கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

புத்தக வாசிப்பு

Monday, August 28, 2006

சொல்வதால் வாழ்கிறேன் - அ.மார்க்ஸ்

நல்ல புத்தகங்கள் எப்போதும் நல்லதொரு வழிகாட்டியாக வாசிப்பவருக்கு அமைந்துவிடுகின்றன. சிறுகதைகள் பற்றி எஸ்.பொ ஒருமுறை விவரிக்கும்போது, ஒரு வாசகர் கதையை வாசித்துக்கொண்டிருக்கும்போது 'சா நான் சொல்ல நினைத்ததை இந்தப்படைப்பாளி சொல்லிவிட்டாரே' என்று ஒரு வாசகரை வாயூறச் செய்துவிட்டால் அந்தப் படைப்பு வெற்றிபெற்றுவிடுகின்றது என்று கூறியிருப்பார். அப்படி ஒரு மனோநிலையுடன் வாசித்து முடித்த தொகுப்பு அ.மார்க்ஸின் 'சொல்வதால் வாழ்கிறேன்' என்று கட்டுரைகளின் தொகுப்பு.

File0001

அ.மார்க்ஸ் பலவேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சொல்ல வந்த விடயங்களை ஆக அதிகம் நீட்டி முழங்காமல் நறுக்குத் தெரித்தாற்போல சுருக்கமாகவும் எளிமையாகவும் அ.மார்க்ஸ் எழுதி முடித்து விடுகின்றார். ஒரே கருத்தை ஒன்பது விதமாய் எழுதி 9X9 தத்துவ/அரசியல் விமர்சனக்கட்டுரைகள் எழுதுகின்றவர்கள் அ.மார்க்ஸின் பரந்த வாசிப்பையும் அவ்விடயங்களைச் சொல்ல அவர் பயன்படுத்தும் -வாசகரைப் பயமுறுத்தாத- மொழி குறித்தும் நிதானமாய் யோசித்துப் பார்க்கலாம்.

கடந்து சென்ற நூற்றாண்டின் பக்கங்களை எழுந்தமானமாய் எட்டிப்பார்க்கும் முதலாவது கட்டுரை(தொகுப்பில் இருப்பதில் இதுதான் சற்று நீளமான கட்டுரை) பல விவாதத்திற்கான புள்ளிகளைக்கொண்டுள்ளது. அதேபோன்று பிரமீளின் கதைகளை வைத்து எழுதப்பட்ட கட்டுரை வித்தியாசமான கோணத்தில் பிரமீளை அணுகுகின்றது. பிரமீளுக்கு ஆன்மீகம் மீதான நம்பிக்கை இருந்தாலும் அவர் பிற ஆன்மீக எழுத்தாளர்களைப் போல எழுதவில்லை எனவும், தமிழில் பன்முகத்துடனும், விளிம்புநிலை மனிதர்களை முக்கிய கதாபாத்திரங்களாய் கொண்டும் எழுதியிருக்கின்றார் என்று ஒரு கட்டுரை பேசுகிறது. அதே போன்று இந்துத்துவவாதிகளின் பெருந்தெய்வ வழிபாடுகளுக்கு எதிராய் சிறுதெய்வ வழிபாடுகளை நாம் முன்னிறுத்த வேண்டிய அவசியமிருந்தாலும், அவை மட்டுமே எல்லாவற்றுக்குமான தீர்வாக அமைந்துவிட முடியாது என அ.மார்க்ஸ் விவாதிக்கின்றார். வள்ளலார், நாராயணகுரு போன்றவர்கள் மதங்களுக்குள் மட்டும் தேங்கிப்போனவர்கள், அதற்கப்பால் அவர்களால் நீட்சியடையமுடியவில்லை என்பது போன்ற அவதானங்கள் முக்கியமானவை.

பெளதீகப் பேராசிரியராக இருந்த அ.மார்க்ஸ், ஈழப்போராளியொருவரின் பாதிப்பில் அரசியல்/இலக்கிய திறனாய்வுத்தளத்துக்கு வந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஒவ்வொரு மனிதருக்கு, ஒவ்வொரு அமைப்புக்கு என்று தனிப்பட்ட அரசியல் உள்ளதுபோல, காலச்சுவடுக்கு, ஜெயமோகன்-வசந்தகுமார்-தேவசகாயகுமார் & கோவுக்கு, திண்ணை & விளக்கு கோவுக்கு உள்ள அரசியல் போல என்னால் அதிகளவு உடன்பட முடிகின்ற அரசியலைப் பேசுகின்ற குழு நிறப்பிரிகைக்குழுதான். குழுவாக இயங்கியபோது மட்டும் அல்ல, இப்போது தனித் தனியாக இயங்கும்போதும் அவர்களது ஆளுமைகள் மிகவும் வசீகரிக்கின்றன. (அ.மார்க்ஸ், ரமேஷ்-பிரேம், ரவிக்குமார், பொதியவெற்பன், பொ.வேல்சாமி, சமயவேல்....).

