கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சாம்பலாய்ப் படியும் மனிதர்கள்

Thursday, November 09, 2006

I keep on dying again.
Veins collapse, opening like the
Small fists of sleeping
Children.
Memory of old tombs,
Rotting flesh and worms do
Not convince me against
The challenge. The years
And cold defeat live deep in
Lines along my face.
They dull my eyes, yet
I keep on dying,
Because I love to live.

('Lesson' by Maya Angelou)


புத்தகங்கள் எப்போதும் புன்னகைகளையே பரிசாகத் தருகின்றன என்று சிறுவர்கள் கூறுகின்றார்கள். நான் திறந்து வாசிக்கும் புத்தகங்களிலிருந்து அநேகமாய் வலிகளே வெளியேறுகின்றன. பிரியும் பக்கங்களிலிருந்து இறங்கும் வலிகளைப் பின்தொடரும் ஒவ்வொருபொழுதிலும் என்னை அவை அவிழ்க்க முடியாத புதிர்களுக்குள் சிக்கவைத்துவிட்டு வெளியேறி விடுகின்றன. நானோ, இது புத்தகத்தின் வாதையா இல்லை என் அனுபவங்களின் வாதையா என்று மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றேன்.

கனடாவுக்கு வந்து ஒரு வருடம் இருந்திருக்குமா? அதுவரை அனுபவித்திராத காலநிலை; ஆங்கிலமொழிப் பரீட்சயம் அவ்வளவாய் இல்லை என்கின்ற அவதிகளினூடாக விழி பிதுங்கிக்கொண்டிருந்த காலம். நகைச்சுவைக்குணம் மிகுந்தவனாய், கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவனாய் அறிமுகமாயிருந்தான் அவன். புலம்பெயர்ந்த அநேகருக்கு போர் தந்தவலிகளைப் போல, அவனுக்குள்ளும் இரத்தக்கறை படிந்த கடந்தகாலத்தின் பக்கங்கள் உறைந்துபோய்க் கிடந்தன. சிறுவயதில் அவனது தாயார் அவனது கண்முன்னாலேயே இந்திய இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பிற நண்பர்கள் கூறக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் அதை விரிவாகக் கேட்கும் தைரியம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை. அவனது துயரநதி பெருக்கெடுத்துப் பாய்ந்தால் அதைக்கட்டுப்படுத்தும் ஆறுதல் வார்த்தைகள் என்னிடம் இல்லை என்பது ஒருபுறமிருக்க, எதன் பொருட்டும் அவனது தாயாரை அவன் திரும்பிப் பெறமுடியாது என்ற வாதையும் சோர்வும்தான் என்னை இதுகுறித்து பேசுவதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

அப்போதுதான் எனக்கு கணணி என்பதே என்னவென்று அறிமுகமாயிருந்தது. கோடைகாலத்தில் நான் எடுத்த கண்ணி சம்பந்தப்பட்ட பாடம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரியாக பயமுறுத்திக்கொண்டிருந்தது. என்னால் தொடர்ந்து இதைக் கற்கமுடியாது என்று சோர்வாய் இருந்தபொழுதில் இந்த நண்பன்தான் 'எல்லாவற்றின் அறிமுகங்களும் இப்படித்தான் பயமுறுத்தும், நாட்கள் செல்லச் செல்ல அவற்றின் முடிச்சு அவிழ நமக்கு அவை நெருக்கமாகிவிடும்' என்று பரிவான வார்த்தைகள் பேசி என்னை உற்சாகப்படுத்தியவன். பிறகு கணணியில் இருந்த சுவாரசியத்தை விட -வருடத்தில் குறுகிய காலம் வரும் கோடையில்- வண்ணமயமாய்த் திரியும் காரிகைகளில் ஈர்ப்பு வந்து அப்பாடத்தைத் தொடராது இடைநடுவில் நிறுத்தியிருந்தாலும், இன்றும் புதிதாய் எதையாவது கற்றுக்கொள்ளும்போது அவனது அந்த உற்சாக வார்த்தைகள்தான் உடனடியாக மனதில் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

