் பிழிந்து தருவதற்குத்தானோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கின்றது. இந்த வீரசாகசக் கதைகளை விட காதல் எவ்வளவோ மேன்மையானதுதானே? அதுவும் ஸ்பானியக்காரிகள் காதலிப்பதைப் பார்ப்பது என்னைப் போன்றவர்களுக்குத் திகட்டித்தான் போய்விடுமா என்ன?

இந்தத் தொடரில் ஒரேயொரு கவலை, எனக்குப் பிடித்த அழகியான கமரோனைக் கொன்றுவிட்டனர் என்பதுதான். எனினும் கமரோன் அடுத்த சீஸன் வந்தால் மீள உயிர்ப்பார் போலத்தான் எனக்குத் தோன்றுகிறது.

***

 

டி.தருமராஜ்ஜின் 'ஜல்லிக்கட்டு' நூலை முன்வைத்து..

Wednesday, July 08, 2026

 

1.


சில நூல்களை வாசிக்கும்போது அவை அவ்வளவு எளிதில் முடிந்துவிடக்கூடாது என்று தோன்றும். அவ்வாறு இந்த ஆண்டில் வெளியான இரண்டு நூல்களை மிக நிதானமாக வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒன்று வி.அமலன் ஸ்டேன்லி எழுதிய 'புத்தம்' மற்றது டி.தருமராஜ் எழுதிய 'ஜல்லிக்கட்டு'.

இவ்வளவு புதுமையும், சுவாரசியமுள்ள ஒரு நூலை அண்மையில் வாசித்ததில்லையென்ற வியப்பே ஜல்லிக்கட்டை வாசித்து முடித்தபோது தோன்றியது.

ஜல்லிக்கட்டு ஒரு புள்ளியே தவிர இந்த நூல் அதைத் தாண்டி பல பல அற்புதமான  பக்கங்களைத் தொட்டுச் செல்கின்றது. தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு தடைக்கு (2017) எதிராக நடந்த ஒரு 'வெகுசன'ப் போராட்டத்தை இது சமகாலத்தில் மட்டும் வைத்து  பேசுவதில்லை. தமிழின் சங்ககாலத்தில் இருந்து தொடங்கி  பின்னமைப்பியல்/பின் நவீனத்துவம்வரை  இந்த 'வெகுசன'ப் போராட்டத்தை  முன்வைத்து இந்நூல் மதிப்பீடு செய்கின்றது. இங்கே வெகுசனப் போராட்டம் என்று அடைப்புக்குறிக்குள் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், இந்த நூலில் வெகுசனம் வேறானது, மக்கள் வேறானது என்று தொடர்ந்து டி.தருமராஜ் வலியுறுத்தியபடி வருகின்றார்.

Uploaded Image

இந்த நூலை ஒருவகையில் ஆய்வு நூலாகவும், இன்னொருபுறம் ஒரு புனைவாகவும் வாசிக்க முடிவதுதான் சுவாரயம் தருவது. இந்த நூலில் குறிப்புகளாக அல்லது சுருக்கமாகச் சொல்லப்படும் விடயங்கள் பற்றிய அடிக்குறிப்புகளே இருநூறுக்கும் மேலே வரக்கூடியது. பல்கலைக்கழக ஆய்வுகளின் அடிக்குறிப்புகள் போன்று வறண்டதன்மையில் இல்லாது, அந்த அடிக்குறிப்புகளில் குறிப்பிடப்படும் நூல்களைத் தேடி வாசிக்கவேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டுமளவுக்கு இந்த நூல்களின் அடிச்சாரத்தை 'ஜல்லிக்கட்டு' நூலில் தருமராஜ் பாவித்திருப்பதுதான் கவனப்படுத்த வேண்டியதாகும்.