எந்த அமைப்பும் சிறிது சிறிதாக வளர்ந்து காலத்தின் தேவைக்கேற்ப உச்சத்தை அடைந்து பிறகு பிளவுபடுவதும் வெடிப்பதும் இயற்கையானது. அந்த அளவில் நிறப்பிரிகை குழுவின் பிளவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. எனினும் இன்று தனித்தனியாக இயங்கும் நிறப்பிரிகை நண்பர்கள் தமக்குப் பின்பான அடுத்த சந்தியினர் குறித்தும் அக்கறைப்படவேண்டும். தமது சிந்தனைகளின் நீட்சிகளை தொடர்ந்து வரும் சந்தியினருக்கு வழங்க, ஆகக் குறைந்தது இவ்வாறான் உரையாடல்களையும், கட்டுடைப்புக்களையும் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டாவது இருக்கவேண்டும்.

'சொல்வதால் வாழ்கிறேன்' தொகுப்பில் -நான்- அடிக்கோடிட்டு வாசித்த சில பகுதிகள் கீழே

-பின் நவீனம் எதையும் இயற்கை என ஏற்றுக்கொள்வதில்லை. எந்த விவரணமும், சொல்லும் முறையும் நடுநிலையானதல்ல. எல்லாமே கலாச்சார ரீதியாகக் கட்டமைக்கப்படுபவை, கருத்தியல் தளத்தில் கட்டப்படுபவை. இதைப் புரிந்து ஏற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு அரசியல் நிலைப்பாடு. எல்லாவிதமான கதை சொல்லாடல்களையும் 'இயற்கை நீக்கம்' (de-naturalisede-toxing) செய்தல் என்பது ஒரு அரசியல் செயல்பாடு.
(ப 53)

-இலங்கைத் தமிழர் பிரச்சினை என்கிற வரலாற்றுப் பின்னணியைச் சார்ந்து எழுதப்பட்ட கதைகள் முக்கியமானவை (ஆலா, லங்காபுரி ராஜா, கோடரி...முதலியன). சிங்கள இனவெறியை எதிர்த்துத் தமிழர்கள் நிற்கவேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தையும் அதே சமயத்தில் இறுக்கமான அடையாளங்களுடன் இனவிடுதலை என்கிற பெருங்கதையாடலை முன்வைத்துக் 'குழு மனிதவாதிகளாக' அவர்கள் மாறும்போது மாற்று இனத்தாருக்கு மட்டுமின்றிச் சொந்த இனத்திற்கெதிரான வன்முறையாளர்களாகவும், அடாவடிக்காரர்களாகவும் மாறிப்போகின்ற நிலையையும் புனைவு நியாயங்கள் சிதறாமல் செதுக்கித் தருகின்றார். 'தத்துவம் ஒவ்வொன்றும் கோடரிதான்' என்பது அவர் கூற்று. புத்த பகவான் சொன்னதுபோல (இப்படிப் பெருங்கதையாடலாக இறுகும்) ஒவ்வொரு வழிகாட்டு நெறிமுறையும் மற்றவர்களைக் கொலை செய்யவே பயன்படும்.
(ப 44)

-இந்த நூற்றாண்டில் சுயமாய்ச் சிந்தித்த ஒரே தமிழ்ச் சிந்தனையாளர் எனச்சொல்லத்தக்க ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தன் வாழ்நாள் இறுதிவரை (1973) தேசப்படம், தேசியக்கொடி, அரசியல் சட்டம், கடவுளரின் புனித உருவங்கள், கம்ப இராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்கள் ஆகியவற்றை அழிப்பவராகவும் அவமானம் செய்தவராகவும் இருந்தார் என்பதும் தேசத்திற்கும், மொழிக்கும், மரபுகளுக்கும், இந்து மதத்திற்கும் விசுவாசமற்ற சுயமரியாதை மிக்கத் தன்னிலைகளை உருவாக்குவதாகவே அவரது செயற்பாடுகள் அமைந்தன என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கன. பன்நூற்றாண்டுகளாக இங்கே மேலாண்மை செய்துவந்த பார்ப்பனியம் சற்றே கதிகலங்கியது இந்த நூற்றாண்டில்தான், அதுவும் பெரியாரைக் கண்டுதான்.
(ப 21)

-'டாட் காம்' களில் குறிப்பாகத் 'திண்ணை' டாட்காமில் எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்கள் பலரின் எழுத்துக்களில் உள்ளார்ந்து நெளிந்து செல்லும் இந்துத்துவ இழையை, கலாச்சார ஏக்கத்தை 'டாட் காம்' வாசகர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும்.