பிறகு நண்பன் ஒருநாள் இறந்துபோனான். அவன் தேடிய மரணத்தின் வழி மிகக் கொடூரமானது. தனக்குத்தானே தீ மூட்டிக் கொண்டான். நெருப்பின் உக்கிரம் தாங்காமல் தான் தப்பிவிடக்கூடுமோ என்று யோசித்தோ என்னவோ தன்னுடலை நீண்ட பொலித்தீனால் இறுக்கக்கட்டி பெற்றோலை ஊற்றியிருக்கின்றான். சம்பவம் கேள்விப்பட்டு அடுத்த நாள் போய்ப் பார்த்தபோது பசும்புல்வெளியில் தன் சுவடுகளை விட்டுச் சென்றிருந்தான். கடைசிக்கணத்தில் நண்பன் எங்களுக்கு என்ன சொல்ல விரும்பியிருப்பான் என்பதை கருகிய அந்தப்புற்கள் மட்டுமே அறியும்.

ஏனிந்த முடிவை எடுத்தான் தோழன்? அவனைச் சிலிர்க்க வைத்து குழம்பிப்போன காதல் என்றார்கள். அவனது தாயின் மரணத்தை நேரில் கண்ட மனப்பிறழ்வு என்றார்கள். காரணங்களைக் கண்டறிந்து என்ன செய்யப்போகின்றோம்? எங்களுக்காய் திரும்பி அவன் உயிர்த்தெழுந்து வந்து பாடசாலை வாசலில் சிரித்துக்கொணடு நிற்கவா போகின்றான்?

எனினும் அவன் மரணத்தோடு -என்றுமே அழித்துவிடமுடியாததாய்- ஒரு குற்றவுணர்வு எனக்குள் குந்திக்கொண்டது. அவனது மரணத்துக்கு சில வாரங்களுக்கு முன்புதான் நானும் தற்கொலை செய்ய முயற்சித்திருந்தேன். வகுப்புக்களில் அளவுக்குமதிகமான மெளனத்தையும், நூலகங்களில் தனித்திருக்கும் தனிமையும் கண்டு, என்னில் ஒருவித பரிவான உணர்வு அவளுக்குள் தலைத்தூக்கியிருக்கலாம். அதை 'தெய்வீக'க்காதல் எனக் கற்பிதங்செய்துகொண்டேன் நான். 'இப்போது பதினாறு வயது, உனக்கு என்னைப் பிடித்திருந்தால் இன்னும் நான்கு வருடங்கள் காத்திரு' என்று கூறி இன்னுமின்னும் கனக்க சரளமான ஆங்கிலத்தில் சலசலவென்று கதைத்துக்கொண்டே போனாள் அவள். எனக்கு அவளின் உரையாடலில் வந்த காதல் என்ற ஒரு வார்த்தையே போதுமானதாயிருந்தது நிறையக் கனவுகளை வளர்க்க. நான்கு வருடங்கள் காத்திரு என்றவள், நாற்பது நாட்களுக்கும் குறைவான நாட்களில் முகத்தைத் திருப்பி விறைத்துக்கொண்டபோது மனது உடைந்துபோனது.

சங்ககாலத்தில் கைக்கிளைக்காதலால் மடலேறி மாய்த்துக்கொண்ட யாரோ ஒருவன் எனக்கு உறவாயிருந்து அவனது மரபணுக்கள் என்னுள் கடந்தப்பட்டிருக்க வேண்டும் போல. தற்கொலைக்கு முயற்சித்தபோது -அதைக் கச்சிதமாய் நிறைவு செய்வதற்கான துணிவின்மை மற்றும் அம்மாவின் கடைசி நேர நுண்ணுணர்வு- என்னைக் காப்பாற்றி இப்போது இதை எழுத வைத்துக் கொண்டிருக்கின்றது. இப்படி நான் முயற்சித்தேன் என்றும் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்(?!) என்றும் அந்த நண்பனிடம் அன்று மனம் திறந்து பேசியிருந்தால், அவனும் தன்னம்பிக்கை பெற்றிருக்கக்கூடும். தற்கொலை மட்டுமே ஒற்றைவழியல்ல; வாழ்வதற்கு பல வழிகள் இருக்கின்றன என்று யோசித்து, தனது மரணத்தை இயற்கை தேர்ந்தெடுக்கட்டும் என்று தோழன் முடிவெடுத்து எங்களில் ஒருவனாய் இன்று அவன் வாழ்ந்து கொண்டிருக்கவும் கூடுமல்லவா?