என்னைப் போன்ற தமிழின் சங்கப் பாடல்களை ஆழ வாசிக்கவேண்டும் என்று விரும்புபவர்க்கு (அதேவேளை சோம்பலுடன் இருப்பவர்க்கு), இங்கே தருமராஜ் எடுத்தாளும் சங்கப் பாடல்கள்,  அவ்வளவு ஈர்ப்புடன் பழந்தமிழ் இலக்கியம் நோக்கி இழுத்துச் செல்கின்றது. ஐந்திணைகளில் குறிஞ்சி நிலத்தை, அங்கிருந்த வள்ளல்களை (பாரி, பேகன்) போன்றவர்களை மூவேந்தர்கள் எதற்காய் ஆக்கிரமித்தார்கள் என்றும், எப்படி யவனர்களின் வருகையுடன் அந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றது என்றும், அதனால் எப்படி அவர்கள் அதுவரைகாலமும் இருந்த செழுமையான வாழ்க்கையிலிருந்து அவர்கள் இழிசன மக்களாக ஆகினார்கள் என்ற ஒரு புது திணைக்கோட்பாட்டை டி.தருமராஜ் முன்வைக்கும்போது அவ்வளவு சிலிர்ப்பாக இருக்கிறது.

தமிழின் தொன்மையான நூல்களை மார்க்சிய/பின்னமைப்பியல் தளாங்களில் ஒப்பிட்டு தமிழவன் போன்ற அரிதானவர்களே மிக இயல்பாக எழுதியதை வாசித்திருக்கின்றேன். தமிழவனுக்குப் பிறகு, தமிழின் தொன்மையை பின்னமைப்பியல் புள்ளியில் வைத்து டி.தருமராஜ் எழுதியிருப்பது இந்த நூலை வாசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பொழுதும் மகிழ்ச்சி தந்து கொண்டிருந்தது.
'மார்க்சியம் இந்த நூலின் அடிப்படையக் காரணியாக இருப்பதை வாசிக்கும் நீங்கள் அறியலாம்' என்று தருமராஜ் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டாலும், அதுவே பெரும்பாலான ஆய்வுகளுக்கு இயல்பு என்றாலும், என்னால் இந்த நூலை மார்க்சியம் தாண்டிய பின்னமைப்பியல்/பின நவீனத்துவ தளத்தில் அதிகம் வைத்தே வாசிக்க முடிந்தது. சிலவேளைகளில் என் வாசிப்பின் ஒரு சார்புநிலையாக இருக்கலாம். ஆனால் அப்படி வாசித்துப் பார்த்துக் கொண்டிருப்பதே எனக்குச் சுவாரசியமாக இருந்தது.

2.

இந்த நூல் 'ஆடிப்பெருக்கு-கிளர்ச்சியின் சூத்திரம்', தற்செயலும் வரலாறும் - காளையின் வம்சாவழி', 'காளை அரசியல்', 'பண்பாட்டுப் பதற்றம்', 'முதலீட்டீயமும் நாட்டுப்புறவியலும்' என்ற ஐம்பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஒவ்வொரு பகுதியும் தனித்தனியே ஒவ்வொரு நூலாக வைத்து உரையாடுவதற்கான பல புள்ளிகளைக் கொண்டிருக்கின்றது.

ஜல்லிக்கட்டு என்பது கிராமப் புறங்களில் நடைபெறும் ஒரு விளையாட்டு. ஆனால் அது தடைசெய்யப்பட்டபோது எப்படி நகரத்தார் இதை ஒரு வெகுசனப்போராட்டமாக ஆக்கினார்கள், இப்படி முரணான புள்ளிகள் ஒருங்கிணைந்த (கிராமத்தார்/நகரத்தார்) போராட்டத்தை எப்படிப் எதிர்கொள்வது என்ற குழப்பத்தை இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் கொடுத்தது, மதுரையில் அந்தப் போராட்டத்தை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்த தனக்கு இதை எப்படிப் புரிந்துகொள்வது என்ற சிந்தனையில் தோன்றியதே இந்த நூல் என்கின்றார் தருமராஜ். நாட்டுப்புறவியலில்  'வழக்காறு' என்பதே நிகழ்த்தப்படுவதுதானே, ஆனால் இங்கே 'நிகழ்த்தப்படாத வழக்காறை' எவ்வாறு எதிர்கொள்வது என்ற திகைப்பைத் தன்னைப் போன்ற நாட்டுப்புறவியலாளர்கள் சந்தித்தனர் என அவர் தொடர்ந்து எழுதிச் செல்கிறார்.