தமிழக எழுத்துலகை ஆக்கிரமித்திருக்கும் உயர்சாதி எழுத்தாளர்களின்/அறிவுஜீவிகளின் பிடி சற்றே நெகிழத் தொடங்கியுள்ளதையும், இதுகாறும் ஒடுக்கப்பட்டு கிடந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள் தன்னம்பிக்கையோடு செயற்படத்தொடங்கியிருப்பதையும் கண்டு, பழைய பீடங்கள் விசத்தையும், வெறியையும் கக்கத் தொடங்கியிருக்கின்றன....
(ப 88)

-மதநீக்கம் - பார்ப்பன நீக்கம் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தைச் சரியாக வற்புறுத்தியவர் பெரியார். அரசியல் சமூகக் களத்தில் பார்ப்பன நீக்கம் என்ற குரலை திராவிட இயக்கம் முன் வைத்தது. தமிழ் இலக்கியத் தளத்தில் நவீனங்கள் பேசிய நமது உயர்சாதி எழுத்தாளர்கள் இத்தகைய பார்ப்பனீய நீக்க முயற்சியை மிகக் கடுமையாக எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வியக்கத்தக்க அளவிற்கு சர்வதேசப் பார்வை கொண்டவரும், இரசியப் புரட்சியை கூர்ந்து அவதானித்து வாழ்த்தியவருமான பாரதியால் கூட இங்கே உருவான பார்பனரல்லாதோர் இயக்கத்தைச் செரிக்க முடியவில்லை. கடும் வார்த்தைகளால் சாடுகிறார். தமிழ் நவீனத்துவத்தின் எல்லைக் கல்லாகச் சுட்டிக்காட்டப்படும் 'மணிக்கொடி' இதழ் பார்ப்பனரல்லாதவர் இயக்கத்தைக் கடுமையாகச்சாடி வந்தது. 'சுயமரியாதைக்காலிகள்' எனத் தொடர்ந்து எழுதியது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியது. 'தலைவர் அவர்களேங் தாமில்ப் பெருங்குடி மக்களேய்ங்....' எனத் திராவிட இயக்க மேடைப் பேச்சைக் கேலி செய்து கவிதைகள் எழுதினார் ஞானக்கூத்தன். ஏதோ திராவிட இயக்கம் என்றாலே வெறும் மேடைப் பேச்சுதான் என்பதைப்போல, இன்றைய இந்துத்துவவாதிகளுக்குச் சற்றும் குறையாத தொனியுடன் மதமாற்றத்தையும் கிண்டலடித்தார் புதுமைப்பித்தன். மார்க்சீய அணுகுமுறையையும் அடித்தள மக்கள் இலக்கியங்களையும் 'முற்போக்கு' என்றும் 'வரட்டுத்தனம்' என்றும் இவர்கள் அளவிற்கு இழிவு செய்தவர்கள் எவருமில்லை
(ப 72)

-நம்மைப் பொறுத்தவரை பாரதி மீதோ, பித்தன் மீதோ அதீதப் பற்றுக் கொண்டவர்கள் அல்ல. பாரதியில் ஒலிக்கும் பார்ப்பனீயத்தையும், புதுமைப்பித்தனில் வெளிப்படும் சாதீய, மதவாதக் கூறுகளையும் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் நம் கண்டிக்காதிருந்ததில்லை. அதேசமயத்தில் இவர்களின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிட்டதும் இல்லை. இலக்கியத் 'திருஉரு'க்களை (icons) விமர்சனம் செய்யக்கூடாது என்பது எத்தனை மோசமோ அத்தனை மோசம் அவர்களின் எழுத்துக்களை ஏகபோகம் ஆக்குவது. நாம் இரண்டையும் எதிர்ப்போம்.
(ப 94)

8 comments:

Anonymous said...

Thanks for the post..