இந்தத் தவறை மீண்டும் விடக்கூடாது என்பதில் -ஆகக்குறைந்தது எனக்கு நெருக்கமானவர்களிடம்- கவனமாயிருக்கின்றேன். பிறகொருபொழுதில் தோழியொருத்தி நிறைய தூக்க மாத்திரைகள் எடுத்து அதிஸ்டவசமாய்த் தப்பி, அடுத்த முறை தற்கொலையைத் திருத்தமாய் செய்வேன் என்று என்னிடம் அடம்பிடித்துக் கொண்டிருந்தாள். வைத்தியசாலையில் இருந்து வந்து அடுத்தநாளே -என்ன எழுதுகின்றேன் என்று தெரியாமல்- பக்கம் பக்கமாய் தற்கொலை குறித்து நிறைய எழுதி அவளிடம் கொடுத்திருக்கின்றேன் (இப்போது அதை நானோ இல்லை தோழியோ வாசித்துப் பார்த்தால் எவ்வளவு குழந்தைத்தனமாய் அது இருக்கும் என்பது வேறுவிடயம்). மஞ்சள்நிற ரோஜாப்பூக்களுடன் அவளைச் சந்தித்து - மனந்திறந்து பேசட்டும் என்று- ஒரு முழுநாளை அவளுடன் வளாகத்தின் study loungeல் கழித்ததும் நினைவிலுண்டு. 'ஒரு நாளும் பூக்கள் எனக்காய் வாங்கித் தராத நீ, நான் சாகப்போகின்றேன் என்றவுடன் ரோஸஸை வாங்கி தருகின்றாயா?' என்றார். 'அப்படியொன்றுமில்லை; பூக்கள் விற்கும் பெண்ணில் ஒரு crush வந்து அவரைச் சைட் அடிப்பதற்கு பூக்களை வாங்கவேண்டியதாய்ப் போய்விட்டது, அதுதான் வாங்கினதை இனி வேஸ்டாக்கக் கூடாது என்றுதான் உங்களிடம் தந்தேன்' என்று கூற, 'மவனே...' என்று ஆரம்பித்து அவர் திட்டத்தொடங்கியபோது, தோழி விரைவில் இயல்புநிலைக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கை வந்தது.

(II)

நிறைவேறாத ஆசைகள் கனவுகளாய் அடிக்கடி வந்துகொண்டிருக்கும் என்பார்கள். எனக்குள் தற்கொலை குறித்த எண்ணங்கள் கனவுக்கும் நனவுக்கு இடையிலான பாதையில் அடிக்கடி மூடிய பனியாய் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன. அந்த வகையில்தான் சில்வியா பிளாத்தும், சிவரமணியும் எனக்கு நெருக்கமாகி இருக்கின்றார்கள் போலும். சிவரமணி இறந்துவிட்டார் என்று அக்கா யாழ் வளாகத்திலிருந்து ஒரு பின்னேரப்பொழுதில் கலங்கிய முகத்துடன் சொன்னபோதுதான் தற்கொலை குறித்த முதற்குறிப்பு எனக்குள் நுழைந்திருக்கவேண்டும்.