மேலும் விஜய் (தற்போது தமிழக முதலமைச்சர்) 'தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியபோது அது ஏற்படுத்திய ஆரவாரத்தையும், அவரது அரசியல் புள்ளியையும் பார்த்தபோது, 'அது அலங்காநல்லூர்/அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் பார்ப்பது போன்று இருந்தது, அதாவது விஜய் தன்னை இரகசியம் போல பூட்டி பூட்டி வைத்துக் கொள்வதும், அவரது பிரசன்னம் சில மணித்துளிகளே இருப்பதுபோல அரசியல் கூட்டத்தை வடிவமைத்துக் கொள்வதும், அந்த சில மனித்துணிகளில் காணப்படும் பாய்ச்சலையும், அதைக்காணும் வெகுசனம் உச்சக்கட்ட எழுச்சியை அடைவதும் ஜல்லிக்காட்டு என்கின்ற வீரவிளையாட்டின் ஒழுங்கமைப்பை ஒத்திருந்தது' என்றும் தருமராஜ் முன்னுரையில் எழுதிச் செல்வது, இன்று அரசியல்/பண்பாட்டுக் களங்களில் செயலாற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய புள்ளியாகும்.

ஜல்லிக்கட்டு வெகுசனப் போராட்டத்தில் கடைசிவரை ஜல்லிக்கட்டு காளை சீறிப்பாயவே இல்லை. ஆனால் அதே ஒழுங்கில் அறிந்தோ/அறியாமலோ வாடிவாசலில் இதோ பாய்கின்றேன் என்று உறுமிக் கொண்டிருந்த ஒரு காளை அரசியல் களத்தில்  சீறிப் பாய்ந்திருக்கின்றது. பாய்ந்தது மட்டுமில்லை பலரும் எதிர்பார்க்காத, யாராலும் அடக்கமுடியாத அரசியல் காளையாக நின்று வென்றும் காட்டியிருக்கின்றது. இந்த எதிர்பாராத விஜய் என்ற ஜல்லிக்காட்டுக் காளையின் வெற்றி எவராலும் கணிக்கமுடியாதது மட்டுமில்லை, எந்த வகைக்குள் வைத்து இதை மதிப்பீடு செய்வது என்ற குழப்பத்தையும் பல ஆய்வாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால் அதைச் சரியாக 'வெகுசனப் போராட்டம்' என்றவகையில் கணித்தவராக மட்டுமின்றி அதற்கான பின்னணிச் சூழலோடு நுட்பமாக விளங்கிக் கொண்டவராகவும் தருமராஜ் இருந்திருக்கின்றார்.

இந்தப் பெரும் நூல் வெளிவந்ததும், இந்த வெகுசனத் திரளைச் சரியாக விளங்கி விஜய் தமிழக முதலமைச்சரானதும் நம் தமிழ்ச் சூழலில் அரிதாக நிகழும் ஓர் நிகழ்வென்றே சொல்லவேண்டும். ஏனெனில் ஆய்வுகள் என்பதே வரலாற்றுச் சம்பவங்கள் நடந்தபின்னே முடிவுகளைக் கண்டடைவதாக இருக்கும்போது, ஜல்லிக்கட்டு எதிர்ப்புப் போராட்டத்தை முன்வைத்து, அதற்கு எந்த நேரடித் தொடர்பும் இல்லாதபோதும், வெகுசனம் திரண்ட பின்னணிச்சூழலை சரியாகப் புரிந்துகொண்டு (அல்லது புரியாமலே) அதேபாணியில் ஓர் அரசியல் மாற்றத்தை நிகழ்த்தியது என்பது எவ்வளவு வியப்பானது.
Uploaded Image


இதேநேரத்தில் டி.தருமராஜ்ஜின் இந்த நூலை முன்வைத்து இலங்கையில், பங்களாதேஷில், நேபாளத்தில் நிகழ்ந்த ஸென் ஸீ போராட்டங்களைப் பார்க்க முடியும் என்கின்ற ஜெயமோகன் போன்றவர்களின் கருத்துக்களோடு நான் சில புள்ளிகளில் முரண்படவும் செய்கின்றேன். இலங்கையிலோ இன்னபிற தென்கிழக்காசிய நாடுகளிலோ நடந்த போராட்டங்களில் ஒரு முதன்மையான எதிரி கண்முன்னே தெளிவாக இருந்தது. இலங்கையில் பொருளாதரத்தால் நாட்டைச் சீரழித்த (அவ்வாறே நேபாளத்தில்) ராஜபகஷே ஆட்சிப்பீடத்தில் இருக்கும்போதே இந்த வெகுசனப் போராட்டம் தொடங்கியது.