FD

8/28/2006 10:51:00 AM
Muthu said...

http://dravidatamils.blogspot.com/2006/06/blog-post_114984409010914307.html

http://dravidatamils.blogspot.com/2006/06/blog-post_09.html

டி.சே,

சில நாட்களுக்கு முன் நான் தி.த வலைத்தளத்தில் எழுதிய இரண்டு கட்டுரைகளும் இந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

நன்றி.நன்றாக எழுதியுள்ளீர்கள்.

8/28/2006 11:15:00 AM
இளங்கோ-டிசே said...

Np FD.
....
முத்து, சுட்டிகளுக்கு நன்றி.

8/28/2006 03:31:00 PM
செல்வநாயகி said...

படித்துவிட முயன்றுகொண்டிருப்பவைகளில் இந்நூலும் உண்டு. நன்றி டிசே அறிமுகத்திற்கு.

8/28/2006 03:50:00 PM
Anonymous said...

//'சா நான் சொல்ல நினைத்தை இந்தப்படைப்பாளி சொல்லிவிட்டாரே'// Konjam Over!!

8/28/2006 06:38:00 PM
Chandravathanaa said...

டிசே

உங்கள் புத்தகங்கள் மீதான பார்வைகளும் அறிமுகங்களும் எப்போதுமே அந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுவனவாகவே அமைகின்றன. இப்போது இந்தப் பார்வையும்.

8/29/2006 12:06:00 AM
Anonymous said...

இந்த நூற்றாண்டில் சுயமாய்ச் சிந்தித்த ஒரே தமிழ்ச் சிந்தனையாளர் எனச்சொல்லத்தக்க ஈ.வெ.ராமசாமிப் பெரியார்
really ?
தான் ஆதரிப்பதை/ஆதரிப்பவரை புகழ்வதும், தனக்கு பிடிக்காததை/பிடிக்காதவரை இகழ்வதும்
மார்க்ஸின் எழுத்துக்களில் வெளிப்படும்.அதற்கான காரணங்களை அவர் விளக்குவதை பல
சமயங்களில் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளலாம்.மற்றபடி மார்க்ஸின் அறிவுப்பயணம்
இப்போது இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவில், பெரியார் வழிபாட்டில் நிற்கிறது.

8/29/2006 05:48:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி நண்பர்களே.
.....
எஸ்கே நீங்கள் என்ன சொல்லவருகின்றீர்கள் என்று புரியவில்லை.
அநாநிமஸ்: பெரியார் பற்றி உங்கள் பார்வையை வைத்திருந்தால் விவாதித்திருக்கலாம். நக்கலுக்குத்தான் கேட்கின்றீர்கள் என்றால் திருப்ப நக்கலடிப்பது பெரிய கடினமில்லை :-).
/ மார்க்ஸின் அறிவுப்பயணம்
இப்போது இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவில், பெரியார் வழிபாட்டில் நிற்கிறது./
'பெரியார்?' என்று அ.மார்க்ஸின் கட்டுரைத் தொகுப்பை வாசித்திருப்பீர்கள் என்றால் அ.மார்க்ஸ் எப்படி பெரியாரை விமர்சனபூர்வமாக அணுகுகின்றார் என்பதை அறிந்துகொள்ளமுடியும். முன்பு அ.மார்க்ஸ் கிறிஸ்தவ சமயத்தை விமர்சிக்கவில்லை என்ற கூக்குரல் எழும்பியது; இப்போது சிறுபான்மையினராகிய இஸ்லாமியர்கள் குறித்து விமர்சனமின்றி ழுதுகின்றார் என்ற விமர்சனம் வருகின்றதாக்கும். முகமது நபிகள் பற்றியும் அ.மார்க்ஸ் அண்மையில் ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார். வாசித்துவிட்டு அங்கே எங்கையாவது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அ.மார்க்ஸ் ஏற்றுக்கொள்கின்றாரா என்று குறிப்புக்களுடன் வந்து விவாதியுங்கள். உஙகள் போகின்றபோக்கில் எழுதிவிட்டு போகின்ற குறிப்புக்களைப் பார்க்கும்போது ஒரு நண்பர் கூறியதுதான் நினைவுக்கு வருகின்றது. அ.மார்க்ஸ் பாரிசுக்கு வந்தபோது ஒரு கூட்டம் அ.மார்க்ஸ் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் உற்றதோழர் என்றமாதிரி ஒரு துண்டறிக்கை விட்டிருந்ததாம் :-). அட, அப்படியா எங்கே பார்ப்பம் என்று இன்னும் நான்குபேர் அ.மார்க்ஸை வாசிக்கத் தொடங்கினால் அதுவும் நல்லம்தான்.

8/29/2006 10:33:00 AM