சிவரமணி எனக்கு முதலில் கவிஞையாக அறிமுகமானவரல்ல; அக்காவின் தோழியாகத்தான் அறிமுகமானவர். சிறுவயதுகளில் அக்காவின் அல்பங்களில் அவரின் படத்தைப் பார்த்து -கன்னக்குழி விழ அழகாகச் சிரித்துக்கொண்டிருப்பவர்- ஏன் இப்படியான முடிவை தேடினார் என்றுதான் அதிகம் யோசித்திருக்கின்றேன். 'கேட்ட கேள்விக்கு விடையில்லாதபோது மெளனமாயிருக்கப் பழகவும்' என்ற வலி(மை) நிறைந்த வார்த்தையை அக்கா கத்தரித்து வைத்திருந்த சிவரமணியின் படத்திலிருந்துதான் மனதுக்குள் ஒட்டிக்கொண்டது. இந்த வார்த்தை பல இடங்களில் அமைதியாக இருக்கச் செய்து தேவையில்லாத மன உளைச்சல்கள் என்னை நெருங்கவிடாது தடுத்திருக்கின்றது. சில்வியா பிளாத் தற்கொலை குறித்து வெளிப்படையாக எழுதியதைப் போன்று சிவரமணி தற்கொலை குறித்த குறிப்புக்களை நமக்காய் விட்டுச்சென்றதில்லை. சில்வியா 'சாவதும் ஒரு கலை' என்று சொன்னதோடு மட்டுமின்றி, தனது ஒரு நீண்டகவிதையில் எழுதியதுமாதிரியே தன் தற்கொலையின் வழியையும் தேர்ந்தெடுதெடுத்தவர். சில்வியாவின் கவிதைகளை முதன்முதலில் வாசிக்கத் தொடங்கும் ஒரு வாசகரின் பொருட்டு சில்வியா மீண்டும் தற்கொலை செய்துகொள்கின்றார், அந்த வாசகர் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்ற பதட்டத்துடன்.

இன்றையபொழுதில் எத்தனையோ தற்கொலைச் சம்பவங்களை கேள்விப்பட்டும் வாசித்தும் விட்டாயிற்று. பெறுபெறுகள் குறைகின்றது என்ற பயத்தில் -நதிக்குள்-, அம்மா தன்னை அதிகம் திட்டிவிட்டார் என்பதற்காய் -நெடுஞ்சாலையில்-, நீ என்னை நேசிக்கவில்லையென்றால் இறந்துவிடுவேன் என்று கண்ணித்திரையில் எழுத்துக்கள் உறைந்துகிடக்க - அடுக்குமாடிக்கட்டட்டத்தில்- என எத்தனையோ சம்பவங்கள் நினைவின் அலையில் புரள்கின்றன. ஏன் இதை எழுத ஆரம்பித்த சென்ற வாரத்திற்கும், இப்போது எழுதி முடிக்கும் இந்த வாரத்திற்கும் இடையிலான வார இறுதியில்கூட, தமிழர் ஒருவர் தனது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு - domestic violence பெரும்பங்கு வகித்தது என்றாலும்- தானும் தற்கொலை செய்திருக்கின்றார் என்று ஊடகங்கள் கூறிக்கொண்டிருக்கின்றன.

பனிக்காலம் ஆரம்பிக்கின்றது. வந்து இறங்கிய புலத்தில் வேர்களையும் பதித்து அடுத்த சந்ததிகளின் விழுதுகளும் வளரத்தொடங்கிவிட்டன. ஆனால் பனிப்புலத்தை உழுது -ஈழத்தில் இருப்பதைவிட மோசமாய்- சாதி, சமயம், புரளி, அந்தஸ்து என்று 'அருமையான' விளைச்சல்களை அமோகமாய் பெற்றுக்கொண்டிருக்கின்றோமே தவிர சக உயிர்களின் மதிப்பை இன்னும் உணர்ந்தோமில்லை. சாதி, சமயம், கெளரவம் இன்னபிறவற்றால் மன அவசத்தையோ தற்கொலையையோ, வன்முறையையோ தடுத்து நிறுத்திவிடமுடியாது என்று எப்போது எமக்கு உறைக்கப்போகின்றது?

இனி, சூரியன் புதைந்துபோன வானப்பின்னணியைப் போல எம் மனங்களையும் எரித்துச் சாம்பராக்க-winter blue- விரைவில் வரப்போகின்றது. வெளியே -நினைத்த நேரத்தில் உலாத்தித்திரிந்து புத்துணர்ச்சி பெறுவதைத் தடுத்து - பனியும் காற்றும் பயங்கரமாய்ச் சுழன்றாட, இழந்துபோன எவற்றையோயெல்லாம் அசைபோட்டு மனது குழம்பிச் சிதறப்போகின்றது.