அங்கே ஏற்கனவே ஜல்லிக்காட்டுக் காளை களத்துக்குள்ளே பாய்ந்துவிட்டது. காளையை அடக்கவேண்டும் என்கின்ற உணர்வு போராட்டம் தொடங்கியபோது அந்த வெகுசனத் திரளுக்கு வந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்காட்டு தடைப் போராட்டத்திலோ அல்லது விஜய் தமிழக முதலமைச்சரானபோதோ ஒரு தெளிவான எதிரி என்று வெகுசனத்துக்கு இருக்கவில்லை. அதாவது ஜல்லிக்கட்டுக்காளை களத்துக்குள் இறங்கவேயில்லை. அது அவிழ்த்துவிடாத ஒரு காளையாக மூசிக்கொண்டு வாடிவாசலை விட்டு இறங்காதிருந்தது என்பதே இவற்றுக்கு இடையிலான வித்தியாசமாகும்.

3.

எனக்கு இந்த ஜல்லிக்கட்டு நூலில் மிகப்பிடித்ததே தருமராஜ் எதையும் claim செய்யாத தன்மை. எனது நூலான 'பேயாய் உழலும் சிறுமனமே' அல்புனைவுத் தொகுப்பு வந்தபோது இடதுசாரிப் பின்னணியில் வந்த எனக்கு முன்னிலிருந்த தலைமுறையச் சேர்த்த ஒரு நண்பர், தங்கள் தலைமுறையில் ஒரு விடயம் குறித்து கறாரான முடிவெடுத்து உறுதியாக எழுதுவோம், ஆனால் இந்தத் தலைமுறை (என்னைப் போன்றவர்கள்) எல்லாவற்றையும் கேள்விகளுடன், சந்தேகங்களுடனும் அணுகின்றார்களே தவிர அறுதியான உறுதிகளை எடுக்கத் தயங்குகின்றார்கள்' என்று சொல்லியிருப்பார். அதை நேர்/எதிர்மறையாக துவிதங்களுக்குள் வைத்தெல்லம் பார்க்கத் தேவையில்லை.

நாம் இன்றைய சூழலைப் பார்த்தால் அப்படி கறாரான முடிவுகளை எடுப்பது எவ்வளவு கடினம் என்பதை அறிந்துகொள்ளலாம். உதாரணத்துக்கு நாம் ஈரான் விடயத்தை எடுத்துக் கொண்டால், ஈரான் தனது ஆட்சிக்கெதிராகப் போராடும் மக்களை எவ்வளவு கொடூரமாக ஒடுக்கின்றது என்பதை அறிவோம் (அதற்கு ஈரானிய மக்களின் சாட்சியங்களே போதும்). அதேவேளை இப்போது ஈரான் என்கின்ற நாட்டை  அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கும்போது ஈரானுக்குச் சார்பாகத்தான் நாம் நிற்க வேண்டும். அப்படியொரு சார்பு நிலை எடுக்கும்போது ஈரானிய அரசு தன் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறையை ஏற்றுக்கொள்கின்றோமா என்கின்ற கேள்விகளும் வரும். இவ்வாறான சூழ்நிலைகளால்தான் ஒரு விடயத்தை கேள்விகளோடும் சந்தேகங்களோடும் fragmentation ஆகத்தான் இவற்றை நாம் அணுகமுடியும் என்கின்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

அவ்வாறான ஓர் அணுகுமுறையை, நாம் இந்த ஜல்லிக்கட்டு நூல் நாட்டாரியலா அல்லது பின்னமைப்பியலா எந்த முறையியல் (methodology) மூலமாக  அணுகின்றது என்று சந்தேகம் கொள்ளக்கூடாது என்பதற்காக தருமராஜ் இதில் ஓரு விளக்கத்தைத் தருகின்றார். 'இந்தப் புத்தகம் வெகுஜனக் கிளர்ச்சிகளின் சூத்திரத்தைக் கண்டுபிடிக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே பதில் சொல்வேன். அமைப்பியல் மானிடவியல் ஆய்வுகளில் இது போல் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கான சூத்திரத்தைக் கண்டுபிடிப்பது ஒரு சாகசமாகவே செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் அப்படியொரு கணித சூத்திரத்தையோ அல்லது கிளர்ச்சிகளின் ஒழுங்கமைப்பையோ கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்பது முக்கியம். இங்கே பயன்படுத்தப்பட்ட சூத்திரம் என்ற சொல், சூழ்திறம், சூழ்ச்சி என்று பொருள் தரும் வகையிலே கையாளப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் நீங்கள் பார்ப்பது அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்களின் கோணம், அவ்வளவுதான்' என்று சொல்லியிருப்பதை வாசகர்கள் ஒருபோதும் தவறவிடக்கூடாது என நினைக்கின்றேன்.

பின்னமைப்பியல்/பின் நவீனத்துவத்தில் எல்லாவற்றையும் விளையாட்டாகப் பார்ப்பது என்று முக்கியமான ஒன்று.  அதாவது மிகத் தீவிரமாக எந்தவொன்றையும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை (நமக்கு சமகால உதாரணம்  Slavoj Žižek). அதற்காக தருமராஜ் இங்கே பின்நவீனத்துவத்தை தனக்குரியதாக கொள்கின்றார் என்பதாக அர்த்தமல்ல. பின்னமைப்பியல் நிராகரிக்கும் பெருங்கதையாடலை (meta narratives), முக்கியமாக தத்துவத்தை நிராகரிக்கப் போவதில்லை என்று தருமராஜ் ஓரிடத்தில் உறுதியாகக் கூறுகின்றார் என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.

மேலே 'இந்தப் புத்தகத்தில் நீங்கள் பார்ப்பது அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்களின் கோணம், அவ்வளவுதான்' என்று தருமராஜ் சொல்லியிருப்பதற்குதான் நான் விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.
எல்லாமே ஏற்கனவே சொல்லப்பட்டாலும், அதன் ஒழுங்குகளை குலைத்து புதிய அடுக்குகளை தன் அறிவால் தருமராஜ் கட்டுகின்றார். இவ்வாறு ஒழுங்குகளைக் குலைத்தும் சிதைத்தும் புதிதாய் ஓன்றை உருவாக்குவதை ஒரு 'விளையாட்டாக'ச் செய்யமுடியுமென்று வேறு எந்தத் தத்துவத்தைவிடவும் பின்னமைப்பியல்/பின் நவீனத்துவ நிலவரங்கள் நமக்குத் துணைபுரிகின்றன. அதற்கான சுதந்திரத்தை அவை கொடுக்கவும் செய்கின்றன. அந்த மிகப்பெரும் சுதந்திரமே தருமராஜ் அவர்களையும் நாட்டாரியல் இருந்து தொடங்கி பின்னமைப்பியல்வரை கட்டற்ற சுதந்திரத்தோடு இந்த நூலில் இயங்க வைக்கின்றது. ஒருவகையில் அதையேதான் பண்டிதர் அயோத்திதாசரையும், அவருக்கிருந்த அன்றையகால நடைமுறை அறிவோடு, பல விடயங்களை கலைத்தும் சிதைத்தும் ஒழுங்குபடுத்தி 'பெளத்தவயமாதல்' என்கின்ற மிக முக்கியமான ஒரு தளத்தை வந்தடையச் செய்திருக்கின்றது என்பதையும் நாம் நினைவூட்டிக் கொள்லலாம்.

மிகச்சோர்வான காலகட்டத்துக்குள் தமிழ் ஆய்வுச்சூழலும் அல்புனைவு நூல்களும் இருக்கின்ற காலகட்டத்தில் அவ்வளவு சுவாரசியமாகவும், அதேவேளை நம்மை இன்னுமின்னும் சிந்திக்க வைக்கின்றதுமாகவும், ஜல்லிக்கட்டு என்கின்ற ஓர் அரிய நூல் நம் கைகளை வந்தடைந்திருக்கின்றது என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.