கொஞ்சம் கனிவு தரும் வார்த்தைகள்; மனந்திறந்து பேச சில நிமிடங்கள் என்று சக மனிதருக்காய் சிறுபொழுதை ஒதுக்கும்போது - உங்களை அறியாமலே- நடக்கவிருக்கும் ஒரு தற்கொலையை நீங்கள் நிறுத்திவிடவும் கூடும். ஆதியில் மடலேறியவனின் மரபணுவை கொண்ட என்னைப் போல, யாரேனும் ஒருவர் -தான் இன்று வாழ்ந்துகொண்டிருப்பதற்கு- நீங்கள்தான் காரணமென்று நாளை நன்றியுடன் ஒரு குறிப்பை அன்பு ததும்ப உங்களுக்காய் எழுதவும் கூடும்.

10 comments:

தமிழ்நதி said...

நண்பரே,

நிறைய வாசிப்பதனால் தெளிவு பிறக்குமென்பார்கள். ஆனால், அதிகம் வாசிப்பவர்களே அதிகம் குழப்பம் நிறைந்தவர்கள் என்பது அண்மையில் நான் அனுபவபூர்வமாக உணர்ந்தது. அந்த வரிசையில் நீங்களும் இணைந்துவிட்டீர்களா…ம்… ‘வாழ்க்கையை வேடிக்கை பாருங்கள் போதும். நிறையச் சிந்தித்து மன உளைச்சலுக்குள்ளாகாதீர்கள்’என்பதுதான் இப்போது சொல்லக்கூடியது. மனஅவசங்களுக்கும் கோபங்களுக்கும் ஆயுள் குறைவு. இரவின் துயரம் காலையில் எப்படி வடிந்துபோகிறதோ… அப்படி நாட்களின் நிறமும் மாறும் என்பதை அறிவீர்கள். ஒன்றுபோல் மற்றொன்றில்லை. ஆனால், பனிக்காலம் பற்றிய பயம் நியாயமானதே. அதனின்று தப்பித்து ஓடமுடிந்தவர்கள் பாக்கியசாலிகள். என்னைப்போல்.

11/11/2006 12:49:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி தமிழ்நதி. பரிவுடன் வரும் வார்த்தைகள் என்றுமே கதகதப்பூட்டக்கூடியவையே.
.....
நிறைய விடயங்களில் ஒத்த அலைவரிசையில் இருப்போம் போல.
/நிறைய வாசிப்பதனால் தெளிவு பிறக்குமென்பார்கள். ஆனால், அதிகம் வாசிப்பவர்களே அதிகம் குழப்பம் நிறைந்தவர்கள்../
உங்களைப்போலவே இந்தக்கேள்வி எனக்குள்ளும் அடிக்கடி எழுந்தபடியே இருக்கின்றன. சாதாரணமாய், அந்தந்த வயதுக்குரிய பொழுதுகளை அதன் இயல்புகளோடு இரசிக்கமுடியாதிருப்பதற்கு வாசிப்பும் ஒரு காரணமோ என்று.
.....
/ஆனால், பனிக்காலம் பற்றிய பயம் நியாயமானதே. அதனின்று தப்பித்து ஓடமுடிந்தவர்கள் பாக்கியசாலிகள். என்னைப்போல். /
உங்களைப்போல எனக்கும் -பனிக்காலம் பற்றிய - பிரக்ஞையின்றி வாழும் காலம் வருமென்றே நம்புகின்றேன் :-).

11/11/2006 10:29:00 PM
அருண்மொழிவர்மன் said...

வலைப்பதிவுகளுக்கு நான் புதியவனாக இருந்தாலும் உங்களின் பல பதிவுகளை படித்துவிட்டேன். எனது இலக்கிய தேடல்களுக்கும் வழிகாட்டல் இல்லாத வாழ்க்கைக்கும் உங்கள் அறிமுகம் உதவும் என்று நம்புகிறேன். முடியுமானால் என்னை தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் தொலைபேசி இலகம் அல்லது மின்னஞ்சலை தரவும் நானெ தொடர்புகொள்வேன்

11/13/2006 03:03:00 AM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டத்துக்கு நன்றி அருண்மொழி.
....
இது எனது மின்னஞ்சல்: dj_tamilan25@yahoo.ca

எந்தக்காலத்திலும் குழப்பங்களை நிறையக் கைவசம் வைத்திருப்பவனை பற்றி நீங்கள் அதிகப்படியாக நினைக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன் :-). என்றாலும் என்ன உரையாடுவோம்; இருக்கும் புத்தகங்களைப் பகிர்ந்துகொள்வோம். நன்றி.