****

(நன்றி: 'அம்ருதா' - ஆனி, 2026)

 

கார்காலக் குறிப்புகள் - 153

Thursday, July 02, 2026

 

கால்பந்தாட்டக் குறிப்புகள் - 01

நாளை உலகக்கிண்ண உதைபந்தாட்டம் மெக்ஸிக்கோவில் தொடங்குகின்றது. எப்போதும் போல என் முதன்மையான ஆதரவு தென்னமெரிக்க, ஆபிரிக்க நாடுகளுக்குத்தான். பிரேசிலும் ஆர்ஜெண்டீனாவும் என்றும் என் பிரியத்துக்குரியவை. ஆனால் எனக்கு என் கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்கள் போகவேண்டும் என்று நினைக்குமளவுக்கு அந்தந்த நாடுகளுக்கு இருவரும் எதிரிகள். ஆகவேதான் பிரேசிலில் நடந்த (2014) அரையிறுதிப்போட்டியில் பிரேசில் படுபயங்கரமாக 7-1இல் ஜேர்மனியிடம் தோற்றபோதும், பிரேசில்காரர்கள் ஆர்ஜெண்டீனாவுக்கு ஒரு துளியும் ஆதரவு கொடுக்காதிருந்தனர். சிலவேளைகளில் அவர்கள் உற்சாகம் கொடுத்திருந்தால் மேலதிக நேரத்தில் ஒரு கோலைப் போட்டு ஜேர்மனி உலகக்கோப்பை அந்த வருடம் வென்றதற்குப் பதிலாக ஆர்ஜெண்டீனா வெற்றி வாகை சூடியிருக்கும் என்று நான் இப்போதும் நினைப்பதுண்டு.

Uploaded Image

பிரேசில் என் மனதுக்குவப்பான நாடென்றாலும், நமக்கு காதலி இருக்காமல் விடுவார்களா என்ன? காதலியை நேசிப்பது போல இரகசியமாக நான் நேசிப்பது ஆர்ஜெண்டீனாவை.

அதிக உலகக்கோப்பைகளை வென்றது பிரேசில்தான். ஐந்து தடவைகள் பிரேசிலும், அடுத்து ஜேர்மனியும், இத்தாலியும் 4 தடவைகள் வென்றிருக்கின்றன.  இவற்றுக்கு அடுத்து ஆர்ஜெண்டீனா 3 தடவைகள் வென்றிருக்கின்றன.

பிரேசில் பீலேயின் காலத்தில் உச்சம் தொட்டு இருந்தது என்பதை நாமறிவோம். பீலே 1958, 1962, 1970களில் பிரேசிலுக்கு கிண்ணத்தை வென்று கொடுத்திருக்கின்றார் அதுவும் 1966 போர்த்துக்கல்லிடம் படுதோல்வியடைந்து பீலே உதைபந்தாட்டத்திலிருந்து ஓய்வை அறிவித்தபோது, King is back என்கின்றமாதிரி 1970 மீளத்திரும்பி வந்து உலகக்கிண்ணத்தை தனது நாட்டுக்கு வென்று கொடுத்திருந்தார்.  பீலே 70களில் வென்ற காலத்தில் பிரேசிலில் சர்வாதிகார ஆட்சி இருந்தது. அரசியல் குழப்பம் மலிந்திருந்தது. இதற்கிடையில் பிரேசில் அந்த ஆண்டு தாங்களே கால்பந்தாட்டத்தில் மன்னர்கள் என்று நிரூபித்துக்காட்டினார்.

எவ்வளவு சிறப்பான ஆட்டக்காரராக இருந்தாலும் பீலேயைப் போல இனியொருவர் மூன்று உலகக்கிண்ணத்தை தனது நாட்டுக்காக வெல்லுவது இனியொருபொழுதும் அவ்வளவு எளிதாக நடக்காது. அதனால்தான் பீலே உதைபந்தாட்டத்தில் ஓர் அரசர். பீலேயின் இந்த மூன்றாவது வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அதன் முழுப்பின்னணியும் அறிய விரும்புகின்றவர்கள் வேண்டுமெனில் 'Brazil 70: The third star' என்கின்ற ஐந்து பாகங்களுள்ள சீரிஸைப் பார்க்கலாம்.