11/13/2006 10:36:00 AM
Anonymous said...

நல்ல பதிவு. தணிமையும், பனியும் சேர்ந்தாலே ஒருவித மனச்சோர்வு வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஆறுதலாக யாருக்காவது ஒரு வார்த்தை பேசினாலே பல தற்கொலைகளை தவிர்க்க முடிந்திருக்கும். ஆனால் அவர்கள் தற்கொலை செய்யப்போவதை முன்னறிவிப்பு செய்வதில்லை.

நாம் பகிர்ந்து கொள்ளும் ஓரிரு வார்த்தைகள் முடிவையே மாற்றிப்போடும். அதை நாம் அறிந்திராவிட்டாலும்கூட...

11/13/2006 10:48:00 AM
இளங்கோ-டிசே said...

/ஆனால் அவர்கள் தற்கொலை செய்யப்போவதை முன்னறிவிப்பு செய்வதில்லை./
உண்மைதான் கொட்டாங்கச்சி. ஆனால், அநேகமாய் தற்கொலை செய்தவர்களோடு கடைசி நேரங்களில் கழித்தவர்கள் கூறுவது, 'அவர்கள் எதையோ சொல்ல முயன்றார்கள், நான் தான் செவிகொடுத்து கேட்க அக்கறைப்படவில்லை' என்று.

/நாம் பகிர்ந்து கொள்ளும் ஓரிரு வார்த்தைகள் முடிவையே மாற்றிப்போடும். அதை நாம் அறிந்திராவிட்டாலும்கூட... /
இதுவேதான் நானும் சொல்ல விழைந்தது. பின்னூட்டத்துக்கு நன்றி.

11/13/2006 11:51:00 PM
Chandravathanaa said...

சும்மா அருமை என்று எழுதி விட்டுப் போக முடியவில்லை. அதற்கும் அப்பால் மனதைத் தீண்டும் ஏதோ ஒன்று உங்கள் அனேகமான பதிவுகளுக்கு உண்டு. இதுவும் அதற்கு விதிவிலக்கல்ல.

11/25/2006 12:15:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி சந்திரவதனா. சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்களை காண்பதில் சந்தோசம்.

11/26/2006 12:26:00 PM
அருண்மொழிவர்மன் said...

இந்த பதிவிற்கு கிட்ட தட்ட இரண்டரை ஆண்டுகளை கடந்து மீண்டும் ஒரு பதிலிடுகின்றேன். உங்கள் அறிமுகம் வேண்டி முன்னொருமுறையும் பதிவிட்டிருக்கின்றேன்.
அண்மையில் சில்வியா என்று சில்வியா பாத் ஐ மையப்படுத்தி சுஜாதா எழுதிய ஒரு குறுநாவலை படித்தேன். கணேஷ் - வசந்த் வரும் கதை என்றபோதும் அதில் தற்கொலை பற்றி வருகின்ற ஒரு கருத்து முக்கியத்துவம் பெறுகின்றது. அதாவது சில்வியா என்ற பெண் தற்கொலை செய்தது பற்றி விசாரணைகள் பெருகும் நிலையில் கணேஎஷ் சொல்லுவார், இந்த தற்கொலை பற்றியும், சில்வியா தற்கொலை செய்தது ஏண் என்று தொடரும் விசாரணைகளும் மீண்டும் மீண்டும் அவரை தூக்கில் ஏற்றுவது போன்றது என்று. சமூகவியல் ரீதியில் தற்கொலைக்கான காரணாங்கள் பற்றிய ஆய்வுகள் முக்கியம் என்றாலும், பல சமயங்களில் தற்கொலை செய்தவர்களை சிறுமைப்படுத்துவதாகவே அந்த ஆய்வுகள் முடிக்கப்படுகின்றன என்பது கவனிக்கப்படவேண்டியது

3/09/2009 12:56:00 AM
அருண்மொழிவர்மன் said...

1

3/09/2009 12:56:00 AM