அப்படி பீலே உள்ளிட்ட வீரர்கள் இருந்த சிறந்த பிரேசில் அணி பிறகெப்போதும் இருந்ததா என்று யோசித்தபோது, அப்படி ஒரு அணி 1994, 1998, 2002, 2006 இருந்தது போலத் தோன்றியது.

பிரேசில் 1970இல் கிண்ணத்தை வென்றதன்பிறகு மீண்டும் 24 வருடங்களுக்குப் பிறகே 1994 நான்காவது தடவையாக வென்றது. 1998 இல் இறுதியாட்டத்துக்கு வந்து ஸிடானியின் பிரான்ஸ் அணியிடம் தோற்றது. எனினும் தோல்வியே வெற்றியின் படிக்கல் என எடுத்து மீண்டும் 2002இல்  ரொனால்டோ/ரொனாடினியோ/ கார்லோஸ்/ ரிவால்டோ/காஃபூ என்கின்ற அற்புத வீரர்களால் கிண்ணத்தைச் சுவீகரித்திருந்தது. 2006 இலும் மிகச் சிறந்த அணி (ரொனால்டோ/ரொனால்டினோ/கார்லோஸ்) இருந்தும் பிரான்சிடம் காலிறுதிப்போட்டியில் 1-0 இல் தோற்றிருந்தனர்.

ஆக 1994, 1998, 2002 என மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பிரேசில் இறுதிப்போட்டிகளுக்கு வந்திருந்தனர். அதில் 1998இல் மட்டும் தோற்றிந்தனர். சிலவேளை 1998 வென்றிருந்தால் ரொனால்டினோவுக்கு பீலே மாதிரி ஒரு சிறப்புக் கிடைத்திருக்கும். ஏனெனில் 1994இல் ரொனால்டோ அணியில் இருந்திருக்கின்றார். ஆனால் அவர் 17 வயதென்பதால் எந்த ஆட்டமும் விளையாடவில்லை என்பது வேறு விடயம்.

இம்முறை ஆர்ஜெண்டீனா மெஸ்ஸிக்காக இன்னொரு முறை வென்றாலும் மகிழ்வேன் அல்லது அவ்வப்போது களத்தில் 'நடிகர் திலகமாக' இருந்தாலும் வித்தியாசமான திறமை கொண்ட நெய்மாருக்கு முதல் கிண்ணத்தை பிரேசில் வென்று கூடக் கொடுக்கலாம். ஆனால் இப்படி கனவு கொண்டு இருக்கும்போது இந்த நாசமாய்ப்போன பிரான்சுக்காரரோ, ஸ்பெயின்காரர்களோ கிண்ணத்தை அள்ளிக்கொண்டு போய்விடுவார்களோ என்று இன்னொருபக்கம் பயமாக இருக்கிறது. அப்படி ஒரு ஐரோப்பா நாடுதான் வெல்லவேண்டும் என்று கடவுள் தீர்மானித்துவிட்டாரென்றால், பாவம் எங்கள் ரொனால்டோவுக்காக போர்த்துக்கல் வெல்வதற்கு என் முழு ஆதரவும் இருக்கிறது.

காதலிலும் கால்பந்தாட்டத்திலும் எப்போது நான் விருப்பப்பட்டது அப்படியே நடந்திருக்கிறது?

எதற்கும் நாளைக்கு இங்குள்ள உடுப்புக்கடைக்குப் போய் வெல்ல சாத்தியமுள்ள நாடுகளில் ஜேர்ஸிகளை ஒவ்வொன்றாக அணிந்து படம் எடுத்து வைக்க வேண்டும். பிறகு எந்த நாடு உலகக்கிண்ணத்தை வெல்கின்றதோ, நான் ஆதரவளித்த நாடு வென்றுவிட்டது என்று படங்காட்ட அது மிகவும் உதவியாக  இருக்கும்.

***